கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, April 6, 2019

கொடிக்கு காய் பாரமா?

கொடிக்கு காய் பாரமா?

அரசனாக இருந்தாலும், கர்ம யோகியாக வாழ்ந்தவர் ஜனகர். கற்றுக் கொள்வதில் அவருக்கு இருந்த ஆர்வமும், ஒருமுகப்பட்ட கவனிப்பும் அவருடைய குருவிற்கு மிகவும் பிடித்திருந்ததால் அவர் மீது ஒரு தனி பாசம் வைத்திருந்தார். இது மற்ற சீடர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஜனகர் ஒரு அரசனாக இருப்பதால்தான் தங்களுடைய குரு பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று நினைத்தார்கள், அதை அவ்வப்போது வெளிப்படுத்தவும் செய்தார்கள். ஜனகரின் தன்மையையும், தன்னுடைய நிலைபாட்டையும் மற்ற மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று நினைத்த குரு,ஒரு நாள்,  தன் யோக சக்தியால், அரண்மனை உட்பட மிதிலாபுரி முழுவதும் எரிவது போன்ற ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்.  அந்த காட்சியை கண்ணுற்றதும், எல்லா மாணவர்களும், பாடத்தை அப்படியே பாதியில் விட்டுவிட்டு தங்கள் உடமைகளை பாதுகாக்க ஓடினர். அங்கு சென்றதும்தான் நிஜமாக அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெளிந்து திரும்பி வந்தனர். ஜனகரோ கொஞ்சம் கூட பாதிக்கப்படாமல் தன் கற்றலை தொடர்ந்து  கொண்டிருந்தார்.  ஆசிரியர் அவர்களிடம்,"உங்களுக்கும் ஜனகருக்கும் இருக்கும் வித்தியாசம் புரிகிறதா?பெரிதாக சொத்து பத்துக்கள் இல்லாத நீங்கள் எல்லோரும் உங்கள் உடைமைகளை காப்பாற்றிக் கொள்ள ஓடி விட்டீர்கள், ஆனால், இந்த நாட்டுக்கே அதிபதியாக, ஏராள சொத்துக்களுக்கு உடமையாளரான ஜனகனோ, இதனால் பாதிக்கப்படாமல் இருக்கிறான். நான் ஏன் அவனிடம் பிரத்யேக அன்போடு இருக்கிறேன் என்று இப்போது தெரிந்து கொண்டீர்களா?" என்றாராம்.

இந்த கதையை நான் கல்லூரி மாணவியாக இருந்த பொழுது, என் ஆசிரியர்  கூறியதும், நான் அவரிடம் ,"ஒரு ராஜாவாக இருந்துகொண்டு தன் நாட்டில் ஒரு பெரிய தீ விபத்து நிகழும் பொழுது, அவர் அங்கு சென்று, அந்த நெருப்பை அணைக்க  வேண்டாமா?" என்று கேட்டேன். அதற்கு  அவர் சிரித்துக்கொண்டே, " ஒரு நாடு என்றால் அதில் தீயணைப்பு படைகள் இருக்காதா? ஒரு நல்ல நிர்வாகி என்பவன் தானே எல்லா காரியங்களையும் செய்ய வேண்டும் என்னும் நிலையில் வைத்திருக்க மாட்டான். எல்லா துறைகளுக்கும் திறமையான, செயல் திறமை மிக்க ஆட்களை அதிகாரிகளாக நியமித்து, அவர்களுக்கு செயல்படும் அதிகாரமும் கொடுத்து வைத்திருப்பான். அதனால் ஜனகரே ஒவ்வொன்றிற்கும் நேரில் சென்று பார்வையிடும் தேவை இருந்திருக்காது". என்றார்.  

நான் சாதாரணமாகத்தான் இந்த கதையை எழுதியிருக்கிறேன். உடனே நீங்களாகவே, சமீபத்திய அரசியல் நிகழ்வுகளோடு சம்பந்தப்படுத்திக் கொண்டால், அதற்கு நான் பொறுப்பு இல்லை. 

மஹாத்மா காந்திக்கும், ராகுல் காந்திக்கும் என்ன 
வித்தியாசம்?
அவர் பாபு(Bapoo), இவர் பப்பு(Pappu) 


பெண்ணின் மனதை தொட்டு படத்தில் வரும் இந்த நகைச்சுவை காட்சி எனக்கு மிகவும் விருப்பமானது. 

அரசியலை விட்டு வெளியே வந்து ஒரு சமூக விஷயத்தைப் பற்றி பேசலாமா? இப்போது பெண்கள் தங்கள் படிப்பு, வேலை இவை காரணமாக திருமணத்தையும், பிள்ளைப் பேற்றினையும் தள்ளிப் போடுகின்றனர். சிலர் திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். 

என் மகனோடு பணி புரியும் ஒருவர்," குழந்தைகள் எல்லாம் எதற்கு? அனாவசிய செலவு, புடுங்கல், அதனால்   நானும் என் மனைவியும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என்று தீர்மானித்து விட்டோம்" என்றாராம். மக்கள் இந்த அளவு தற்குறிகளாகி விட்டார்களா? என்று தோன்றியது. 'மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு கிளை பாரமா?
கொடிக்கு காய் பாரமா? பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?" என்றொரு பழைய பாடல் உண்டு. குழந்தையை பாரமாக நினைக்க ஆரம்பித்து விட்டார்களா? கடவுளே!




Friday, April 5, 2019

'விமு' யாரை விட்டது?

'விமு' யாரை விட்டது?

பாக்கியம் ராமசாமி
   
எதிர் ஃபிளாட் விமு கதறக் கதற அழுதுகொண்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனது பெற்றோர் ஸ்கூட்டரில் அவனை ஸாண்ட்விச் செய்து கொண்டு கிளம்பினர்.

'அவனுக்கு ஒன்னரை வயசாகிறது. ஒண்ணுமே தெரியலை' என்று விமுவின் அம்மா என் மனைவியிடம் அங்கலாய்ப்பட்டாள்.

