கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label மலையாள சினிமா. Show all posts
Showing posts with label மலையாள சினிமா. Show all posts

Tuesday, January 28, 2025

பத்மினி(மலையாளம்) திரை விமர்சனம்

பத்மினி(மலையாளம்)

 


அன்று நெட்ஃப்லெக்ஸில் ப்ரௌஸ் பண்ணிய பொழுது ‘பத்மினி’ என்ற படம் கண்ணில் பட்டது. 2023ல் வந்த் படம். அதில் அபர்ணா முரளி இருப்பதை பார்த்ததும் பார்க்க முடிவு செய்தேன்.

ரமேஷன்(குஞ்சாக்கோ போபன்) என்னும் மொழியாசிரியருக்கு திருமணமாகிறது. முதலிரவில் தன்னுடைய கவிதைகளை மனைவிக்கு வாசித்துக் காட்டுகிறான். அப்போது திடீரென்று மின்சாரம் துண்டிக்கப்பட, ஜன்னலருக்கருகில் நிற்கும் மனைவி நிலவொளியை ரசித்து, அந்த நிலவொளியில் ஒரு வாக் போகலாமா? என்று கேட்க, இருவரும் வெளியே வந்து நடக்கிறார்கள். சற்று தூரத்தில் ஹெட் லைட் வெளிச்சத்தை பாய்ச்சியபடி ஒரு பிரீமியர் பத்மினி கார் நிற்கிறது.

இந்த நேரத்தில் யார் இது? என்று அவன் குழம்ப, அவன்தான் தன்னுடைய காதலன், தங்கள் காதலை தன் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால் தனக்கு வேறு வழி தெரியவில்லை, என்னை மன்னித்து விடு என்று கூறி காதலனோடு அவள் பிரீமியர் பத்மினி காரில் ஏறி சென்று விடுகிறாள். அவன் திகைத்து நிற்க, அதை இரண்டு பேர் பார்த்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த ஊரில் அவனை பத்மினி என்று அழைத்து கலாய்க்கிறார்கள்.

இந்த சமயத்தில் அவனுடைய கல்லூரிக்கு பத்மினி என்ற பெயரில் ஒரு ஆசிரியை(மடோனா செபாஸ்டியன்) வருகிறார். ரமேஷனுக்கும், பத்மினிக்குமிடையே காதல் அரும்புகிறது. அவளை பெண் கேட்டுச் செல்லும்போது அவளுடைய தாய் மாமன், “எல்லாம் சரி, நீங்கள் உங்கள் மனைவியை விவாகரத்து செய்து விட்டு வருவது நல்லது, பின்னால் பிரச்சனைகள் வராது” என்று கூற விவாகரத்து வாங்க வக்கீல் ஸ்ரீதேவியை (அபர்ணா பாலமுரளி) அணுகுகிறார். ஸ்ரீதேவிக்கு அப்போதுதான் மிகவும் மெட்டீரியலிஸ்டான பிசினெஸ்மேனும், சந்தேகப்பிராணியுமான ஜெயனோடு(ஸாஜின் செருகாயில்) திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.

விவாகரத்து கேஸை விசாரிக்கும் நீதிபதி, ரமேஷனின் மனைவியை ஆஜர்படுத்த உத்தரவிட, ரமேஷனும், ஸ்ரீதேவியும் ரமேஷனின் மனைவி சென்னையில் இருப்பதை கண்டுபிடித்து, அவள் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, ஓடிவந்த காதலனோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் ஸ்மிருதி, கதவைத் திறந்து, வாசலில் நிற்கும் ரமேஷனைப் பார்த்ததும், “பார்த்தாயா, என்னை அழைத்துச் செல்ல, என் ரமேஷன் வந்து விட்டான்” எங்கிறாள். அதன் பிறகு என்ன ஆனது? ரமேஷனுக்கு அவளிடமிருந்து விவாகரத்து கிடைத்ததா? என்பது மீதி கதை.

படம் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாகவும் செல்கிறது. அபர்ணா பாலமுரளியும், மடோனா செபாஸ்டியனும் கச்சிதம். அபர்ணா தோற்றத்திலும் கச்சிதமாக இருந்தால் நன்றாக இருக்கும். ரமேஷனின் நண்பனாக வருபவரும், சாஜின் செருகாயிலும் சிறப்பு! குஞ்சாக்கோ போபன் அதிர்ச்சி, கோபம், சங்கடம் எல்லாவற்றிர்க்கும் ஒரே மாதிரி முக பாவம்.

ரத்தம் தெறிக்கும் வன்முறை, நம்ப முடியாத சண்டை காட்சிகள், இரைச்சலான இசை இதெல்லாம் இல்லாத குடும்பத்தோடு பார்க்கக்கூடிய படம். மலையாளத்தில் மட்டும் எப்படி வித்தியாசமாக, எளிமையாக யோசித்து படம் எடுக்கிறார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை