கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, May 3, 2023

பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 பூரி ஜகன்னாதர் தல வரலாறு

 

சத்ய யுகத்தில் அவந்தி நகரத்தை ஆண்டு வந்த ஒரு அரசன் இந்திரத்துய்ம்னன். மஹாவிஷ்ணுவின் பக்தனான அவர் மஹாவிஷ்ணுவின் மூர்த்தம் ஒன்றை பிரதிஷ்டை செய்ய விரும்பினார். அந்த சமயத்தில் நீலகிரியில் மஹாவிஷ்ணுவின் நீலமாதவ விக்ரகம் பூஜிக்கப்பட்டு வந்தது என்பதை கேள்விப்பட்ட இந்திரதுய்ம்னன் அந்தச் சிலையை தேடி நாலா திசைகளிலும் ஆட்களை அனுப்புகிறார். எல்லோரும் வெறும் கையோடு திரும்புகிறார்கள்.


வித்யாபதி என்பவர் தேடிக் கொண்டே விஷ்வாவசி என்பவரின் வீட்டை அடைகிறார். அங்கு அவர் மகள் லலிதாவின் அழகால் கவரப்பட்டு அங்கேயே சில நாட்கள் தங்குகிறார். அங்கு விஷ்வாவசியின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி அவர் பூஜிக்கும் நீலமாதவன் விக்கிரகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் தன் நாட்டிற்குச் சென்று இந்திரதுய்ம்னனிடம் நீலமாதவன் விக்கிரகம் இருக்குமிடத்தை கூறுகிறார். உடனே இந்திரத்துய்ம்னன் நீல மாதவ விக்கிரகத்தை அடையும்பொருட்டு படை திரட்டிக் கொண்டு அவ்விடத்திற்கு வருகிறார், ஆனால் நீல மாதவன் விக்கிரகம் அங்கில்லை, அப்போது அவருக்கு, “பாங்கி நதிக்கருகில் உங்களுக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கும் அதை வைத்துக்கொண்டு விக்கிரகத்தை படைக்கவும்” என்று ஒரு அஸரீரி கேட்கிறது.

 

அதன்படியே அவருக்கு ஒரு மரக்கட்டை கிடைக்கிறது. அதைக்கொண்டு பலராமர், கிருஷ்ணர், சுபத்திரா தேவியின் மூர்த்தங்களை வடிவமைக்க சிற்பிகளை அழைக்கிறார். பலரும் மறுத்துவிட வயதில் மூத்த ஒரு சிற்பி தான் இருபத்தோரு நாட்களுக்குள் சிலைகளை வடித்துத் தருவதாக ஒப்புக்கொள்கிறார். அனால், தான் தனியாக ஒரு அறைக்குள் அமர்ந்து கொண்டு சிலைகளை வடிப்பதகவும், இருபத்தோரு நாட்களுக்குப் பிறகுதான் கதவை திறக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார். அரசனும் அதற்க்கு ஒப்புக்கொண்டு அவரை மரக்கட்டையோடு ஒரு தனியறைக்குள் அனுப்புகிறான்.

 

நாட்கள் செல்லுகின்றன. அறைக்குள் வேலை நடக்கும் அறிகுறி எதுவும் தென்படவில்லை. இது அரசிக்கு சந்தேகத்தை கிளப்ப, அவள் தூண்டுதலின்படி அரசன் ஒரு நாள் திடீரென்று அறைக்கதவை திறக்கிறான், உள்ளே சிற்பி யாரும் இல்லை, முழுவதும் முற்றுப் பெறாத பலராமர், கிருஷ்ணர்,சுபத்திரா தேவியின் சிலைகள் மட்டுமே இருக்கின்றன. அரசன் திகைத்து நிற்கும் பொழுது, அந்த சிலைகளையே பிரதிஷ்டை செய்யும்படி அவருக்கு தெய்வ வாக்கு கிடைக்கிறது. அத்ற்குட்பட்டு ஒரு கோவிலை நிர்மாணித்து, அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்கிறார்.

 

ஆனால், புராண கதையில் குறிப்பிட பட்டிருக்கும் கோவில் அல்ல தற்போது இருப்பது. கி.பி.1200ல் அந்தப் பகுதியை ஆண்ட அனந்தவர்மன் என்னும் அரசர் இந்தக் கோவிலை நிர்மாணிக்கும் பணியை துவங்கியிருகிறார். அது அவருடைய பேரன் மஹாமனா நரபதி அனங்க பீம்தேவ் காலத்தில் முடிவடைந்ததாம். கங்கை முதல் கோதாவரி வரையுள்ள சாம்ராஜியத்தின் வரியை இதற்காக செலவழித்ததாக கூறப்படுகிறது.

 

மரத்தாலான இந்த விக்கிரகங்கள் பழுதடைந்தால் அதை மாற்றுவதை ஜெகன்னாத பகவானின் புதிய தோற்றம் என்கிறார்கள். எந்த வருடத்தில் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகிறதோ அந்த வருடம் சித்திரை மாத பௌர்ணமி அன்று வாசேலி தேவியிடம் புதிய விக்கிரகம் அமைக்க உத்தரவு கிடைக்க வணங்குகிறார்கள். புதிய விக்கிரக அமைப்பிற்காக எங்கே வேப்ப மரம் கிடைக்கும் என்று தெரிந்து கொள்வதற்காக மங்கலா மா என்னும் தேவியை வணங்குகிறார்கள். கனவில் தேவியின் கட்டளை கிடைக்கிறது. பிறகு கோவிலைச் சார்ந்தவர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மரத்தை தேடி புறப்படுகிறார்கள்.