பாவம், ஒண்ணரை வயசுக் குழந்தை என்னத்தென் கண்டது என்று ஒரு தினம் என் மனைவி கேட்டு விட்டாள்.

அதற்கு அந்த இளம் தாயார் சொன்னாள். "மற்ற ஒண்ணரை வயசுகளுக்கெல்லாம் தெரியறதே மாமி. என்னமாக ஒவ்வொண்ணு பெயிண்ட் செய்யறது, பாட்டுப் பாடறது, ஹாண்ட் வொர்க் செய்யறது, தானே எடுத்துச் சாப்பிடறது, போய்ப் பாருங்கோ."

குழந்தை விமுவை ஒண்ணாம் வயசு முடிந்ததுமே ப்ளே ஸ்கூலில் சேர்த்து விட்டார்கள்.

அந்த ப்ளே ஸ்கூலில் இடம் கிடைப்பது என்பது ரொம்ப ரொம்பக் கஷ்டமாம்.

எப்படியோ விமுவின் அப்பா யார் யாரையோ சிபாரிசு பிடித்து இடம் வாங்கி விட்டார்.

.......எதிர் வீட்டு விமு கதறக் கதற அழுது கொண்டே கம்ப்யூட்டர் கிளாசுக்குப் புறப்பட்டான். அவனுக்கு வயசு ஒன்றரைதான்.

ஆனால் அவன் பெற்றோர் அதற்குள் அவனை கம்ப்பூட்டர் வகுப்பில் சேர்த்து விட்டனர்.

கம்ப்யூட்டர் யந்திரங்களில் பெயர்களைக் கற்றுக் தருவதும் மேற்படி யந்திரங்களைத் தொட்டுப் பார்க்கவும் குழந்தைகளுக்குப் பயிற்சி தருகிற பள்ளியாம்.

பலத்த சிபாரிசின் பேரில் அந்தப் பள்ளியில் இடம் கிடைத்தது. விமுவுக்கு வாரத்தில் மூன்று வகுப்பு.

விமுவுக்கு 'க' எழுத்து உச்சரிக்க வராது. 'விமுக்குட்டி எங்கே போய் வந்தது' என்று விசாரித்தால் 'சம்பூசர் க்ளாஸ்' என்பான்.

"விமுக் கண்ணு! ஸ்கொயர் எது காட்டு" என்றாள் தாயார். ஜன்னலின் சதுர டிஸைனைக் குழந்தை காட்டினான். "ட்ரை ஆங்கிள்" எது? என்றாள் தாய்.

ஒரு வட்ட டிஸைனை குழந்தை தப்பாகக் காட்டியது. அது "ட்ரை ஆங்கிள்டா கண்ணு" என்றாள் தாயார்.

குழந்தை ஜன்னல் கதவைப் படபடவென்று ஆட்டினான்.

"விளையாட்டுப் புத்தி வந்துட்டுது. அவ்வளவுதான்!" என்று அம்மாக்காரி தலையில் அடித்துக் கொண்டாள் எரிச்சலுடன். "இப்படி இருந்தால் எப்படிடா விமு?"

"மூடு சரியில்லை போலிருக்கு..." என்று என் மனைவி நழுவிக் கொண்டு வந்துவிட்டாள்.

மணி எட்டே கால். எதிர் வீட்டுப் பெண்மணியின் அலறல்.

"ஊம்... சாப்பிடு! சாப்பிடு! நீயே சாப்பிடணும்... ஸ்பூனை எப்படிப் புடிக்கறது? நன்னாப் புடிடா... ஏன் இறைக்கிறே? சொல்லிண்டே இருக்கேன். துப்பாதடா... கடன்காரா... உங்களைத்தானே... இங்கே வந்து பாருங்க... என் பிராணனை எடுக்கறான்."

குழந்தையை இடுப்பிலே எடுத்து வைத்துக் கொஞ்சிக் கொண்டு தாயார் சாதம் ஊட்டும் காட்சிகளெல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாகி விட்டன.

பூச்சாண்டி காட்டலாம்னா அதற்கும் பஞ்சம். அத்தைக்கு ஒரு வாய். பாட்டிக்கு ஒரு வாய் எல்லாம் சொல்லி தெரியறதில்லை. நேரம் கிடையாது. ஒரு வயசுக்குள் குழந்தையே ஸ்பூனில் எடுத்துச் சாப்பிட்டால் சந்தோஷம். ஒண்ணரை வயசாகியும் விமுவுக்கு அந்த வழக்கம் வரவில்லையென்பதால் பெற்றோருக்குக் கவலை.

இரண்டு நாள் கழித்து விமுவை பகல் பதினொரு மணிக்கு மயிலாப்பூர் கூட்டிப் போனாள் தாய்.

அங்கே 'லிட்டில் மெளத்' என்று ஒரு பிரத்தியேகப் பள்ளியாம். ஒரு வயது பூர்த்தியான குழந்தைகள், தாங்களாகவே ஸ்பூனினால் அழகாக எடுத்துச் சாப்பிடக் கற்றுத் தரும் பள்ளியாம். அதுக்கு ஒரு பிரின்ஸி. நாலு இன்ஸ்ட்ரக்டர்கள். இரண்டு ஆயாக்கள். இரண்டு பியூன்கள். ஒரு டயடீஷியன். ஒரு குக். இரண்டு வாட்ச்மேன். கார் பார்க்கிங் இடம். இப்படியாக ஒரு நிறுவனம். மாசக் கட்டணம். இருநூறு ரூபாய்.

குழந்தை, ஏப்ரன் கட்டிக் கொண்டு வந்து சேர்ந்தது. அம்மாவுக்கு மகா பெருமை.

'அம்மா! நானே சாப்பிட்டுட்டேன்' என்றது.

ஆப்ரனை மட்டும் கட்டிக்கொண்டு பின் பக்க நிர்வாண கோலத்துடன் எல்லா பிளாட்டுக்கும் போய் விமு 'ஆப்பேன் சட்டிண்டு' என்று ஒரு சுற்று போய் வந்தான்.

