கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, May 3, 2024

மத்யமர் கதைகள் - சுஜாதா

இன்று சுஜாதாவின் பிறந்த நாளாம். அவருடைய மத்யமர் கதைகளைப்பற்றி பார்க்கலாம்


சுஜாதாவின் சிக்னேச்சர் இலக்கிய படைப்பு என்று 'மத்யமர்' கதைகளையும், 'ஸ்ரீரங்கத்து தேவதைகளையும்' கூறலாம்.

மத்யமர் என்பதற்கு பொருளாதார அடிப்படையை கருத்தில் கொள்ளாமல், அவர்கள் மனப்பான்மையை கருத்தில் கொண்டு வடிக்கப்பட்ட கதைகள்.

"இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே உண்டு. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள். பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்கு தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

பக்தி,காதல், பரிவு, பாசம்,தியாகம், நேர்மை போன்ற குணங்களை தேவைக்கும், அவசரத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்வார்கள். சமூகம் வாசல் கதவை தட்டுவதை கேட்காதவர்கள். இந்த மௌனப் பெரும்பான்மையினருக்கு ஒரு பெயர் உண்டு, மத்யமர். என்று முன்னுரையில் கூறியிருப்பார்.

இதில் பெரும்பான்மையான கதைகளில் பெண்களின் பொறுமையும்,  தியாகமும்,  சுயநலமும் சுஜாதாவுக்கே உரிய நுணுக்கத்தோடு வெளிப்பட்டிருக்கின்றன. 
இவற்றில் எனக்கு பரிசு, அறிவுரை போன்ற கதைகளோடு 'தாய்' என்ற தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் இரண்டு கதைகளில் தாய்-2 என்னும் கதை பிடித்தது. 

முதல் கதையான 'ஒரு திருமண ஏற்பாடு' கதையில் அமெரிக்காவில் வசிக்கும் மகனுக்கு இந்தியாவில் வரன் தேடும் ஐயங்கார் பெற்றோர்கள்.  

ஆங்கிலப் பத்திரிகையில் விளம்பரம் கொடுத்து, பதில் வந்தவற்றில் ஒன்றிர்க்கு  பையன் ஓகே சொல்ல, பெண் பார்க்க கிளம்புகிறார்கள். அதை சுஜாதா எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள்

'பல நாட்கள் கிளப்பாமல் ஷெட்டில் வைத்திருந்த காருக்கு கேனில் பெட்ரோல் வாங்கி ஊற்றி, கார்பரேட் துடைத்து மாட்டி, ஆடி ஆடி  அடையாறிலிருந்து சென்றார்கள்:))

பெண்ணின் தாயார் தலைக்கு டை போட்டுக் கொண்டு, லாக்கரில் நகைகளை எடுத்து மாட்டிக் கொண்டாள்.

நரசிம்மன் புத்தக அலமாரியில் ஹெரால்ட் ராபின்சன்களை எடுத்து விட்டு ஜே.கிருஷ்ணமூர்த்திகளை அடுக்கினார்.'

பிள்ளையின் பெற்றோர்களான ராமநாராயணனும், கஸ்தூரியும் பெண் வீட்டிற்கு வந்ததும் அவர்களை குழைந்து வரவேற்கிறார்கள் பெண்ணைப் பெற்றவர்கள்.

"ஏன் இவ்வளவு லேட்டாயிடுத்து?  அட்ரஸ் கண்டுபிடிக்க முடியலையா?"
என்று நரசிம்மன் கேட்க, கஸ்தூரி,"இல்லை, வழியில் கார் நின்னு போயிடுத்து. இதை குடுத்துட்டு வேற புது கார் வாங்கணும்னு பாக்கறோம், அதுக்கு இன்னும் வேள வரல" என்கிறாள்.

புதுக்காரா? என்பது போல ராமநாராயணன் பார்க்க, அதை கவனிக்காமல் "ஷூவை அவிழ்த்துடுங்கோ" என்கிறாள்.

'அவர் ஷூவை அவிழ்த்து விட்டு சாக்ஸ் ஓட்டைகளோடு உள்ளே நுழைந்தார். அவருடைய சாக்ஸ் வாடைக்கு உள்ளே ஜுடி குலைத்தது' என்று அப்பட்டமான மிடில்க்ளாஸை நகைச்சுவையோடு அறிமுகப்படுத்துகிறார்.

