இதற்குத்தான் ஆசைபட்டாயா பானு..?
எனக்கு ஏன் இந்த ஆசை வந்தது என்று தெரியவில்லை. சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியதைத்தான் சொல்கிறேன். என் உறவில் ஒரு பெண்மணிக்கு போன் செய்த பொழுது, அவர் சம்ஸ்க்ருத வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பதாக அவருடைய மருமகள் கூறினார்.
அட! நாம் கூட அவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளலாமே.. என்று விவரங்கள் கேட்டேன். இப்போதுதான் ஒரு புது பாட்ச் துவங்கியிருக்கிறது, நீங்கள் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம் என்றார். சம்ஸ்க்ருத பாரதி என்னும் அமைப்பின் மூலாம் கற்றுத் தருகிறார்களாம். புத்தகங்களுக்கும், பரிட்சைக்கு மாத்திரம் பணம் காட்டினாள் போதும் என்றார். சரி என்று சேர்ந்து விட்டேன்.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஸ்போக்கன்
ஸான்ஸ்க்ரிட் என்று சின்ன வாக்கியங்கள் சொல்லி கொடுத்தார்கள். அவை எல்லாவற்றையும் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு படித்த பொழுது எவ்வளவு ஈசியாக இருந்தது! ஆஹா! நமக்கு சமஸ்க்ருதம் வந்து விட்டது, காளிதாசனை கரைத்து குடித்து விட வேண்டியதுதான் பாக்கி. என்று நினைத்துக் கொண்டேன். ட்ரைலரை பார்த்து விட்டு, முழு படமும் இப்படித்தான் இருக்கும் என்று கணிப்பதை போல அறிமுக படலத்தை வைத்து, முழுமையையும் கற்றுக் கொண்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டேன்.
ப்ரிலிமினரி முடிந்து,அதற்கு ஒரு விழாவும் எடுத்ததும் இனிமேல் பரீட்சைக்கான பகுதிகளை துவங்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு, எழுத்துக்களை அறிமுகப் படுத்தினார்கள். இது நாள் வரையில் ஒரு 'க', ஒரு 'த' ஒரு 'ப' ஒரு 'ச' ஒரு 'ட' வை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி விட்டோம். இங்கே என்னடாவென்றால் ஒவ்வொன்றிலும் நான்கு!
எனக்கு, "ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்துக் கொண்டு உலகையே ஆட்சி செய்கிறார்கள்? தமிழுக்கு எதற்கு 247 எழுத்துக்கள்?" என்று கேட்ட பெரியார்தான் நினைவுக்கு வந்தார். என்னடா இது ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோம் போலிருக்கிறதே.. என்று ஒரு பக்கம் தோன்றியது. மறு பக்கம் பரீட்சைக்கு பணம் கட்டியாச்சு, பாதியில் விட்டால் மருமகள் நம்மை பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? என்று மானப்பிரச்சனை. கடமையா? பாசமா? என்று ஊசலாடும் அந்தக் கால தமிழ் சினிமா கதாநாயகன் போல் போராட்டம்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒருமை(singular),பன்மை(plural) என்ற இரண்டுதான். இங்கோ ஒருமை(singular), இருமை(dual), பன்மையாம்(plural). அதே போல உயிருள்ளவை உயர்திணை, உயிரற்றவை அஃறிணை என்ற இரண்டோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். அவர்களோ நபும்சகலிங்கம் என்று ஒன்றை வேறு கொண்டு வருகிறார்கள். என்ன கொடுமை சரவணா இது.
இதோடு நின்றதா? நமக்கு இருக்கும் அதே ஐ,ஆல், கு, இன்,அது, கண் என்னும் வேற்றுமை உறுபுகள்தான் ஆனால்(பெரிய ஆனால்) வார்த்தைகளை அஹ என்று முடியும் வார்த்தைகள், ஆ என்று முடியும் வார்த்தைகள், இ என்று முடியும் வார்த்தைகள், அம் என்று முடியும் வார்த்தைகள் என்று நான்காக பிரித்து இந்த வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றுக்கும் ஓவ்வொரு விதமாக வரும் என்னும் பொழுது... ஹா ஹா.. நாக்கு தள்ளி விடுகிறது.