காலையில் கம்ப்யூட்டர் கிளாஸ், அப்புறம் பிளே ஸ்கூல், அப்புறம் லிட்டில் மெளத்.

விமுவின் பிளே ஸ்கூலிலிருந்து குழந்தையின் டைரியில் வகுப்பு ஆசிரியை அவ்வப்பொழுது ஸ்ரீராமஜெயம் வரிசையாக எழுதுவதுபோல இரண்டு மூன்று வரிகள் எழுதி அனுப்பியிருந்தாள்.

விரல்களால் இறுகப் பற்றிக் கொள்வதில் குழந்தை வீக்காக இருக்கிறான். கவனிப்பது நல்லது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

விமுவின் அம்மாவும் அப்பாவும் அன்று ராத்திரி தூங்கவில்லை. மறுநாள் ஸ்கூலுக்குச் சென்று சம்பந்தப்பட்ட மிஸ்ஸிடம் விசாரித்தார்கள். 'விளையாட்டுச் சாமான்களைக் கீழே இறைத்து விட்டுக் கூடையில் எடுத்துப் போடுகிற சமயம் அடிக்கடி பொருள்களை கீழே போட்டு விடுகிறான்' என்பதாக அவள் சொன்னாள்.

சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் உடனே போனார்கள்.

அவர் பல சோதனை செய்து விட்டு "குழந்தை ஆல்ரைட்! விரல்களுக்குச் சிறிது பயிற்சி தருவது நல்லது" என்றார்.

"சப்பாத்தி சாப்பிடுவீர்களில்லையா. சப்பாத்திக்கு மாவு பிசைவீங்களில்லையா? குழந்தைகிட்டே கொஞ்சம் கொடுத்து நல்லா பிசையச் சொல்லுங்க."

சப்பாத்தி மாவைக் குழந்தை விரலில் ஈஷிப் கொண்டது. 'பிசை... பிசை!' என்று தாயாரும் தகப்பனாரும் குழந்தையைப் பிசைந்தார்கள்.

அவன் நடுநடுவே வாயில் மாவைப் போட்டுக் கொண்டு சிரித்தான். 'உருட்டுடா! அழுத்துடா... ஊம்... ஊம்... அப்படித்தான்... அப்படித்தான்...' என்று அவனை ஊக்குவிப்பதும் உருட்டி மிரட்டுவதுமாக ஒரு வாரம் வீட்டிலேயே சப்பாத்தி பிசையும் பயிற்சி தரப்பட்டது. பிசையும்போது அடிக்கடி சப்பாத்தி மாவைச் சாப்பிட்டதால் குழந்தைக்கு நாலு நாள் வயிற்றுப் போக்கே வந்து விட்டது.

ஆகவே பிளாஸ்டிக்கில் இதற்கென்று ஒரு வகை மாவு விற்கிறது. அது எழுபது ரூபாயோ எண்பது ரூபாயோ அதை வாங்கிச் பிசையச் சொன்னார்கள்.

அந்த மாவைத் தின்றால் இன்னும் வியாதி வந்து விடுமே என்று கன்றுக் குட்டிக்கு பால் குடிக்காமலிருக்க வாயில் புட்டுக் கூடை கவிழ்ப்பார்களே அது மாதிரி பயலுக்கு வாயில் ஒரு துணியைக் கட்டி வைத்தார்கள்.

சாயந்திர நேர ஜைனர்கள் மாதிரி பையன் அந்த வாய்க் கட்டுடன் ஜாலியாக இருந்தான். நடுநடுவே தண்ணி என்று உபத்திரம் செய்தால் கட்டை அவிழ்த்து விட வேண்டும்... குடித்ததும் மறுபடி கட்டி விட வேண்டும்.

ஒரு வாரம் மாவு பிசைந்தும் பெற்றோருக்குத் திருப்தியில்லை.
 
வீட்டில் பயிற்சி தருவதை விடக் குழந்தைகளுக்குச் சிறுசிறு பயிற்சி தரும் 'சர்வீஸ் ஓரியண்டட் கிளப் ஃபர் சில்ட்ரன்' என்று ஓர் அமைப்பு இருக்கிறதே, அங்கே சிறு குழந்தைகளுக்கு (இரண்டு வயசுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு) எல்லா வேலைகளும் கற்றுத் தருகிறார்களாம் என்று கேள்விப்பட்டு 'எஸ்.ஓ.சி.சி'யில் பயலை மறுதினமே சேர்த்து விட்டார்கள். அது மதியம் மூன்றிலிருந்து நாலுவரை. கீழ்ப்பாக்கத்தில் அந்த கிளப் இருந்தது.

அங்கே ஓரொரு குழந்தைக்கும் ஒரு ஆயா தனிக் கவனம் செலுத்தி, குழந்தைக்குப் பயிற்சி தந்து வந்தார்கள்.

வீட்டுக்கு விருந்தாளி வந்தால் நீர் டம்ளரை எப்படித் தட்டில் வைத்து நீர் சிந்தாமல் கொண்டு வந்து தருவது, கீழே நீர் சிந்தினால் துணி கொண்டு வந்து தாங்களே துடைப்பது எப்படி? கீழே கிடக்கும் பேப்பர், புஸ்தகம் முதலியவற்றைக் குனிந்து எடுத்து எப்படி அலமாரியில் வைப்பது, கதவைத் தட்டி விட்டு எப்படி உள்ளே செல்லுவது... முதலியவைகளைக் கற்றுத் தந்தார்கள்.

அவனுடைய அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். விமு வீட்டுக்கு வந்ததும், "மம்மி! நீர்" என்பான். ஒரு டம்ளர் நீர் அம்மா கொண்டு வந்து ஆசையோடு தருவாள்.

குழந்தை உடனே துணியை எடுத்து வந்து தானே துடைப்பான். முற்றிலும் ஈரம் போகாதென்றாலும், குழந்தை தானாகத் துணியால் தரையை 'மாப்' பண்ணுகிறான் வந்து பாருங்கோ" என்று எங்களை அழைத்துச் சென்று காட்டினாள்.

