கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, November 8, 2020

திருமண திருத்தங்கள்

 திருமண திருத்தங்கள் 


ரெஸ்டாரெண்டில்  தனக்கு எதிர்  நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஆர்த்தியிடம், விஷால் ," நீ உங்க அப்பா,அம்மாவிடம் பேசினாயா?" என்று கேட்டான். 

காபியை ஒரு சிப் அருந்தி விட்டு, "பேசினேன், பட் நோ யூஸ்"  என்றாள்.

எங்க வீட்டிலும் அதே கதைதான் என்ற விஷால் ," "ஸோ, வேற வழியில்லை, நம்ம பிளானை எக்சிகியூட் பண்ண வேண்டியதுதான்" என்றான்.   
 
அவனுக்கு பதில் சொல்லாமல் ஆர்த்தி, ஜன்னல் வழியே தெரிந்த தோட்டத்தை வெறிக்க, டேபிளை தட்டி, "என்னாச்சு? எனி பிராப்லம்?" 

"ஒண்ணுமில்லை, நம்ம அப்பா,அம்மாவுக்கு இது ரொம்ப ஷாக் ஆக இருக்குமோனு தோண்றது"

"வேற வழியில்ல, நம்ம இஷ்டம் என்னனு கேட்காம அவங்களா  ஒன்றை டிசைட் பண்ணி, அதை நம்ம மேல திணிச்சா வேற என்ன பண்ண முடியும்?"

ஆமாம், அப்போ நீ சொல்ற மாதிரி நாம் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக் கொள்வதைத் தவிர வேற வழியில்லை. அதுக்கான அரேஞ்சு மென்ட்ஸ்..?"

"அதையெல்லாம் நான் பார்த்துக்கறேன். உன் சைடுல நீ ஸ்ட்ராங்கா இரு அது போறும். அம்மா, அப்பா செண்டிமெண்டில் நீ கட்சி மாறிடக் கூடாது" 

"நோ! நோ! " என்று அவள் புன்னகைத்ததும் விஷால்,"அப்பா! வந்ததிலிருந்து இப்போதான் சிரிக்கிற.." என்றதும் அவள் மேலும் தன் புன்னகையை விரிவு படுத்தினாள். அந்த புன்னகைக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று விஷாலுக்குத் தோன்றியது.

அடுத்தடுத்து வேலைகளை விஷால் விரைந்து முடித்தான்.  ஆர்த்தி  அம்மாவுடன்  புடவை  வாங்க கடைக்குச் சென்று, இரண்டு புடவைகள் மட்டும் எடுத்துக் கொண்டாள். அவர்களுக்கு  திருமணப் பதிவில் உதவி செய்த ஏஜென்ட் பெண்மணி ஆர்த்தியிடம், "நாளைக்கு ரிஜிஸ்டர் பண்ண வரும் பொழுது இப்படி ஜீன்ஸில் வராதம்மா, புடவை கட்டிக்கிட்டு வா"  என்றாள்.  

குறிப்பிட்ட நாளில்," அம்மா இன்னிக்கு விஷாலோட அப்பா அம்மா நம்ம வீட்டுக்கு வருவாங்க," என்று ஆர்த்தியும், "ஆர்த்தியோட அப்பா அம்மா உங்களை அவங்க வீட்டுக்கு வரச் சொல்லியிருக்காங்க" என்று விஷாலும் கூறி, அவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் கூட்டினர். எதற்காக தாங்கள் அங்கே கூடியிருக்கிறோம் என்று புரியாத பெரியவர்கள் பொதுவாக ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். அப்போது காரில் பட்டுப் புடவையில் ஆர்த்தியும்  பட்டு வேஷ்டியில் விஷாலும்  மாலையும் ,கழுத்துமாக வந்திறங்கிய பொழுது அவர்களின் பெற்றோர்கள், ஆச்சர்யமா? அதிர்ச்சியா? என்று சொல்லத் தெரியாத உணர்வில் திகைக்க, 

"நாங்க இன்னிக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டு விட்டோம். எல்லோரும் சேர்ந்து நில்லுங்கோ, நாங்க நமஸ்காரம் பண்றோம்"  

வாட்?

என்ன நடக்கறது இங்க?

என்னடி கூத்து இது?

என்று விதம் விதமாக தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 

கோபமாக எழுந்த விஷாலின் தந்தை வெளியிடம் என்பதால் தன் கோபத்தை காட்ட முடியாமல் விருட்டென்று எழுந்து வெளிப் பக்கம் நடக்கத் துவங்க, அவருக்கு முன்னாள் ஓடி வாசல் கதவை தாளிட்ட ஆர்த்தி, "அங்கிள் ப்ளீஸ் ,ஒரு நிமிஷம்.. நாங்க சொல்றத கேளுங்க.." என்றதும் திரும்பி வந்து சோபாவில் கோபமாக அமர்ந்தார். 

"ஆர்த்தி, வாட்ஸ் ஹாப்பனிங்?" என்ற ஆர்த்தியின் தகப்பனாரிடம் "அங்கிள், நான் சொல்றேன். கொஞ்சம் எல்லோரும் அமைதியா இருங்கோ" என்ற விஷால் தன் கழுத்திலிருந்த மாலையை கழற்றி டீப்பாயின் மேல் வைத்தான். 

உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணி, அடுத்த மாசம் தேதி குறிச்சிருக்கு, அதுக்குள்ள இப்போ என்ன அவசரம்? 

விஷாலின் அம்மா முதல் முறையாக வாய் திறந்தாள்.

கரெக்ட்! எங்களுக்கு கல்யாணம் நீங்க நிச்சயம் பண்ணி விட்டீர்கள். ஆனால் அதை எப்படி பண்ணப் போறேள்? ஒரே ஆடம்பரம்.,லட்சக்கணக்கா செலவு, அதெல்லாம் எதுக்கு? எங்க ரெண்டு பேருக்குமே அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. நாங்க எவ்வளவு சொல்லியும் நீங்க கேட்கறதா இல்ல, அதனால்தான் நாங்கள் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு முடிவு எடுத்தோம். 

இன்னிக்கு நல்ல நாளானு பார்க்க வேண்டாமா? 

"இன்னிக்கு நல்ல முகூர்த்த நாள்தான். கிருஷ்ணமூர்த்தி ஜோசியர் கிட்ட கன்சல்ட் பண்ணிதான் இந்த தேதியை பிக்ஸ்  பண்ணினோம்."

"வேற என்ன பாக்கி? தனிக்குடித்தனம் போக வீடு பார்த்தாச்சா?"

"சே! சே! அப்படியெல்லாம் கிடையாதுப்பா..  இந்த ஆடம்பர கல்யாணத்துக்கு ஒரு முடிவு கட்டணும்னு நினைச்சோம். "

"என்னடி ஆடம்பரம்? எங்களுக்கு இருக்கறது நீ ஒரு பொண்ணு, உன்னோட கல்யாணத்தை சிறப்பா பண்ணனும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா?" என்று ஆர்த்தியின் அம்மாவும்,

"லைஃபில் ஒரு தடவ நடக்கப்போற விஷயம், நம்மால் அஃபோர்ட் பண்ணவும் முடியும், அப்படியிருக்க எதுக்காக சிம்பிளா பண்ணனும்?"  என்று விஷாலின் அம்மாவும் கேட்க,

"இதுதான் பிரச்னை. லைஃபில் ஒரு தடவைத்தானே வரப்போறதுனு ஒரு பேச்சு, அடுத்தது அஃபோர்ட்டபிலிட்டி... நம்மால்  முடியும்னு நினைக்கிறவங்க ஆடம்பரமா செய்வதால் அவர்களை பார்த்து மற்றவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது. ஒரு பியர் பிரஷரை நாம் கிரியேட் பண்ணிவிடுகிறோம். கல்யாணத்தில் இவ்வளவு ஆடம்பரம் தேவையே இல்லை. இதுக்கு யார் முடிவு கட்டுவது? நாங்க ஸ்டாப் பண்ணலாம்னு நினைச்சோம். ."  பட்டிமன்ற பேச்சாளர் போல் விஷால் பேசி முடித்தான். 

"நீ ஒருத்தன் இதையெல்லாம் நிறுத்தினா, எல்லாரும் நிறுத்திடுவாளா?"

"மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, எங்களுக்கு ஆடம்பரத் திருமணம் வேண்டாம்.  தவிர எல்லா நல்ல விஷயங்களையும் யாரோ ஒருத்தர்தான் ஆரம்பித்திருக்கிறார்". 

"இப்படி நீண்ட விவாதம் கொஞ்சம் கொஞ்சமாக சூடு குறைந்து, ஆர்த்தி,விஷால் சொல்வதின் நியாயம் புரிந்து பெரியவர்கள் தங்கள் பிடியைத் தளர விட்டார்கள். " சரி, நடந்தது நடந்து விட்டது. வாங்கோ ரெண்டு பேரும் சுவாமிக்கு முதலில் நமஸ்காரம் பண்ணுங்கோ,  நான் ஒரு பாயசமாவது பண்றேன்.." என்று ஆர்த்தியின் அம்மா எழுந்திருக்க, 

"இல்ல மாமி, நீங்க எதுவும் பண்ண வேண்டாம், நாங்க கேடரிங்கில் சாப்பாடு சொல்லி விட்டோம்."

"மை காட்!.. எங்களுக்கு எதுவுமே விட்டு வைக்கலையா?"

"சாப்பிட்டு விட்டு, ரிசப்ஷன் எங்க வெச்சுக்கலாம்னு டிசைட் பண்ணலாம், ஹனிமூன் எந்த ஊருக்கு போகச் சொல்கிறீர்களோ அந்த ஊருக்கே போகிறோம்"  சிரித்துக் கொண்டே விஷால் கூற,

"ஹனிமூனா? நத்திங் டூயிங். முதலில் குல தெய்வம் கோவில், அப்புறம், திருப்பதி, குருவாயூர்னு ஷேத்ராடனம் எல்லாம் முடி, அப்புறம் யோசிக்கலாம்" என்று அவன் அப்பா அவனை சீண்ட, "பெருமாளே!" என்று அவன் அதிர்ச்சியடைய, "அதையேதான் நானும் சொல்றேன்" என்றார் அவன் தந்தை.   

