பார்ப்பது, கேட்பது, படிப்பது
இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளைக்கு ஒன்று என்ற ரேஞ்சில் நிறைய சினிமாக்கள் பார்க்கிறேன். தமிழ்தான் என்றில்லை, ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் எல்லாம்தான். அண்ணாத்த, அரன்மனை3 போன்ற படங்களை இதய நோயாளிகள் தவிர்ப்பது நலம். அந்த இரைச்சல் அவர்கள் உடம்பிற்கு ஆகாது. ரஜினிகாந்த் இனியும் தொடர்ந்து நடிக்கத்தான் வேண்டுமா?
இந்த படங்களை பார்த்த பொழுது இது தமிழ் சினிமாவின் இருண்ட காலமோ என்று தோன்றியது. நம்பிக்கையளிக்கும் விதம் வேறு சில படங்களும் வந்திருக்கின்றன.
ஜெய் பீம் நன்றாகத்தான் இருந்தது. அந்தப் படத்தின் கான்ட்ரவர்சிகளை பலரும் எழுதி விட்டார்கள். ஜெய் பீமிற்கு ஒரு மாற்று போன்ற படம் 'ருத்ர தாண்டவம்'. நல்ல போலீஸ், வக்கீலாக வரும் ராதா ரவி,"இந்த நாட்டு மக்கள் அத்தனை பேருக்குமான அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதியவர் அம்பேத்கர். அவரை ஒரு குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் சொந்தக்காரர் என்பது போல சொல்கிறார்கள்" என்கிறார். ஒரு வேளை இதற்கு தியேட்டரில் கைதட்டல் கிடைத்திருக்கலாம்.
வெங்கட் பிரபுவின் மாநாடு ஒரு வித்தியாசமான முயற்சி. டைம் லூப் என்னும் கான்செப்ட் தமிழுக்கு புதுசு. இன்று,நேற்று,நாளை என்னும் படத்தில் டைம் மிஷின் கான்செப்ட்டிலும் இறந்தவர் மீண்டும் பிழைப்பது போல் வரும். இதில் மீண்டும் மீண்டும் வருவது, எஸ்.ஜெ. சூர்யா வார்த்தைகளில் "வந்தான், சுட்டான், செத்தான், ரிபீட்.." . இந்த கான்செப்ட் எத்தனை பேருக்கு புரியும் என்று தோன்றியது. ஒரு இடத்தில் கூட தேங்காத விறுவிறுப்பு படத்தின் பிளஸ் குறிப்பாக படத்தின் முதல் பாதி விறுவிறுவிறு....
ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒரு மாநாட்டில் வைத்து கொலை செய்து அதை மதக் கலவரமாக மாற்ற நடக்கும் முயற்சி எப்படி முறியடிக்கப்படுகிறது என்பதுதான் கதை. இந்த சாதாரண கதையை டைம் லூப் என்னும் கான்செப்டை பயன்படுத்தி ஸ்வாரஸ்யமாக்கியிருப்பது இயக்குனரின் திறமை.
இந்த படத்தின் கதாநாயகன் சிம்புவாக இருந்தாலும், எஸ்.ஜே.சூர்யா ஸ்டீல்ஸ் தி ஷோ. கொஞ்சம் ஓவர் ஆக்டிங் என்று தோன்றலாம், ஆனால் அப்படி நடித்தால்தான் அந்த காரெக்டர் நிற்கும். வில்லனாக ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பாக செய்திருக்கிறார். சினிமா ஒரு கூட்டு முயற்சி என்பது இந்த படத்தில் நன்கு விளங்குகிறது. எடிட்டர், இசையமைப்பாளர், திரைக்கதாசிரியர் என்று அத்தனை பேரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தவற விடக்கூடாத படம்.
இந்தப் படத்தின் கதாநாயகி கல்யாணி ப்ரியதர்ஷன். "இவள் 'வரனே அவஸ்யமுண்டு' என்னும் மலையாள படத்தின் கதாநாயகியாச்சே? அதில்
ஷோபனாவின் மகளாக நடித்திருக்கிறாள்" என்று என் மகள் கூறியதும் ஷோபனா நடிப்பதை நிறுத்தி விட்டார் என்றல்லவா நினைத்தேன், பார்த்து விட வேண்டியதுதான் என்று அந்த மலையாள படத்தை பார்த்தேன். திருமண வயதில் பெண் இருக்கும் சிங்கிள் பேரண்டான ஷோபனாவுக்கும், கட்டுப்படுத்த முடியாத தன் கோபத்திற்கு மனோதத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளும் எக்ஸ் சர்வீஸ் மேனான சுரேஷ் கோபிக்கும் இடையே மலரும் நட்பை அழகாக சொல்லியிருந்த படம். இப்படியெல்லாம் ஏன் தமிழில் படங்கள் எடுப்பதில்லை என்னும் தாபம் வருகிறது. ஆனால் மலையாள இளம் கதா நாயகர்களுக்கும் ஹீரோயிசம் காட்ட வேண்டும் என்ற ஆசை வந்து விட்டதோ என்று தோன்றுகிறது.
நிவின் பாலி நடித்திருந்த ஒரு படம் சரியாக சென்றுகொண்டே இருந்தது, தீடீரென்று தமிழ்.தெலுங்கு படங்களைப் போல மாறி விட்டது. துல்கர் சல்மான் படத்தில்கூட அவர் ஒரே ஒரு குத்து விடுகிறார், பேருந்தின் கண்டக்டர் பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுகிறார். ஹூம்ம்! காதை செவிடாக்கும் ஜாரிங் இசை இல்லை என்பது மலையாளப் படங்களின் சிறப்பு.
படித்த புத்தகங்களை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.