நவராத்திரி கொலுவுக்கு அழைப்பது போல் எல்லா ஃபிளாட்டுக்கும் சென்று குடித்தனக்காரர்களை அழைத்து 'மாப்'பிள்ளையின் சாமர்த்தியத்தை உலகுக்குப் பரப்பினாள்.

அப்படி வந்த நாலாம் நம்பர் வீட்டு அம்மாள் குழந்தையிடம், "ஏண்டா கண்ணு, உனக்கு ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் தெரியுமோ? எங்கே பாட்டிக்கு சொல்லிக் காட்டு," என்று பகலில் ஸ்டாரைக் காட்டச் சொன்னாள்.

"அவனுக்கு அதெல்லாம் சொல்லித் தரலை. மாண்டிஸோரி மெதாப் ஸ்கூலாக்கும், இவனது..." என்றாள் தாயார்.

அந்த மாமி, "எந்த ஸோரியோ நான் என்னத்தைக் கண்டேன். எங்க வீட்டுப் பிசாசுக்கு ஒரு வயசுகூட இன்னும் ஆகலே, அது சொல்றது ட்விங்கிள் ட்விங்கிள்... ஜாக் அண்ட் ஜில் வெண்ட் அப் த ஸில்... ரெயில் ரெயில் கோ அவே... எல்லாம் சொல்றது" என்றாள்.

விமுவின் அம்மாவும், அப்பாவும் யோசித்தனர்.

அந்த மாமி சொன்னதும் கரெக்ட் என்றாள் தாயார். "இந்த வயசிலே நர்ஸரி ரைம் கத்துக் குடுக்காம எப்போ கத்துத் தரப் போறாங்க தெரியலியே."

"ஏபிஸிடியே தெரியாது நம்ம பையனுக்கு. எனக்கும் கவலையாயிருக்கு. வேற ஸ்கூல் மாத்திடுவோமா!"

"நீங்க கொஞ்சம் பேசாதிருங்கோ. இவுங்க மெதாட் அஃப் டீச்சிங்கே வேற. குழந்தை மூளையிலே எதையும் திணிக்க மாட்டாங்க. அதனுடைய அறிவை லிமிட் பண்ணக் கூடாது என்றது இவங்க பாடத் திட்டம்."

"அது சரி, வயது ஒண்ணரையாறது. ஏபிஸிடி தெரியலேன்னா எப்படி?"

"நாமதான் சொல்லித்தரணும்."

"நம்மகிட்டயெல்லாம் வணங்கி உட்காராது. நமக்கும் ஏது நேரம்? என் பிரண்டு சாந்தினியை விசாரிச்சேன். அவள் பையனுக்கு ஒரு வயசுதான் ஆகிறது. 'ரைம்ஸ் மந்திர்'னு சாந்தோம்லே ஒரு ஸ்கூல் இருக்காம். ஆறே மாசத்துல குழந்தைகளுக்கு சகல ரைம்ஸும் கத்துக் குடுத்துடறாங்களாம்."

மறுதினம் விமு வீட்டுக்கு வர சாயந்தரம் ஏழுரையாகி விட்டது. மாலை ஆறிலிருந்து ஏழுவரை ரைம்ஸ் வகுப்பு.

இதனடுவே பள்ளியின் ஆண்டு விழாவில் விமு கத்தரிக் காயா நடிக்கவேண்டும் என்று பிரின்ஸி எழுதி அனுப்பி, அதற்கான டிரெஸ் தைக்க நூற்றைம்பது ரூபாய் உடன் அனுப்பச் சொல்லியிருந்தாள்.

வெஜிடபிள் டான்ஸ் என்று ஒரு நடன நாடக நிகழ்ச்சி. குழந்தைகளெல்லாம் மாட்டுச் சந்தைக்கு வந்த கன்னுக் குட்டிகள் மாதிரி மிரள மிரள முழித்துக்கொண்டு நிற்கிற ஒரு நிகழ்ச்சி.

ரூபாய் பெரிசில்லை. குழந்தை கத்தரிக்காயாக எப்படி நடிப்பான் என்று கவலைப்பட்டார்கள் பெற்றோர்.

"கவலைப்பட வேண்டாம். அவனை வீட்டில் தினமும் நன்றாகக் குதிக்கச் சொல்லுங்கள். அது போதும்" என்று சொல்லி அனுப்பினாள் மிஸ்.

வீட்டிலே விமுவைக் குதிக்கச் சொன்னால் 'சுதிக்க மாத்தேன்' என்று பிடிவாதம் பிடித்தான். 'சத்திச்சா நாணாம்' என்கிறான் கத்திரிக்காய் வேணாம்.

"குதிடா குதிடா... குதிடா..." என்று பெற்றோர்தான் தினமும் குதித்தார்கள்.

"இவனையொத்த குழந்தைகள் இந்த வயசில் டான்ஸே ஆடுகிறது," என்றான் கணவன்.

மறுநாள் காலையில் அவசரமாக விமுவின் அம்மா என் மனைவியைத் தேடி வந்தாள். "மாமி உங்களுக்கு யாராவது டான்ஸ் மாமி தெரியுமா, க்ரேஷ் ப்ரோக்ராம் மாதிரி கிரேஷ் டியூஷன் எடுக்க வேண்டும். பத்தே நாளில் விமுவுக்கு நன்றாகக் குதிக்கக் கற்றுத் தர வேண்டும். வீட்டுக்கே வந்து சொல்லித் தரணும். முன்னூறு ரூபாய் வரை தரத் தயார்."

"மேலே நூறுன்னாலும் சரி..." என்றான் கணவன்.

என் மனைவி ஒரு காலத்தில் டான்ஸ் கத்துக் கொண்டவள். அடை செய்யும் போது சில அடவுகளும் செய்து காட்டுவதுண்டு.

அவளுடைய அந்தக் கால குரு இந்தக் காலத்தில் நடனபீட அவார்டுக்குரிய முதுமை எய்தி ஏதோ ஒரு சந்து வீட்டில் இருந்தாள்.