பி.கு.:
என்னதான் ஆர்த்தியும், விஷாலும் பதிவுத் திருமணம் செய்து கொண்டாலும் அவர்களுடைய பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்ற எளிமையாக ஒரு வைதீக திருமணமும் செய்து கொண்டதாக கேள்வி. 

Thursday, July 2, 2020

சுப திருஷ்டி!

சுப திருஷ்டி! 

பலத்த கை தட்டல்களை வணங்கி ஏற்றுக் கொண்டு வசுமதி  மேடையிலிருந்து இறங்கினாள். ராஜாராமன் அவள் தோளைத் தட்டி, "ஜமாய்ச்சுட்ட!" என்றதும் அவர் கால்களை தொட்டு வணங்கினாள். 

"ரொம்ப பயமாயிருந்தது மாமா.. எப்படியோ நல்லபடியா   ஒப்பேத்திட்டேன்.."  

"ஒப்பேத்தறதா? தூள் கிளப்பிட்ட.. இதோட நிறுத்திடக் கூடாது, தொடர்ந்து பாடணும்..." என்று அவர் கூறியதும், வசு சிரித்துக் கொண்டே  தலை  ஆட்டினாள்.     

ராஜாராமன் அவர் புதிதாக வீடு கட்டிக்க கொண்டு குடியேறிய புறநகர் பகுதியில் கல்சுரல் அசோசியேஷன் ஒன்றை ஆரம்பித்து அவ்வப்பொழுது 
கச்சேரி, புராண பிரவசனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். அதற்கான செலவுகளுக்கு ஸ்பான்சர்கள் எப்படியோ பிடித்து விடுவார். இந்த மாதம் கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார், ஆனால் அதற்கு ஒப்புக்கொண்ட பெண்ணுக்கு  உடல் நிலை சரி இல்லாததால் வர முடியவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்து விட அவருக்கு மனம் இல்லை. அவருடைய நண்பரின் மகள் வசுமதி முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டிருக்கிறாள் என்பது அவருக்குத் தெரியும். நன்றாகப்  பாடுவாள், ஆனால், இதுவரை எந்த மேடையிலும் ஏறி, கச்சேரி செய்ததில்லை. அவளை மேடை ஏற்றி விடலாம் என்று முடிவெடுத்தார். 

"என்ன விளையாடறயா? இவ நன்னாத்தான் பாடுவா, அதுக்காக கச்சேரி பண்ண முடியுமா?" வசுவின் அப்பாவிற்கு நம்பிக்கை இல்லை. 

"தாராளமா பண்ணலாம், எல்லோரும் ஏதோ ஒரு நாள் இப்படி ஆரம்பித்தவர்கள்தான். கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணினால் போதும்" 

நான் வயலின் வாசிக்கப் போகும் பையனையும், மிருதங்கம் வாசிக்கப் போகும் பையனையும் வரச் சொல்றேன், ரெண்டு நாள் பிராக்டீஸ் பண்ணினால் போதும்".

ராஜாராமன் சொன்னதோடு நிற்காமல், அவர்களோடு உட்கார்ந்து என்னென்ன பாடல்கள் பாட வேண்டும், என்பதற்கு உதவி, சின்ன, சின்ன திருத்தங்கள் கூறி கச்சேரியை அமைத்து கொடுத்தார். அவளும் அதை சிக்கென பிடித்துக் கொள்ள கச்சேரி சிறப்பாக அமைந்து விட்டது. 

வசுவின் கச்சேரியை கேட்ட ஒருவர், தன் மகளின்  திருமண  ரிசப்ஷனுக்கு உடனே புக் பண்ணினார்.  அதைத் தொடர்ந்து சில கோவில் கச்சேரிகள் கிடைத்தன. வெளியூருக்கு போய் பாடும் சந்தர்ப்பம் கூட வாய்த்தது. வசுமதிக்கும் சரி, அவள் பெற்றோர்களுக்கும் சரி அது சந்தோஷமளிப்பதாகவே இருந்தது. 

அவர்கள் வீட்டிற்கு  சென்றிருந்த பொழுது,"என்ன வசு, உன் கான்செர்ட்டெல்லாம் எப்படி போயிண்டிருக்கு?" என்றதற்கு, "ம்ம் ." என்று அசுவாரஸ்யமாக பதில் சொன்னாள். 

"ஆச்சு, ஆடி மாசம் வந்துண்டிருக்கு, உனக்கு நிறைய கச்சேரி கிடைக்கும்.."  அவர் மேலே பேச, அவளோ, "பார்க்கலாம்.."        என்றதும், "வொய் ஸோ டிஸ் இன்ட்ரஸ்டட்?" 

"தொண்டை சரியில்ல.."  

"நவராத்திரில பாடுன்னு சொன்னதும் பதில் சொல்ற  மாதிரி  சொல்றயே..?" சிரித்துக் கொண்டே கேட்க, 
அவள் பேசாமல் இருந்தாள். அவளுடைய அம்மா தொடர்ந்தாள், 

"கச்சேரி பண்ண ஆரம்பித்ததிலிருந்து அவளுக்கு மாத்தி மாத்தி உடம்புக்கு வந்துண்டே இருக்கு. அதுவும் தொண்டை ரொம்ப பாதிக்கிறது. போன  வாரமெல்லாம் பேசவே முடியல.."