ராம, ராமஹ, ராமாய என்று படிக்கும் பொழுது மனதின் ஒரு ஓரம், " இதற்குப் பதில் ராமா, ராமா என்று சொன்னால் போகிற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்..நஹி நஹி ரக்ஷதி டுக்ருன்கரனே.. என்று ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார் தெரியாதா? " என்று கேட்க, "இப்போ நீ வாயை மூடிக்கொண்டு போகப்போகிறாயா? இல்லையா?" என்று அதட்டினாலும், "ஆமாம், சம்ஸ்க்ருதம் படிக்காமலேயே இதெல்லாம் தெரிகிறதே?" என்று மனசின் மறு ஓரம் நினைக்க,, யாரோ "கிக் கிக் கிக்" என்று சிரிப்பது போல இருந்தது வேறு யார்? எல்லாம் இந்த மனக்குரங்கு செய்யும் வேலைதான்!
எழுத்தில் இந்த கஷ்டம் என்றால், எண்களில் வேறு கஷ்டம். ஒன்று என்பதை இரண்டு போல் எழுத வேண்டும், இரண்டையும் இரண்டு போல்தான் மேலே சுழிக்காமல் எழுத வேண்டும். ஐந்தை நாலு போல் எழுத வேண்டுமாம், ஏழாம் எண்ணை கிட்டத்தட்ட ஆறு போல போட வேண்டும். அவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது to learn,first we should unlearn என்பது புரியாதது என் பிரச்சனையா?
சம்ஸ்க்ருதம் படிக்க நேரம் ஒதுக்கினால், மத்யமர், பிளாக் இவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அங்கே போய் விட்டால், இங்கே அடி வாங்குகிறது. எதையுமே முழுமையாக செய்யாதது போல் ஒரு உணர்வு. அப்போது பார்த்து, மத்யமரில் போஸ்ட் ஆஃப் த வீக் வேறு கொடுத்து விட்டார்கள். உடனே, "இந்த வயதில் உனக்கு என்ன வருமோ,எதை செய்தால் சந்தோஷமோ, அதை செய்ய வேண்டும். இங்கே என்ன சொல்றது?" என்று வி.டீ.வி.கணேஷ் மாதிரி மனதின் ஒரு ஓரம் கேட்டது. "நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" என்று அதை அதட்ட வேண்டியதாகி விட்டது.
சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனக்கும் எனக்கும் சண்டை அதிகமாகி விட்டது. எங்கேயாவது வாய் விட்டு பேசிக்கொள்ள ஆரம்பித்து விடப் போகிறேன் என்று பயமாக இருக்கிறது.
எங்கள் வகுப்பில் இருக்கும் அருணா குமார் என்பவரிடம், மேலே தொடர வேண்டுமா? என்று சந்தேகமாக இருக்கிறது என்றதும், அவர், 'பயிற்சி செய்தால் வந்து விடும், ஒண்ணும் கஷ்டமில்லை என்றதோடு, சந்தேகங்களை தெளிவும் படுத்தினார். அதனால் வகுப்பில் அனுப்பிய டெஸ்ட் பேப்பர்களில் முப்பதுக்கு இருபத்திநாலு வாங்க முடிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "சரி ஒரு கை பார்த்து விடலாம், நேர மேலாண்மை தெரிந்தால் எல்லாவற்றையும் மேனேஜ் பண்ண முடியும்" என்ற நம்பிக்கை வந்தது. சித்திரமும் கை பழக்கம், செந்தமிழ் மட்டுமல்ல ஸம்ஸ்க்ருதமும் நா பழக்கம்தானே?" பார்த்து விடலாம்! என்ன நான் சொல்வது சரிதானே?
நீங்கள் நிச்சயம் ஒருகை பார்த்துவிடுவீர்கள்..வாழ்த்துகள்..
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteவிடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.
