கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label மே 23. Show all posts
Showing posts with label மே 23. Show all posts

Wednesday, June 8, 2022

அலைக்கழித்த ஆட்டவா!

 அலைக்கழித்த ஆட்டவா!

மே.23 விக்டோரியா தினம் என்பதால் கனடாவில் அன்று விடுமுறை. அது எந்த கிழமையில் வந்தாலும் லாங் வீக் எண்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக 23ம் தேதியை தொடர்ந்து வரும் திங்கள் கிழமை விடுமுறை அளிக்கப்படுமாம். இந்த வருடம் மே 21,22,23 அப்படிப்பட்ட விடுமுறை நாட்களாக அமைய

ஆட்டவாவிற்கும், மாண்ட்ரியாலுக்கும் சென்று வரலாம் என்று என் மகளும், மருமகனும் முடிவுசெய்து ஹோட்டல் அறைகள், பார்க்க வேண்டிய இடங்களில் நுழைவுச்சீட்டு போன்ற முன்பதிவுகளை ஒரு மாதத்திற்கு முன்பே செய்து விட்டனர். 

21ம் தேதி சனிக்கிழமை காலை கிளம்ப வேண்டும். வெள்ளி மாலை முதல் என் இடது காலில் வாயு பிடிப்பு போல வலிக்க ஆரம்பித்தது. காலை நீட்டினால் சரியாகும் என்று என் மகள் சில பயிற்சிகளை கூறினாள். அவைகளை செய்ததும் வலி பொறுக்க முடியாத அளவிற்கு அதிகமாகி விட்டது. நான் பட்ட அவஸ்தையைப் பார்த்த என் மாப்பிள்ளை டூர் ப்ரோகராமை கான்சல் செய்து விடலாம் என்றார். 

வலியை குறைக்க மாத்திரை போட்டுக் கொண்டு என் மகளை விட்டு பிராணிக் ஹீலிங் செய்யச் சொன்னேன். அதன் பின்னர் வலி நன்றாக குறைந்து விட மறுநாள் கிளம்பினோம்.

இந்த வசந்த காலத்தில் ஆட்டவா வில் துலிப் ஃபெஸ்டிவல் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழா இந்த வருடம் மே 13 முதல் 23 வரை பதினோரு நாட்கள் நடந்தது. ஒரு பூங்கா முழுவதும் கலர் கலராக துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்த வருடம் (2022) எழுபதாவது வருடமாகிய பிளாட்டின விழாவாம்.

துலிப் மலர்கள் நட்பிற்கான மலர்களால் அறியப்படுகின்றன. இதற்கு காரணம் இரண்டாம் உலகப் போரின் பொழுது ஜெர்மனிய படையெடுப்பில் தப்பி கனடாவிற்கு அடைக்கலமாக வந்த டச்சு அரசு குடும்பம் இரண்டு வருடங்கள் இங்கே தங்கி யிருக்கிறார்கள். பிறகு நாடு திரும்பியதும் தங்கள் அன்பையும், நட்பையும் வெளிப்படுத்தும் விதமாக 100,000 துலிப் கன்றுகளை டச்சு அரசி கனடாவிற்கு அனுப்பி வைத்தாராம். இன்றளவும் அந்த வழக்கம் தொடர்கிறதாம். டௌஸ் ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் கமிஷனர் பார்க்கில்தான் இந்த துலிப் திருவிழா நடைபெறுகிறது. 

இதற்கு நுழைவு கட்டணம் கிடையாது. ஆனால் காரை நிறுத்த இடம் கிடைக்க வேண்டுமே என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை அதிகம் நடக்கத் தேவையில்லாமல் காரை நிறுத்த முடிந்தது. 





தோட்டத்திற்குள் பtல வண்ண மலர்கள், பல வண்ண மனிதர்கள். துலிப் மலர்களுக்கு நடுவே புகைப்படம் எடுத்துக் கொள்ள ஏதுவாக பாத்திக்கு ஊடாக வழி அமைத்து கொடுத்திருக்கின்றனர். 

ஆங்காங்கே உணவு கடைகள், புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்ள தோதாக அமைப்புகள். குழந்தைகள் ஏன் பெரியவர்களும் விளையாட பெரிய அளவில் செஸ் போர்ட், சைனீஸ் செக்கர்ஸ் போன்ற உபகரணங்கள். 


இரவில் வாண வேடிக்கைகளும் இருக்குமாம்.

பூங்காவில் நாங்கள் நடக்கும் பொழுது நல்ல வெய்யில். தண்ணீர் குடித்து மாளவில்லை. மதிய உணவை ஆர்டர் செய்து வாங்கிக் கொண்டு காரிலேயே சாப்பிட்டோம். ஆலு பராத்தாவும், வெஜிடபிள் பிரியாணியும், ராய்த்தாவும் ருசியாகவே இருந்தன. 

அதன் பிறகு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு ரைடு கால்வாயில்(Rideau canal) படகுசவாரியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொண்டு பிறகு பைவார்ட் மார்க்கெட் செல்லலாம் என்று ஏற்பாடு. ஆனால் எங்கள் திட்டத்தை தவிடு பொடியாக்கினார் வருண பகவான்.


- தொடரும்