மசாலா சாட்
மேஷ ராசிக்காரர்கள் - அடர்ந்த சிவப்பு, சிக்னல் சிவப்பு நிரப்பையை எடுத்துச் செல்ல வேண்டுமாம்.
ரிஷப ராசிக்காரர்கள் - வெளிர்நீல நிற பை எடுத்துக்கொண்டு போக வேண்டும்
மிதுன ராசிக்காரர்கள் கொண்டு போக வேண்டிய பை - இளம் பச்சை நிறத்தில் இருந்தால் நலமாம்.
கடக ராசிக்காரர்கள் தூய வெண்மை நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இளம் சிவப்பு நிற பைகள் நல்லது செய்யுமாம்.
கன்னி ராசிக்காரர்கள் வைத்துக் கொள்ள வேண்டிய பை அடர்ந்த பச்சை நிறத்தில் இருப்பது நலமாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியானது அடர்ந்த நீல நிறப்பை.
துலாம் ராசிக்காரர்களுக்கு ராசியானது அடர்ந்த நீல நிறப்பை.
விருச்சிக ராசிக்காரர்களும் அடர்ந்த சிவப்பு நிற பையைத்தான் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம்.
தனுர் ராசிக்காரர்களுக்கு கை கொடுப்பது மஞ்சப்பை.
மகர ராசிக்காரர்கள் பிரௌன் கலந்த கருப்பு நிற பையையும், கும்ப ராசிக்காரர்கள் அடர்ந்த கரு நிற பையையும் எடுத்துச் செல்வது நலமாம்.
மீன ராசிக்காரர்கள் பொன் நிற மஞ்சள் பையை தேடிப் பிடியுங்கள்.
இப்படியெல்லாம் எடுத்துக் கொண்டு சென்று வாங்கி வந்த வெண்டைக்காயில் பூச்சி இருந்தால் ஆர்கானிக் என்று சொல்லி சமாளியுங்கள்.
------------------------
தொலைக்காட்சி என்றதும் என்னைக் கவர்ந்த ஒரு சாக்லேட் விளம்பரம் நினைவிற்கு வருகிறது.
தனக்கு கொடுக்கப்பட்ட சாக்லேட் பட்டையை தின்று முடித்து விட்ட சிறுவன் கண்களை மூடி ,"காட்! எனக்கு இன்னும் ஒரே ஒரு சாக்லேட், ப்ளீஸ்" என்று வேண்டிக்கொள்வான் அதைப் பார்த்த அருகில் படித்துக் கொண்டிருக்கும் அவன் மூத்த சகோதரன்(அவனும் சிறுவன்தான்) தான் திங்காமல் வைத்துக் கொண்டிருக்கும் தன்னுடைய சாக்லேட் பட்டையை தம்பிக்கு முன் வைத்து விடுவான். அது தெரியாத தம்பி தன்னுடைய வேண்டுதலுக்கு இரங்கி நிஜமாகவே கடவுள் கொடுத்து விட்டார் என்று நினைத்து,"ஆ!கிடைத்து விட்டது!" என்று அண்ணனிடமே காட்டுவான். அதற்கு அவனும்," எனக்கும் ஒன்று கேட்டிருக்கலாமே?" என, "நெக்ஸ்ட் டைம்" என்று கூறி விட்டு முழு சாக்லேட் பட்டையையும் எடுத்துச் சென்று விடுவான். அவன் விட்டுச்சென்ற சாக்லேட் பேப்பரை அண்ணன் எடுக்க, இதையெல்லாம் அறிந்த அவர்கள் தாய்,"சாக்லேட் பேப்பரை நான் தூக்கி போடட்டுமா?" என்று மகனின் தலையை கோதி கேட்பதோடு முடியும். பகிர்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற குணங்கள் இன்னும் இருக்கின்றன என்று கூறும் அந்த விளம்பரத்தை விரும்பி பார்ப்பேன்.