ReplyDeleteவாழ்த்துகள் மேடம்.
இப்பொழுது நாமும் முயலலாமே... என்று தோன்றுகிறது...
அதேநேரம் எங்கிருந்தோ இஃகி இஃகி இஃகி என்ற சிரிப்பொலியும் கேட்கிறது.
தயங்காமல் முயலுங்கள்.நன்றி
Deleteஇவர்ட்ட கத்துக்கறேன், இன்ன காண்டாக்ட் நம்பர்னு போடவேண்டியதுதானே..
ReplyDeleteஎதையும் கற்றுக்கொள்வதற்கு வயது என்ன தடை?
நானும் இப்போது கிரந்தம் எழுத/படிக்கக் கற்றுக்கொள்கிறேன் (படிக்கும் திறமை வந்துவிட்டது). அதுபோல மற்ற மொழிகளையும் கற்க ஆசை, குறிப்பா மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்றவை
கிரந்தம் ஓரளவுக்குப் படித்துக் கொண்டிருந்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ அதில் ஈடுபாடு இல்லாமல் போயிடுச்சு. கல்வெட்டுக்களைக் கூடப் படிச்சுட்டு இருந்த காலம் ஒன்று இருந்தது.
Deleteசம்ஸ்க்ருத பாரதி மூலம் கற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறேனே..?
Deleteமுகநூலிலும் படிச்சேன். அருமையா எழுதி இருக்கீங்க. நீங்க விரைவில் சம்ஸ்கிருதத்தில் படிக்க ஆரம்பித்தால் ஆச்சரியமே இல்லை. வாழ்த்துகள், பாராட்டுகள். காளிதாசனைப் படித்துப் புரிந்து கொண்டு விமரிசனம் செய்யும் தகுதி உண்டாகவும் பிரார்த்தனைகள்.
ReplyDeleteஉங்கள் பிரார்தனைகளுக்கும்,வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.
Deleteஎனக்கும் சேரச் சொல்லி சமஸ்கிருத பாரதியிலிருந்து அழைப்பு வந்தது. நேரம் ஒத்து வரவில்லை என்பதோடு அதில் உட்கார முடியாது. ஒன்றரை மணி வரை வீட்டு வேலைகள் மாற்றி மாற்றி இருக்கும். :( இந்த ஆசையை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டேன்.
ReplyDeleteமுயற்சி திருவினை ஆக்கும்...
ReplyDeleteநலம் வாழ்க...
நன்றி.
Deleteநானும் ஆரம்பித்து விட்டுவிட்டேன். நிறைய பயிற்சி செய்யவேண்டும். வருத்தமாகத்தான் இருக்கிறது. கற்றுக்கொண்ட கன்னடத்தை மறக்காமல் இருக்க என் கன்னட தோழிக்கு கன்னடத்தில் மெஸேஜ் அனுப்பினால் வருகிறேன்....
ReplyDeleteஉங்களுக்கு என் நல்வாழ்த்துகள் சமஸ்கிருத பண்டிதர் ஆக.
நானும் ஒரு காலத்தில் உங்கள்ட கேட்டேனே கன்னடம் எங்க கத்துக்கொள்ளலாம், சுலப முறை, புத்தகம் பற்றி
Deleteநன்றி ரஞ்சனி! சம்ஸ்க்ருத பண்டிதரா? நானா? நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. ஆனால் சம்ஸ்க்ருத பண்டிதர்கள் மீது மரியாதை அதிகரித்து விட்டது.
Delete@நெல்லைத்தமிழன்:கன்னடம் கற்றுக் கொள்ள'முப்பது நாட்களில் கன்னடம்' என்னும் பாலாஜி பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகத்தை ஒரு முறை சென்னை சென்ட்ரலில் வாங்கினேன். உயிரெழுத்து கற்றுக் கொண்டேன். இதில் என்ன பிரச்சனை என்றால் எழுத்துகள் மிகவும் பொடிசாக இருக்கின்றன. சில எழுத்துக்களின் வித்தியாசம் புரியவில்லை. யூ டியூபில் ஸ்போக்கன் கன்னடம் கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன், அதுவும் சரியாக வரவில்லை. பெர்சனலாக யாராவது கற்றுக் கொடுத்தால்தான் சரிப்படும் என்று நினைக்கிறேன்.
