பவானி அத்தைகள் இறப்பதில்லை.
அதில் முக்கியமானவர் பவானி அத்தை. அத்தை என்றால் நேரடியாக அத்தை கிடையாது. என் அப்பாவிற்கு அத்தை முறை, எந்த வகையில் என்று தெரியாது. ஏதோ தூரத்து சொந்தம்.
அதையெல்லாம் நாங்கள் கேட்டதில்லை. அப்பா, அம்மா, அத்தைகள் எல்லோரும் அத்தை என்று அழைப்பார்கள், அதனால் நாங்களும் அப்படியே அழைத்தோம்.
அதையெல்லாம் நாங்கள் கேட்டதில்லை. அப்பா, அம்மா, அத்தைகள் எல்லோரும் அத்தை என்று அழைப்பார்கள், அதனால் நாங்களும் அப்படியே அழைத்தோம்.
இளம் வயதில் விதவையானவர், என்பது பின்னாளில் தெரிந்தது. குழந்தைகளும் கிடையாது. தன் வீட்டில் தனியாகத்தான் வசித்து வந்தார் . எப்பொழுதாவது அவருடைய நெருங்கிய சொந்தங்கள் வருவார்கள் என்று நினைவு. எங்கள் சின்ன தாத்தா, பெரிய அத்தை (அப்பாவின் அத்தை) இவர்களை பெயர் சொல்லி அழைப்பார், அவர்கள் கோபமாக இருக்கும் பொழுது, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் சொல்ல நினைப்பதை அவர்கள் சார்பாக சொல்லுவார். அதே போல் வீட்டு பெரியவர்களின் கருத்தையும் சிறியவர்களுக்கு எடுத்துச் சொல்லுவார். அதை வைத்து குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர் என்று புரிந்து கொண்டோம்.
நியூக்ளியர் ஃபாமிலியாக இருக்கும் இந்த காலத்து குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட உறவுகள் புரியுமோ என்று தெரியவில்லை. அப்போதெல்லாம் ஒரு வீடு என்றிருந்தால் அதில் தாத்தா, பாட்டி, அவர்தம் சகோதர, சகோதரிகள், பெரியப்பா, சித்தப்பா, அத்தான், அம்மாஞ்சி, மட்டுமல்ல, ஆதரவில்லாத தூரத்து சொந்தங்களும் புழங்கும் இடம்.
அதனாலோ என்னவோ, பவானி அத்தை பெரும்பாலும் எங்கள் வீட்டில்தான் சாப்பிடுவார். அவர் சாப்பிடுவது எங்களுக்கெல்லாம் சிரிப்பாக இருக்கும். ஏனென்றால், "சாப்பிடவே பிடிக்கவில்லை, என்னது கத்தரிக்காய் சாம்பாரா? கத்தரிக்காய் எனக்கு பிடிக்காது கொஞ்சமா விடு.." தொட்டுக்க என்ன இருக்கு? புடலங்கா கறியா? ஐயோ வேண்டியே இருக்கவில்லை, கொஞ்சம் போடு, போறும்.." ஊறுகாய் என்ன இருக்கு? வடு மாங்காயா? வடு மாங்காய் எல்லாம் முன்ன மாதிரி எங்க இருக்கு?" ரெண்டே ரெண்டு போடு, " என்ன சொல்லு, மோருஞ்சாதத்திற்கு ஈடு இல்ல, ஐயோ மோர் ஒரே புளிப்பு.. வேண்டாம் நார்த்தங்காய் இருந்தா போடு, சாப்பிடவே பிடிக்கல.." என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒரு கை பார்ப்பார். நாங்கள் அப்போது ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.
இப்போதும் பவானி அத்தை பல வீடுகளில் இருக்கிறார் ஆனால் வேறு வடிவில் என்றுதான் தோன்றுகிறது. என் மாமியாருக்கு காலை கண் விழிக்கும் பொழுதே தொலைகாட்சி பெட்டியை ஆன் செய்தாக வேண்டும். " முன்ன விஜய் டி.வி.யில் நல்ல சத் விஷயங்கள் போட்டுக் கொண்டிருந்தார்கள், ஜெயாவுக்கு மாத்து, இவர் நன்றாகத்தான் சொல்கிறார், ஆனால் ஏன் இந்த சைவ துவேஷம்?" " ஏழு மணியாகி விட்டதா? ஹரிகேச நல்லூர் ஜோசியம் போடு, இவர் எல்லாருக்கும் நாள் பிரமாதமா இருக்கும்பார், என்னவோ, கடக ராசிக்கு என்ன சொல்றர்னு பார்ப்போம்... என்னது திருமண ப்ராப்தியா?" (அது கல்யாண வயதில் இருப்பவர்களுக்கு என்று புரியாதா?) "எல்லாத்துலேயும் யோகா.." (அதைப் பார்த்து கையை, காலை கொஞ்சம் அசைத்தால் நன்றாக இருக்கும்).
காலை நேர நிகழ்ச்சிகளுக்கு இப்படி என்றால்,சீரியல் தொடங்கி விட்டால் வேறு விதம். " எல்லா சீரியலிலும் மாமியாரை கெட்டவளாகவே காட்டுகிறார்கள். ஏன் இப்படி பண்ணுகிறார்கள் என்று தெரியவில்லை. ஒரே நெகட்டிவிடி மணி பதினொன்னு ஆயிடுத்தா? ... ஆரம்பித்திருக்குமே? போடு போடு. நேத்திக்கு அந்த மாமியார் கடன்காரி மாட்டுப் பெண்ணை கொல்ல ஏற்பாடு பண்ணப் போறாள். நன்னா இருப்பாளா?" என்ற ரீதியில் கமெண்டுகள் கொடுத்துக் கொண்டே பார்ப்பார்.
இதனால் அவர் வெறும் சீரியல்கள் மட்டும்தான் பார்ப்பார் என்று நினைத்துவிட வேண்டாம். நியூஸ் சேனல்களையும் விட்டு வைக்க மாட்டார். "இவன் ஏன் இப்படி கத்தறான்? எங்கேயாவது ஹார்ட் அட்டாக் வந்துவிட போகிறது. இவாளெல்லாம் இப்படி கத்துவதால் என்ன மாறி விடப் போகிறது?" என்பாரே தவிர,பார்க்காமல் இருக்க மாட்டார்.
எனக்கு சின்ன வயதில் பார்த்த பவானி அத்தைதான் நினைவுக்கு வருவார்.