"இதெல்லாம் ரொம்ப சாதாரண விஷயம்,இதுக்காக கச்சேரி செய்வதை ஏன் நிறுத்தணும்?" 

"திருஷ்டியா இருக்குமோனு தோண்றது, அதனால இனமே கச்சேரி பண்ண வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம். கச்சேரி பண்ண ஆரம்பித்த - -திலிருந்துதான் இந்த பிரச்சனை..."

ராஜாராமன் கன்னத்தில் கை வைத்தபடி அவர்களை  கூர்ந்து பார்த்தார். " கச்சேரி பண்றங்களே சௌமியா, சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, இவங்களுக்கெல்லாம் திருஷ்டி படாதா? 

"அது......."

நீங்க மோசமான திருஷ்டி பத்தி மட்டும் யோசிக்கிறீங்க, மோசமான திருஷ்டினு ஒண்ணு  இருந்தா, சுப திருஷ்டியும் இருக்கும்  இல்லையா?" என்று அவர் கேட்க, வசுவும், அவள் தாயாரும்  புரியாமல்  முழித்தார்கள்.

ராஜாராமனே தொடர்ந்தார்," நம்ம ஊரில் கல்யாணம், காது குத்தல், கிரஹப்ரவேசம்  போன்ற எல்லா விசேஷங்களுக்கும் சொந்தம், நட்பு என்று நிறைய பேரை  அழைப்போம்  ஏன் தெரியுமா? " ராஜாராமன் கேள்விக்கு பதில் வராததால் அவரே தொடர்ந்தார். 

சில பேர் பார்வைக்கு நல்ல சக்தி உண்டு, அப்படி பட்டவர்கள் பார்த்தால் நல்லது நடக்கும். சில பேர் சொன்னால் பலிக்கும், அப்படி பட்டவர்கள் வாழ்த்தினால் நல்லது. சில பேர் சங்கல்பத்திற்கு பலன் உண்டு. அப்படிப் பட்ட எல்லோருடைய ஆசிகளும் கிடைக்கணும்னுதான்.." 

நீங்க சொல்றது புரியல.." 

இப்போ உன் கச்சேரியை குறைவான பேர்கள்தான் கேட்கிறார்கள், அதில் இருக்கும் துர் திருஷ்டி உள்ளவர்களின் திருஷ்டியை காம்பன்சேட் பண்ணனும் என்றால் இன்னும் அதிகமானவர்கள் உன் கச்சேரியை கேட்கணும். அப்படி கேட்பவர்கள் அதிகமாக,அதிகமாக சுப திருஷ்டி அதிகமாகும் வாய்ப்பு உண்டு. அது இந்த துர் த்ரிஷ்டியின் பலனை குறைத்து விடும். ஸோ நீ இனிமேல் தான் நிறைய கச்சேரி பண்ணனும்".

வசுமதியும் அவள் அம்மாவும் யோசிக்க ஆரம்பித்தார்கள். நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்பலாம். 

Thursday, July 11, 2019

மன்னிப்பு

மன்னிப்பு 

அன்று அயோத்தி நகரமே சந்தோஷத்திலும், கொண்டாட்டத்திலும் மூழ்கி திளைத்தது. பின்னே தசரத குமாரன் ஸ்ரீ ராமனின் பிறந்த நாள் என்றால் சும்மாவா? அதுவும் ராமனுக்கு திருமணமானபின் வரும் முதல் பிறந்த நாள், கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்? அயோத்தியில் கால் வைத்த அத்தனை பேரும் ஏதோ ஒரு பரிசோடுதான் திரும்பினார்கள். 

வழக்கம் போல அந்தணர்களுக்கு விதை நெல்லும், கறவை மாடுகளும் தானமாக தரப்பட்டன என்றால், மற்றவர்களுக்கு அவரவர் தேவைக்கேற்ப பொன்னும் பொருளும் வழங்கப்பட்டன. 

கொடுத்து கொடுத்து கைகளும், புன்னகைத்து, புன்னகைத்து கன்ன கதுப்புகளும் லேசாக வலிக்கத் துவங்கி இருந்தன தசரத குமாரனுக்கு. பெரியவர்களிடமும், குல குரு வஸிஷ்டரிடமும் பெற்ற ஆசிகள், மாமனார் ஜனகர் மாப்பிளைக்காக அனுப்பியிருந்த தாராள  ஸ்ரீதன பொருள்கள், அருமையான ராஜ விருந்து இவைகளால் ராமனுக்கு தலை சற்றே கிறுகிறுக்க சீதையை சீண்டிப் பார்க்கலாம் என்று தோன்றி விட்டது. 

மிகவும் அசதியாக இருப்பது போல சோம்பல் முறித்தபடி படுக்கையில் சரிந்தான். 