கதையின் இறுதியில் இரண்டு குடும்பங்களுக்கும் பிடித்துப்போய், திருமணத்தை நிச்சயித்து விடுகிறார்கள். "சிம்பிள் மேரேஜ் போதும். எங்களுக்கு கும்பல் அதிகம் வராது, உட்லண்ட்ஸில் வைத்துக் கொள்ளலாம்" என்றெல்லாம் பேசி விட்டு, வீடு திரும்பும் பொழுது, ராமநாராயணன் மனைவியிடம்," அதை அவர்களிடம் சொல்ல வேண்டாமா" என்று கேட்கிறார்.
"எதை?"
"அமெரிக்காவில் உன் பிள்ளை ஒரு நீக்ரோவை கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு வருடம் கழித்து டைவர்ஸ் பண்ணியதை"
"நீங்க பேசாம இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

அதே சமயத்தில் பெண் வீட்டில் உரையாடல் இப்படி செல்வதாக கதையை முடித்திருப்பார்
"இதை விட நல்ல சம்பந்தம் நமக்கு கிடைக்காது. நந்தினி ஒத்துப்பாளா?"
"அமெரிக்கானா ஒத்துப்பா"
" ஒம் பொண்ணு ஒரு பஞ்சாபி பையனோடு ஒருமாதம்.."
"நீங்க சும்மா இருங்கோ, அது முடிஞ்சு போன கதை"

பரிசு கதையில்  பத்திரிகை ஒன்றில் ஸ்லோகன் எழுதியதற்காக டில்லி, ஆக்ரா போன்ற இடங்களுக்கு விமானத்தில் பயணம், ஸ்டார் ஹோட்டல்களில் தங்குதல் போன்றவற்றை தம்பிக்கு கிடைத்திருக்கும் வேலைக்கு காஷன் டெபாஸிட் கட்டவும், அம்மாவின் அறுவை சிகிச்சைக்காகவும் துறந்து, அதற்கு பதிலாக பணமாக வாங்கி வந்து விட்டதாக கணவன் கூறியதை "அடுத்த முறை கிடைத்தால் பார்த்துக் கொள்ளலாம்" என்று பூர்ணிமா ஏற்றுக் கொள்ளும்பொழுது நமக்கே மனது பாரமாகி விடுகிறது. டில்லி யாத்திரைக்கு அவள் தயாராவதை சாங்கோபாங்கமாக விவரித்திருப்பார்.

'அறிவுரை'யில் நியாயமாக இருந்து எதையும் சேர்க்க முடியாத அப்பா, அவரைப் போலவே நியாயமாக, லஞ்சம் வாங்காமல் இருப்பதால் பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மகன்.  ஒரு பெரிய தொகை லஞ்சமாக ஆசை காட்டப் படும் பொழுது, அதை பெற்றுக்கொள்ள வற்புறுத்தும் மனைவி, அவனுடைய சான்றான்மை இரண்டிற்கும் இடையே மாட்டிக் கொண்டு தவிப்புடன், தந்தையிடம் அறிவுரை கேட்க வருகிறான்.

வாழ்நாள் முழுவதும் ஒரு பைசா லஞ்சம் வாங்காத அப்பா, "லஞ்சம் வருதுன்னா வாங்கிடு" என்கிறார்.
"என்னப்பா சொல்றீங்க?" என்று மகன் அதிர்ச்சி அடைய,
"ஆமாண்டா, லஞ்சம் வாங்காமல் நான் என்னத்தை கண்டேன்? நகையை வித்து, பரம்பரை வீட்டை வித்து, புதுசா கட்டின வீட்டை முடிக்க முடியாம ஒழுகுது. ஒங்கம்மாவுக்கு வைத்தியம் பார்க்க முடியல.. இத்தனை பொண்ணுங்க, பசங்க இருந்தும் யாரும் சீந்தல.. நீயே கடைசியா என்ன எப்போ பாக்க வந்த? மூணு வருஷம்? நான் லஞ்சம் வாங்கி கையில் காசு வெச்சிருந்தா பசங்களும், பொண்ணுங்களும் இப்படி உதாசீனம் பண்ணுவாங்களா? என் நிலமை உனக்கு வராம இருக்கணும்னா உன் பொண்டாட்டி சொல்றது சரி.  லஞ்சம் வாங்கிடு" சொல்லிவிட்டு கிழவர் திரும்பி படுத்துக் கொண்டார். என்று முடிகிறது.

