கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, March 26, 2021

ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர்

 ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் -- திருநின்றவூர் 


கோவிலின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. தான் நினைத்தபடியே சிறப்பாக கோவில் அமைந்து விட்டதில் மகிழ்ந்த மன்னன் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து விட்டு மகிழ்ச்சியோடு  உறங்கச் சென்றான் பல்லா அரசனான ராஜ சிம்மபல்லவன்.  அவன் கனவில் வந்த சிவ பெருமானோ அவன் கும்பாபிஷேகத்திற்கு குறித்திருக்கும் நாளில் பூசலார் என்னும்  தன்னுடைய பக்தன் திருநின்றவூரில் கட்டியிருக்கும் கோவிலில்  தான் எழுந்தருளப் போவதால் இங்கே காஞ்சிபுரத்தில் அவன் கட்டியிருக்கும் கோவிலில் அன்று எழுந்தருள இயலாது என்று கூறி விடுகிறார். 

மன்னனுக்கு அதிர்ச்சி. அரசனான தான் கட்டிய கோயிலை விட சிறப்பாக வேறு ஒரு கோவிலா? அப்படி என்ன சிறப்பு அந்தக் கோவிலில்? என்று அதைக் காண விரும்பி திருநின்றவூருக்கு வருகிறார். எதிர்பாராமல் மன்னனைக் கண்ட ஊர் மக்கள் திகைக்கிறார்கள். பூசலார் கட்டிய கோவில் எங்கே இருக்கிறது என்று மன்னன் கேட்டதும் மேலும் திகைக்கிறார்கள். பூசலார் கோவில் கட்டியிருக்கிறாரா? இது என்ன புது கதை? கோவில் காட்டும் அளவிற்கு எந்த வசதியும் இல்லாதவராயிற்றே?    ஊருக்கு வெளியே இருக்கும் இலுப்பை மரக்காட்டில் காட்டில் எப்போதும் கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்திருக்கும் அவர் எங்கே எப்படி  கோவில் கட்டுவார்? என்று ஊர் மக்கள் பயத்தோடும், தயக்கத்தோடும், கூற மன்னன் அவரை சந்தித்தே ஆக வேண்டும் என்று அவரைத் தேடிச் செல்கிறான். அங்கு ஊர் மக்கள் சொன்னபடி கண்களை மூடி  அமர்ந்திருக்கிறார் பூசலார். மன்னர் வந்திருப்பதைக் கூறி அவரை உலுக்கி எழுப்புகின்றனர் மக்கள். 

பூசலாரைப் பார்த்ததுமே அவர் சாதாரண மனிதர் இல்லை என்பது புரிந்து விட, அவரைப் பணிந்து," ஐயா, தாங்கள் கட்டியிருக்கும் கோவில் எங்கே? நீங்கள் நாளை அதற்கு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்திருக்கிறீர்களாமே? நான் கட்டிய கோவிலை புறக்கணித்து, உங்களுடைய கோவிலில் எழுந்தருளுவதில்தான் சிவ பெருமானுக்கு விருப்பம், நான் அந்தக் கோவிலை கான் முடியுமா?" என்று வினவ, பூசலார் விக்கித்துப் போய் விடுகிறார். கண்கள் நீரைப் பெருக்க, "நான் கோவில் கட்டியது என் மனதில் அல்லவா? அதை என் சிவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா?" என்று புளகாங்கிதத்துடன் தான் மனதில் கோவில் கட்டிய விவரத்தைக் கூற, மானசீகமாக கட்டிய கோவிலை இறைவன் அங்கீகரிக்கிறார் என்றால் அவர் எத்தனை விசுவாசத்தோடு அதை செய்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த மன்னன் அவர் விரும்பிய வண்ணம் ஒரு கோவிலை நிர்மாணித்து தருகிறான். பூசலார் தன்  இதயத்தில் கோவில் கட்டியதால், இக்கோவில் ஹ்ருதயாலீஸ்வரர் கோவில் என்று அறியப் படுகிறது. 



சென்னையிலிருந்து முப்பத்திமூன்று கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. சிறிய கோவில்தான். கிழக்கே பார்த்த ஸ்வாமி சன்னதியும், கருவறைக்குள்ளேயே பூசலாரின் சிலையும் அமையப் பெற்றிருப்பது சிறப்பு. மரகதாம்பாள் என்ற திரு நாமத்தோடு தனி சன்னிதியில்  தெற்கு நோக்கி குடிகொண்டிருக்கும் அம்பிகை.  மூலவர் ஹ்ருதயாலீஸ்வரர் என்பதால் இங்கு வந்து வழிபட இதயக் கோளாறுகள் சரியாகும் என்பது நம்பிக்கை. 

தொண்டை மண்டல கோவில்களுக்கே உரிய கஜபிருஷ்ட விமானம். கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி,  மஹா விஷ்ணு, மற்றும் பிரும்மா.  பிரதான வாயிலின் இரு புறங்களிலும் சூரிய சந்திரர். நவகிரக சந்நிதியை ஒட்டி பல்லவ ராஜாவான ராஜசிம்மனுக்கும் சிலை இருக்கிறது. வெளி பிரகாரத்தில் மேற்கு வாசலைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் விநாயகர் கண்ணையும்,கருத்தையும் கவர்கிறார். 




ஒரு முறை சென்று வணங்கிவிட்டு வாருங்களேன்.