கணம்தோறும் பிறக்கிறேன் 

Monday, June 2, 2025

ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு

ஸ்ரீராம் பதிவுக்கு எசப்பதிவு 

இரண்டு வாரங்களாக ஸ்ரீராம் வியாழனன்று சாப்பாட்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவர் பதிவுகளை படித்ததும் நான் சாப்பிட்ட சில உணவுகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள தோன்றுகிறது. 


சென்ற வாரம் சனியன்று என் மகள் அவர்களின் நண்பர் மகளுக்கு வளைகாப்பு என்று அழைத்துச் சென்றாள். வளைகாப்பு பதினோரு மணிக்கு  என்றிருந்தது. நாங்கள் வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது பத்தரை ஆகி விட்டது. ப்ரேக்ஃபாஸ்ட் முடிந்திருக்கும் என்று நினைத்தோம். முடியவில்லை. 

ப்ரேக்ஃபாஸ்ட் ஐட்டம்கள்: கருப்பட்டி ஹல்வா, சத்துரண்டை, வெஜிடபில் ரோல், முறுக்கு, நாடா தேன்குழல், மஃப்பின்ஸ், காபி, டீ, மற்றும் மேங்கோ ஜூஸ். இவ்வளவு பண்டங்கள் இருக்கும் என்பது தெரியாமல் வீட்டில் பேகல் சாப்பிட்டு விட்டதால் ஒரு வெஜ் ரோலும், அரை கப் காபியும் மட்டும் எடுத்துக் கொண்டேன். 

வளைகாப்பு முடிந்ததும் ஒரு மணிக்கு சாப்பாடு தயார். வெள்ளை அரிசி சாதம், சிவப்பு அரிசி சாதம் இரண்டுமே இருந்தன. தால், புளிக்குழம்பு போல ஒன்று, கத்தரிக்காய் வதக்கல், ரசம், மாங்காய் சாதம், பருப்பு வடை, உளுந்து வடை, இளநீர் பாயசம்(ஒரு காலத்தில் நம்மூரில் முழங்கிய இளநீர் பாயசத்தை இப்போது காண முடிவதில்லை) உருளை சிப்ஸ், அப்பளம்(இங்கு அப்பளத்தை முழுசாக பொரித்து வைக்காமல் உடைத்து விடுகிறார்கள்). மொத்தத்தில் சுவையான விருந்து. பஃபே முறை, உணவு வைத்திருந்த டேபிளுக்கருகில் ஏகப்பட்ட கும்பல், அதனால் புகைப்படமெடுக்க முடியவில்லை.

அங்கிருந்து நேராக மிஸிஸாகா சென்று விட்டோம். அங்கு அடுத்த நாள் ராதா கல்யாணம். முதல் நாளே தீப பிரதிஷ்டை செய்து, சில அஷ்டபதிகளை பாடி விடுவார்கள். நாங்கள் சென்ற போது பஜனை துவங்கவில்லை. வந்தவர்களுக்கு இரண்டு சமோஸா, டீ வழங்கிக் கொண்டிருந்தார்கள். நான் டீ மட்டும் எடுத்துக் கொண்டேன். பஜனை முடிந்ததும் ரெண்டு சப்பாத்தி, சப்ஜி, சாம்பார் சாதம், தயிர் சாதம், ஊறுகாய் வழங்கப்பட்டது. 

கனடாவில்தான் இருக்கிறோமா? மேற்கு மாம்பலம் வந்து விட்டோமா? என்று சந்தேகமாக இருந்தது. அவ்வளவு மாமாக்கள், மாமிகள். பட்டுப்பாவாடை சட்டையில் பெண் குழந்தைகள், ஒட்டிக்கோ,கட்டிக்கோ வேஷ்டியில் ஆண் குழந்தைகள். தமிழ் பேச்சு. மறுநாள் பெரும்பாலான பெண்மணிகள் மடிசாரில் வந்திருந்தார்கள்.


ராதா கல்யாணத்திற்காக பருப்புத் தேங்காய், முறுக்கு, அதிரசம், மைசூர்பாக், திரட்டுப்பால் என்று பட்சணங்கள், மாப்பிள்ளை கிருஷ்ணனுக்கும், மணமகள் ராதைக்கும் வேஷ்டி,புடவைகள் வந்து குவிந்திருந்தன. அந்த சீர் சகையறாக்களை பெண்கள் processions போலகொண்டு சென்றது பார்க்க நன்றாக இருந்தது.

