கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 17, 2020

அம்மன் அருள்

அம்மன் அருள் 



எனக்கு திருமணம் நிச்சயமான பொழுது, வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்த என் கணவர் என்னிடம்,"அங்கு ஃபாமிலி விசா கிடைப்பது கொஞ்சம் கடினம். நான் உன்னை அங்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறேன், உன்னை அழைத்துச் செல்ல முடியாவிட்டால் நான் இங்கு வந்து விடுவேன்" என்றார். நான் அதற்கு ஒப்புக் கொண்டதால்  திருமணம் நடந்தது. திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் எனக்கு விசா கிடைக்காததால்  நான் பிறந்த வீட்டில்தான் இருந்தேன். 
அதற்குள் இங்கு இருப்பவர்கள்,"உனக்கு இன்னும் விசா கிடைக்கவில்லையா? நீ இன்னும் இங்குதான் இருக்கிறாயா?" என்றெல்லாம் கேட்டு நோகடித்தார்கள். 

என் இரண்டாவது அக்கா, "சமயபுரத்திக்கு ஐந்து சனிக்கிழமைகள் சென்றால், நவகிரக தோஷங்கள் நீங்கும் என்கிறார்களே, நாமும் செல்லலாம்" என்றாள். நானும் அவளும் ஒரு சனிக்கிழமை சமயபுரம் சென்றோம். சனிக்கிழமை என்பதாலும், நாங்கள் சென்றது மதிய நேரமாக இருந்ததாலும் கூட்டம் அதிகம் இருக்காது என்று நினைத்ததற்கு மாறாக, கோவிலில் கும்பல் நிரம்பி வழிந்தது. காரணம், கார்த்திகை மாதமாக இருந்ததால் சபரிமலை சீசன் தொடங்கி விட்டதுதான். இலவச தரிசன கியூ எங்கேயோ இருந்தது. சிறப்பு கட்டண வழியில் செல்ல லாம் என்றால் கையில் போதுமான அளவு பணம் இல்லை. 
வெளியே செல்லும் பொழுது கணக்காக பணம் எடுத்துச் செல்லும் என் கெட்ட பழக்கத்தை நொந்து கொண்டு, வெளியே இருந்தபடியே அம்மனை தரிசித்து விட்டு கிளம்பலாம் என்று முடிவு செய்தோம். 

துவஜஸ்தம்பத்திற்கு அருகில் நின்ற வண்ணம் அம்மனை தரிசித்து விட்டு, நமஸ்கரித்து எழுந்த பொழுது வி.ஐ.பி. தரிசன வழியே ஒரு அரசியல் பிரமுகர் அம்மனை தரிசித்து விட்டு கழுத்தில் மாலையோடு ஆரவாரமாக வெளியே வந்து கொண்டிருந்தார். நாங்கள் அவருக்கு வழி விட்டு ஓரமாக ஒதுங்கி நின்றோம். அப்போது எங்களை பார்த்த அர்ச்சகர் ஒருவர், "நீங்கள் அம்மனை தரிசனம் செய்து விட்டீர்களா?" என்றார். நான், "வெளியிலிருந்தபடியே தரிசித்து விட்டோம் " என்றேன். என் அக்காவோ, சாமியை தரிசனம் பண்ணக்கூட பைசா தேவையாக இருக்கிறதே" என்றாள். இதைக் கேட்ட அவருக்கு என்ன தோன்றியதோ, " நீங்கள் உள்ளே செல்லுங்கள், உள்ளே இருப்பவரிடம் நான் சொல்கிறேன்" என்றார். 

"பரவாயில்ல, நாங்கள் இங்கிருந்தபடியே பார்த்து விட்டோம்"   என்று நான் மறுத்ததை பொருட்படுத்தாமல் உள்ளே இருந்த ஒரு அர்ச்சகரை அழைத்து, " இவங்க ரெண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போய் தரிசனம் செய்து வையுங்கள்" என்றார். உடனே அவர் எங்களை வி.ஐ.பி. வரிசையில் அழைத்துச் சென்று, அம்மனுக்கு வெகு அருகில் தரிசனம் செய்வித்து, பிரசாதமாக என் கையில் ஒரு ஜவந்தி பூ மாலை, என் சகோதரிக்கு ஒரு அரளிப்பூ மாலை, குங்குமம் இவைகளைத் தந்தனர். நாங்கள் சிலிர்ப்போடும்,சந்தோஷத்தோடும், மன நிறைவோடும் வீடு திரும்பினோம்.  அடுத்த சனிக்கிழமைக்குள் எனக்கு விசா கிடைத்தது, அடுத்த மாதமே வெளிநாடு சென்று விட்டேன்.   
சமயமறிந்துதவும் சமயபுரத்தம்மன் என் வாழ்வில் நடத்திய அற்புதம் இது.