கணம்தோறும் பிறக்கிறேன் 

Sunday, January 3, 2021

மசாலா சாட் - 21

மசாலா சாட் - 21


எனக்கு என்னவோ சிறு வயதிலிருந்தே ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களில் அத்தனை ஈடுபாடு கிடையாது. எங்கள் அம்மா ஆங்கிலப் புத்தாண்டு அன்று இனிப்பு செய்வதுண்டு. ஒரு முறை நான் என் அம்மாவிடம், "நம்முடைய புது வருடம் சித்திரை மாத பிறப்புதானே?" என்று கேட்டேன். அதற்கு அம்மா," அது விசேஷங்களுக்கு, மற்ற விஷயங்களுக்கு ஆங்கில  தேதியைத்தானே ஃபாலோ பண்ணுகிறோம். ஒண்ணாம்  தேதிதான்  சம்பளம் வாங்குகிறோம். இதையும் கொண்டாடத்தான் வேண்டும்" என்றாள். என்றாலும் பெரிதாக கொண்டாடியதில்லை. புத்தாண்டு தினத்தன்று அதிக கும்பலாக இருக்கும் என்பதால் அன்று கோவிலுக்குச் செல்வதையும்  தவிர்ப்பேன்.  பள்ளி, கல்லூரி நாட்களில் நேரில் பார்க்கும் பொழுது வாழ்த்து சொல்வதோடு சரி. மஸ்கட்டில் இருந்த பொழுது புத்தாண்டு பார்டிகளில் கலந்து கொண்டதுண்டு. அந்த பார்ட்டிகளில் உற்சாக பானம் கட்டாயம் இருக்கும். விளையாட்டுகள், தம்போலா, பின்னர் சாப்பாடு என்று செல்லும். ஒரு முறை நண்பர் ஒருவர் வீட்டில் நடந்த புது வருட பார்ட்டியில் ஒருவருக்கு உற்சாகம் பீறிட்டு, அவர்கள் வீட்டு டீபாயில் ஏறி நடனமாடியதில் அந்த டீபாயின்  கண்ணாடி  உடைந்து  விட்டது. வீட்டம்மா ," புது வருடத்தில் கண்ணாடி உடைவது நல்ல சகுனம்" என்றாள். வேறு என்ன சொல்ல முடியும்?  

ஓமானில் ஆங்கில புத்தாண்டிற்கு விடுமுறை கிடையாது. அவர்கள் கொண்டாடவும் மாட்டர்கள். நாம் வாழ்த்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். "திஸ் இஸ் நாட் அவர் நியூ இயர்" என்று கூறி விடுவார்கள். எனக்கும் கூட இதைப்புது வருடம் என்கிறார்களே, இதில் என்ன புதிது? நம்முடைய புது வருடம் என்றால் அன்று சூரியன் ரசிக்கட்டத்தில் முதலாவதான மேஷத்தில்  நுழைகிறார், ஜனவரி ஒன்று இன்னொரு நாள்தானே என்றுதான் தோன்றும். இருந்தாலும், எல்லோரும் வாழ்த்து சொல்வதால் நானும் பதிலுக்கு  வாழ்த்துவேன். காசா? பணமா? வாழ்த்திவிட்டு போகலாமே? இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

 *************** 

நேற்று பொன்னியின் செல்வன் ஆடியோ புக் கேட்டேன். இதற்கு முன் பவா செல்லத்துரை அவர்கள் சொல்லிய சில கதைகளையும், பாரதி பாஸ்கர் படித்த சில கதைகளையும் கேட்டிருக்கிறேன். அவை வேறு விதம். ஆடியோ புக் என்றால் ஒலிச்சித்திரம் போல இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் பொன்னியின் செல்வனை படித்த ஒருவர் அதை இன்னொருவருக்கு சொல்வது போல் குரலில் எந்தவித ஏற்ற இரக்கமும் இல்லாமல் சொல்லிக் கொண்டே போகிறார். கல்கியின் வர்ணனை அழகுகளையோ, பாத்திர படைப்புகளின் சிறப்பையோ உணர முடியவில்லை. குந்தவையின் கம்பீரம், நந்தினியின் தந்திரம், பெரிய பழுவேட்டரையரின் சபலம், வந்தியத்தேவனின் சாதுர்யம், ஆழ்வார்கடியானின் நகைச்சுவை,  அநிருத்த  பிரம்மராயரின் அறிவு தவறு, அநிருத்த பிரம்மராயரே காணோம். பொன்னியின் செல்வன் படித்து கொஞ்சம் குழப்பம் இருப்பவர்கள் இதைக் கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளலாம். மற்றபடி கேட்டலில் படிப்பதே நலம். 

