கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label belief. Show all posts
Showing posts with label belief. Show all posts

Tuesday, October 17, 2017

ஜோசியம் பார்கலையோ..? ஜோசியம்

ஜோசியம் பார்கலையோ..? ஜோசியம் 



"நீ ஐந்தாம் தேதி பிறந்தவளா?" என்று என்னை அதிகம் அறியாத, ஒரு பெண் கேட்ட அந்த கேள்விதான் எனக்கு நியூமராலஜியில் ஆர்வத்தை தூண்டியது. 

ஒரு மனிதரை பார்த்து சில நாட்களிலேயே அவருடைய பிறந்த தேதியை கணிக்க முடியுமென்றால்...? அது எப்படி சாத்தியம் என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நியூமராலஜி சம்பத்தப்பட்ட புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்.



அந்த சமயத்தில் ராமண்ணா என்று ஒரு ஜோசியர் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வருவார்.அவரை நாங்கள் ஜோசியர் மாமா என்போம்.  பரம்பரை ஜோதிடரான அவரின் கணிப்புகள் மிகவும் துல்யமாக இருக்கும். அவரிடம் நான் அதிகம் விவாதித்திருக்கிறேன். ஒருமுறை சாரதா தேவியின் ஜாதகத்தை யாரென்று சொல்லாமல் அவரிடம் காண்பித்து என்ன சொல்கிறார் பார்க்கலாம் என்று அதிகப்ரசங்கித் தனமாக பரீட்சை கூட செய்தேன். ஆனால் அவர் மிகச் சரியாக கூறி என் வாலை நறுக்கினார். அப்போது பால ஜோதிடம் சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தது. அதை படித்து விட்டு ஜோசியர் மாமாவிடம் சந்தேகங்கள் கேட்பேன்.

எனவே ஜாதகத்தில் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்தது. என் மூத்த சகோதரி கை ரேகை ஜோதிட சம்பந்தமான புத்தகங்கள் வைத்திருந்தார். அவைகளை படித்து விட்டு நானும் அவரும் கருத்து பரிமாறிக் கொள்வோம். ஒரு முறை என் தோழி ஒருத்தியின் கைய முதலில் நான் பார்த்தேன், பிறகு என் அக்கா பார்த்துவிட்டு,"உங்க வீட்டில் உங்கள் முன்னோர்கள் யாராவது கோவில் கட்டியிருக்கிறார்களா?" என்று கேட்டார். உடனே என் தோழி,"ஆமாம் என் அம்மா சிறிய பிள்ளையார் கோவில் ஒன்று கட்டி அதை பராமரிக்கவும் செய்கிறார்" என்றாள்.

எனக்கு என்னை குறித்து அதாவது என் ஜோதிட அறிவைக் குறித்து மிகவும் வெட்கமாக போய் விட்டது. நாம் இருவரும் ஒன்றாகத்தானே படித்தோம், பிறகு ஏன் அவரால் கணிக்க முடிந்த ஒரு விஷயத்தை என்னால் கணிக்க முடியவில்லை? இதிலிருந்து வெறும் ஏட்டறிவு மட்டும் குறி சொல்வதற்கு போதாது. இன்ட்யூஷன் வேண்டும் என்னும் விஷயம் தெளிவானது. இன்ட்யூஷனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் பூஜைகள்,மந்திர ஜெபங்கள் போன்றவை அவசியம் என்பதால் அதை அதோடு முடித்துக் கொண்டேன். ஆனாலும் ஜாதகம், நியூமராலஜி,நேமாலஜி போன்றவற்றில் ஆர்வம் குறையவில்லை. அது சம்பத்தப்பட்ட புத்தகங்கள் படிப்பதும், அதை பற்றிய ஞானம் உள்ளவர்களோடு உரையாடுவதும் மிகவும் பிடிக்கும்.

