கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 21, 2024

மசாலா சாட்

மசாலா சாட்  

வில்லனான ஹீரோ!:


அனேகமாக தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த லட்சுமிகாந்தன் கொலை வழக்கிற்கு அடுத்து பரபரப்பாக பேசப்படும் கொலை வழக்கு தர்ஷன் என்னும் கன்னட நடிகர் தன்னுடைய காதலிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேணுகாசாமி என்பவரை கொடூரமாக கொலை செய்திருப்பது.

லட்சுமிகாந்தனாவது ஒரு மஞ்சள் பத்திரிகையாளர். தியாகராஜ பாகவதைரையும், என்.எஸ்,கேயையும் பிளாக் மெயில் செய்திருக்கிறார். ரேணுகாசாமியோ தர்ஷனின் ரசிகர். அவர் செய்த தவறு தன்னுடைய அபிமான நடிகருக்கு ஒரு குடும்பம், மனைவி, மகன் இருக்கும்பொழுது இன்னொரு பெண்ணிடம்(நடிகை) தொடர்பு வைத்திருந்தது பிடிக்கவில்லை. அதனால் அந்தப் பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியிருக்கிறார்.

இங்கு ஒரு விஷயம்தான் வருத்தமளிக்கிறது. ரேணுகாசாமியைப் பொருத்தவரை ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தையோடு வாழும் தர்ஷனுக்கு எந்த குருஞ்செய்தியும் அனுப்பவில்லை. பெண்தான் தவறுக்கு காரணம் என்று தவறான எண்ணத்தில் செயல்பட்டு, அவரை நம்பி வந்த பெண்ணையும், குழந்தையையும் நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றிருக்கிறார். என்னத்தை சொல்வது?

ராசிபலனால் பாதிக்கப்பட்ட ஜோதிடர்:


டி.வி.யில் ஜோதிடம் சொல்லும் பலருள் முக்கியமானவர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்கள். அவருடைய நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு இவர் என்ன எல்லோருக்கும் பிரமாதமாக இருக்கிறது என்கிறாரே? என்று தோன்றும். அதற்கு ஒரு சுவையான காரணம் சொல்கிறார்.

துபாயில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு ஆள், காலையில் தொலைகாட்சியில் ராசி பலன் கேட்டிருக்கிறார். அவருடைய ராசிக்கு மோசமான பலங்களை கூறியிருக்கிறார் அந்த ஜோதிடர். ஏற்கனவே வாழ்க்கையில் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த அந்த தொழிலாளி, மனமுடைந்து, தனக்கு நல்ல காலம் வராது என்று ஜோதிடர் கூறிவிட்டதால், தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதி வைத்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுவிட, அந்த ஜோதிடரை கைது செய்து விட்டார்களாம். அதனால் தொலைகாட்சியில் மோசமான பலன்களை சொல்ல மாட்டாராம். தனிப்பட்ட முறையில் ஜோதிட ஆலோசனை கேட்பவர்களிடம் சரியான பலனை கூறி விடுவாராம். எப்படி இருக்கிறது?

மாற்றப்பட்ட நர்சரி ரைம்:

தொலைகாட்சி என்றதும் ஒரு நல்ல விஷயம் நினைவுக்கு வருகிறது. ‘ரெய்ன் ரெய்ன் கோ அவே, கம் அகெய்ன் அனதர் டே..’ என்று ஒரு நர்சரி ரைம் உண்டு. இங்கிலாந்தில் அடிக்கடி மழை பெய்யும், அதனால் அங்கு இருக்கும் குழந்தைகள் அந்தப் பாடலை பாடுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் வருடத்தில் இரண்டு மாதங்கள் மட்டும் மழை பெய்யும், மழை மிகவும் அவசியமான நம் நாட்டு குழந்தைகள் அந்தப் பாடலை பாடக்கூடாது, மழை வேண்டும் என்று நோன்பு இருப்பவர்கள் நாம் என்று பலரும் பரவலாக சொல்ல ஆரம்பித்தது வீண் போகவில்லை. இப்போது அந்த ந்ர்சரி ரைம் ‘ரெய்ன் ரெய்ன் இட்ஸ் ஓகே!, வீ வில் ப்ளே ஆன் அ சன்னி டே..’ என்று மாற்றி விட்டார்கள்.

எந்த விஷயம் மாற வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதைப் பற்றி பொது வெளியில் அதிகம் பேச வேண்டும். அப்படி பேசிப் பேசிதான் பல நல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன.



16 comments:

  1. தான் கொலை செய்யபப்டுவோம் என்று ரேணுகாச்சாமி எதிர்பார்த்திருக்க மாட்டார்.  எனவேதான் அவர் செயல்பாடு அலட்சியமாக இருந்திருக்கிறது.  ஆனாலும் கொடூரம்.