*************

ஒரு மைக்ரோ கதை!

திருமணம் முடிந்து எல்லோரும் விடைபெற்றுச் சென்றனர். தன் அறையில் துணிகளை மடித்து பெட்டியில் வைத்துக் கொண்டிருந்த மகளை நெருங்கி அவள் தோளை தட்டினார் சந்திரசேகர்  "எல்லா ப்ராப்லங்களையும் தாண்டி நீ ஆசைப்பட்டபடியே கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுடுத்து" என்று அவள் கையை குலுக்கியதும் அவளுக்கு கண்கள் லேசாக கலங்கின. துணி மடிப்பதை நிறுத்தி விட்டு படுக்கையில் உட்கார்ந்தாள். அவளுடைய அம்மாவும் அவள் அருகில் அமர்ந்து பெண்ணை மெல் அணைத்துக் கொண்டு பேசத்  தொடங்கினாள், "உனக்கு நாங்க சொல்லிக் கொடுக்க வேண்டாம். உனக்கே  எல்லாம் தெரியும், நீ கெட்டிக்காரி. இத்தனை நாட்கள் இருந்ததும், நல்ல பெயர் வாங்கியதும் பெரிசு கிடையாது. இனிமேல்தான்  கஷ்டம். நீ சாதாரணமா பேசுவது கூட தவறாக புரிந்து கொள்ளப் படலாம். நல்ல மாட்டுப்பொண்ணுனு பெயர் வாங்கி விடலாம், நல்ல மாமியார்னு பெயர் வாங்குவதுதான் கஷ்டம். ஜாக்கிரதை!" என்றாள் மகனுக்கு திருமணம் முடித்து மாமியாராகியிருக்கும் மகளிடம். 

************

சென்ற வாரம் ஊரிலிருந்து வந்திருந்த அக்கா பெண், மாப்பிளை, குழந்தைகளோடு பன்னர்கட்டாவில் இருக்கும் உயிரியல் பூங்காவிற்கு சென்றிருந்தோம். நல்ல கும்பல் இருந்தது.  பெரும்பான்மையோர்  மாஸ்க் அணிந்திருந்தார்கள்.  அங்கே சஃபாரிக்காக செல்லும் பொழுது நான் கால் இடறி கீழே விழுந்தேன் . நல்ல வேளை பெரிதாக அடி படவில்லை.  
"கையில் செல்ஃபோன்" (அதனால் இல்லை)
"புடவை தடுக்கி விட்டதா?" (இல்லை)
"கீழே கவனிக்கவில்லையா?" (ஆமாம்)
விழும் பொழுது கையை ஊன்றிக் கொண்டு விட்டீர்கள், அப்படி செய்யக் கூடாது (அது அனிச்சை செயல் அல்லவா?)
மாரல் ஆஃப் தி ஸ்டோரி: நாம் தவறு செய்யும் பொழுது நிறைய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.


அபூர்வமான வெள்ளைப் புலி 



 
சிற்றுண்டி மற்றும் சிறுகடைகள் 


சில வருடங்களுக்கு முன்னர் இங்கு சஃபாரி ரைட் சென்ற பெண் குழந்தையை ஒரு புலி கவ்விச் சென்ற செய்தி நினைவுக்கு வந்து கொண்டே இருந்தது. இப்போது பாதுகாப்பாக வேலி  அமைத்து விட்டார்கள்.  அதிலும் மிகவும் நெருங்கிச் சென்று பார்க்க வேண்டாம் என்ற அறிவிப்பும் இருக்கிறது.  சஃபாரி சவாரிக்கு அழைத்துச் செல்லும் வண்டிகளும் கம்பிகள் அமைக்கப் பட்டு, புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சிறிய திறப்பு மட்டும் வைக்கப்பட்டிருக்கிறது.   

***********



பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பஸ்சிலிருந்த கண்டக்டர்,:"சிதம்பரம் எல்லாம் ஏறுங்க" 
பயணி ஒருவர்: "சார், நான் ராமசாமி, ஏறலாமா?"