நான் சிறு வயதில் பார்த்த ராதா, சீதா கல்யாண உற்சவங்களில் முழுக்க முழுக்க ஆண்கள்தான் பங்கேற்பார்கள். இங்கு பெண்களும் பங்கேற்றார்கள். முத்து குத்துவது கூட பெண்களும் செய்தார்கள்.

காலையில் இரண்டு இட்லி, சாம்பார், சட்னி, காபி, டீ இருந்தது. இட்லி தீர்ந்ததும் குக்கீஸ், 1/2 வாழைப்பழம், காபி, டீ என்று வைத்து விட்டார்கள். காபி கடையில் சத்தம் அதிகம் இருந்ததால் அது பஜனை பாடுபவர்களுக்கு தொந்தரவாக இருந்ததால் காபி ஜக்கை ஹாலுக்கு வெளியே வைத்து விட்டார்கள். லன்ச் - சாம்பார் சாதம், உருளைக் கிழங்கு கறி, சிப்ஸ், தயிர் சாதம் ஊறுகாய் என்று சிம்பிள் மெனு. கும்பல் அதிகம் என்று நினைத்ததாலோ என்னவோ, சாம்பார் சாதத்தையும், தயிர் சாதத்தையும் அளந்து ஸ்பூன் அளவிற்கு போட்டார்கள். எனக்கிருந்த பசியில் வெட்கத்தை விட்டு இன்னும் கொஞ்சம் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிட்டேன். பட்சணங்களை கொஞ்சம் கவரில் போட்டு எல்லோருக்கும் தந்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது என் பழைய நினைவுகளை மீட்டெடுத்தது, சம்ப்ரதாய பஜனை பாடல்களில் இத்தனை பாடல்கள் எனக்கு நினைவில் இருப்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 

இரண்டு நாட்கள் முன்பு என் பேத்திகள் 'ஸ்லஷ்' குடிக்க வேண்டும் என்றார்கள். நானும் ஒன்று வாங்கிக் கொண்டேன். ஸ்லஷ் என்பது வேறு ஒன்றும் இல்லை, நம் ஊரில் ஐஸ் கோலா என்று துருவிய ஐஸில் வெவ்வேறு ஃப்ளேவர்களில் சர்பத்தை ஊற்றித் தருவார்களே அதுதான். குச்சிக்கு பதிலாக டம்ப்ளரில் வெவ்வேறு ஜுஸ்கள் கலந்த ஐஸ் துருவலை பிடித்து ஸ்டாரா போட்டு உறிஞ்ச வேண்டியதுதான். 

நேற்று அருகிலிருக்கும் புத்தர் கோவிலுக்குச் சென்றோம். அங்கிருந்த உணவகத்தில் தாமரை மொக்கு போலிருந்த பீச் மூஸ்கேக், ஸ்டாராபெர்ரி ரோல் கேக், சாக்லேட் கேக், என்று ஆர்டர் செய்து ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டோம். 


அங்கிருந்த ஒரு கடையில் விதம்விதமான தேயிலைகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெண் ஜாஸ்மின் டீ என்று ஒன்றை எங்களை முகர்ந்து பார்க்கச் சொன்னாள். பின்னர் எங்கள் எல்லோரையும் உபசரித்து உட்கார வைத்து பாலில்லா ஜாஸ்மின் டீ தயாரித்து எங்களுக்கெல்லாம் ஒரு சிறிய கப்பில் கொஞ்சமாக ஊற்றிக் கொடுத்து குடிக்கச் சொன்னாள். கொஞ்சமாக குடிக்கலாம். அவள் டீ தயாரித்த விதம் நளினமான நடன அசைவுகளைப் போல வசீகரமாக இருந்தது. சுவையான டீ தயாரிக்க வேண்டுமானால் தண்ணீரை 90°Cக்கு சூடாக்க வேண்டும். Not 100°C என்றாள். 

எங்களோடு வந்தவர் ஜாஸ்மின் டீ வாங்கிக் கொண்டார்.  அவர் காபியோ டீயோ குடிக்க மாட்டார், ஒருவேளை வீட்டிற்கு வருபவர்களுக்கு கொடுப்பாரோ என்னவோ.