கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, August 6, 2023

விதியின் கைகள்

 விதியின் கைகள்

“என்னங்க, இந்த வருஷம் லீவுக்கு பெங்களூர் போலாமா? சங்கர் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்|” சந்திரா, கணேஷிடம் கேட்டாள்.

சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், தன் மடியில் தலை வைத்து உறங்கிய மகனை தூக்கி கட்டிலில் கிடத்தி, குழந்தைக்கு போர்வையை போர்த்தி, மின் விசிரியை நிதானமாக சுழலவிட்டு, மின்சார கொசு விரட்டியை ஆன் செய்து விட்டு மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து,

“லீவு எப்போ தொடங்குது?” என்றதும் சந்திராவை முந்திக் கொண்டு மகள், “அடுத்த வாரம்பா” என்றாள்.

மகளின் ஆர்வத்தை ரசித்த கணேஷ், சிரித்துக் கொண்டே, “மொதல்ல உங்க மாமா அந்த சமயத்தில் பெங்களூரில் இருக்கணுமே.? அவங்க எங்கேயாவது போகாம இருக்கணும்” என்றதும், சந்திரா, “ அவங்க எங்கேயும் போகல, எனக்குத் தெரியும்” என்றாள்.

“எதுக்கும் நீ அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்லு, டிக்கெட் பாக்கறேன்” என்றதும், ஆர்வக் கோளாறில் உடனே செல்ஃபோனைக் கையில் எடுத்தாள்.

“என்ன அவசரம்? கார்த்தால கேளேன்” என்றான். ஆனால் அவள் உடனே தம்பியை அழைத்து, அவர்களின் வசதியைக் கேட்டு, “அவங்க அங்கதான் இருக்காங்க, நீங்க டிக்கெட் பாருங்க” என்றாள்.

“பாக்கறேன், ஆனா, என்னால பத்து நாள் இருக்க முடியாது. ஒரு மூணு நாள் இருந்துட்டு வந்துடுவேன். நீ குழந்தைகளை அழைச்சுகிட்டு ஜாக்கிரதையா வந்துடுவதானே?”

“என்னங்க இப்படி சொல்றீங்க? நீங்க இல்லாம நாங்க எப்படி ஊர் சுத்திப் பாக்கறது?

“நம்ப ஊர் போனதும் மைசூர், சாமுண்டி ஹில் எல்லாம் பார்த்துடலாம். லோக்கலா பாக்க வேண்டிய இடங்களுக்கு உன் தம்பி கூட்டிக்கிட்டு போக மாட்டானா?”

சந்திரா பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, அதை சம்மதமாகக் கொண்டு கணேஷ் பெங்களூருக்கு ரயிலில் டிக்கெட் புக் பண்ணினான். தம்பி மனைவிக்கும், குழந்தைக்கும் உடைகள் வாங்கிக் கொண்டார்கள். அங்கு குளிருமோ என்று குழந்தைகளுக்கு ஸ்வெட்டெர் வாங்கினார்கள். இப்படி ஊருக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தன.

அவர்கள் இருந்தது கம்பெனி குடியிருப்பு. வாசலில் ஒரு செக்யூரிடி உண்டே தவிர, இப்போது போல செக்யூரிடி காமிராக்கள் எல்லாம் வராத காலம். ஏன் ஆண்ட்ராய்டு ஃபோன்கள், ஓலா, ஊபர் போன்றவை வரவில்லை. அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தது, இரண்டுமே பட்ட பகலில், வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, கதவை லாகவமாக திறந்து, வீட்டிர்க்குள் வைத்திருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவங்கள் கணேஷ், சந்திரா இருவரையுமே பயப்படுத்தியது.

எதற்கு வம்பு என்று தங்களிடமிருந்த பத்து பவுன் நகைகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அவைகளை தனியாக ஒரு குட்டி பையில் போட்டு, தங்கள் பெட்டியில் துணிகளுக்கு நடுவில் வைத்து விட்டார்கள். அவர்கள் பெங்களூரை அடைந்து, ஒரு ஆட்டோ பிடித்து, சந்திராவின் தம்பியின் வீட்டை அடைந்த பொழுது, இரவாகி விட்டது.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் குழந்தைகளும், சந்திராவும் முதலில் இறங்கி விட்டார்கள். சந்திராவின் தம்பியின் வீட்டு வாசலில் இருந்த மரம் தெரு விளக்கின் வெளிச்சத்தை குறைத்தது. பர்சிலிருந்து பணத்தை எடுப்பதற்காக வெளிச்சம் தேடி சற்று நகர்ந்த கணேஷ் ஆட்டோவிலிருந்து பெட்டியை இறக்காதது கவனப் பிசகா? அல்லது அதீத நம்பிக்கையா? அந்த ஆட்டோ டிரைவர் தன்னுடைய கூலியை எதிர்பார்க்காமல் சட்டென்று யூ ட்ர்ன் எடுத்து இவர்கள் சுதாரிப்பதற்க்குள் பறந்து விட்டான். பெட்டிக்குள் வைத்திருந்த பத்து பவுன் நகை மட்டுமல்லாமல், மாற்றுடை கூட இல்லாமல் அத்தனையையும் கண நேரத்தில் தவற விட்டார்கள். போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாலும், ஆட்டோவின் ரிஜிஷ்ட்ரேஷன் எண், ஆட்டோ டிரைவரின் பெயர், போன்ற தகவல்கள் இல்லாததால் பிடிப்பது கஷ்டம். என்றார்களாம். அந்த திருடன் அகப்படவேயில்லை. வீட்டில் வைத்தால் திருட்டுப் போய் விடுமோ என்று பயந்து, கையோடு கொண்டு சென்ற பொருள், வெளியூரில் திருட்டுப் போக வேண்டும் என்பது விதி போலிருக்கிறது.  

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.