அவளை மெதுவாக வரவழைத்து எதிர் வீட்டில் குழந்தை விமுவுக்கு ஸ்கூல் டிராமாவில் குதிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தந்தார்கள்.

விமு 'சின்னச் சின்ன சத்தரிச்சா' என்று முதல் இரண்டு நாள் பாடியவாறு குதித்தான். அப்புறம் 'நீ பாடாதே' என்று மரியாதை இல்லாமல் குருவை நிந்திக்கத் தொடங்கினான். கிள்ளிக் கூட கிள்ளினான் என்று அரசல் புரசலாகச் செய்தி. 'தடால்' என்று பின்னால் ஓடி வந்து ஆடு முட்டுவது போல் தள்ளி விட்டதாகவும், குருவம்மா பயந்து ஓடிவிட்டதாகவும் தெரிந்தது.

"எதுக்கு இந்தப் பொல்லாத்தனம். வயசு குட்டிச் சுவருக்கு ஆற மாதிரி ஒண்ணரை ஆறது. குதிக்கத் தெரியறதா.." என்று துக்கித்தாள் தாய்.

இதனடுவே பள்ளிக் கூடத்திலிருந்து குழந்தை அழைத்து வரப்போன சமயம் காலை நொண்டிக் கொண்டு வந்தான்.

"என்னடா ராஜா!" என்று துடித்துப் போனாள். அவனைக் கவனிக்கும் மிஸ்ஸிடம் பதட்டத்துடன் விசாரித்தாள். 'அபு' என்ற பையன் (வயது 2) கொஞ்சம் முரடாம். கராத்தே கிளாஸில் சேர்ந்திருக்கிறானாம். எல்லாரையும் எட்டி எட்டி உதைக்கிறானாம். அவனுடைய பேரண்ட்ஸ் யூரோப் டூரிலிருந்து வந்ததும் அழைத்துச் சொல்வதாக இருக்கிறார்களாம்.

தம்பதிகள் தீர்மானித்தனர். "குழந்தையின் பாதுகாப்புக்கு கராத்தே மிகமிக இன்றியமையாதது" என்று தீர்மானித்து எழும்பூரில் ஒரு தனியார் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டனர்.

ப்ளே ஸ்கூலிலிருந்து பதினொரு மணிக்கு வந்ததும் பப்பு மம்மு சாப்பிட்டு விட்டு அழகான கராத்தே டிரெஸ் போட்டுக் கொண்டு கராத்தே ஸ்கூலுக்குப் புறப்பட்டாகிடும். ஆட்டோவில் தாயார் கூட்டிப் போவாள்.

"இத்தனை ஸ்கூல், இத்தனை படிப்புப் போட்டுச் சுமத்தினால் அந்தக் குழந்தை தாங்குமா?" என்று ஊரிலிருந்து வந்த பாட்டி சண்டை பிடித்தாள்.

அவன் இன்னும் பஸில்ஸ் போடலை. பெயிண்ட்டிங் கிடையாது. அவனுடைய ஃப்பூச்சரை நினைச்சாத்தான் பயம்மா இருக்கு..." என்றாள்.

பக்கத்திலிருந்த விமுவுக்கு அந்த 'பயம்மா இருக்கு' வார்த்தை ரொம்பப் பிடித்து விட்டது.

"பயம்மா... பயம்மா" என்று சொல்லி எல்லாருக்கும் பூச்சாண்டி காட்டினான்.

விமு பள்ளியில் பரீட்சை என்று ஒன்று கிடையாது. ஆனால் பள்ளி ஆசிரியை அடிக்கடி குழந்தையின் டைரியில் ஏதாவது எழுதி அனுப்பி விடுவாள்.

'குழந்தைக்கு அவசியம் இரவில் பெற்றோர் படுக்கை நேரக் கதைகள் படித்துக் காட்ட வேண்டும். விமு விஷயத்தில் அதைக் கவனிக்கவும்... அவனுக்குக் கதை கேட்பதில் நாட்டம் குறைவாக இருக்கிறது?' என்று எழுதிவிட்டாள்.

அந்தத் தினத்திலிருந்து ராத்திரி எட்டரைக்கு ஒரு பயங்கரப் பிரளயம் எதிர் வீட்டில்.

"குரங்கே! முண்டமே! ஏண்டா தூங்கி வழியறே! கேட்கறியா கேட்கறியா? காதுலே விழறதா... லிட்டில் ரெட் ரைடிங் ஹூட் எங்கேடா போனா? ஃபாரெஸ்டுக்கு..." கேள்வியும் அம்மாவே, பதிலும் அம்மாவே.

"அங்கே யார் இருக்கா... அவனோட கிராண்ட் மதர் இருக்கா... கிராண்ட் மதர்னா யாரு?"

"நீ!" குழந்தையின் பதில். இப்படியாக அரைமணி நேரம் ரகளை...

பள்ளி ஆண்டு விழாவுக்கு இரண்டு நாள் இருந்த போது விமுவின் மிஸ் எதிர் வீட்டுக்கு வந்திருந்தாள்.

பெற்றோர் பயந்து கேட்டனர். "என்ன, எங்க விமுவைப் பத்தி ஏதாவது கம்ப்ளெயிண்ட்டா?"

"ஒரு கம்ப்ளெயிண்ட்டும் இல்லை. ஆனால் ஒரு தகவல் உங்ககிட்டே சொல்லத்தான் வந்தேன். இப்போ கொஞ்ச நாளா விமு ரொம்பப் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கறான். தானா சாப்பிடறான். தானாக் கை அலம்பிக்கிறான். தரையிலே தண்ணிப்பட்டால் துடைக்கறான். ஸ்டூல் போட்டுண்டு ஏறி ஃபேனை அணைக்கிறான். பசங்களைக் கூட்டி வெச்சிண்டு கதை சொல்றான். கராத்தே கத்துத் தர்ரான். ஆக்டிவிடீஸெல்லாம் ரொம்ப ஓவராயிடுத்துன்னு பிரின்ஸி சொல்லி அனுப்பினாள். ஒண்ணரை வயசுக்குள் இவ்வளவு வளர்ச்சி கூடாதாம். டென்ஸ் ஆயிடுமாம். அதைக் குறைக்கறதுக்கு ஏதாவது பண்ணினால் நல்லது" என்று சொல்லிவிட்டுப் போனாள்.