ஒரு வழியாக காற்றின் மொழியை அமேசான் பிரைமில் பார்த்தேன். வித்யா பாலன் நடித்திருந்த 'தும்ஹாரி சுலோ' என்னும் ஹிந்தி படத்தின் தமிழ் வடிவம். family drama. மூலத்தை சிதைக்கவில்லை. முன்பாதி முழுவதும் ராதா மோஹனுக்கே உரிய இயல்பான நகைச்சுவையோடு நகர்கிறது. ஜோதிகா என்னவோ நன்றாகத்தான் நடித்திருக்கிறார். இருந்தாலும் வித்யா பாலன் இன்னும் கொஞ்சம் இயல்பாக செய்திருந்தாரோ என்று தோன்றுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று, ஜோதிகாவின் குறும்பு எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியும், வித்யா பாலனைப்பற்றி தெரியாததால் அவர் எப்படி நடித்திருந்தாலும் ஓகே. அவருடைய நடைதான்.. ஹி ஹி!
இரண்டாவது ஜோதிகா பாவம் என்ன செய்வார்? அவருடைய முட்டை கண்ணை இரண்டு சென்டி மீட்டர் விரிக்க வேண்டுமென்றாலும், அது ஐந்து சென்டி மீட்டர் விரிந்து விடுகிறதே? நமக்கு அது ஓவர் ஆக்டிங் போல தோன்றுகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் சோகக்காட்சிகளில் ஜமாய்த்து விட்டார். விதார்த் தன் பாத்திரத்தை உணர்ந்து செய்திருக்கிறார்.
ஸ்டார் வேல்யூ உள்ள வேறு நடிகரை போட்டிருந்தால், இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்குமோ?
ஜோதிகாவின் பாஸாக வரும் நடிகை யார் என்று தெரியவில்லை. மிக நன்றாக நடித்திருக்கிறார். அந்த பேஸ் வாய்ஸ் ஒரு பிளஸ்.
எதிர்பார்த்த திருப்பங்களோடு(பிரமாத திருப்பங்கள் எதுவும் இல்லை), எதிர்பார்த்த முடிவோடு, சுத்த சைவமாக அந்தக் கால மௌலி படங்கள் போல இருக்கிறது.
-------------------
என் அக்காவின் வீட்டில் இருந்த பொழுது, ஒரு நாள் அக்கா பேத்தி ரோஷ்ணியை எங்கே காணோம் என்று தேடினோம். ஐந்தே வயதாகும் அவளானால் செருப்பை மாட்டிக்கொண்டு எங்கேயோ சென்று விட்டு வந்தாள். எங்கே போயிருந்தாய்? என்று கேட்டதற்கு,"சும்மா ஒரு ரவுண்ட் போய் விட்டு வந்தேன் என்றாள். எல்லோரும் அவளை இப்படியெல்லாம் தனியாக, வீட்டில் சொல்லாமல் எங்கேயும் போகக்கூடாது என்று சொல்லி விட்டு விட்டார்கள். நான் மட்டும் கொஞ்சம் அதிகமாக அவளிடம்," இப்படியெல்லாம் வீட்டில் சொல்லாமல் தனியாக போனால், யாராவது உன்னை தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள், அப்படி இப்படி என்று பயமுறுத்தினேன். நான் சொன்னதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அவள் என்னிடம்,"வீட்டில் சொல்லிவிட்டு போனால் தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா?" என்று கேட்டாளே ஒரு கேள்வி.
இன்னொரு நாள் என்னோடு கடைக்கு வந்தாள். அங்கு நெயில் பாலீஷை அவள் கையில் எடுப்பதை பார்த்து அவளுக்கு வாங்கிக் கொடுத்தேன். மறுநாள் அதை தன் கை, கால் விரல்களுக்கு போட்டுக்கொண்டதோடு எனக்கும் போட்டு விட வந்தாள். ஐயோ! நான் பாட்டிடா, பாட்டியெல்லாம் நெயில் பாலீஷ் போட்டுக்கொள்வார்களா? யாராவது பார்த்தால் கேலி பண்ணுவார்கள் என்றேன். உடனே,"நீ சித்திதானே, நான் உன்னை பானு சித்தி என்றுதானே கூப்பிடுகிறேன்?" என்று எனக்கு ஐஸ் வைத்து, என் கை, கால் விரல்களில் நெய்ல் பாலீஷ் போட்டு விட்டுவிட்டாள்.
இதனால் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நான் பாட்டியில்லை. ஹா ஹா ஹா!
-----------------