"கொடுத்து கொடுத்தே இன்றைக்கு மிகவும் களைத்து விட்டீர்கள்  போலிருக்கிறது" என்றபடி ராமனின் கரங்களை எடுத்து மெல்ல நீவி விட்டபடியே சீதை கூற, 

அதெல்லாம் ஒன்றுமில்லை, கொடுப்பதற்கு அலுப்பு கொள்பவர்கள் நாங்கள் இல்லை.." என்றவன் தொடர்ந்து,

" உனக்கு பிறந்த தின கொண்டாட்டங்கள் உண்டா?" என்றான் 

"ஏன் இல்லாமல்? எனக்கு மட்டுமல்ல, என் சகோதரிகளுக்கும் உண்டு..'', 

''நான் சித்திரை மாதம் புனர்வசு நட்சத்திரத்தன்று பிறந்தவன் என்பது தெரிந்திருப்பதால் என் ஜென்ம தினத்தை கொண்டாடுகிறோம். நீ பிறந்த தினம், நட்சத்திரம் எதுவுமே தெரியாதே எதை 
கொண்டாடுவீ ர்கள்?''

"ஏன்? என் தந்தை என்னை கண்டெடுத்த நாளைத்தான் என் பிறந்த நாளாக கொண்டாடுவார்.."

"உன்னை பெற்றவர்கள் யார் என்பதும் தெரியாது, எங்கே, எப்பொழுது பிறந்தாய் என்றும் தெரியாது, ஜனக மஹாராஜா யாகத்திற்க்காக நிலத்தை உழும் பொழுது அவரால் கண்டெடுக்கப் பட்டதால் ஜானகி ஆகி விட்டாய். ஆனால் நானோ, ரிஷ்ய ஸ்ரிங்கர்  தலைமையில் என் தந்தை புத்திர காமேஷ்டி யாகம் செய்ய, யாக குண்டத்திலிருந்து தோன்றிய தேவ புருஷன் கொணர்ந்த பாயசத்தை என் தாய் அருந்தியதால் பிறந்தவன். அழகிலும், குணத்திலும் நீ எனக்கு இணையாக இருக்கலாம், ஆனால் பிறப்பால் நான்தான் உன்னைவிட மேம்பட்டவன். ஒருவருடைய பிறப்புதானே எல்லாவற்றையும் நிர்ணயம் செய்யும்... அந்த வகையில் உன்னை விட உசத்தியான நான் அதை பொறுப்படுத்தாமல் உன்னை மணந்து கொண்டிருக்கிறேன்" குறும்பாக கூறினான் ராமன்.

சுருக்கென்று தைத்தது சீதைக்கு. விளையாட்டாக கூறப்பட்டதா? அல்லது அந்த போர்வையில் மனதில் இருப்பது வெளியில் வந்து விட்டதா? நான் இழி குலத்தை சேர்ந்தவளா? பாதிக்கப்பட்ட மனது பதில் சொல்ல தீர்மானித்தது. 

"இருக்கலாம்.. என்னை விட நீங்கள்தான் உயர்ந்தவராக இருக்கலாம். ஆனால், உலக வழக்கில் உயர்ந்த ஒரு விஷயம் தன்னை விட தாழ்ந்த விஷயத்தை தேடிச் செல்லுமா? தன்னை விட உயர்ந்த விஷயத்தைதானே அடைய விரும்பும்? அதன்படி பார்த்தால் நான் அல்லவோ உங்களை நாடி வந்திருக்க வேண்டும்? ஆனால் நடந்தது என்ன? நீங்கள் அல்லவா மிதிலைக்கு வந்து, என் தந்தை வைத்த சுயம்வர போட்டிக்கு கட்டுப்பட்டு, சிவ தனுசை உடைத்து என்னை மணந்து கொண்டீர்கள்.. இதிலிருந்தே நம் இருவரில் யார் உசத்தி என்று தெரியவில்லையா?" 

காலையிலிருந்து புகழ்ச்சி, பாராட்டு இவற்றில் திளைத்துக் கொண்டிருந்த ராமனுக்கு சீதையின் இந்த பதில் யாரோ முகத்தில் குத்தி கீழே தள்ளியது போல இருந்தது. விருட்டென்று சீதையின் கையை உதறினான். திரும்பி படுத்துக்க கொண்டான். அவன் விழித்துக் கொண்ட பொழுது சீதை அங்கு இல்லை. 

மற்றவர்கள் முன்னிலையில் சாதாரணமாக இருப்பது போல 
காட்டிக் கொண்ட சீதை, தனிமையில் ராமனை புறக்கணித்தாள். அவளின் இந்த பாரா முகம் ராமனுக்கு புதிது. அப்படியே இரண்டு நாட்கள் சென்றன. அதற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ராமனுக்கு தோன்றியது. தவறு தன்னுடையது என்பதால், தானேதான் இதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தான். 

அன்று பகல் உணவு முடித்து ஓய்வு எடுத்துக் கொள்ள அவர்களின் பிரத்யேக அரண்மனைக்கு வந்தவன், சீதை வருவதற்கு முன், தன் கை விரல் மோதிரத்தை கழட்டி, அறையின் ஒரு மூலையில் போட்டான். அவள் வந்து உறங்கி விழித்து விட்டாள் என்று தெரிந்ததும் அவனும் அப்போதுதான் விழிப்பவன் போல எழுந்து கொண்டு,'' உனக்கு என் மேல் என்ன கோபம் இருந்தாலும் நான் தூங்கி கொண்டிருக்கும் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரத்தை கழட்டி வைத்துக் கொள்வது சரி கிடையாது.." 