"எனக்கு இப்படி ஏதாவது வரும்னு தெரியும்," என்றவாறு விமுவின் அம்மா ஒரு பத்திரிகை கட்டிங் எடுத்து வந்தாள்.

வளசரவாக்கத்தில் இ.பி.இ.ஸி எக்ஸ்ட்ரா ப்ரிலியன்ஸ் எக் ஸ்ட்ரேக்டர்ஸ் ஃபர் சில்ட்ரன்'னு ஒரு ஸ்கூல் இருக்கு. அங்கே தான் சேர்க்கணும்... ஃபீஸ் ஐந்நூறு போனாலும் குழந்தை உருப்படணுமே மாமி... அளவு பார்த்து அவர்கள்தான் ப்ரிலியன்ஸைக் குறைப்பா. நாம ஏதாவது பண்ணினால் தப்பாயிடும்," என்று சொல்லி விட்டு, அதிகாலை ஐந்தரை மணிக்கு விமுவை அழைத்துக் கொண்டு அவன் பெற்றோர் வளசரவாக்கம் கிளம்பினர்.

"அரைப் பணம் கொடுத்து அழச் சொல்லிட்டு, ஒரு பணம் கொடுத்து ஓயச் சொன்ன மாதிரி ஆச்சு" என்றாள் என் மனைவி!

*பாக்கியம்  ராமசாமி*........அவர்களின்  பக்கத்திலிருந்து

எனக்கு வாட்ஸாப்பில் வந்தது. படித்து, கண்களில் நீர் மல்க சிரித்து, என் மகனுக்கும் கூட படித்துக் காண்பித்தேன். யான் பெற்ற இன்பத்தை இவ்வையகமும் பெற வேண்டாமா? அதனால் வலைப்பூ நண்பர்களோடும் 
பகிர்ந்து கொள்கிறேன். என்ஜாய் மாடி!

Monday, April 1, 2019

ஆஸ்பத்திரி அனுபவங்கள்

ஆஸ்பத்திரி அனுபவங்கள் 


வாழ்நாள் முழுதும் மருத்துவமனைக்கு செல்லாமல் இருக்க முடிபவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் என்னைப் போன்ற பலருக்கு அது வாய்ப்பதில்லை. நான் சிறு வயதிலிருந்தே மருத்துவமனைக்கு நிறைய படையெடுத்திருக்கிறேன்.

சிறு வயதில் வீசிங் தொந்திரவு இருந்ததால், அடிக்கடி நோய்வாய்ப்படுவேன். இரவெல்லாம் தூங்க முடியாது. அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் முத்துராமய்யர் என்னும் ஒரு டாக்டரிடம் என்னை என் பெரிய அக்கா கூட்டிக் கொண்டு  போவார். நான் சிறு குழந்தையாக இருந்து பொழுது என்னை தூக்கிக்கொண்டும் சென்றிருக்கிறாராம். அந்த டாக்டரை  'ஒன்றரை அணா டாக்டர்' என்பார்கள். காரணம், அவருடைய கன்சல்டிங் ஃபீஸ் வெறும் ஒன்றரை அணாதான்  அவர் ஏதோ சூரணம் கொடுத்து அதை தேனில் குழைத்து சாப்பிட சொல்வார்.  அவருடைய டிஸ்பென்சரிக்கு எதிரே இருக்கும் ஒரு கடையில் சிறு தேன் பாட்டிலும் வாங்கி வருவோம். வீட்டில் வெற்றிலை இருக்கும், அதில் சூரணத்தை போட்டு தேனில் குழைத்து சாப்பிட்டால் பெரும்பாலும் இரண்டு நாட்களில் ஜுரமும், வீசிங்கும் சரியாகி விடும். சரியாகவில்லையென்றால், எங்கள் வீட்டிர்க்கு எதிரே இருந்த பன்னீர்செல்வம் என்னும் டாக்டர் வீட்டிற்கோ, அல்லது குஜிலித்தெருவில் இருந்த ஒரு டாக்டரின்   க்ளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்படுவேன்.

Related image


இதில் பன்னீர்செல்வம் என்பவரின் க்ளினிக்  பச்சை நிற டிஸ்டம்பர் அடிக்கப்பட்டு நிசப்தமாக, இருக்கும். அங்கு வைக்கப்பட்டிருக்கும் பெடஸ்டல் ஃபேன் சுழலும் ஓசை தவிர வேறு ஓசை இருக்காது. சுவரில் வேறு "ஷ்ஷ்ஷ்" என்று வாயில் விரல் வைத்து நம்மை எச்சரிப்பார் ஒரு பெண். மடக்கக்கூடிய இரும்பு நாற்காலிகளில் அமர்ந்திருப்பவர்கள் யாரும் பேச மாட்டார்கள்.  அந்த டாக்டர் பரிசோதித்த பிறகு, "அங்க பார்" என்பார், அப்படி சொன்னால் ஊசி குத்த போகிறார் என்று அர்த்தம். நான் அழாமல் ஊசி குதிக்க கொண்ட சமத்து குழந்தைகளில் ஒருத்தி.

குஜிலித் தெரு டாக்டரின் கிளினிக்கை டாக்டர் வீடு எனலாம். ஏனென்றால் ஹாலில் காத்திருக்கும் நோயாளிகள், சத்தம் போடாதே படம், டோக்கன் கொடுக்கும் கம்பௌண்டர் போன்ற எந்த விஷயங்களும் அங்கு இருக்காது. அது ஒரு வீடுதான். திண்ணையில் ஏறியதும் வரும் ஒரு அறையில், அதை ரேழி என்பது வழக்கம். இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். நோயாளிகள் அதிகம் பேர் காத்திருக்க மாட்டார்கள். ரேழி தாண்டி இருக்கும் சிறிய ஹாலில் வலது பக்கம் ஒரு சிறிய மேஜையில் எக்ஸ் ரேயை பார்க்கும் ஸ்க்ரீனும், பச்சை நிற டெலிபோனும் இருக்கும். பச்சை கலரில் கூட போன் வைத்துக் கொள்ள முடியுமா என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஒரு பெரிய மேஜைக்கு பின்னால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் டாக்டர் எப்போதும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்தபடி இருப்பார். பார்ப்பதற்கு ஓவியர் மாயா வரையும் டாக்டர் போல இருப்பார். 