    ReplyDelete
    Replies
    1. அலட்சியம் மட்டுமல்ல, அறிவிழந்த மூர்க்கம்.

      Delete
  2. நான் தொலைக்காட்சியை பார்ப்பதில்லை.  சில வருடங்களுக்கு முன் நாங்கள் பழைய வீட்டில் இருந்தபோது பாஸ் ஹரிகேசநல்லூர் நிகழ்ச்சியை தவறாது கேட்பார்.  அப்போது கேட்டிருக்கிறேன்.  முன்னர் ஒருமுறை அவரை ஒரு இசைக்கச்சேரியில் வாணி மகாலில் கேன்டீனில் பார்த்திருக்கிறேன்!!  ஒன் டு ஒன் கேட்கப்படும் ஜோசியங்களே பாதி ஃபிராடு!  இதில் பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வருபவற்றை  எப்படி நம்புவது.....

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்பது ராசிபலன் அவர்கள் கொடுக்கும் ஜோதிட டிப்ஸ்களை கேட்க. அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர் தன்னைத்தானே "கலைமாமணி ஹரிகேசநல்லூர்..."என்று சொல்வது சிரிப்பாக வரும்.

      Delete
  3. நர்சரி ரைம் எல்லாம் மாற்றுகிறார்கள்...   இது போலவே மாற்றப்பட வேண்டியவை எல்லா லெவலிலும் இருக்கின்றன.  அவற்றை எப்போது மாற்றுவார்களோ!

    ReplyDelete
    Replies
    1. புரையோடிப்போன விஷயங்களை மாற்றுவது கடினம்.

      Delete
  4. தம்பட்டம் ஒரு கிசு கிசு? நியூஸ் ரூமில் போட முடியாதவை இப்பகுதியில் இடம் பெறுகின்றன போலும்.
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை பயில்வான் ரங்கநாதன் பெண் பிரதிநிதி என்று சொல்லாமல் விட்டீர்களே, நன்றி. எல்லாமே வெளிப்படையாகத் இருக்கிறது, கிசு கிசு எங்கே வந்தது?

      Delete
  5. நல்ல விஷயங்களைப் பற்றி விவாதிக்கிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

    ReplyDelete
  6. ஜோதிடம் உண்மை, ஆனால் (இன்றைய) ஜோதிடர்கள் பொய்யர்கள்.

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஜோதிடர்களையும் அப்படி சொல்லிவிட முடியாது. அவர்கள் பலனைக் கூறும் பொழுது எடுத்தேன்,கவிழ்த்தேன் என்று சொல்ல முடியாது. நன்றி சகோ! தர்ஷன் சம்பவம் பற்றி உங்கள் பாணியில் ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

      Delete
  7. முதல் செய்தி கொடூரம் என்றாலும் ரேணுகாசாமியின் அணுகுமுறை பிசகிவிட்டது. இதெல்லாம் புகழ்பெறுபவர்களின் மீது வைக்கும் ஒரு வெறித்தனத்தால் விளைவது.

    ஜோசியம் - செய்தி சுவாரசியம் ஆனா நான் அப்பீட்டு!!

    இந்த ரெயின் ரெயின் கோ அவே பாட்டை நான் மாற்றி எழுதி நம்மூருக்கு ஏற்ப மாற்றி எழுதி அமிர்தவர்ஷினியில் அதைப் பாடி...சின்னதாக ஸ்வரமும் போட்டு பதிவு செய்திருந்தேன். சில வருடங்களுக்கு முன். அந்த ஹார்ட் டிஸ்க் பழுதாகி ஃபார்மாட்டும் செய்யப்பட்டு எல்லாம் போச்! அதிலிருந்த கதைகள் உட்பட! வேறு எதிலேனும் காப்பி செய்து வைத்திருக்கேனா என்று பார்க்க வேண்டும்.

    பல விஷயங்கள் மாற வேண்டும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ரசிகத்தன்மை என்ற பெயரில் மூடத்தனம். ஆண் என்ன தவறு வேண்டுமானாலும் செய்யலாம், பெண்தான் தண்டிக்கப்பட வேண்டியவர் என்னும் ஆணாதிக்க மனோபாவமும் சேர்ந்து கொள்கிறது.

      Delete
  8. முதல் செய்தி - வேதனை. அவரை நம்பி இருக்கும் குடும்பம் இன்றைக்கு வேதனையில்.

    ஜோதிடம் - பக்குவமாகவே சொல்ல வேண்டியிருக்கும்!

    மாற்றி எழுதப்பட்ட பாடல் - நல்லது.

    ReplyDelete
    Replies
    1. முதல் செய்தி - வேதனை. அவரை நம்பி இருக்கும் குடும்பம் இன்றைக்கு வேதனையில்.

      ஜோதிடம் - பக்குவமாகவே சொல்ல வேண்டியிருக்கும்!
      மிகவும் சரி! நன்றி வெங்கட்.

      Delete