கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, January 15, 2020

கோலாகலப் பொங்கல்!

கோலாகலப் பொங்கல்!

எங்கள் குடியிருப்பில் பொங்கல் விழாவை 12.01.2020 அன்றே கொண்டாடி விட்டார்கள். கர்நாடகா, ஆந்திரா இங்கெல்லாம் சங்கராந்தி என்கிறார்கள். 




காலையில் பட்டம் விடும் போட்டி, மதியம் கோலப்போட்டி, இரவில் லோடி என்று களை கட்டியது. ஸ்டால்களும் இருந்தன.  இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டோம்.

அவ்வளவாக காற்று இல்லையே பட்டம் எப்படி பறக்கும்? என்று நினைத்ததற்கு மாறாக இரண்டு பட்டங்கள் மிக நன்றாகப் பறந்தன. அவற்றை என் செல்ஃபோனில் படம் பிடிக்க எனக்குத் தெரியவில்லை. அத்தனை பெரிய குடியிருப்பில் நாலு க்ரூப்புகள்தான், கலந்து கொண்டன. ஒரு அணியில் இரண்டு பேர் கலந்து கொள்ளலாம் என்ற அனுமதி இருந்த போதிலும் மூன்று அணிகளில் இரண்டிரண்டு பேர்களும் ஒரு பெண்மணி தனியாகவும் மொத்தம் ஏழு பேர்கள்தான் கோலப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.


இரவு லோரி! பஞ்சாபியர்கள் போல் இரண்டு மூன்று மரத்துண்டுகளை முக்கோணமாக நிறுத்தி அதை எரிய விட்டு, அதைச்சுற்றி ஹிந்தி சினிமா பாடல்களுக்கு ஆடினார்கள்.  கேக், சமோசா, பாணிபூரி, பேல்பூரி போன்றவை சாப்பிடக் கிடைத்தன. ஆக பொங்கல் தவிர மற்ற விஷயங்களோடு பொங்கலைக் கொண்டாடினோம். 












Tuesday, January 14, 2020

எதிர்பாராத வி.ஐ.பி.மீட்!

எதிர்பாராத வி.ஐ.பி.மீட்!


திரு.ககன்தீப் சிங் பேடியோடு கட்டுரையாசிரியர்

சனிக்கிழமை நான் ஒரு வேலையாக வெளியில் சென்றிருந்தபொழுது செல்போன் அழைப்பு. "துக்ளக் அலுவலகத்திலிருந்து பேசுகிறேன், அதில் வரும் வி.ஐ.பி. மீட் பகுதிக்காக தமிழக அரசு செகரட்டரி திரு.ககன்தீப் சிங் பேடி அவர்களோடு உரையாட வேண்டும். உங்களுக்கு விவசாயத்தில் ஈடுபாடு உண்டா?" என்று கேட்டார்கள். அடிப்படையில் நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவள், அதனால் கலந்து கொள்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை.  என் மகனும் ஒப்புதல் அளிக்க, ஞாயிறு எங்கள் காலனியில் நடந்த சங்கராந்தி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, இரவு பேருந்தைப் பிடித்து சென்னை வந்தேன்.

மதியம் 1:30க்கு கோட்டையில் இருக்கும் வேளாண்துறை அலுவலகத்திற்கு வந்து விடுங்கள் என்றார்கள். நான் அங்கு செல்லும் பொழுது மணி 1:15. ககன் தீப் அலுவலகத்தில் ஏற்கனவே ஒருவர் மட்டும் வந்திருந்தார். நான் சென்ற பிறகு மற்றவர்களும் வந்தார்கள். எங்களுக்கு அங்கே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதை முடித்துக்கொண்டு, திரு.ககன்தீப் அவர்களை சந்திக்கச் சென்றோம்.