நோயாளிகள் வந்தவுடன் அவரே கிடுகிடுவென்று வந்து வாயில் தெர்மாமீட்டரை வைத்து விட்டு, நாடியை பிடித்து பார்ப்பார். ஸ்டெதாஸ்கோப்பால் செக் பண்ணி விட்டு, தெர்மாமீட்டரை எடுத்து டெம்பெரேச்சர் பார்த்து விட்டு, உள்ளே போய் ஒரு ஊசியை கொண்டு வந்து சுருக்கென்று குத்தி விட்டு, மீண்டும் உள்ளே சென்று மாத்திரைகளை கொண்டு வந்து "காலையில் சிவப்பு மாத்திரை, மதியம் வெள்ளை மாத்திரை, ராத்திரி மீண்டும் சிவப்பு மாத்திரையும் இந்த ட்யூப் மாத்திரையும் சாப்பிடு" என்று கூறி அவரே பொட்டலம் மடித்து கொடுத்து "பத்து ரூபாய் எடு" என்பார். புதிய பேஷண்ட் என்றால் ஸ்டெத் வைக்கும் பொழுதே "பத்து ரூபாய் வெச்சுருக்கியா?" என்று கேட்டு உறுதி செய்து கொண்ட பின்தான் வைத்தியம் செய்வார். அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளிலும் இது அதிகம்தான். வியாதியை கண்டறிவதிலும், வைத்தியம் செய்வதிலும் நிபுணராக இருந்த பொழுதிலும் பண விஷயத்தில் அவர் காட்டிய கறார்தனத்தினால் மக்களிடம் அத்தனை நல்ல பெயர் சம்பாதிக்கவில்லை. ஆனால் இவர் வீட்டிற்கும் வந்து பார்ப்பார். 

எங்கள் அம்மாவுக்கும் இரண்டாவது அக்காவுக்கும் இவர்தான் தன்வந்திரி. எங்கள் அப்பாவுக்கு இவரை பிடிக்காது. "பணப்பிசாசு, எல்லோருக்கும் ஒரே மாத்திரையை கொடுக்கிறான்"  என்று தூற்றுவார். "எதைக் கொடுத்தால் என்ன? வியாதி குணமாகிறதா இல்லையா?" என்பது எங்கள் அம்மாவின் வாதம். இவருடைய பரிந்துரையின்படி என் பாட்டிக்கு சில சமயம் ஒரு கோர்ஸ் இன்ஜெக்ஷுன் செய்ய வேண்டி வரும். அப்போதெல்லாம் நானும் என் அக்காவும் எங்கள் வீட்டுக்கு வாடிக்கையாக வரும் அழகிரி என்பவரின் குதிரை வண்டியில் பாட்டியோடு செல்வோம். அந்த கிளினிக் வாசலில்ஒருவர் மசால் வடை போட்டுக் கொண்டிருப்பர். பாட்டி எங்களுக்கு தினமும் மசால் வடை சாங்ஷன் செய்வாள். 

தில்லை நகரில் இருந்த பொழுது எங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த ஒரு மருத்துவரிடம்தான் காண்பிப்போம். அவரிடம் எப்போதும் கும்பல் நிரம்பி வழியும். முதலில் போய் டோக்கன் ஒருவர் வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் எத்தனையாவது நம்பர் சென்றிருக்கிறது என்று கேட்டுக்கொண்டு அதற்கேற்றார் போல வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லலாம். இவரும் டயகனாஸ் செய்வதில் திறமை மிகுந்தவர்தான், ஆனால் இந்த இந்த வியாதியாக இருக்கலாம், அந்த வியாதியாக இருக்கலாம் என்று நம்மிடமே கூறி கொஞ்சம் பயப்படுத்தி விடுவார். பணம் கேட்கவே மாட்டார். இரண்டாவது முறை செல்லும் பொழுது ப்ரிஸ்கிரிப்ஷன் கொண்டு செல்லவில்லையென்றால் கோபம் வந்துவிடும். 

நாங்கள் ஸ்ரீரங்கத்திற்கு குடிபெயர்ந்த பொழுது நான் திடமாகி விட்டேன். என் கடைசி அக்காவுக்கு அடிக்கடி ஜுரம் வரும். அப்போதெல்லாம் அவளை ரங்கநகரில் இருந்த ஒரு மருத்துவரிடம் நான்தான் அழைத்துச் செல்வேன். அவர் தன்னுடைய வீட்டின் ஒரு பகுதியை க்ளினிக் ஆக மாற்றியிருந்தார். எப்போதும் கும்பல்தான். அங்கு போக வேண்டுமென்றால் நான் கையோடு ஒரு புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன். வரவு செலவுகளை கவனித்துக் கொண்ட அவருடைய அண்ணன்  நோயாளிகளிடம்," உங்கள் வீட்டில் இன்னும் அறுவது ரூபாய் தர வேண்டி இருக்கிறதே என்று சத்தமாக கேட்டு எரிச்சல் படுத்துவார்.  அங்கிருக்கும் கம்பவுண்டர் ஊசி குத்துவது மிகவும் வலிக்கும். 

இந்த டாக்டர் என்னையும் என் மூன்றாவது அக்காவையும் எப்போதும் குழப்பிக் கொள்வார். மாத்வரான இவர் தமிழ், கன்னடம், ஆங்கிலம் எல்லாம் கலந்து கட்டி பேசுவார். உப்பு ஜலத்தில் காகில் பண்ண வேண்டும் என்பதை,"டேக் லூக் வார்ம் வாட்டர், சுடக்கூடாது, புட் சால்ட், நன்னா மிக்ஸ் பண்ணி, வாயில் விட்டு ஹா ஹா ஹாக்கி துப்பிடுமா" என்பார். 