லஞ்சம் வாங்கச் சொல்லும் சுஜாதாவின் கதை என்று வெளியான காலத்திலேயே விமர்சனத்திற்கு உள்ளான கதை.

நீலப்புடவை ரோஜாப்பூ

இதே கருத்தில் அவர் ஏற்கனவே ஒரு கதை எழுதி, அதை ரேவதி, அமெரிக்காவை நிலைக்களனாக கொண்டு 'மித்ர my friend' என்று படமாக எடுத்திருந்தார். 

திருமணமாகி பதினெட்டு வருடங்கள் கழிந்து, குழந்தைகளும் இல்லாத ஒரு தம்பதியரிடையே  உரையாடல் வெகுவாக குறைந்து, ஒரு திரை விழுந்து விடுகிறது. அந்த வெறுமையை பேனா நட்பு மூலம் நிரப்பிக் கொள்ள முயற்சிக்கும் அவனை வினு என்ற பெயரில் கடிதம் போடும் பெண் கவர்கிறாள். நேரில் சந்திக்கக் கூடாது என்று எச்சரிக்கும் ஏஜென்சியை மீறி சந்திக்கச் செல்லும் அவனுக்கு கிடைப்பது எப்படிப்பட்ட அதிர்ச்சி!

சாட்சி என்னும் கதையில் அதிகாலையில் நூறு கிராம் கடுகு வாங்க பாய் கடைக்குச் செல்லும் சரளா, பக்கத்து பெட்டிக்கடையில் அமர்ந்திருக்கும் வாசுவை, பைக்கில் வந்த இரு இளைஞர்களில் ஒருவன் பிடித்துக் கொள்ள, மற்றவன் கத்தியால் சதக்கென்று விலாவில் குத்தி சாக அடிப்பதை பார்த்து பயந்து வீட்டிற்கு ஓடி வருகிறாள்.

கொலை செய்தவன் பெயர் கிருஷ்ணா என்பதும், அவன் பக்கத்து வீட்டிற்கு வருகிறவன், அரசியல் செல்வாக்குள்ள ரௌடி என்பதால் வீட்டு மனிதர்கள் எல்லோரும் சரளாவிடம் போலீஸ் கேட்டால், "எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லிவிடு" என்று படித்து படித்து சொல்லியும், போலீஸிடம் தான் பார்த்த அத்தனையையும் ஒரு வரி பிசகாமல் சொல்லி விடுகிறாள்.

'ஜாதி இரண்டொழிய' என்னும் கதையில் ரிசர்வேஷன் பொருளாதார அடிப்படையில் அமைய வேண்டும் என்கிறார்.

தாய் - 2
வயதான, மாதம் ரூ.600/- மட்டும் ஃபேமிலி பென்ஷன் வாங்கும் ஒரு விதவைத் தாயை யார் வைத்துக் கொள்வது? என்று போட்டி போடும் இரண்டு மருமகள்கள், அவர்களை சமாளிக்கத் திணறும் மகன்கள்.

பெரியவன் ஓரளவு நல்ல நிலையில் இருந்தாலும் அம்மாவை ஒன்றரை மாதங்களுக்கு மேல் வைத்துக் கொள்வதில்லை. வெளிநாட்டிற்கு டெபுடேஷன் என்று காரணம் காட்டுகிறான்.

இரண்டாவது மகனுக்கு அண்ணா செய்வது தவறுதான்  என்றாலும், அதற்காக தாயை நடுத்தெருவில் நிறுத்தி விட முடியுமா என்று தோன்றுகிறது. ஆனால் மனைவி மசிய மறுக்கிறாள்.

எப்படியோ பேசிப் பார்த்தும் மனைவி வழிக்கு வராததால், அம்மா வழி உறவினரான வெங்கடேசன் மாமாவை பஞ்சாயத்துக்கு அழைக்கிறான்.

அவரை தனியாக வீட்டில் விட்டு விட்டு மனைவி, குழந்தைகளோடு கோவிலுக்குச் சென்று விட்டது இவனுக்கு கோபமூட்டுகிறது.

"உள்ளே, ஃபிளாஸ்கில் உனக்கு காபி வைத்திருக்கிறாளாம்" என்றார் மாமா சகஜமாக.