எல்லோரையும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வேறொரு பெண்மணி பாண்டிச்சேரியிலருந்து வந்திருந்தார். "இதற்காக வெளியூரியிலிருந்து
வந்திருக்கிறார்களா? என்று அவர் கேட்டதும், துக்ளக் நிருபர், என்னை சுட்டிக்காட்டி "அவங்க பெங்களூரிலிருந்து வந்திருக்கிறார்கள், வெளி மாநிலம்.." என்றார்.  பிறகு உரையாடல் தொடங்கியது.   நாங்கள் என்னவெல்லாம் கேட்டோம், அதற்கு அவர் என்ன பதில் கூறினார் என்பதை நீங்கள் அடுத்த வார துக்ளக்கில் படிக்கலாம்.  இந்த சந்திப்பில் என்னைக் கவர்ந்த விஷயங்களை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பஞ்சாபை சேர்ந்த திரு.ககன்தீப் சிங் சிறு வயதிலிருந்தே ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தாராம். அதற்கு ஆசிரியர்களாக இருந்த தன் பெற்றோர்களும், தன் ஆசிரியர்களும் காரணம் என்றார். பிளஸ் டூ சி.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் ராங்க் வாங்கிய அவருக்கு பொறியியல், மருத்துவம் இரண்டிலுமே சீட் கிடைத்தாலும், ஐ.ஏ.எஸ். படிப்பதற்கு பொறியியல் படிப்பதே உதவும் என்பதால் அதை  தேர்ந்தெடுத்தாராம்.  பொறியியல் முடித்தும், கேம்பஸ் தேர்வில் மிகச்சிறந்த நிறுவனங்களில் தேர்வானாலும், அவைகளை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியன் ரயில்வே சர்வீஸின் பொறியியல் பிரிவில் பணிக்குச் சேர்ந்தாராம். அங்கிருந்து கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றாராம். "என்னுடைய நண்பர்கள் பலர் மில்லியர்களாகவும், பில்லியனர்களாகவும் இருக்கிறார்கள், ஆனால் ஒரு ஐ.ஏ.அஸ். அதிகாரியாக பணி புரிவதில் கிடைக்கும் நிறைவு வேறு எதிலும் கிடைக்காது, ஐயாம் ஹாப்பி" என்றார்.

தமிழ் சற்று கொச்சையாக இருந்தாலும், ள், ல், நெடில், குறில் போன்றவைகளை உச்சரிப்பதில் தடுமாற்றம் இருந்தாலும் நன்றாகப் பேசினார்.  ஆப்(app) என்று சொல்லாமல் செயலி என்றதும், பெரும்பாலும் ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசியதும் வியப்பாக இருந்தது.  ஆரம்பத்திலிருந்தே தமிழ் நாட்டில்தான் பணிபுரி கிறாராம்.  அவருடைய குழந்தைகள் பள்ளியில் முன்றாவது மொழியாக தேர்ந்தெடுத்தது தமிழ்தான் என்றார்.  இவருடைய தந்தை திருக்குறளை பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறாராம்.

தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்காக 'உழவன்' என்றொரு செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறதாம். இதன் மூலம் விவசாயி தனக்குத் தேவையான பல விஷயங்களைப் பெற முடியுமாம். உதாரணமாக ஒரு விவசாயிக்கு உரம் தேவையென்றால் அது எங்கே கிடைக்கும்? என்ன விலை? அந்த கடை செயல்படும் நேரங்கள், அந்த வியாபாரியின் தொடர்பு எண் போன்றவை கிடைக்குமாம்.  "இதைப் போன்ற பல தொழில் நுட்பங்களை தமிழக விவசாயிகள் உடனே ஏற்றுக் கொள்கிறார்கள். மற்ற மாநிலங்களில் அரசாங்கம் கூவி கூவி அழைத்தாலும் ஏற்றுக் கொள்வதில்லை" என்றார்.

எனக்கு இரண்டு கேள்விகள் கேட்க வாய்ப்பு கிடைத்தது. முதல் கேள்வி சோலார் பவர் பேனல்கள் அமைப்பது , அதற்கு அரசாங்கம் விவசாயிகளுக்கு அளிக்கும் மான்யம் பற்றியது. இரண்டாவது கேள்வி கூட்டுப் பண்ணை பற்றியது. இரண்டு கேள்விகளையும் எக்ஸலெண்ட் கொஸ்டின் என்று பாராட்டிய அவர், "உங்களுக்கு விவசாயம் பற்றித் தெரியுமா? என்று கேட்டார். "நான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வருபவள், இப்போதும் என் சகோதரர் மற்றும் உறவினர்கள் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   என் சகோதரரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டேன்"என்றேன்.

சொட்டு நீர்ப் பாசனத்தை பிரபலப்படுத்த வேண்டும் என்பது தன்னுடைய தீவிர ஈடுபாடு உள்ள துறை என்றார். அதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைககள் ஆச்சர்யப்படுத்துகின்றன. தமிழக விவசாயிகள் பற்றிய எல்லா விவரங்களும் விரல் நுனியில் வைத்திருக்கிறார். தன்னுடைய ஐ பேடில் அதை இயக்கியும் காட்டினார். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், குறிப்பிட்ட வார்டில், குறிப்பிட்ட கிராமத்தில் எத்தனை விவசாயிகள் எத்தனை ஏக்கரில் விவசாயம் செய்கிறார்கள்? அதில் கிணறு இருந்தும் எத்தனை பேர் சொட்டு  நீர்ப்பாசனத்தை மேற்கொள்ளவில்லை? போன்ற விவரங்களை ஒரு தட்டலில் பெற முடிகிறது. இதைக் கொண்டு அவர் ஏன் சொட்டு நீர்ப் பாசனத்தை மேற்கொள்ளவில்லை? என்று அவரைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொண்டு அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பார்களாம்.