நாங்கள் மஸ்கட்டிலிருந்து விடுமுறைக்கு இந்தியா வரும்பொழுதெல்லாம் என் மகளுக்கு ஜுரம் வந்துவிடும். நான் கையோடு க்ரோசின் போன்ற மருந்துகள் வைத்திருந்து அவற்றை கொடுத்தாலும், சில சமயம் அதில் சரியாகாமல் பக்கத்தில் இருக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்படி பார்த்த மருத்துவர்களில் மறக்க முடியாதவர் அண்ணா நகரில் இருந்த ஒரு பெண் மருத்துவர். மருத்துவம் பார்த்ததில் குறை ஒன்றும் இல்லை. அனால் மருந்தை கொடுத்து விட்டு விளக்குவார் பாருங்கள்.. "இந்த மாத்திரை காலையில் மட்டும்தான் கொடுக்கணும், மத்தியானமும், இரவும் கொடுக்கக் கூடாது, இதை மதியம் உணவுக்கு பின் கொடுங்கள் இரவும், காலையிலும் கொடுக்க கூடாது, இந்த சிரப்பும், மாத்திரையும் இரவில் சாப்பிடணும், காலையிலும், மதியமும் கிடையாது, என்று குழப்பி விட்டு, கன்ஃபியூஸ் ஆகாதீர்கள்" என்று வேறு சொல்லுவார்.


எங்கள் வீட்டில் என் அண்ணாவுக்கும், எனக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பெரும் ஷார்ட் டெம்பெர்ட், இரண்டு பெரும் வேகமாக பேசுவோம், இரண்டு பெரும் சர்க்கரை நிறைய சாப்பிடுவோம். எங்கள் அம்மா, "நம்மாத்தில் காபிக்கு போட எவ்வளவு சர்க்கரை வாங்க வேண்டியிருக்கிறதோ, அதே அளவு தின்பதற்கும் வாங்க வேண்டியிருக்கிறது" என்பார்.  அதனாலோ என்னவோ சொத்தைப் பல்லும் அதிகம். இதன் காரணமாக சிறு வயதிலிருந்தே நிறைய டெண்டிஸ்டுகளிடம் பல்லைக் காட்டியிருக்கிறேன். இப்படி சொன்னால் ரசக்குறைவாக இருக்கிறதோ?, மண்ணையுண்ட கண்ணனைப் போல பல் வைத்தியர்கள் முன் வாயைத் திறந்திருக்கிறேன். அவர்களுக்கு பிரபஞ்சம் தெரிந்திருக்காது, என் சொத்தை பல்தான் தெரிந்திருக்கும்.  அவ்வப்பொழுது வலி வரும் பொழுதெல்லாம் அம்மா, "கிராம்பு வைத்துக் கொள்" என்பாள். ஓட்டையை அடைக்க முடியும் என்பது என் பெற்றோர்களுக்கு தெரியவில்லையோ என்னவோ? சொத்தைப் பல் பெரிதாகி வலி வந்து, தாங்க முடியாமல் போகும்பொழுது அப்பா ஒரு டாக்டரிடம் அழைத்துச் செல்வார். அப்போதெல்லாம் திருச்சியில் பல் டாக்டர்கள் மிகவும் குறைவு. அந்த பல் டாக்டர் வீடு மாடியில் இருக்கும். அங்கும் என்னை விட பெரிய பையன் ஒருவன் அலற, அந்த டாக்டர் அவனிடம் என்னை காண்பித்து,"பாரு உன்னை விட சின்ன பொண்ணு எப்படி சமர்த்தா இருக்கு, நீ கத்துகிறாய்?" என்று என்னை உதாரணம் காட்டியிருக்கிறார். இன்னும் என் டென்டல் கிளினிக் விசிட்டுகள் நிற்கவில்லை. 

என் மகன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது  கல்லூரிக்காக கால் பந்து விளையாடி கீழே விழுந்து கை  சுளுக்கிக்கொண்ட பொழுது ஒரு கார்ப்பரேட் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஆர்த்தோ டிபார்ட்மென்டின் தலைவரும், அந்த மருத்துவ மனையின் நிர்வாக இயக்குனருமான அந்த மருத்துவர் ஒரு எக்ஸெண்ட்ரிக் போல நடந்து கொண்ட விதம் எனக்கு வியப்பளித்தது. 

நான் மஸ்கட்டில் சந்தித்த மருத்துவர்கள் எல்லோருமே," நாம் சொல்வதை காது கொடுத்து கேட்பார்கள். நமக்கு வந்திருக்கும் வியாதி என்ன? அதற்கு என்ன மருத்துவம் செய்யப் போகிறார்கள் என்பதை நம்மிடம் தெளிவாக கூறுவார்கள். 

எப்படி இருந்தாலும் மருத்துவர்கள் நமக்கு அவசியமானவர்கள். இதை உணர்ந்ததால்தான் நாம் எத்தனை ஜோக்குகள் அவர்களை வைத்து எழுதினாலும், அவர்கள் அதை புன்னகையோடு ஏற்றுக் கொள்கிறார்கள். 


  
Related image

ஆபரேஷன் டேபிளில் படுத்திருந்த ஒருவர் டாக்டரிடம், டாக்டர் இந்த சர்ஜரிக்குப் பிறகு என்னால் நடக்க முடியுமா? என்று கேட்டார், "தாராளமாக" என்றார் டாக்டர்.
நோயாளி: "வயலின் வாசிக்க முடியுமா?"
டாக்டர்: "ஏன் முடியாது? நன்றாக வாசிக்கலாமே"
நோயாளி: "ஆச்சர்யமாக இருக்கே?"
டாக்டர்: "இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கு?"
நோயாளி: "எனக்கு வயலின் வாசிக்கவே தெரியாது"