கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, August 16, 2023

குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி

முன் குறிப்பு: இது ஆலயம் சம்பந்தப்பட்ட பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவுசெய்து நகர்ந்து சென்று விடுங்கள் 


குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி

 


சமீபத்தில் வாட்சாப், ஃபேஸ்புக், எல்லாவற்றிலும் திருச்சிக்கு அருகில் கரூர் மார்க்கத்தில் இருக்கும் முத்தரசனல்லூர் என்னும் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் கோவிலைப் பற்றி செய்திகள் வந்தது. அவைகளை படித்ததிலிருந்து அடுத்த முறை திருச்சிக்கு செல்லும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மன்னிக்கும் அந்த விருப்பம் இருந்ததால், நாங்கள் இருவரும் என் பேத்தியோடு அண்ணா வீட்டிற்கு தெரிந்த ஆட்டோவில் கிளம்பினோம். கரூர் டர்னிங்கில் வலதுபுறம் திரும்பி கரூர் சாலையில் பயணித்தால், முதலில் வருவது கம்பரசம்பேட்டை. அதைக் கடந்ததுமே ஆங்காங்கே குருவாயூரப்பன் கோவில் 3கி.மீ., 2.கி.மீ என்ற அறிவிப்பு பலகைகள் நாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற தைரியம் தருகின்றது.


முத்தரசநல்லூர் ஊருக்குள் நுழைந்ததுமே குருவாயூரப்பன் கோவில் வந்து விடுகிறது. கேரள பாணியில் கட்டப்பட்ட விஸ்தாரமானகோவில். உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தின் கீழே வேண்டிக்கொண்டு காணிக்கையாக செலுத்தப்பட வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தாண்டி உள்ளே சென்றால் குழந்தை கண்ணனை தரிசிக்கலாம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு! தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் வெளிச்சுற்றில் ஐயப்பன், வேட்டைகொருமகன் சன்னதிகளும், துலாபாரம் பிரார்த்தனை செலுத்துவதற்காக பெரிய தராசும் இருக்கின்றன. உள் சுற்று சுவர்களில் குருவாயூர் கோவிலில் இருப்பது போலவே மியூரல் ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள். மாலையில் விளக்கேற்றுவதற்காக வெளிப்பிரகார சுவற்றை ஒட்டி பித்தளை சட்டங்களில் விளக்குகள். அங்கு போலவே இங்கும் ஆண்கள் மேல் சட்டை அணிந்து கொள்ள அனுமதி இல்லை.  





குளத்தின் முகப்பு 

கோவிலுக்கு எதிரே அழகான பெரிய குளம். நிறைய மின்சார விளக்கு அலங்காரங்கள் இருந்தன. பக்கத்தில் நாராயணீய மண்டபம் என்று பெரிய ஹால். விசேஷ நாட்களில் நாராயணீய பாராயணம், பஜனை போன்றவைகள் நடத்தவும், பூணூல், ஆயுஷ ஹோoமம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கும் விடப்படும் என்ற அறிவிப்பை காண முடிகிறது.



 


நாராயணீய ஹாலின் மேடையில் இருக்கும் சிற்பம்

குளத்தைச் சுற்றி மஹாபெரியவருக்கும், ஷிர்டி சாய்பாபாவுக்கும் சன்னிதிகள் வரப்போகின்றன. மஹா பெரியவரின் அனுக்ரஹத்தால்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டதாம். நாங்கள் பார்க்கவில்லை. அன்று கோவிலில் இரண்டு குழந்தைகளுக்கு அன்னப்பிராஸனம் நடந்தது. ‘குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை பாருங்கள்’ என்னும் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. இனி அதற்கு குருவாயூருக்கு போக வேண்டாம், திருச்சியிலேயே பார்க்க முடியும். பார்த்து அனுபவியுங்கள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


Sunday, August 13, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…

 

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…


வெளிநாட்டில் வசிக்கும் என் மகள் வயிற்று பேத்திக்கு ஜூலையில் கோடை விடுமுறை தொடங்கியது. நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருக்கும் பேத்தியை திருச்சிக்கு அழைத்துச் சென்று கோவில்களை காண்பிக்க நினைத்தேன். ஏன் திருச்சி என்கிறீர்களா? திருச்சிதானே எங்கள் ஊர், எங்கள் ஊர் பெருமையை பேத்திக்கு சொல்ல வேண்டாமா?

23.7.23 அன்று தேஜசில் திருச்சிக்கு புறப்பட்டோம். எங்கள் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் அமையாமல், முன்னும், பின்னுமாக அமைந்தது. ஆனாலும், நான் தனியாக உட்கார மாட்டேன் என்றெல்லாம் படுத்தாமல், தனியாக அமர்ந்து கொண்டாள். ஸ்ரீரங்கத்தில் என் சகோதரர் வீட்டிற்குச் சென்று, உணவருந்தி, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலை அவளை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவளுக்கு அந்தக் கோவிலின் *தல புராணத்தை சொன்னேன்.

கதையை கேட்டு விட்டு, “ஐ ஸ்டில் டோண்ட் அண்டெர்ஸ்டான்ட் வொய் டிட் த ஸ்பைடர் கில் த எலிஃபெண்ட்?” என்று கொக்கி போட்டாள்.