 

பலராமர் விக்கிரகம் செய்ய்ப்படும் வேப்ப மரம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த மரத்தில் சங்கு சின்னம் இருக்குமாம். ஐந்து கிளைகளை கொண்ட மரமாக இருக்குமாம்.

 

கிருஷ்ணர் விக்கிரகம் செய்யப் பயன்படும் கிளையில் சக்கரம் சின்னம் இருக்கும் என்றும், அதில் ஏழு கிளைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.       

 

ஸ்ரீரெங்கம் போலவும், மதுரை மீனாட்சி போலவும் இங்கும் வருடம் முழுவதும் உற்சவங்கள் கொண்டாடப்படுவதோடு, ஜெகன்னாதருக்கு விதம் விதமான அலங்காரங்களும் செய்யப்படுகின்றன.

 

அங்கிருக்கும் அத்தனை சன்னதிகளுக்கும் செல்ல முடியவில்லை. தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பினோம். வழியெங்கும் பிரசாத கடைகள். திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல அந்த ஊரின் சிறப்பு பிரசாதம் காஜா எனப்படும் இனிப்பு. தெருவின் இரண்டு பக்கங்களிலும் கடைகளில் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும் காஜா. அதைத்தவிர பெரிய உருளிகளில் கொதிதுக் கொண்டிருக்கும் ரச மலாய் மற்றும் ரசகுல்லா கடைகள். ரஸ்குல்லாவின் பிறப்பிடம் ஒடிஷாதனாம். இங்கிருந்துதான் கொல்கத்தா சென்றிருக்கிறதாம்.

 

கும்பலில் நசுங்கியதோடு, நடை வேறு.. எல்லோருக்கும் டீ குடித்தால் தேவலை என்றிருந்தது. தெருவோர கடையில் சர் சர்ரென்று ஆத்தி கொடுத்துக் கொண்டிருந்தார். அவரிடமே குடித்திருக்கலாம். ஒரு சின்ன ஜூஸ் கடையில் நுழைந்து காபி, டீ கிடைக்குமா? என்று கேட்டதற்கு அங்கிருந்த பெண் இல்லை என்று கூறி விட்டாள். நகர்ந்திருக்கலாம், முதலாளி போன்ற இளைஞன், “கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கள்” என்றதும், எங்களோடு வந்த ஒருவர் “இருபது டீ” என்று ஆர்டர் கொடுத்து எல்லோரையும் நிற்கச் சொன்னார். நாங்களும் நின்றோம், நின்றோம்.. உள்ளே நான்கு பேர்கள்தான் உட்கார முடியும். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்கிறாள்? இதோ பால் டப்பாவை எடுத்து விட்டாள்.. ஐயையோ பால் பவுடர் டீயா? என்ற மைண்ட் வாய்ஸை அடக்கினேன். சும்மா நிற்கிறோமே என்று சாண்ட்விச்சும், ஃபிங்கர் சிப்சும் ஆர்டர் கொடுத்தார். சிலர் பக்கத்து கடையில் ரசமலாய் வாங்கி சாப்பிட்டார்கள். கடைசியில் டீ என்று ஒன்று வந்தது. அதில் சர்க்கரை இருந்தது, பால் இருந்தது, குங்குமப்பூ கூட போட்டிருந்தார்களாம். டீத்தூள்..?? அதை மட்டும் போட மறந்து விட்டார்கள்.

 

டீ குடித்துவிட்டு வாங்கித் தந்தவருக்கு ஒரு நன்றியை கூறிவிட்டு நாங்கள் நகர்ந்து விட்டோம். ஆர்டர் கொடுத்தவர் ஆயிரம் ரூபாயைக் கடைக்காரரிடம் கொடுத்து விட்டு, மிச்சம் கொடுக்கப் போகிறார் என்று எதிபார்த்திருக்க, அவன், “நீங்கள் இன்னும் இரண்டாயிரம் ரூபாய் தர வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார், ஏன் என்று கேட்டதற்கு, “ அந்த டீயில் குங்குமப்பூ போட்டிருக்கிறதே” என்றானாம். அவர் தொழிலதிபராக இருந்ததாலோ என்னவோ கேட்ட தொகையை கொடுத்து விட்டு வந்திருக்கிறார்.

- தொடரும்

Monday, May 1, 2023

ஆம் பன்னா

 ஆம் பன்னா

டில்லி, உ.பி. ஸ்பெஷலான மாங்காய் சர்பத். செய்முறை பார்க்கலாமா?

புளிப்பு மாங்காய் - 1

புதினா இலைகள் - சிறிதளவு.

சர்க்கரை அல்லது

வெல்ல சர்க்கரை - 1/2 கப்

உப்பு - 1 டீ ஸ்பூன்

சீரகம் - 1 டீ ஸ்பூன் 



*மாங்காயை அடுப்பில் சுட்டுக் கொள்ளவும். 

சுட்ட மாங்காயில் தோலை உரித்து விட்டு செதில் செதிலாக சீவிக் கொள்ளவும். 

பின்னர் அதில் சர்க்கரை, உப்பு, புதினா இலைகள் சேர்த்து மிக்ஸியில் கூழாக அரைத்துக் கொள்ளவும். 

அந்த கூழை ஒரு பாத்திரத்தில் ஊற்றி விட்டு அதில் வறுத்து பொடி செய்த சீரகப் பொடியை போட்டு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து விடவும்.

தேவையான பொழுது 1/4 டம்பளருக்கும் குறைவாக மாங்காய் கூழோடு குளிர்ந்த நீர் சேர்த்து கலந்தால் சுவையான ஆம் பன்னா வை அருந்தலாம்.



*சுட்ட வாசனை பிடிக்காதவர்கள் மாங்காயின் தோலை சீவி, செதில் செதிலாக நறுக்கி வேகவைத்து அரைத்துக் கொள்ளலாம்.