கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 7, 2025

சென்னை டைரி - 3

சென்னை டைரி - 3

சென்ற மாதம் என் அக்காவின் பேரனுக்கு பூணூல் என்பதற்காக சென்னைக்கு வந்தேன். அது முடிந்ததும் பெங்களூர் திரும்பி விடலாம் என்று நினைத்தேன். ஆனால் 17,18 தேதிகளில் மாதா அமிர்தானந்தமயி சென்னை விஜயம் என்பதால் பெங்களூர் திரும்புதலை ஒத்தி போட்டேன். 

அமிர்தானந்தமயி மடத்தில் இருக்கும் ஒரு பெண்மணி அம்மா எங்கெல்லாம் போகிறாரோ, அங்கெல்லாம் செல்வாராம். அதோடு மட்டுமல்லாமல் அந்தந்த ஊர்களில் இருக்கும் முக்கியமான கோவில்களுக்குச் செல்வாராம். அதுவும் பிராசீனமான கோவில்கள்தான் அவருடைய விருப்பம். இந்த முறை சென்னையில் இருக்கும் புராதனமான கோவில்களில் சிலவற்றை பார்க்க விரும்பினார். அவரை அந்த கோவில்களுக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என் பெரிய அக்காவின் பெண் ஏற்றுக் கொண்டாள். அவர்களோடு கைடு போல நானும் சென்றேன். 

முதலில் அவரை திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அழைத்துச் சென்றோம். அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவ பெருமான் காட்சி தந்த இடம் என்பதால் லிங்கத் திருமேனிக்கு பின்னால் சிலா ரூபத்தில் சிவ பெருமானும், பார்வதி தேவியும் காட்சி அளிக்கிறார்கள். திருமணத் தடை நீக்கும் ஆலயம்.*

அங்கிருந்து திருவேற்காடு சென்று அம்மனை தரிசித்தோம். கோவிலில் நிறைய மாற்றங்கள். கருவறை என்னும் அமைப்பே இல்லை. நிறைய கும்பல் வருவதால் எல்லோரும் தரிசிக்க ஏதுவாக இருக்கலாம்,ஆனால் இதை ஆகம விதிகள் அனுமதிக்கிறதா என்று தெரியவில்லை.  

அங்கிருந்து மாங்காடு சென்றோம்.  கோவில் நடை அடைக்கும் நேரத்தை நெருங்கி கொண்டிருந்தாலும் நன்றாக தரிசனம் செய்ய முடிந்தது. கோவூரில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் நவகிரகங்களில் புதனுக்குரியது, கஜ பிருஷ்ட விமானம் போன்ற விஷயங்களை கேரள விருந்தினரிடம் சொல்லியிருந்ததால் அங்கு செல்ல விரும்பினார், ஆனால் நேரமில்லாமல் போய் விட்டது. 

அடுத்த நாள் சென்ற கோவில்கள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

*வேதபுரீஸ்வரர் கோவில் பற்றிய ஏற்கனவே என் வலைப்பூவில் பதிவாக எழுதியிருக்கிறேன் அதன் சுட்டி: https://thambattam.blogspot.com/2018/01/blog-post_29.html?m=1