கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, February 28, 2022

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி மஹா சிவராத்திரியாகும். ஒவ்வொரு மாதத்திலும் வரும் தேய்பிறை சதுர்த்தசி மாத சிவராத்திரி என அழைக்கப்பட்டாலும், சிவ வழிபாட்டுக்கு உகந்த மாதமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி மஹா சிவராத்திரி. 

அமிர்தம் பெறுவதற்காக தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது தசமி வரை பாற்கடலை  கடைந்தும் அமிர்தம் கிடைக்காததால் மன சோர்வுற்ற தேவர்கள் ஏகாதசியன்று உபவாசம் இருந்து துவாதசியில் பாற்கடல் கடைவதை தொடர, *ஆலகால விஷம் வெளிப்பட்டு அவர்களை துரத்துகிறது சிவபெருமானை வலம் வரும் அவர்களை எதிர் திசையில் வந்து மறிக்கிறது அதிலிருந்து தப்பிக்க அவர்கள் பிரதட்சிணத்தை முடிக்காமல் வந்த வழியிலேயே திரும்பி ஓடுகிறார்கள். மீண்டும் எதிர் திசையில் வந்து ஆலகால விஷம் மறிக்க,  மறுபடியும் வந்த வழியிலேயே திரும்பிச் செல்கிறார்கள். இப்படி மூன்று முறை பிரதட்சணம் செய்த பிறகு சிவ பெருமான் அந்த விஷத்தை அருந்துகிறார். அம்பிகை அந்த நஞ்சை சிவபெருமானின் தொண்டையிலேயே நிறுத்தி விட விஷத்தின் பாதிப்பால் அம்பிகையின் மடியிலேயே சற்று கண்ணயரும் பெருமான் கண் விழித்த நாள்தான் சதுர்த்தசியான சிவராத்திரி. 

விஷத்தை அருந்தியதால் உஷ்ணமாகிவிட்ட சிவபெருமானை குளிர்விக்க அவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. 

மனோகாரகனான சந்திரன் முழு கலையில் இருக்கும் பௌர்ணமி அம்பிகையை வழிபட உகந்த நாள் என்றால்,  சந்திரகலை குறைவாக இருக்கும் சதுர்த்தசி சிவபெருமானின் வழிபாட்டிற்கு உரிய நாள். நம்முடைய மனம் அடங்கி இறையனுபவத்தில் லயிப்பதை இது குறிக்கலாம்.

சிவராத்திரி அன்று உபவாசம் இருந்து, இரவு முழுவதும் உறங்காமல் இறை சிந்தனையிலேயே கழிக்க வேண்டும் என்பது நியதி.  உணவையும், உறக்கத்தையும் கட்டுப்படுத்தும் பொழுது, புலன் உணர்வு கட்டுப்படும். அதனால்தான் இறைவனுக்கு உகந்த நாட்களில் இவை இரண்டையும் வலியுறுத்துகிறார்கள். 

சில பெருமானுக்கு ஆசுதோஷி என்று ஒரு பெயர் உண்டு. சுலபத்தில் சந்தோஷமடைபவர் என்று அதற்கு பொருள். சிவனுக்கு உகந்த சிவராத்திரியன்று, நமக்கு தெரிந்த சிவ துதிகளை (லிங்காஷ்டகம், மார்க்கபந்து ஸ்லோகம், சிவ புராணம், தேவார, திருவாசக பதிகங்கள்)சொல்லி வழிபட்டு இறையருள் பெறலாம்.ஓம் நமசிவாய 🙏🙏

*அதனால்தான் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களில் நந்திக்கு முன் தொடங்கி கோமுகி வரை சென்று பின்னர் திரும்பி நந்தி வரை வந்து பிரதட்சிணம் செய்வார்கள்.