கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 20, 2022

மறக்க முடியாத வசனங்கள்.

மறக்க முடியாத வசனங்கள். 

முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா,பாட்டி, சின்ன தாத்தா, சின்ன பாட்டி, அத்தை பாட்டி, அத்தை என்று நிறைய பெரியவர்கள் இருப்பார்கள். அவர்கள்  பேசும் பொழுது நிறைய பழமொழிகளை கூறுவார்கள். அவற்றை வசனங்கள் என்பார்கள். அதாவது இப்போதய பஞ்ச் டயலாக் போல. பேச்சு வழக்கில் போகிற போக்கில் இந்த வசனங்கள் தெறித்து வரும். பல வசனங்கள் அர்த்தத்தோடும், நகைச்சுவையோடும், சில அடல்ட் ஜோக் வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கும்.  

எங்கள் இரண்டாவது அத்தை இப்படிப்பட்ட வசனங்கள் கூறுவதில் வல்லவர். எங்கள் அம்மா செயல் திறன் மிக்க மல்டி டாஸ்கர். ஒரே சமயத்தில் பல வேலைகளை அனாயசமாக செய்வார். எங்கள் அம்மாவின் செயல் திறன் எப்படி பட்டது என்று அத்தை ஒரு வசனம் கூறுவார்.

'சீதை திரண்டு புழக்கடையில் நிற்கிறாள் 
செல்லப் பெண்ணுக்கு சீமந்தம் 
மாரிமுத்துக்கு மசக்கை 
எட்டு பெண் எருமை ஈதெடுத்து(ஈற்றெடுத்து) நிக்கறது 
ஆத்துக்காரர் வந்து அடியே அடியே என்கிறார் இதற்கு நடுவில் 
உடன் பிறந்தவன் வந்து,"திருவேங்கடத்துக்கு திரு விளக்கு ஏற்றப் போகணும் வாடி அக்கா" என்று கூப்பிட, அவள் அத்தனை வேலைகளையும் முடித்து விட்டு உடன் பிறந்தவனோடு திருவேங்கடத்திற்கும் போய் விட்டு வந்து விட்டாளாம்'... அவ்வளவு திறமை! என்பார். 

அதைப் போல யாரையாவது நாம் நன்றாக சமைப்பார்கள் என்றால் உடனே, "சமையல் என்ன பிரமாதம்? புளிக்கு ஏற்ற உப்பு, உப்புக்கேற்ற மிளகு பொடி, அஞ்சும் மூணும் உட்கூட்டிருந்தால் அறியாப் பெண்ணும் சரியா சமைக்கும்" என்பார்.

அவர் கூறும் இன்னொரு வசனம், "மயிருள்ள சீமாட்டி இடக்கொண்டை போட்டாலென்ன? வலக்கொண்டை போட்டாலென்ன?" என்பது.

எங்கள் அம்மாவும் சில பழமொழிகள் சொல்வார்கள். காமா சோமாவென்று ஒரு வேலையை செய்தால், " யாரோ ஒருத்தன் சொன்னானாம் 'எப்படியோ ஊராரின் தயவில் என் மனைவி கர்ப்பவதி ஆனாள்' என்று அந்த மாதிரி இருக்கு. என்பார்.

நிர்பந்தம் காரணமாக ஒரு வேலையை செய்ய நேர்ந்து, அது நல்ல விதமாகவும் முடிந்தால், "ஆம்படையான் அடிச்சாலும் அடிச்சான், கண்ணு பூளை கரைஞ்சாலும் கரைஞ்சது" என்பார்.

என் அம்மாவின் இன்னொரு சிறப்பான குணம் தன்னைப்பற்றிய விமர்சனங்களுக்கெல்லாம் கவலைப்பட மாட்டார். அம்மாவை மோசமாக நடத்தியவர்களும் ஒரு இக்கட்டில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் ஓடிப்போய் உதவுவார். இதற்கு நாங்கள் ஏதாவது சொன்னால், " 'குப்பையை தள்ளி விட்டு கோலத்தை போட வேண்டும்' மற்றவர்களிடம் இருக்கும் குறைகளை பெரிது படுத்தக் கூடாது" என்று கூறுவார். அம்மாவின் இந்த குணத்தை இன்றளவும் உறவுகளும்,நட்பும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். அதையே நாங்களும் கடைப்பிடிப்பதால் சொந்தங்களோடு பேச்சு வார்த்தை இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 

உலக நாயகனுக்கு, தெரியாது, இல்லை என்னும் இரண்டு வார்த்தைகளும் பிடிக்காதாம். என் பாட்டிக்கும் அப்படிதான். "இருக்கறது வெச்சுண்டு சமைக்கணும், இது இல்ல, அது இல்ல என்று சொல்லுவாளா?" என்பார். நாம் சரியாக செய்யாத ஒரு செயலுக்கு ஏதாவது சாக்கு சொன்னால், "ஆடத் தெரியாத நாட்டியக்காரி மித்தம்(முற்றம்) கோணல்னு சொன்னாளாம். என்பாள்.   

சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்த என் பாட்டி, " ஒண்ணு ஒண்ணா சேர்த்தா(ல்) காசா? ஒருமிக்க சேர்த்தா(ல்) காசா?" என்று கேட்பார். அனாவசியமாக செலவழிப்பது அவருக்குப்  பிடிக்காது. 

நம்மோடு வம்பு வளர்பவர்களோடு வாதம் செய்யக் கூடாது என்பதற்கு, " கிடக்கு விடு, எச்சக்கலைக்கு எதிர்க்கலை போடுவாளா?" என்று கேட்பார். 

இவைகளைப் போல 'காம்பும் அருகல், தோண்டியும் பொத்தல், கிணறும் பாழும் கிணறு' 

'சுண்டைக்காய் கால் பணம், சுமை கூலி முக்காப் பணம்'
போன்றவை சகஜமாக புழங்கப்பட்ட வசனங்கள். 

சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக கூறப்பட்டதாக இருக்கலாம். (சமையல்)ஆக்கிட்டு துடைத்தால் ஐஸ்வர்யம் பொங்கும், தின்னுட்டு துடைத்தால் தரித்திரம் புடுங்கும்' என்பார்கள்.

இப்போதெல்லாம் இப்படிப்பட்ட வசனங்களை யாரும் கூறுவதில்லை. மறக்கப்படும், மறைந்து வரும் பல விஷயங்களில் இப்படிப்பட்ட பழமொழிகளும் சேர்ந்து விடும் போலிருக்கிறது. இப்போது சினிமாக்களில் வந்த,"ஆணியே புடுங்க வேணாம்"  "உனக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்கு னா தக்காளியா?" போன்றவைகளைத்தான் கூறுகிறார்கள்