கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, November 7, 2022

பேத்திகளின் அலப்பறைகள்

பேத்திகளின் அலப்பறைகள்:

என் பேத்தியின் தோழி ஒரு நாள் ப்ளே டேட்டிற்காக எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அதாங்க ஃபிரண்ட் வீட்ல போயி விளையாடுவதை தான் அங்கே பிளே டேட் என்கிறார்கள் இரண்டு பேரும் விளையாடிவிட்டு சாப்பிட வந்தார்கள். என் பேத்தியின் தோழி சாதத்தை மட்டும் சாப்பிட்டுவிட்டு காய்கறிகளை சாப்பிடவில்லை உடனே என் பேத்தி என்னிடம், "விச் காட் கிவ்ஸ் அஸ் ஃபுட்?" என்று கேட்டாள். நான் அன்னபூரணி என்றேன் உடனே அவள் தன் தோழியிடம்,"இப் யு டோன்ட் ஈட், அன்னபூரணி வில் கர்ஸ் யூ" என்றாள். அந்த குழந்தை உடனே "அன்னபூரணி கிவ்ஸ் அஸ் ரைஸ் ஒன்லி ஐ ஏட் ரைஸ்" என்றதும் என் பேத்தி அவளிடம், "தட் இஸ் ஹாஃப்
அன்னபூரணி ஒன்லி, யு ஹவ் டு ஈட் வெஜிடபிள்ஸ் ஆல்ஸோ" என்றாளே பார்க்கலாம் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.
*******""
எங்கள் வீட்டில் நாளைக்கு என்று சொல்ல மாட்டோம். பிச்சைக்காரனுக்கு என்றுதான் கூறுவோம். உதாரணமாக "நாளைக்கு கோவிலுக்கு போகலாம் என்பதற்கு பதிலாக "பிச்சைக்காரனுக்கு கோவிலுக்கு போகலாம்" என்போம். சமீபத்தில் என் பேத்திக்கு பிறந்த நாள் வந்தது. அதற்கு முதல் நாள் அவளோடு தொலைபேசியில் பேசிய பொழுது, "பிச்சைக்காரனுக்கு உனக்கு பர்த்டே வா?" என்று கேட்டேன் அவள், "நோ பாட்டி நாளைக்கு எனக்கு தான் பர்த்டே பிச்சைக்காரனுக்கு இல்லை" என்றாள். பிச்சைக்காரனுக்கு என்று ஏன் சொல்கிறோம் என்று சில வருடங்கள் கழித்து அவளுக்கு விளக்க வேண்டும். 
*****
இரண்டு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் என் இன்னொரு பேத்திக்கு சில சமயங்களில் வாயில் விரல் போட்டுக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்று நினைத்த என் மகனும் மருமகளும் ஒருநாள் அவள் கட்டை விரலில் காபி பவுடரை தடவி விட்டார்கள் அது காபி பவுடரை ருசித்து விழுங்கிவிட்டு, மீண்டும் தடவுவதற்காக  விரலை நீட்டியதும்  இவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. 

இன்னொரு முறை என் மகன் மருமகளிடம், "நான் வாயில் விரல் போட்டுக் கொள்கிறேன் நீ என் விரலை எடுத்து விட்டு அவளிடம், "பாரு அப்பா வாயிலிருந்து விரலை எடுத்து விட்டார் நீயும் வாயில் விரல் போட்டுக் கொள்ளக் கூடாது" என்று சொல்லு என்று கூறிவிட்டு அவன் வாயில் விரலை போட்டுக் கொண்டான் என் மருமகள் என் மகனின் விரலை எடுத்து விட்டு பேத்தியிடம், பார் அப்பா "வாயிலிருந்து விரலை எடுத்து விட்டார்" என்று கூறியதும், என் பேத்தி என் மருமகளின் கையை சட்டென்று இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் இவர்கள் இரண்டு பேருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
******