“நம்ப, சாமி மேல வெயில் படக்கூடாதுனு வெப் கட்டினா, அதை அந்த எலிஃபெண்ட் கலைத்து விடுகிறதேனு யானை மேல ஸ்பைடருக்கு கோபம், அதான்”

“வொய் இட் டுக் ரீ பர்த் ஆஸ் எ கிங்க்?”

“நாம சாமிக்கு கொஞ்சமா ஏதாவது கொடுத்தால் கூட, அவர் அதை நமக்கு மல்டிபில்ஸா திருப்பி கொடுப்பார். ஸ்பைடரா இருந்தப்போ சாமி மேல வெயில் படக்கூடாதுனு அது வெப் கட்டித்து இல்லையா? தனக்கு நிழல் கொடுத்த அந்த சிலந்தியை அடுத்த ஜென்மத்தில் ராஜாவா பொறக்க வெச்சார். அதுவும் அந்த ஜென்மாந்திர ஞாபகத்தாலா ராஜாவா பொறந்ததும் நிறைய கோவில்களை கட்டினார்”.

என்னுடைய இந்த பதில் அவளுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு கேள்வி எதுவும் வரவில்லை. அது மாலை நேரம் என்றதால் அகிலாண்டேஸ்வரி வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதி ரூபத்தில் காட்சி. பேத்தியிடம்,”பார் இப்பொழுது அம்பாள் சரஸ்வதி ரூபத்தில் இருக்கிறாள், நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்” என்றதும், “மொத்தம் எத்தனை ரூபம்?” என்றாள்.

“மூன்று, காலையில் துர்கா, மதியம்(உச்சி காலத்தில்) லட்சுமி, மாலையில் சரஸ்வதி” என்றேன். தீபாராதனை காட்டும் வரை நிற்க அனுமதித்தார்கள். தரிசித்துக் கொண்டு, பிரகாரத்தை வாம் வரும் பொழுது அங்கிருக்கும் சுப்பிரமணியரின் போர்க்கோல சிற்பத்தின் அழகை அவளுக்கு இந்த வயதில் ரசிக்கத் தெரியாமல் போகலாம், இருந்தாலும் காட்டினேன்.

ஸ்வாமி சன்னதிக்குச் செல்லும்பொழுது அந்தக் கோவில் பஞ்சபூத தலங்களில் தண்ணீருக்கானது என்றதும், “அதனால்தான் என்ட்ரென்சில் தண்ணீராக இருந்ததா?” என்றாள். பிரதான நுழைவு வாயிலுக்கு அருகில் தரையோடு பதிக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதைத்தான் குறிப்பிட்டாள். பிறகு, “ஃபயருக்கான டெம்பிள் எது?” என்று கேட்டாள். திருவண்ணாமலை என்றதும், “வென் ஆர் யூ கோயிங் டு டேக் மீ தேர்?” என்றாள். “பார்க்கலாம்” என்றேன். ஜம்புகேஸ்வரரை வணங்கி, பிரகாரத்தை வலம் வந்து, நவகிரகங்களை வணங்கி, அழகான கால பைரவரை வணங்கி, தட்சிணாமூர்த்தியை வணங்கி, வெளியில் கொடிமரத்திற்கு அருகில் இருக்கும் வெகு அழகான சோமாஸ்கந்தர், சிவன் பார்வதி சிற்பங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.



கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் யாசகத்தை நான் கண்டு கொள்ளாமல் வந்ததும், “பாட்டி, வொய் யூ ஆர் நாட் மைண்டிங் த பெக்கர்ஸ்?” என்று கேட்டாள். “ஒருவருக்கு கொடுத்தால், நிறைய பேர்கள் வருவார்கள்” என்றேன். “பட் தே ஆர் புவர் பெக்கர்ஸ்” என்றாள். குழந்தைகளோடு கோவிலுக்கு வரும்பொழுது சில்லறையாக மாற்றிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் முத்தரசநல்லூர் குருவாயூர் கோவிலுக்கும், மலைக்கோட்டைக்கும் சென்ற அனுபவங்களை பார்க்கலாம்

*ஜம்புகேஸ்வரர்(ஆகிலாண்டேஸ்வரி) கோவிலின் தல புராணம் சுருக்கமாக:

இந்த இடம் வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்த பொழுது, சிவலிங்கம் ஒன்று நாவல் மரத்தினடியில் இருந்தது. சிலந்தி ஒன்று அந்த சிவலிங்கத்தின் மேல் வெய்யில் படாமல் வலை கட்டும். அதே சிவலிங்கத்திற்கு தன் தும்பிக்கையில் நீர் நிரப்பிக் கொண்டு வந்து, அதனால் அபிஷேகம் செய்து, பூவை சாற்றி வழிபடும். அந்த யானை சிலந்தி வலையை அசிங்கம் என்று கருதி கலைத்து விடும். மறு நாள் சிலந்தி மீண்டும் வலை பின்னும், யானை கலைக்கும். இது தொடர்ந்தது. தான் பின்னிய வலையை யார் அழிக்கிறார்கள்? என்று கவனித்த சிலந்தி, அந்த வேலையை செய்வது ஒரு யானை என்பதை தெரிந்து, ஒரு நாள் அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்து விடுகிறது. அந்த போராட்டத்தில் இரண்டுமே இறந்து விடுகின்றன. அந்த சிலந்திதான் கோசெங்கட்ச்சோழனாக மறு பிறவி எடுத்து, சிவபெருமானுக்கு 100 கற்றளிகளை எடுப்பித்தார். யானை முனிவராக பிறந்தது.