கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, December 10, 2018

மசாலா சாட்- 2

 மசாலா சாட்- 2

எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் கூறிய விஷயம், அவன் பணிபுரியும் நிறுவனத்தில் ஆண்கள் தாடி வளர்க்கக்கூடாது என்பது நிறுவனத்தின் விதிகளில் ஒன்று. ஆனால் இப்போதைய இளைஞர்கள் தாடி வைக்காமல் இருப்பார்களா? பொறுத்துப் பார்த்த நிறுவனம் வேறு வழியில்லாமல்,"தாடி வைத்துக் கொள்ளுங்கள், வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அதை சரியாக திருத்தி, ஒழுங்காக பராமரியுங்கள் என்று மொட்டைத் தலை,தாடியோடு கூடிய ஒரு மாடல் இளைஞனின் புகைப்படத்தோடு சர்குலர் ஒன்றை அனுப்பிவிட்டதாம். இது எப்படி இருக்கு?



எகனாமிஸ்ட் என்னும் பத்திரிகை எடுத்திருக்கும் ஒரு கணக்கெடுப்பில் வந்த விவரம்: இந்தியாவில் படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 22% குறைந்திருக்கிறதாம். பெண்களை படிக்க வைக்கும் பெற்றோர் அவர்களை வேலைக்கு அனுப்பாமல் இருப்பதற்கு முக்கியமான காரணம் வேலைக்குச் சென்று விட்டால் தாங்கள் பார்க்கும் மணமகனை திருமணம் செய்து கொள்ள பெண்கள் ஒப்புக்கொள்வார்களோ மாட்டார்களோ என்னும் பயமாம்.  இதை கல்யாண மாலை நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கர் கூறினார். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் முதன்மையாக விளங்கிய சைனாவின் பீஜிங் நகரில் மக்கள் தொகை குறைந்துள்ளதாம். இருபது வருட கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சாதிக்கப்பட்ட விஷயம் இது சீன அரசாங்கம் மகிழிச்சியோடு சொல்கிறது. வாழ்க வளமுடன்.

ஒரு குட்டி ரெசிபி

மாங்கா(ய்)இஞ்சி பிசிறல்

மாங்கா இஞ்சி என்பது பார்ப்பதற்கு கஸ்தூரி மஞ்சள் போல் இருக்கும். முகர்ந்து பார்த்தால், மாங்காய் வாசனையும், இஞ்சி வாசனையும் அடிக்கும். சுவையும் இரண்டும் கலந்த சுவைதான்.




மாங்கா இஞ்சி   -  50கிராம் 
பச்சை மிளகாய் - 3
எலுமிச்சம் பழம் - ஒரு மூடி 
உப்பு                       - தேவையான அளவு 
தாளிக்க எண்ணெய் - 1 டீ  ஸ்பூன் 
கடுகு                            -  1/4 டீ ஸ்பூன் 

மாங்கா இஞ்சியை தோல் சீவி கழுவி விட்டு, பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்டு கலந்து விட்டு, கடுகு தாளிக்கவும். மோர் சாதத்திற்கு ஏற்ற சுவையான இன்ஸ்டன்ட் ஊறுகாய். பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம். 

இப்போது ஒரு குட்டி கதை.

சமீபத்தில் திரு.ஜி.எம்.பி. ஐயா அவர்கள், "யாரடி அவன்"? என்று துவங்கி ஒரு கதை எழுதிவிட்டு, வாசகர்களும் தொடரலாம் என்று கூறியிருந்தார். ஸ்ரீராம் அடுத்தடுத்து மூன்று கதைகள் எழுதி விட்டார். நெல்லை தமிழனும் ஒரு கதை எழுதியிருந்தார். இதோ என் பங்கிற்கு ஒரு கதை.

காதல் பிறந்த கதை

"யாருடி அவன்?" என்று எரிச்சலுடன் கேட்டாள் ராதா தன்  மகளிடம்.
யாருமா?
"அதோ அங்க பாரு, பஸ் ஸ்டாண்டில், செல் போன் பார்ப்பது போல் பாவனை செய்து கொண்டு உன்னையே பார்க்கிறான்" 
தன்னுடைய செல் போனில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த பாவனா தன் அம்மா சுட்டிக் காட்டிய அந்த பையனை முதல் முறையாக பார்த்தாள். 
"ஹூ நோஸ்? யாராவது ரோடு ரோமியோவாக இருக்கும்.. நீ ஏன் அவனைப் பார்க்கிறாய்?" 
"வயசுப்பொண்ணை வைத்துக் கொண்டிருக்கும் அம்மாவின் கவலை உனக்கு என்ன தெரியும்? துப்பட்டா போடுன்னா கேக்கறயா? எப்போ பார்த்தாலும் ஜீன்ஸ், குர்தா.."
அம்மா ப்ளீஸ் ஆரம்பிச்சுடாத.."
அதற்குள் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி, பெண்ணை உள்ளே தள்ளி, தானும் அமர்ந்தாள் ராதா.
மறு நாள் கல்லூரியிலிருந்து வந்த மகளிடம், "இன்னிக்கு அந்த கடன்காரன் நின்று கொண்டிருந்தானா?" என்றாள்.
யாரை கேட்கிறாய்?
அதாண்டி, நேத்து உன்னையே பார்த்துக் கொண்டிருந்தானே, அவன்தான்."
"நான் அதையெல்லாம் பார்க்கவில்லை" இரண்டு மூன்று நாட்கள் அவனை கவனித்தாள் பாவனா. பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்த  அம்மா சொல்வது உண்மைதான் போலிருக்கிறது. அவன் செல் போனில் எதையோ பார்ப்பது போல் என்னைத்தான் பார்க்கிறான். இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டி விடலாம் என்று நினைத்த அவள், அந்த இளைஞன் அருகில்  சென்று, "ஹலோ, வொய் ஆர் யூ ஸ்டேரிங் அட் மீ? என்றதும், திடுக்கிட்ட அந்த பையன், "வாட்?" என்றான்.
"நானும் ஒரு வாரமா பார்க்கறேன், செல் போனில் எதையோ பார்ப்பது போல் நீங்கள் என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்."
கமான், நான் என் ஃப்ரெண்டிர்க்காக வெய்ட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஐம் நாட் ஸ்டேரிங் அட் யூ?   
அவன் சொன்னது போலவே அவன் சிநேகிதன் டூ வீலரில் வர, அந்த இளைஞன் புறப்பட்டான். 
மறு நாள், இவளைக்கண்டதும், அவன் திரும்பி நின்று கொள்ள, அவளுக்கு என்னவோ போலானது. அவனை அழைத்து, "ஐயம் சாரி" என்றதும், 
"இட்ஸ் ஓகே" என்றான். அடுத்து வந்த நாட்களில் நண்பனின் வண்டியில் ஏறிக் கொண்டதும் அவளைப்பார்த்து புன்னகையோடு கை அசைக்க, அவளும் புன்னகைத்தபடியே கை அசைத்தாள். 
"டேய் என்னடா நடக்கறது இங்க..?" என்றான் நண்பன்.
"எல்லாம் நல்லதுதான்டா, வண்டியை பார்த்து ஒட்டு" என்றான் பாவனாவின் காதலன். 
                                                                       --------