"இது என்ன புது கதை? நான் எதையும் கழட்டவில்லை. எந்த மோதிரத்தை சொல்கிறீர்கள்?" 

"நம் திருமணத்தின் பொழுது உன் தந்தை எனக்களித்த மோதிரம்.."

"அதையா காணவில்லை? ஐயோ! அது சப்த ரிஷிகளில் ஒருவராகிய காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது. அதை அவர் மிகுந்த மரியாதையோடும், கவனத்தோடும் பாதுகாத்து வந்தார், நம் திருமணத்தின் பொழுது உங்களுக்கு அணிவித்தார், அதையா  காணவில்லை..? காலையிலிருந்து எங்கெல்லாம் சென்றீர்கள்? கடைசியாக எப்போது அதை பார்த்தீர்கள்? 

"இங்கு வரும்வரை அது என் கையில்தான் இருந்தது. இப்போதுதான் காணவில்லை"

"திருமணத்தில் போடப்பட்ட மோதிரம் தொலைந்து போவது துர் சகுனம் அல்லவா?" பதட்டமும் துக்கமும் சீதையை பற்றிக் கொண்டன. 

"இரு இரு, அவசரப்பட வேண்டாம்,அந்த மோதிரம் கொஞ்சம் தளர்வாகத்தான் இருக்கும், அதுவும் கொஞ்ச நாட்களாக நழுவி விழுந்து விடுமோ என்று தோன்றியது, ஒரு வேளை படுக்கையில் விழுந்திருக்கிறதா என்று பார்க்கலாம்.." பேசிக் கொண்டே படுக்கையை உதறி தேடுவது போன்ற தன் நடிப்பை துவங்கினான்.

சீதை நிஜமாகவே தேட, அவள் கையில் சிக்கியது தொலைக்கப்பட்ட மோதிரம். "இதோ இங்கே இருக்கிறது! அப்பாடா!  காஸ்யபர் என் தந்தைக்கு அளித்தது.."கண்கள் பனிக்க அந்த மோதிரத்தை கண்களில் ஒற்றிக் கொண்டு கணவனிடம் நீட்டினாள்.

"அட! நானும் இத்தனை நேரமாக ததேடிக் கொண்டிருக்கிறேன், என் கண்களில் படவேயில்லை, நீ கண்டு பிடித்து விட்டாயே..! நிஜமாகவே நம் இருவரில் நீதான் உசத்தி. நீயே எனக்கு அணிவித்து விடு" என்று தன் கரத்தை அவள் முன் நீட்ட

இன்னும் இரு வேறு தருணங்களில் அவனை மன்னிக்க வேண்டும் என்று அறியாமல், கணவன் விரலில் மோதிரத்தை அணிவித்த சீதை ராமனை மன்னித்தாள்.

பின் குறிப்பு:

இந்த சம்பவம் அனந்தராம தீக்ஷதர் எழுதியிருக்கும் சுந்தரகாண்ட பாராயண புத்தகத்தில் குறிப்பிட பட்டிருக்கும். 

இந்த கதை 'சீதை ராமனை மன்னித்தாள்' என்று முடியும்படி சிறுகதை எழுத வேண்டும் 
என்று 'எங்கள் பிளாகில்' கேட்டுக் கொண்டதற்கு இணங்க, நான் எழுதிய சிறுகதை. எங்கள் பிளாகில் படிக்காதவர்கள் இதில் படிக்கலாம்.   

Saturday, October 15, 2016

இன்னும் கொஞ்ச நாள்...

இன்னும் கொஞ்ச நாள்...


"அப்பா.. ரொம்ப டையர்டா இருக்கு.. எப்போதான் இந்த பரீட்சை, படிப்பு எல்லாத்தையும் முடிப்போம்னு இருக்கு..." ராதிகா படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு அப்படியே சுருண்டு படுத்துக்க கொண்டாள்.

"ஆச்சு, இன்னும் கொஞ்சம்தான், படிச்சு முடிச்சு ஒரு நல்ல வேலையில் உட்கார்ந்து கொண்டு விட்டால் அப்புறம் நிம்மதியா இருக்கலாம்".. பக்கத்தில் வந்து உட்கார்ந்த அம்மா அவள் முதுகில் தட்டி அவளை எழுப்பி உட்கார வைத்தாள். 

"போம்மா நீ ஈஸியா சொல்லற, இது செகண்ட் இயர்தான், இன்னும் ஒரு வருஷம் படிக்கனும்.."
"ஒரே ஒரு வருஷம்தான்..ஓடிப்போய் விடும்...சூடா கொஞ்சம் டீ போட்டு தரட்டுமா"?
"நாங்களெல்லாம் படிக்கலை. எல்லாத்துக்கும் மற்றவர்கள் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டி இருக்கு, நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. சொந்தக் காலில் நிற்க வேண்டும்..."