இப்படி ஜாதகம், கை ரேகை ஜோதிடம், நியூமராலஜி எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் ஞானம் உண்டு. நம்பிக்கை நிறைய உண்டு. என்றாலும் தொலைகாட்சியில் வரும் ராசி பலன் நிகழ்ச்சிகள், பத்திரிகைகளில் வரும் ராசி பலன்கள் போன்றவற்றை அவ்வளவாக நம்புவதில்லை. இருந்தாலும் பார்ப்பேன். காரணம், ஜோசியர்கள் "எதிர்பார்த்த நன்மை நடக்கும், வழக்குகளில் வெற்றி, உத்தியோக உயர்வு, வீடு மனை வாங்கும் யோகம்" என்று அடுக்குவதற்கு இடையே விருச்சிக ராசிக்காரர்களையும், மகர ராசியில் ராகு இருப்பவர்களையும் ராகு காலம் பாதிக்காது, சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டமி, நவமி நன்மையையே செய்யும். போன்ற சின்ன சின்ன ஜோதிட டிப்ஸ் கொடுப்பார்கள். அதை கேட்பதற்காகவே ராசி பலன் நிகழ்ச்சியை கேட்பேன்.

தொன்னூறுகளில் மங்கையர் மலரில் ஜெயலட்சுமி கிருஷ்ணன் என்பவர் எழுதி வந்த ராசி பலன்கள் எனக்கு பலிக்கும். ஒரு முறை அனுபவித்து கழிக்க வேண்டிய மாதம் என்று எழுதியிருந்தார். என்னடா இது? இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். அந்த மாதம் என் கணவர் கீழே விழுந்து, வலது கை பந்து கிண்ண மூட்டு உடைந்து பெரிதும் அவதிக்கு உள்ளானோம். இப்போது பாமா கோபாலன் எழுதும் ராசி பலன்களும் ஓரளவிற்கு பலிக்கின்றன.  மிக சமீபத்தில் ஒன்று பலித்தது.

குடும்பத்தில் ஒரு திருமணம்,அதற்காக புடவை, வேஷ்டிகள் வாங்க வேண்டும். தீபாவளி நெருங்கிக் கொண்டிருப்பதால், காலையில் கொஞ்சம் சீக்கிரம் கிளம்பிவிடலாம் என்று நினைத்தோம். சனிக் கிழமை ராகு காலம் காலை ஒன்பதிலிருந்து பத்தரை வரை, எனவே அதற்கு முன்பே கிளம்பி விட வேண்டும் என்று முடிவு செய்தோம். 

கிளம்பிக்கொண்டே இருக்கும் பொழுது ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் புதல்வர் சொன்ன 
ராசி பலனை செவி மடுத்தேன். என்னுடைய ராசிக்கு, "இன்றைக்கு உங்கள் செயல்பாட்டில் ஒரு பெரிய மற்றம் இருக்கும். நீங்கள் செய்யப்போவதை கேள்விப்படும் எல்லோரும் நம்ப முடியாமல் வாயைப் பிளப்பார்கள்" என்றார். அப்படி என்ன வித்தியாசமாக செய்து விடப்போகிறேன் என்று நினைத்தேன். 

தீபாவளி சமயமாச்சே, கடைகள் எல்லாம் சீக்கிரம் திறந்து விடுவார்கள் என்று நினைத்து, வீட்டிலிருந்து 8:30க்கு கிளம்பி, 8:45க்கு கடையை அடைந்து விட்டோம். என்ன ஆச்சர்யம்! கடையே திறக்கவில்லை. அங்கு வேலை செய்யும் பணியாளர்களே வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். என் கணவரோ, இப்போதுதான் கடையே திறக்கிறார்கள், வா, நாம் போய் சிற்றுண்டியை முடித்து விட்டு வந்து விடலாம். என்றார். சரி, என்று உட்லண்ட்ஸ் சென்று சிற்றுண்டியை முடித்துக் கொண்டு திரும்பினோம். சாதாரணமாக நாங்கள் தீபாவளி பர்சேஸ் முடித்து விட்டு உட்லண்ட்ஸில் சாப்பிட்டு விட்டு வருவோம். இந்த முறை வித்தியாசமாக நேர்மாறாக செய்தோம். கும்பலே இல்லை(தீபாவளி நெருங்கி கொண்டிருக்கும் இரண்டாவது சனிக்கிழமை)!!. நிதானமாக பார்த்து வாங்க முடிந்தது. நாங்கள்தான் முதல் போணியாம். நம்ப முடிகிறதா? இதைக் கேட்ட எல்லோரும் ஜீ தமிழ் ஜோதிடர் சொன்னதையே செய்தார்கள். நீங்கள்...?