ராமேஸ்வரம்
கைலாயத்திலிருந்து இரண்டு சிவ லிங்கங்களை பெற்றுக் கொண்டு ஆஞ்சநேயர் வருவதற்கு முன் பூஜிக்க வேண்டிய நல்ல நேரம் முடிந்து விடுமே என்பதால் சீதை கடற்கரை மணலில் பிடித்து வைத்த லிங்கத்தையே ராமபிரான் பூஜித்து பிரும்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுகிறார். அதைப் பார்த்த ஆஞ்சநேயருக்கு தன்னை அவமதித்து விட்டார்கள் என்று கோபம் வருகிறது. தன கொண்டு வந்த சிவலிங்கத்தைத்தான் வைத்து பூஜிக்க வேண்டும் என்று நிர்பந்திகின்றார். அதற்கு ராமன், "உன்னால் முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றி விட்டு நீ கொண்டு வந்து லிங்கத்தை ஸ்தாபிக்கலாம்" என்று கூற, அவர் அதை பிடுங்க முயற்சி செய்கிறார். எவ்வளவு முயற்சி செய்த போதிலும் அவரால் அதை அகற்ற முடியவில்லை. இறுதியாக தன்னுடைய வாலால் அந்த லிங்கத்தை மூன்று சுற்றுகள் சுற்றி, தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்து அசைக்கப் பார்க்கிறார். இந்த முயற்சியில் அவருடைய வால் அறுபட்டு அவர் தூக்கி எறியப்படுகிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆஞ்சநேயரை தூக்கி எடுத்த ராமன், தன் மார்போடு அனைத்துக் கொண்டு ஆதுரத்துடன் அவர் உடலைத் தடவி கொடுக்கிறார். சீதையும் காயம் பட்ட ஆஞ்சநேயரின் உடலை தடவி கொடுத்தவுடன், ஆஞ்சநேயரின் உடலில் பட்ட காயங்கள் ஆறி, அவர் தன் பழைய உடல் பலத்தையும், வனப்பையும் பெறுகிறார்.
"உன் அறியாமையால் பிரும்மா, விஷ்ணு, இந்திரன் இவர்களால் அசைக்க முடியாத இந்த லிங்கத்தை நீ இவ்விதம் செய்ய முற்பட்டதால் சிவ அபாரதத்திற்கு ஆளானாய். இனி இவ்விதம் செய்யாதே. நீ விழுந்த இவ்விடம் ஹனுமத் குண்டம் என்று அழைக்கப்படும். நீ கொண்டு வந்த லிங்கங்களுள் ஒன்றை நான் பூஜை செய்த லிங்கத்திற்கு வடக்கே பிரதிஷ்டை செய்து காசி விஸ்வநாதராக பூஜிக்கிறேன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் காசி விஸ்வநாதரை வணங்கி அதன் பிறகே என்னால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை பூஜிக்க வேண்டும். மற்றொரு லிங்கத்தை நீ உனக்கு அருகே மேற்கு பக்கத்தில் ப்ரதிஷ்டை செய்து இந்த கோவிலுக்கு காவலாக இருந்து கொண்டு பூஜித்து வருவாயாக. இதனால் நீ செய்த அபசாரத்திலிருந்து விடுபடுவாய்" என்று ராமன் கூறியதாக தல புராணம் கூறுகிறது.
பிரும்மாண்டமான அழகான கோவில். சந்நிதியில் நுழையும் முன் வல்லப கணபதியை வணங்கி உள்ளே நுழைகிறோம். பிருமாண்டமான, அழகான நந்தி. ஆனால் அதன் அழகை முழுமையாக ரசிக்க முடியாமல் நெருக்கமாக கம்பிகள். இந்த நந்தி கோவிலின் பிரும்மாண்டத்திற்கு தோதாக பின்னாட்களில் வைக்கப் பட்டிருக்கலாம் என்று தோன்றியது.
சீதை மணலால் பிடித்த லிங்கம் என்பதை நம்பலாம் போல அழகிய, சிறிய லிங்கம். அதற்கேற்றார் போன்ற சிறிய நந்தியை வரிசையில் நிற்கும் பொழுது பார்க்க முடிகிறது. சுவாமியை தரிசித்து விட்டு வரும் பொழுது சீதா,ராம, லக்ஷ்மணர்களை வணங்கியபடி நிற்கும் ஆஞ்சநேயர், மற்றும் சுக்ரீவனை வணங்கி பிரகாரம் சுற்றி வரும் பொழுது கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி யையும், பிராகாரத்தில் பள்ளி கொண்ட பெருமாளையும் வணங்குகிறோம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்திக்கு எதிர் பக்கத்தில் பிரும்மா இருக்கிறார். ஆஞ்சநேயரால் கொண்டு வரப்பட்ட காசி விஸ்வநாதர், விசாலாட்சியையும் வணங்குகிறோம். எல்லா சிவன் கோவில்களையும் போலவே நுழைவாயிலுக்கு இரு புறங்களிலும் சூரிய, சந்திரன் காட்சி அளிக்கிறார்கள்.
வெளி வந்து அம்பாள் சன்னதியில் பர்வதவர்த்தினியை தரிசித்துக் கொள்கிறோம். அம்மன் சன்னதிக்கு வெளியே தூண்களில் நவ கன்னிகையர்களின்
சிலைகள் இருக்கின்றன.
பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை இப்போது வர்ணம் பூசியிருக்கிறார்கள். எனக்கென்னவோ வர்ணம் பூசப்படாத பொழுது இன்னும் அழகாக இருந்ததோ என்று தோன்றியது. புகைப்படம் எடுப்பதில் ஆர்வமும், திறமையும் கொண்டிருந்த எங்கள் அப்பா அப்போது புகைப்படம் எடுத்திருக்கிறார். இப்போது என் செல் ஃபோனால் சிறை பிடிக்க முயன்றேன். ஐந்துக்கு மூன்று பழுதில்லை அல்லவா?°
இங்கு கிழக்கு வாசலிலிருந்து பேட்டரி கார்கள் இயக்கப்படுகின்றன. காலையில் அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில் நீராடி விட்டு கிழக்கு வாலில் இந்த பேட்டரி காரில் ஏறிக்கொண்டால் வடக்கு வாசலில் இறக்கி விடுகிறார்கள். அங்கிருந்து உள்ளிருக்கும் 27 தீர்த்தங்களில் நீராடி மேற்கு வாசலுக்கு வந்து விடுவோம். அங்கு உடை மாற்றிக் கொள்ள இடம் இருக்கிறது. உடை மாற்றிக் கொண்டு இறைவனை தரிசிக்கலாம்.
இந்த கோவில் சைவ,வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக காட்டப்பட்டாலும் வைணவர்கள் அதிகம் கண்களில் படவில்லை. வட இந்தியர்கள் நிறைய பேர் வருகிறார்கள்.