பொன்னியின் செல்வன் -2
ஊர் உலகமே பார்த்து விட்ட பொ.செ.2 ஐ நான் பார்க்காவிட்டால் சாமி குத்தமாகிவிடாதா? அதற்குள் அதைப் பற்றி நெகடிவ் விமர்சனங்கள் வந்து விட்டன, இருந்தாலும் பார்க்க வேண்டும் என்று ஒரு எண்ணம். ரஞ்சனி நாராயணன் அவர்கள்,"நாம் சேர்ந்து போகலாமா?" என்று கேட்டதும் சரி என்று சொல்லி விட்டேன். இத்தனைக்கும் நான் இருப்பது ஒரு இடம், அவர் இருப்பது ஒரு இடம். இரண்டு பேரும் பார்த்துக் கொண்டதும் இல்லை என்பது ஸ்வாரஸ்யம். அது இருக்கட்டும், படத்துக்கு வரலாம்.
பொ.செ.1 வந்த பொழுது அது எப்படி இருக்குமோ? என்று சந்தேகம் இருந்தது, ஆனால் படம் பிடித்தது. இரண்டாம் பாகம் நிச்சயம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எதிர்பார்த்தேன்.. ஹூம்..!
படத்தின் முதல் பகுதியில் என்னை மிகவும் கவர்ந்தவர் கேமிராமேன் ரவிவர்மன். இந்த பகுதியில் அவர் கூட பெரிதாக கவரவில்லை. தோட்டாத்ரணி ஏமாற்றவில்லை. பிரமாதமான செட்டுகள், அருமையான லைட்டிங். விக்ரம் வெளுத்து வாங்கியிருக்கிறார். கதையில் ஆதித்த கரிகாலன் பாத்திரம் ஒரு ஃப்ரீக் என்பது போல படைக்கப்பட்டிருக்கும். ஆனால் படத்தில் அவனை வீரனாகவும், கெட்டிக்காரனாகவும் காட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா என்றால், இல்லை என்பது சோகம். கதையில் ஆழ்வார்கடியான் வரும் பகுதிகள் நகைச்சுவையாக இருக்கும். ஆனால் அவன் சாதுர்யம் மிக்கவனாகத்தான் படைக்கப்பட்டிருப்பான். படத்திலோ அவன் கோமாளியாக்கப்பட்டு விட்டான். அவனுடைய பாஸான அனிருத்த பிரும்மராயர் எப்படிப்பட்ட ராஜ தந்திரி! இங்கே இரண்டு காட்சிகளில் வருகிறாரா? வந்தியத் தேவன் டம்மியாக்கப்பட்டு விட்டார்.
மந்தாகினியின் கதா பாத்திரம் மோசமாக சிதைக்கப்பட்டிருக்கிறது. மேக்கப்பை கலைத்த ஐஸ்வர்யாவின் தலையில் நரைத்த முடி விக்கை வைத்து ஒரே ஒரு காட்சியில் இங்கும் அங்கும் ஓடு என்று சொன்னது போல இருக்கிறது. கடைசியில் மதுராந்தகனுக்குப்பதிலாக முடிசூட்டப்பட வேண்டும் என்பதற்காகத்தான் சேந்தன் அமுதன் கதா பாத்திரமே, அப்படி செய்யப் போவதில்லை என்னும் பொழுது எதற்கு அந்தப் பாத்திரம்?
திரிஷாவிடம் இருக்கும் இயல்பான கம்பீரம் குந்தவையின் பாத்திர படைப்பிற்கு உதவியிருக்கிறது. பார்திபேந்திர பல்லவனாக நடிக்கும் விக்ரம் பிரபு நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயிடம் பேசும் காட்சி, நந்தினியின் மோக வலையில் வீழ்ந்து கிடக்கும் ஒருவன் பேசுவது போல இல்லாமல், அம்மா பிள்ளை பேசுவது போல இருக்கிறது. ஐஸ்வர்யாவை விட அவரது குரல் நன்றாக நடித்திருக்கிறது. பாராட்டுகள் தீபா வெங்கட்! ஜெயம் ரவியின் தோற்றமும் நடிப்பும் நல்ல கம்பீரம்!
அகனக பாடலைத் தவிர மற்ற பாடல்கள் படத்தோடு ஒட்டவில்லை. ரவிதாசன்&கோவிற்கு காட்டுவாசி போல ஏன் இப்படி ஒரு ஒப்பனை? குறையையே சொல்ல வேண்டி வருமே என்பதால் விமர்சனமே எழுத வேண்டாம் என்று நினைத்தேன்.
இந்த படத்தால் ஒரு நன்மை என்னவென்றால் இப்போது யூ டியூபில் எக்கச்சக்க சோழர் காலத்தைப் பற்றிய பதிவுகள்.