DeleteSuper. It is very rewarding to be able to speak a few sentences in sanskrit, even with mistakes.
ReplyDeleteநான் கூட முதல் பரிட்சை எழுதி தேர்வாகி விட்டேன். இரண்டாம் வகுப்பு பாடம் நடத்த வந்த ஆசிரியர் भवत्याः ज्ञानं बहु सोल्पं अस्थि। அப்டின்னு சொல்லிட்டார். சமஸ்கிருதத்தில் மட்டும் தான் பேசுவார். நிறைய மேற்கோள் காட்டி பேசுவார். அது எதுவும் எனக்கு புரியாது. ஏன்னா அது எதுவும் நான் படிச்சதில்லை.
இதுல ஒரு ஃபர்ஸ்ட் bench கூட்டம். அவர் சொல்லி முடிக்கரதுக்குள்ள இவங்க கூட்டமா ஸ்கூல்ல நம்ப pledge சொல்லுவோம் பாருங்க... அந்த மாதிரி கூடவே சேர்ந்து சொல்லி முடிச்சிருவாங்க. என் காதுல blah blah blah மாதிரி விழும். ஒரு மாசம் try செஞ்சிட்டு அதான் ஒரு certificate வாங்கி ஆச்சே... போதும்னு விட்டுட்டேன்.
ஹாஹா! நல்ல அனுபவம்! முதல் முறை என் தளத்திற்கு வந்திருக்கிறீர்கள். நன்றி,மீண்டும் வருக!
Deleteவாழ்த்துகள்...
ReplyDeleteநன்றி!
Deleteமனம் நிறை வாழ்த்துகள் பானுமா. இத்தனை நாட்கள் கற்ற வழிபாட்டுக்கெல்லாம் அர்த்தம் புரியும்.
ReplyDeleteநீங்கள் வல்லவர். உங்களால் முடியும்.
மனதை ஒரு பக்கம் மட்டும் பார்க்க வைப்பது சிரமமே.
முயற்சியில் வெற்றி நிச்சயம்.
வருகைக்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும் நன்றி அக்கா.
Deleteஉங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. நீங்கள் சாதிப்பீர்கள். பாராட்டுகள். பேஸ்புக்கிலேயே படித்தேன்.
ReplyDeleteஎன் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி ஸ்ரீராம்
Deleteமனம் நிறைந்த வாழ்த்துகள். மொழிகளைக் கற்றுக் கொள்ள ஆர்வம் வேண்டும் - கூடவே நேரமும். தில்லியில் வீட்டிற்குப் பக்கத்திலேயே சமஸ்க்ருதம் கற்றுத் தருகிறார்கள். சில சமயங்களில் சேர்ந்து கொள்ளலாம் என்று தோன்றும் ஆனால் இதுவரை சேரவில்லை.
ReplyDeleteநன்றி வெங்கட்!
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteஉங்கள் முயற்சிகள் கண்டு வியக்கிறேன். நீங்கள் எதிலும் சாதிப்பீர்கள். உங்களின் இந்த சாதனையும் கண்டிப்பாக வெற்றியை சந்திக்கும். என் அன்பான வாழ்த்துக்களும்.
அன்புடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி சகோதரி!
ReplyDeleteதிருச்சியிலிந்தபோது என்மனைவி அவள் தோழியுடன் சம்ஸ்கிருதம் கற்க சேலம்சென்றது நினைவுக்கு வருகிறது
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி. உங்க மனைவி முழுமையாக சம்ஸ்க்ருதம் கற்றுக் கொண்டாரா?
DeleteAre you continuing the Samskritam course? I joined the online Samskrita Bharati course in July. Passed two exams. Day after is 3rd exam. While it is a very good course, it is also true that I have put aside every other activity, and I am spending many hours every day in this abhyasam! Two more levels to go.....
ReplyDelete