அம்மாவின் தாரக மந்திரம் இது. "கொஞ்ச நாள் கஷ்டப்படு.. அப்புறம் சொளக்கியமா இருக்கலாம்". அவளும் அம்மாவின் சொல்படி கஷ்டப்பட்டு படித்தாள். படித்து முடித்த கையோடு வங்கி தேர்வில் தேறி வேலையிலும் சேர்ந்து விட்டாள். 

அப்பாடா! என்று இருக்க முடியவில்லை. "சி.ஏ.ஐ.ஐ.பி. எழுதுங்க மேடம், இன்க்ரீமெண்ட் கிடைக்கும், சீக்கிரம் ப்ரோமோஷன் வாங்கி செட்டில் ஆகிடலாம். கொஞ்சம் கஷ்டப்படுங்க,சின்ன வயசுதானே.."

அகௌண்ட்டெண்ட் அறிவுறுத்தினார். அது முடிப்பது அத்தனை சுலபமாக இல்லை. ஒரு முறைக்கு மூன்று முறை எழுத வேண்டி இருந்தது. அம்மா சொன்னபடி ரெஸ்ட் எடுக்க முடியவில்லை. 

இதற்கு இடையில் திருமணம் ஆகியது. முதல் இரவில் அவள் கணவன், "வேலையைத் தொடர்வதில் அவள் எண்ணம் என்ன"? என்று கேட்டான். "குழந்தை பிறக்கும் வரை வேலைக்குச் செல்வேன், அதன் பிறகு வேலையை விட்டு விடுவேன்" என்றாள். சிறிது நேரம் மௌனமாக இருந்தவன், அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் பொதிந்து கொண்டு, " எங்கள் வீட்டில் நான்தான் மூத்தப் பிள்ளை. ஒரு தங்கைக்கு கல்யாணம் செய்ய வேண்டும், தம்பி இப்போதுதான் பள்ளியில் படிக்கிறான், நீ கொஞ்ச நாள் வேலைக்குப் போனால் சௌகரியமாக இருக்கும். கொஞ்சம் கஷ்டம்தான்.. "

அவள் கொஞ்சம் கஷ்டப் பட தயாரானாள். நாத்தனாரின் திருமணம், மைத்துனனின் மேல் படிப்பு எல்லாவற்றுக்கும் அவளின் சம்பளமும் உத்தியோகமும் பெரிதும் உதவின.  
இதற்கிடையில் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அம்மாவிடம் கொஞ்சம், மாமியாரிடம் கொஞ்சம், வேலைக்காரியிடம் கொஞ்சம் என்று எப்படியோ வளர்த்தாள். 

மகனுக்கு பன்னிரெண்டு வயது, மகளுக்கு ஒன்பது வயது ஆன பொழுது வேலையை விட்டு விடலாம் என்று தோன்றியது. வீட்டில் நிம்மதியாக இருந்து கொண்டு நிதானமாக எழுந்து, சமைத்து, டி.வி. பார்த்து, குழந்தைகளை திட்டாமல் பாடம் சொல்லிக் கொடுத்து, சின்ன வயதில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கீதத்தையும் கற்றுக் கொள்ளலாமே..
அப்போதுதான் அவள் கணவன் ஒரு நாள் மாலை அவளையும், குழந்தைகளையும் "இன்னிக்கு வெளியே போகலாம்" என்று அழைத்துச் சென்றான். அண்ணா நகரின் விரிவாக்கமான அங்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தன. அதில் ஒரு வீட்டை காண்பித்து, "உனக்கு பிடித்திருக்கிறதா"? என்றான். 

ராதிகாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ""வீடு பிடித்ததுதான் இருக்கு, ஆனால் ஏன்?  வீடு மாத்தப் போறோமா என்ன? 
"வீடு வாங்கப் போறோம்.."
"வாட்"?
"எஸ்."!
"இது என் பிரெண்டோட மாமனார் வீடு. அவர் வீட்டை வித்துட்டு பணத்தை பாங்கில் போட்டுக் கொண்டு வரும் வட்டியில் சொச்ச காலத்தை ஓட்டலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம், எங்கிட்ட கேட்டான், அண்ணா நகரில் தனி வீடு.. ! லட்டு மாதிரி ஒரு ஆப்பர்சூனிட்டி, என்ன சொல்ற"?
"பணம்.."?
"நீ லோன் போடு, பேங்க் எம்பிளாயி, இன்ட்ரெஸ்ட் கம்மியா இருக்கும்". 

இரவு ஒரு மணி வரை இருவரும் வீடு வாங்கப் போவதால் வரும் சாதக,பாதகங்களை ஆராய்ந்தார்கள்.. சமாளித்து விட முடியும் என்று தோன்றியதும் நிம்மதியாக உறங்கினார்கள்.
புது வீட்டில் கிரகப் பிரவேசம் செய்த பொழுது சந்தோஷமாக இருந்தது. வந்தவர்கள் எல்லோரும் பாராட்டி, இப்படி ஒரு வீடு அமைந்தது அதிர்ஷடம்தான் என்று கூறியதை கேட்ட பொழுது, இந்த சந்தோஷத்துக்காக இன்னும் கொஞ்ச நாள் வேலை பார்க்கலாம் என்று தோன்றியது. 

