முதல் நாள் இன்று...
கிரீஷுக்கு ஒரே சந்தோஷம். அவர்களுடைய குழந்தைக்கு நகரத்தின் மிகச் சிறந்த பள்ளியில் இடம் கிடைத்து விட்டது. அந்தப் பள்ளியில் பிளே ஸ்கூலில் இடம் வாங்க வேண்டுமென்றால் அப்ளிகேஷன் தரப்படும் நாளுக்கு முதல் நாள் இரவே பெற்றோர்கள் வரிசையில் நிற்க தொடங்கி விடுவார்கள். விடிய விடிய வரிசையில் நின்று அப்ளிகேஷன் வாங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ஆன் லைனில் விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அவர்கள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் மீண்டும் அணுக முடியாது. அப்படிப்பட்ட பள்ளியில் இடம் கிடைப்பது எவ்வளவு பெரிய விஷயம்!
பள்ளிக்கு பணம் கட்டிய பிறகு, குழந்தையிடம் தினசரி," நீ ஸ்கூலுக்கு போகணும், அங்கு உனக்கு நிறைய ஃப்ரண்ட்ஸ் இருப்பார்கள், ஜாலியா விளையாடலாம்" என்றெல்லாம் தினமும் சொல்லி தயார் படுத்தினார்கள். சில நாட்கள் "ஓகே" என்று கூறிய குழந்தை, சில நாட்கள் "வேண்டாம்", என்று அம்மாவை கட்டிக்க கொள்ளும்.
பள்ளி செல்வதற்காக, ஸ்கூல் பேக், டிஃபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில் ஷூ என்று ஒவ்வொன்றாய் வாங்கினார்கள். அப்போதெல்லாம் சந்தோஷமாக இருந்த தீப்தி, நாட்கள் நெருங்க நெருங்க, அழ ஆரம்பித்து விட்டாள். கிரீஷுக்கு அவளை எப்படி சமாதானப் படுத்துவது என்று தெரியவில்லை.
ஸ்கூலுக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது. வழியெல்லாம் ஒரே அழுகை. பள்ளிக்கூட வாசலில் இவர்களை நிறுத்தி விட்டு, குழந்தையை இவர்களிடமிருந்து வாங்கி கொண்ட ஆயா அம்மாவும், ஒரு ஆசிரியையும்," நீங்க போய்டுங்க, நாங்க பாத்துக்கறோம்" என்றார்கள். பல குழந்தைகள் வீறிட்டு அழ, ஒரே களேபரம். தீப்தியும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் பெரிதாக அழ ஆரம்பித்தாள்.
குழந்தை ஸ்ரீஷா,"அம்மா அழாதம்மா, நான் சமத்தா இருப்பேன்" என்று அம்மா தீப்தியின் கண்களை துடைத்து விட்டது.
"பாரு, குழந்தை அழாமல் இருக்கு, நீ அழற, எல்லோரும் உன்னை வேடிக்கை பார்க்கிறார்கள், கம் ஆன் " என்று கிரீஷ் தீப்தியை தேற்றி அழைத்துச் சென்றான்.