இந்த சந்திப்பு என்னைப் பொருத்தவரை ஒரு ஐ ஓபனராக இருந்தது. அரசைப் பற்றியும், நிர்வாக இயந்திரத்தைப் பற்றியும் நான் கொண்டிருந்த எண்ணம் மாறியது. துக்ளக்கிற்கு நன்றி. இன்று பொன்விழா ஆண்டு கொண்டாட இருக்கும் துக்ளக் பத்திரிகைக்கு என்னுடைய வாழ்த்துகள்!








Sunday, January 12, 2020

தர்பார்(திரைப்பட விமர்சனம்)

தர்பார்


இந்த படத்திற்கு என்ன விமர்சனம் எழுதுவது? ரஜினியை முன்னிறுத்தி ஏ.ஆர்.முருகதாஸின் தர்பார். அதில்  நிவேதா தாமஸ், யோகி பாபு, சுனில் ஷெட்டி, அனிருத், நயன்தாரா என்று பலரும் அங்கம் வகித்திருக்கிறார்கள்.

சும்மா சொல்லக்கூடாது ரஜினி அசத்துகிறார். எழுபது வயதா இந்த மனிதருக்கு என்று நம்பவே முடியவில்லை.

நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் நிவேதா தாமஸ். (பாபநாசத்தில் கமலின் மூத்த மகளாக வந்தவராமே?) யோகி பாபு முதல் பாதியில் ரஜினியை கலாய்த்து கலகலப்பூட்டுகிறார். இடைவேளைக்குப் பிறகு என்ட்ரி கொடுக்கும் சுனில் ஷெட்டி பெரிதாக செய்யப் போகிறார் என்று நினைக்கிறோம். ம்ஹும்!

காதில் பஞ்சு வைத்துக் கொண்டால் தேவலாம் போல் அனிருத்தின் இசை அலறுகிறது. ஆனால் இந்த படத்திற்கு இது தேவைதான், இல்லாவிட்டால் எடுபடாது என்கிறார்கள். பாடல்கள் என்று ஏதோ வருகிறது. அவற்றின் வரிகள் காதில் நுழைந்தால்தானே மனதில் நுழையும்.

திருமண வயதில் பெண்ணை வைத்துக் கொண்டிருக்கும் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது நயன்தாராவின் இமேஜுக்கு சரி படாது என்பதாலோ என்னவோ, ரஜினிக்கு நயன் ஜோடிதான், ஆனால் ஜோடி இல்லை என்பது போல் அமைத்திருக்கிறார்கள்.  ஆனால் ஒரு பாடலில் ரஜினிக்கு இணையாக ஸ்டைல் காட்டி தான் சூப்பர் ஸ்டாரினி என்று நிரூபித்திருக்கிறார். அடுத்த படத்தில் ரஜினி ஜோடி இல்லாமல், அல்லது, தன் வயதிற்கேற்ற ஜோடியோடு நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

போலீஸ், அதுவும் கமிஷனர் என்கிறார்கள் தலை முடியை ட்ரிம் பண்ணிக்கொள்ள வேண்டாமா? க்ளீன் ஷேவ்டாக இருக்க வேண்டாமா? ரஜினி சிறையில் இருக்கும் கைதிகளுக்கு செல்போன் கொடுப்பது வில்லனின் நண்பருக்கு எப்படி தெரிய வந்தது?  என்ற கேள்விகள் எல்லாம், வீட்டில் வந்து உட்கார்ந்து யோசிக்கும் பொழுதுதான் தோன்றுகிறது. தியேட்டரில் எதுவும் தோன்றவில்லை. வெளியே வரும்பொழுது 'சும்மா கிழி' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

குப்பத்து ராஜா என்று ஒரு ரஜினி படம் எழுபதுகளின் இறுதியில் வந்தது. டி.ஆர்.ராமண்ணா இயக்கம். அந்த படத்திற்கு குமுதத்தில் 'என்னவோ நினைச்சுகிட்டு உள்ளே போனோம், எதையோ கலக்கி கொடுத்தாங்க, எல்லாம் மறந்து விட்டது' என்று விமர்சனம் எழுதியிருந்தார்கள். இந்தப் படத்திற்கும் அதேதான். புதிய மொந்தையில் பழைய கள்ளாக இருக்கலாம். இருந்து விட்டு போகட்டுமே,  செம போதை!