கனடா டைரி
இந்த வருடம் டிசம்பரில் பனிப்பொழிவு இங்கு குறைவுதான். கிருஸ்துமஸ் சமயத்தில் பனியால் மூடப்படாததால் இங்குள்ளவர்கள் விரும்புவது போல வொயிட் கிருஸ்துமஸ் இல்லை, பச்சை புல்லைப் பார்க்க முடிந்த க்ரீன் கிருஸ்துமஸ். சரி, அவ்வளுவதானா? பனி பொழிவு முடிந்து விட்டதா? என்று கேட்டதற்கு "வெயிட் அண்ட் சீ, ஜனவரியில்தான் குளிர் அதிகமாக இருக்கும்" என்றாள்.
அதற்கேற்றார்போல் ஜனவரியும் வந்தது, கடுமையான பனிபொழிவும் வந்தது. அதுவும் சென்ற வாரம் மிகக்கடுமையான பனிப்பொழிவு. பனி பொழிந்து கொண்டிருக்கும் பொழுதே ஷவல் செய்வார்கள். எதிர் வீட்டு ஆள் அவர்கள் வீட்டு பனியை வாரிக் கொட்டி விட்டு நிமிர்ந்தால் தெருவில் விழுந்திருக்கும் பனியை சுத்தம் செய்யும் டிரக் வந்து தெருவின் பனியை குவிக்கிறேன் பேர்வழி என்று வீட்டு வாசல்களில் இரைத்து விட, எரிச்சலான எதிர்வீட்டுக்காரர்,"புல் ஷிட்! என்று தன் கையிலிருந்த உழவார படையை விட்டெறிந்தார்:))
24, 25 ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் கொடுத்திருந்தார்கள். ஞாயிறு அன்று நாங்கள் சாயி பஜனுக்குச் செல்வோம். அதை கூட ரத்து செய்து விட்டு, ஜூமில் வேத பாராயணம் மட்டும் செய்தார்கள். நாள் முழுவதும் பூத்தூவலாய் பனி பொழிந்து கொண்டிருந்தது. ஞாயிறு இரவு குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து திங்கள் கிழமை பள்ளி விடுமுறை என்று மெயில் வந்தது. திங்கள் கிழமை காலையில் எழுந்து வந்தால்... இத்தனை நாட்களாக சூரியனை பார்க்காமல் உம்மென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த வானம், சூரியனைக் கண்டதும் கோபத்தை விடுத்து பளிச்சென்று பிரகாசித்தது. ந ஊரில் கனமழையால் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என்ற அறிவிப்பு வந்தவுடன் மழை நின்று விடுவதைப் போலத்தான் :)) குழந்தைகள் ஸ்னோ பாண்ட் அணிந்து கொண்டு வீட்டு வாசலில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் பனி மலையில் விளையாட போய் விட்டார்கள். செவ்வாய் அன்று மீண்டும் முகம் தூக்கல்.
குளிர்காலம் தொடங்கி முதல் நாள் பனிப் பொழிவை வீடியோ எடுத்து 'first snow' என்று இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தவர்கள், இந்த பனி புயலுக்குப் பிறகு ஷவல் செய்வதை வீடியோ எடுத்து, நாயகனில் வரும், "நாங்க அப்படி இல்ல, பத்து காசு பாக்கணும்னா ரத்த வேர்வை வேர்க்கணும்..' என்ற டயலாக்கையம், 'தெரியாம வந்து மாட்டிக்கிட்டேன்..' என்ற மீம்ஸ்களையும் பகிர்ந்தார்கள்.
குளிர் காலம் தொடங்கியதுமே ஆங்காங்கு for snow removal Contat:.... என்று என்ற விளம்பர பலகைகளை பார்த்தேன். அவரவர் வீட்டு வாசலில் விழுந்திருக்கும் பனியை அவரவர்தான் அப்புறப்படுத்த வேண்டும். அதை செய்ய முடியாதவர்களுக்கும், தனியாக வசிக்கும் முதியவர்களுக்கும் உதவும்(காசு வாங்கிக் கொண்டுதான்) நிறுவனங்களின் விளம்பரம் அது என்று தெரிந்தது.
குளிர் காலத்தில் அதிகம் தென்படும் மற்றொரு விளம்பரம் காது குரும்பையை (ear wax) சுத்தம் செய்யும் விளம்பரங்கள். குளிர் காலத்தில காதில் அதிகமாக மெழுகு சேர்ந்து, அது உடல் சம நிலையை பாதித்து, தலை சுற்றலை உண்டாக்குமாம். நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் தலை சுற்றல் வந்த பொழுது, என் மகள் இதைக் கூறி, தேங்காய் எண்ணெயை லேசாக சூடு படுத்தி காதில் விட்டாள். சரியாயிற்று. இப்போதும் அதே தலை சுற்றல், அதே பாட்டி வைத்தியம்!.. தலை சுற்றல் போயே போயிந்தி. அதற்குப் பிறகு காதில் பஞ்சு வைத்துக் கொள்கிறேன்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் என் மகள், மருமகன் இருவரும் வெளியே சென்றதால் நான்தான் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது. என் மகள், " எப்போதும் வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ளும் வின்டர் ஜாக்கெட், குல்லாய், மிட்டன்ஸ் தவிர scarf ஆல் கழுத்தை கவர் பண்ணிக்கொள், மூக்கினையும் மறைத்துக் கொள், மூக்கு வழியாக குளிர் காற்று உள்ளே சென்று விடும்" என்று ஏகப்பட்ட இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்தாள். "இன்னிக்கு வெயில் இருக்கிறதே" என்றேன். இந்த வெயில் உரைக்காது, வெளியில் டெம்ப்ரேச்சர் -22 C, தவிர காற்று அதிகம்" என்றாள். வெளியே சென்ற பொழுதுதான் அவள் விடுத்த எச்சரிக்கைகளின் காரணம் புரிந்தது. பனியில் நடக்கும் பொழுது பென்குயின் போல கால்களை கிட்ட கிட்ட வைத்து, உடலை முன் பக்கம் சற்று குனிந்து நடக்க வேண்டும். கீழே விழுந்தாலும் அதிகம் பாதிப்பு இருக்காது. என்பாள்.
அன்றைக்குப் பார்த்து நான் தவறான வகுப்பு வாசலில் நின்று விட்டேன். இங்கு கே.ஜி. வகுப்புகளுக்கு எதிரே குழந்தைகள் விளையாடதிறந்த வெளி இருக்கும். அதைத் தாண்டி வேலி இருக்கும். அந்த வெளியைத் தாண்டி நாம் நின்று கொள்ள வேண்டும். தங்கள் வகுப்பு கண்ணாடி கதவுக்கு பின்னால் நின்று கொண்டிருக்கும் குழந்தைகள் நம்மை அடையாளம் காட்டிய பிறகுதான் ஆசிரியை குழந்தைகளை வெளியே அனுப்புவார்.
சாதாரணமாக சீக்கிரம் வந்துவிடும் குழந்தை இன்று வரவேயில்லையே என்று நான் பார்க்கிறேன். குழந்தைகளை வெளியே அனுப்பும் ஆசிரியை என்னிடம், " யாருக்காக காத்தருக்கிறாய்?" என்றதும் நான் என் பேத்தியின் பெயரை சொன்னேன். குழந்தை வெளியே வரவில்லை. தவறான வகுப்பு வாசலில் நின்றால் எப்படி வரும்? குளிரில் என் கைகள் விறைக்கத் தொடங்கி விட்டன.மற்றொரு ஆசிரியை வந்து என்னிடம் குழந்தையின் பெயர், வகுப்பு, வகுப்பு ஆசிரியை பெயர் இவைகளை கேட்டுக் கொண்டார், அதற்குள் என் பெரிய பேத்திக்கும் வகுப்பு முடிந்து விட, அவள் வந்து, என்னை சின்ன பேத்தி படிக்கும் வகுப்பிற்கு அழைத்துச் சென்றாள். வீட்டிற்கு வந்ததும் அடுப்பை மூட்டி, குளிர் காய்ந்து கொண்டேன். சிலர் குழாயில் வென்னீரை திறந்து விட்டு அதில் கைகளை நீட்டுவார்களாம், ஆனால் அப்படி செய்யக் கூடாதாம்.
இரண்டு நாட்கள் முன்பு எக்கச்சக்க குளிரில் எனக்கு அழுகையே வந்து விட்டது. " சென்ற முறையும் விண்டரில்தான் இங்கு வந்தாய், அப்போது இப்படிப்பட்ட புகார்கள் இல்லையே? இந்த முறை என்னவாயிற்று உனக்கு?? என்றாள் மகள். எனக்கு மூன்று வயது கூடி விட்டதே?' என்றேன். ஒரு வேளை உன் உடம்பில் B12, கால்ஷியம் போன்றவை குறைவாக இருக்கலாம், சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்" என்றாள். அதையும் பார்த்து விடலாம். பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரத்தில் ஏறித்தான் ஆக வேண்டும். பனி தேசத்திற்கு வந்து விட்டால் குளிரை அனுபவிக்க வேண்டும்.