கடலைக் கடந்து - 2
இண்டியன் ஏர்லைன்ஸ் செய்த சோதனை:
நான் திருச்சியிலிருந்து
ஜனவரி நான்காம் தேதி மாலை ஐந்து மணிக்கு சென்னை செல்லும் இண்டியன் ஏர்லைன்ஸ் விமானத்தில்
கிளம்பி, அன்று இரவு சென்னையிலிருந்து இரவு 7:30 மணி இண்டியன் ஏர்லைன்ஸில் அப்போதைய
பாம்பே சென்று என் பெரிய நாத்தனார் வீட்டில் இரவு தங்கி விட்டு, மறு நாள் மாலை ஐந்து
மணி ஏர் இந்தியாவில் மஸ்கட் செல்வதாக ஏற்பாடு. அதற்கான பி.டிஏ.வை திருச்சியில் இருக்கும்
இண்டியன் ஏர் லைன்ஸ் அலுவலகதிற்கு டிசம்பர் 31ஆம் தேதி டெலக்ஸ் அனுப்பியிருப்பதாகவும்,
என்னை இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்படியும் தொலைபேசியில் என் கணவர் கட்டளையிட்டார்.
இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்திலோ டெலக்ஸ் வரவேயில்லை, வந்தால்தான் நாங்கள் டிக்கெட்
இஷ்யு செய்ய முடியும் என்றார்கள். இரண்டாம் தேதி வரை இதே நிலைதான். எனக்கு டென்ஷன்,
என் கணவருக்கோ டென்ஷனோ டென்ஷன்!
இரண்டாம் தேதி
காலையும் பி.டி.ஏ. வரவில்லை என்று இண்டியன் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் கூற, நொந்து போன
நான் ஒரு ஆட்டோ பிடித்து, நேராக மலைகோட்டை மாணிக்க விநாயகர் கோவிலுக்குச் சென்று,”பிள்ளையரப்பா
சோதிக்காதே”, என்று வேண்டிக்கொண்டு ஒரு சூரைக்காய் போட்டு விட்டு வீட்டிற்கு வந்தால்,
“இண்டியன் ஏர் லைனஸிலிருந்து ஃபோன் வந்தது, பி.டி.ஏ. வந்து விட்டதாம்” என்றார்கள்.
அப்பாடா! என்று மூச்சு விட்டேன். நான்காம் தேதி கிளம்ப வேண்டும் என்றால் மூன்றாம் தேதிதான்
டிக்கெட் கையில் வந்தது.
நான்காம் தேதி
நல்ல நேரத்தில் கிளம்பினேன். ஐந்து மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து வர வேண்டிய ஐ.ஏ.
விமானம் எட்டு மணிக்குத்தான் வந்தது. “உங்களால் பம்பாய் செல்லும் கனெக்டிங்க் ஃபளைட்டை
பிடிக்க முடியாது, நாளை காலை பம்பாய் செல்லும் விமானத்தில் உங்களுக்கு நிச்சயம் இடம்
கொடுப்பார்கள்” என்றார்கள். அவர்கள் சொன்னதை கேட்டுத்தானே ஆக வேண்டும், வேறு வழி? ஒவ்வொரு
முறை ஏர் இண்டியா, இண்டியன் அல்லது இண்டியன் ஏர் லைன்ஸில் பயணித்த பொழுதும் கிடைத்த
அனுபவங்களை தனிப் பதிவாகப் போடலாம் இரவு சென்னையில்
இறங்கி, மாமா வீட்டில் தங்கி விட்டு, மறு நாள் பம்பாய் சென்று, என் நாத்தனார் வீட்டில்
மதிய உணவு சாப்பிட்டு விட்டு உடனே கிளம்பி விட்டேன். அப்போதெல்லாம் விமான நிலயங்களில்
அத்தனை கெடுபிடி இல்லாததால், என் நாத்தனாரின் கணவர் தன்னுடைய பாஸ் போர்டை கையில் வைத்துக்
கொண்டு என்னோடு செக் இன் கவுண்டர் வரை வந்து விட்டார். அங்கு எக்செஸ் பாகேஜ் இல்லாத
பயணி ஒருவரோடு பேசி என்னிடம் அதிகமாக இருந்த பாகேஜை அவரை எடுத்துக் கொள்ள வைத்தார்.
அன்று ஏர் இண்டியாவில் கும்பல் அதிகம் இல்லை. என்னைப் போலவே முதல் முறையாக மஸ்கெட்
வந்த கலைச்செல்வி என்னும் பெண், ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்த்த ஒரு இஸ்லாமிய பெண்
ஆகிய நாங்கள் மூவரும் அரட்டை அடித்தபடி பயணித்து, ஒரு வழியாக ஓமானில் காலடி வைத்தேன்.