கை,கால், முகம் கழுவி, உடை மாற்றிக் கொண்டு மாமாவிடம்,"சித்ரா ஏதாவது சொன்னாளா?" என்று கேட்க,

சொன்னாள், சுதாகர் லெட்டர் மேல லெட்டர், ஃபோன் மேல ஃபோன் போடறானாம் அம்மாவை அழைச்சிண்டு போக"

"ஆமாம் மாமா, இவ ஓத்துக்க மாட்டேங்கறா. எப்படி கன்வின்ஸ் பண்றதுன்னே தெரியல. எங்கம்மா பாவம் எங்க போவா? சுதாகர் பண்றதும் சரியில்ல, ஏதாவது சாக்கு சொல்லி அனுப்பிடறான். நான், குழந்தைகள், அம்மா எல்லாரையும் சமாளிக்க இவ திணற்ரா"

"தினா உன்னுடைய பிரச்சனை இப்போ இந்த தேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கு.  இது ட்ரான்சிஷன் ப்ராப்ளம். கூட்டுக் குடும்பங்கள் சிதைஞ்சு போச்சு, வீடுகள் சின்னதாயுடுத்து, மனிதர்களுக்கு சுயநலம் அதிகமாகி விட்டது. பல காரணங்கள்" என்று சோஷியாலஜியை அலசி விட்டு, திவாகரின் அம்மாவுக்கு இத்தனை நாட்களாக லிட்டிகேஷனில் இருந்த  பிறந்து வீட்டு சொத்தில்  தீர்ப்பு வந்து விட்டது என்றும், அதன் மூலம் எட்டு லட்சம் கிடைக்கும், அதை வைத்துக் கொண்டு திருச்சியில் ஒரு வீடு வாங்கிக் கொண்டு, சமையலுக்கும், உதவிக்கும் ஆள் போட்டுக் கொண்டு தனியாக இருக்கலாம், சுதாகர்  டெபுடேஷனில் வெளிநாடு செல்லலாம், திவாகர் நிம்மதியாக இருக்கலாம் என்கிறார்.

"இந்த விஷயம் சுதாகருக்குத் தெரியுமா?" என்று கேட்க,"நான் இன்னும் சுதாகருக்கு லெட்டர் போடல, நேத்திக்குதானே தீர்ப்பு வந்தது. ஒரு வேளை நரசு சொல்லியிருக்கலாம், அவன் டெல்லியில்தான் இருக்கான்" என்கிறார்.

"நான் நாளைக்கு சுதாகருக்கு விவரமா லெட்டர் போடறேன். நீங்க சொன்னது நல்ல ஐடியா" என்று திவாகர் கூற, இவர்கள் இருவரும் பேசுவதை வெளியிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த திவாகர் மனைவி சித்ரா,"என்ன நல்ல ஐடியா?" என்கிறாள்.

அன்று இரவே  திவாகர் மவுண்ட்ரோடு தபாலாபீசுக்குச் சென்று அண்ணனுக்கு,

Starting by grand trunk express tomorrow to take mother Divakar
என்று தந்தி கொடுத்துவிட்டு திரும்புகிறான்.

Changed plans regarding deputation. Mother stays with us Sudhakar

என்று அவனுக்கு வீட்டில் ஒரு தந்தி காத்திருக்கிறது.

சுஜாதாவுக்கே உரிய நச் முடிவு!

6 comments:

  1. நல்ல நினைவோட்டம். பைக்கப் படிக்க படித்த நினைவு வருகிறது. லஞ்சம் வாங்கச் சொல்லும் கதை சுவாரஸ்யம்.

    ReplyDelete
  2. காசு பணம் துட்டு என்று இருந்தாலும், அந்தக் காசை கையில் பிடுங்கி கொள்ளும்வரை கூட வைத்திருப்பார்கள்.  எனக்குத் தெரிந்த ஒரு வீட்டில் கையில் லட்சக் கணக்கில் பணம் வைத்திருந்தாலும் மதிப்பில்லை.  காரணம் பணம் வைத்திருப்பவரின் அறியாமையும், அசட்டுத்தனமும்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. எழுத்தாளர் திரு. சுஜாதாவின் கதைகளை இங்கு விமர்சனம் செய்தது நன்றாக உள்ளது. சிலதை படித்திருக்கிறேனோ என எண்ண வைத்தது. ஆனால், அவர் எழுத்துக்கு நிகர் அவர்தான். எத்தனை முறை படித்தாலும், மீண்டும் ஒரு முறை படிக்கத் தூண்டும் சலிக்காத கதைகள் அவருடையவை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி. இன்றைக்கும் relevant ஆக இருப்பது சுஜாதாவின் எழுத்தின் சிறப்பு.

      Delete