கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, November 28, 2020

அண்ணாமலையானுக்கு அரோஹரா!

அண்ணாமலையானுக்கு அரோஹரா!



கார்த்திகை என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை! பஞ்சபூத தலங்களில் நெருப்பிற்கு உரிய தலமாகும்.  இந்த மலையோடு சம்பந்தப்பட்ட பண்டிகை திருக்கார்த்திகை ஆகும். 

கைலாயத்தில் ஒரு முறை உமா தேவியார் சிவ பெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தி விட, அந்த ஒரு நொடியில் அண்ட சராசரமும் இருண்டு விடுகிறது. இதனால் சினம் கொண்ட சிவ பெருமான், உமா தேவியை பூமிக்குச் சென்று  தவம் புரிய ஆணையிடுகிறார். சிவனின் ஆணைப்படி திருவண்ணாமலையில் இருந்த கௌதம மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கு வந்து தவம் செய்து, கார்த்திகை மாத பௌர்ணமி அன்று சிவ பெருமானின் உடலில் பாதியைப் பெறுகிறாள். அதனால்தான் கார்த்திகை அன்று அர்த்தநாரீஸ்வர கோலத்தில்தான் அண்ணாமலையார் எழுந்தருளுவார். 

ஸ்ரீரங்கம், அடுத்து உயரமான(217 அடி) கோபுரத்தை கொண்டது. 2668 அடி உயரமான மலையின் மீது ஏற்றப்படும் தீபம் மகாதீபம் என்று அழைக்கப் படுகிறது.  ஏழு அடி உயரம் கொண்ட செப்பு கொப்பரையில் ஏற்றப்படும் தீபத்தை எரிய வைக்க 3000கிலோ பசு நெய் தேவைப்படும். திரிக்கு 1000 மீட்டர் காடாத் துணியும், இரண்டு கிலோ கற்பூரமும் பயன்படுத்தப் படுகின்றன.  எரிந்த பஸ்மம் திருவாதிரை அன்றுதான் பிரஸாதமாக வழங்கப்படும்.  

மலை வடிவில் இருப்பது சிவ லிங்கமே என்பதால் இதை வலம் வருவது சிறப்பான வழிபாடாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக பௌர்ணமி அன்று இந்த மலையை வலம் வருவது மிகவும் சிறப்பு என்ற நம்பிக்கை இருந்தாலும் ஒவ்வொரு கிழமையில் கிரி வலம் செய்வதும் ஒரு சிறப்பான பலனைத்தரும். 

ஞாயிறன்று கிரி வலம் செய்தால் நோய்கள் நீங்கி, உலகில் அரசனைப் போல் வாழலாம் 

திங்கள் கிழமைகளில் கிரிவலம் செய்ய பாவங்கள் நீங்கி, போகங்களை அனுபவிக்க முடியும்.

செவ்வாய் கிழமையில் திருவண்ணாமலையை வலம் வர கடன்கள் தீரும், தரித்திரம் அகலும்.

புதன் கிழமைகளில் கிரிவலம் செய்தால் எல்லா கலைகளிலும் நிபுணத்துவம் பெறலாம். சாத்திர ஞானம் வாய்க்கும். 

வியாழக் கிழமைகளில் கிரிவலம் செய்ய தேவ முனிவர்களுக்கு தலைவனாகும் யோகம் வாய்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் கிரிவலம் வர லக்ஷ்மிபதியான மஹாவிஷ்ணுவின் திருவடிகளை அடையலாம். 

சனிக்கிழமைகளில் கிரி வலம் செய்யும் பொழுது நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், பாதிப்புகளும் அகலும். 

முடிந்தபொழுது திருவண்ணாமலை சென்று வணங்கி வரலாமே. இயலாதவர்கள் இருந்து இடத்தில் இருந்தபடியே நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையாரை மனதார வணங்கலாம். அண்ணாமலையனுக்கு அரோஹரா!