வருடம் செல்லச் செல்ல, உத்யோக உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் அவர்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்தின. அவ்வப்பொழுது சுற்றுலாக்கள் சென்றார்கள். மகனையும், மகளையும் அவர்கள் ஆசைப்பட்ட கல்லூரியில் மேனேஜ்மேண்ட் கோட்டாவில் சேர்க்க முடிந்தது. அப்போதெல்லாம் ராதிகாவுக்கு வேலையை விட வேண்டும் என்று தோன்றவே இல்லை. இத்தனை நாட்கள் உழைத்து விட்டோம், இன்னும் கொஞ்ச நாள்தானே.. என்று தேற்றிக்கொண்டாள்.

மகனுக்கு கேம்பஸ் இன்டெர்வியூவில் முன்னணி ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்தது.அவனுடைய ஆபர் லேட்டரைப் பார்த்தவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாம் எந்த வயதில் சம்பாதித்ததை இவர்கள் எடுத்த எடுப்பில் ஈட்டுகிறார்கள் என்று பிரமிப்பாக இருந்தது. 
மகன்தான் வேலைக்கு வந்து விட்டானே, "நீ ஏம்மா இன்னும் கஷ்டப் படற, வேலையை விட்டு விடு. நான்தான் சம்பாதிக்க ஆரம்பித்து விட்டேனே" என்று சொல்லுவான் என்று எதிர்பார்த்தாள். அவனோ, இரவு சாப்பிடும் பொழுது, அப்பாவிடம்," நான் வீட்டு செலவுக்கு எவ்வளவுப்பா கொடுக்கணும்? ஏன்னா, இங்க ரெண்டு வருஷம் ஒர்க் பண்ணிட்டு, எம்.எஸ். படிக்க அமெரிக்கா போகணும், அதுக்கு ஐ ஹவ் டு சேவ்.." என்றான்.

அதன்படியே இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவன் அமெரிக்கா செல்வதற்கும், மகள் வேலைக்கு வருவதற்கும் சரியாக இருந்தது. 

"போறும்மா நீ வேலை பார்த்தது, நாங்கதான் செட்டில் ஆகிவிட்டோமே, நீ வேலையை விட்டு விடு"  என்றாள் மகள்.

"உனக்கு ஒரு கல்யாணம் பண்ணிட்டு வேலையை விடுகிறேன். இன்னும் கொஞ்ச நாள்தானே.."
சொன்னதோடு நிற்காமல் முனைந்து வரன் தேடினார்கள். மகன் அமெரிக்காவில் வசிப்பதால் மகளுக்கும் அங்கேயே மாப்பிளை கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று அமெரிக்கா வரங்களுக்கே முன்னுரிமை அளித்தார்கள். அதே போல கிடைத்தது. திருமணம் முடிந்து அமெரிக்கா செல்ல விமானம் ஏறும் முன், நீயும் அப்பாவும் பாஸ்போர்ட் ரெடி பண்ணிக்கோங்கோ என்று சொல்லி விட்டுதான் சென்றாள். மகள் கருவுற்றிருக்கிறாள் என்று தெரிந்ததும் ராதிகா தன் வேலையை ராஜினாமா செய்தாள்.

மகளின் பிரசவத்திற்கு உதவ கிளம்பிக் கொண்டிருந்த பொழுது அவளின் சிநேகிதி ஒருத்தி தொலைபேசியில் அழைத்து, "பான் வாயேஜ்"! என்று வாழ்த்தி விட்டு, "இனிமேல் நீ ராதிகா ஐ.ஏ.எஸ்.தான்." என்றாள் 

"ஐ.ஏ.எஸ்.சா .."??

"ஆமாம், இந்தியன் ஆயா சர்வீஸ்..."என்று கூறி விட்டு, சிரித்தாள்.

"இது வயிற்று எரிச்சல், இவளுடைய குழந்தைகள் அமெரிக்காவில் இருந்து கொண்டு அழைத்தால் இவள் போகாமல் இருந்து விடுவாளா? ஜஸ்ட் இக்னோர்" என்றார் அவள் கணவர்.
மகனுக்கும் திருமணம் ஆனது. அவன் வேலை பார்த்த நிறுவனம் அவனை சிங்கப்பூருக்கு மாற்றியது. இப்போது கிழக்கில் ஒருவர், மேற்கில் ஒருவர் என்றாகி விட்டது. 

"அமெரிக்கா என்றால்தான் செல்வீர்களா? சிங்கப்பூர் என்றல் வர மாட்டிர்களா"?  எமோஷனல் ப்ளாக் மெயில் செய்தான் மகன். 

சிங்கப்பூர் விமானத்தில் ஏறுவதற்க்காக  விமான நிலையத்தில் காத்திருந்த பொழுது, "அங்கேயும் இங்கேயும் அலைவது அலுப்பாக இருக்கு, எப்போ நம்ம வீட்டில் அக்கடான்னு இருப்போன்னு இருக்கு.".கணவரிடம் குறைபட்டுக் கொள்ள,

"நம்மளால முடியற வரை செய்யப்போறோம், அப்புறம் வீட்டில் இருக்க வேண்டியதுதானே.. இன்னும் கொஞ்ச நாள்".