திருவெம்பாவை -10
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தரன் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
சிவ பெருமானின் கோவிலை நாடி வந்திருக்கும் பெண் பிள்ளைகளே, சிவனின் பெருமையை எப்படி கூறுவது? அவருடைய திருவடியோ அதள, விதள, சுதள, தளாதள, ரசாதளா, மஹாதள, பாதாள என்னும் ஏழு உலகங்களுக்கும் கீழே உள்ளது, திருமுடியோ எல்லா உலகங்களையும் தாண்டி உள்ளது. அதை விவரிக்க நம்மிடம் சொற்கள் இல்லை. பெண்ணை தன் இட பாகத்தில் கொண்ட அவரை விண்ணுலக தேவர்களும், மண்ணுலக மாந்தர்களும் பல விதமாக பாடினாலும் முழுமையாக விளக்க முடியாதவர். வேதங்களின் முதல் பொருள். இப்படியெல்லாம் இருந்தாலும் தொண்டர்களின் உள்ளத்தில் இருப்பவன். அவர்களுக்கு ஒரு தோழன். தனக்கென்று ஒரு ஊரோ, பெயரோ இல்லாதவன்(எண்ணற்ற பெயர்களை உடையவன், எல்லா இடங்களிலும் உறைபவன் என்பது மறைந்திருக்கும் பொருள்). அவனுக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்றும் கிடையாது.