ஈசாவாஸ்ய உபநிஷத் - பாபா காட்டிய விளக்கம்
சென்ற வாரம் நான் விளையாட்டாய் 'ஈசாவாஸ்ய உபநிஷத்' பற்றி எ.பி.யில் கேட்க முடியுமா? என்று கேட்க, அவர்கள் ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றி ஜடாயு அவர்களின் விளக்கத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள். நன்றாக இருந்தது.
நேற்று சாய் சத் சரிதம் படித்த பொழுது ஷீர்டி சாய்பாபா அவருடைய சீடரான தாஸ்கணு என்பவருக்கு ஈசாவாஸ்ய உபநிஷதத்தின் பொருளை எங்கனம் உணர்த்தினார் என்னும் சம்பவத்தை படிக்க நேர்ந்தது.
தாஸ்கணு என்பவர் ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராட்டிய மொழியில் மொழி பெயர்த்தார். ஆனால் அந்த உபநிஷத்தின் உட்பொருளை அவர் உணராததால் அவருடைய மொழிபெயர்ப்பு அவருக்கே திருப்தி அளிக்கவில்லை. அதை குறித்து பல அறிஞர்களோடு விவாதித்தும் அவருக்கு முழு திருப்தியளிக்கும் விளக்கம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆத்மானுபூதி அடைந்த ஒருவரே இதற்கு சரியான விளக்கம் அளிக்க முடியும் என்று கருதிய அவர் ஷீர்டி சாய் பாபாவை தேடி வருகிறார். பாபாவிடம் தனது வேண்டுகோளை வைக்க, அவர்,"இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. நீ வீட்டிற்கு திரும்பி போகும் வழியில் வில்லபார்லாவில் காகா சாஹேப் தீக்ஷித் வீட்டு வேலைக்காரி உன்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைப்பாள்" என்று கூறினார். இதைக் கேட்டு சிலர், படித்த ஒரு அறிஞரின் சந்தேகத்தை படிப்பறிவில்லாத ஒரு வேலைக்காரி எப்படி தீர்க்க முடியும்? என்று நினைத்துக் கொண்டார்களாம், ஆனால் தாஸ்கணுவோ பாபாவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து பம்பாயின் புறநகரான வில்லபார்லாவில் இருந்த காக்கா சாஹேப் தீக்ஷித்தின் வீட்டில் தங்குகிறார்.
அங்கு சிறுதுயில் கொண்டிருந்த அவரை தீட்சித் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்த பெண் பாடிய பாடல் எழுப்பி விடுகிறது. கிழிந்த உடையை அணிந்து கொண்டிருந்த அச்சிறு பெண், 'கருஞ்சிவப்பு நிற உடை, அது எவ்வளவு நன்றாக இருக்கிறது! அதன் எம்ப்ராய்டரி எவ்வளவு நேர்த்தியாய் இருக்கிறது! அதன் முந்தானையும், கரையும் எவ்வளவு அழகாய் இருக்கிறது!.." என்னும் பொருள்படும் பாடலை மிகவும் சந்தோஷமாக பாடுவதைப் பார்த்த அவர் அந்தப் பெண்ணிற்கு ஒரு பாவாடை, தாவணி வாகித் தர செய்கிறார்.
புது ஆடையை அணிந்து கொண்டு வந்த அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியோடு தன் தோழிகளோடு விளையாடுகிறாள், கோலாட்டம் ஆடுகிறாள். ஆனால் மறுநாள் அந்த புது ஆடையை வீட்டில் பெட்டியில் வைத்து விட்டு, தன்னுடைய பழைய கந்தல் ஆடையையே அணிந்து கொண்டு வந்தாள். ஆனால் அப்போதும் அவள் மகிழ்ச்சி சிறிதும் குறையவில்லை. பழைய கந்தலை உடுத்தியும் எள்ளளவும் துன்பமோ,மனச்சோர்வோ இல்லாதபடி அவற்றை அவள் தாங்கிக் கொண்டாள். இதிலிருந்து நமது இன்ப,துன்ப உணர்ச்சிகள் எல்லாம் நமது மனத்தின் பாங்கைப் பொறுத்தே இருக்கின்றன என்பதை அவர் உணர்ந்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியைப் பற்றி தீவிரமாக யோசித்து இச்சந்தர்ப்பத்தில் ஏழைச்சிறுமியின் வறுமை நிலை, அவளது கந்தல் உடை, புது ஆடை, அதை அன்பளிப்பாக கொடுத்தவர், அதை பெற்றுக் கொண்டவள், அதனை ஏற்றுக் கொள்ளுதல் எல்லாம் கடவுளின் கூறுகளே, அவரே எல்லாவற்றிலும் ஊடுருவி பரந்து இருக்கிறார், எது நேரினும் அது கடவுளின் ஆணையே என்றும், இறுதியில் அது நமக்கு நன்மை அளிக்கும் என்று தமக்குரியவைகளிடம் திருப்தி கொள்ளுதல் நலம் என்னும் உபநிஷத பாடத்தின் நடைமுறைச் சான்று விளக்கத்தினை தாஸ்கணு பெற்றார்.
அன்று ஈசாவாஸ்ய உபநிஷத் பற்றிய கேள்வி, அதற்கு சாய் சத் சரிதாவில் பதில் என்று நடந்ததால் இதை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன். மற்றபடி தாஸ்கணு அவர்கள் உணர்ந்ததை நம்மால் உணர முடியுமா? என்று தெரியவில்லை. ஆகவே இது குறித்து உங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் அதை பகவான் பாபா தீர்த்து வைப்பார். ஓம் சாய்ராம்!