கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, April 12, 2019

மசாலா சாட் - 7

மசாலா சாட் - 7

இந்த முறை சென்னை விஜயம் கொஞ்சம் சோர்வூட்டக்கூடியதாக  இருந்தது. மைசூரிலிருந்து சென்னை செல்லும் சதாப்தி பெங்களூரிலிருந்து கிளம்பும் பொழுதே பத்து நிமிடம் தாமதம் என்றாலும் காட்பாடி வரை சரியான நேரத்தை கடைபிடித்த வண்டி, அதற்குப்பிறகு அரக்கோணம் வரை நத்தை வேகம், ஆமை வேகம். இரண்டு இடங்களில் வேறு எதற்காகவோ நின்று, 23:30க்கு சென்னை சென்ட்ரலை மன்னிக்கவும், புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தை அடைத்தது. 21:30க்கு அடைந்திருக்க வேண்டும். இரண்டு மணி நேரம் தாமதம். அதன் பிறகு ஓலா கிடைப்பதில் தாமதம், மைலாப்பூரில் இருக்கும் சகோதரி வீட்டை அடையும் பொழுது, 0:30 மணி.

மறுநாள் காலை 4:30க்கு(டெக்நிக்கலாக அன்றே) ஒரு பூஜைக்கு கிளம்ப வேண்டும், அதற்கு விடியர்காலை 3:30க்கு எழுந்திருந்தால்தான் சரியாக இருக்கும். எனவே இரண்டு மணி நேரம்தான் தூக்கம்.

மறுநாள் மீண்டும் சதாப்தியில் பெங்களூர் பயணம், மீண்டும் இரண்டு மணி நேரம் தாமதமாக பெங்களூர் வந்து சேர்ந்தது. வீட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்த பொழுது மணி 1:30.  காலையில் ஏழே காலுக்கு முன்னால் கண் விழிக்க முடியவில்லை. சென்னையில் கற்பகாம்பாள் தரிசனமும், நீண்ட நாள் நண்பரை சந்தித்ததும் மகிழ்ச்சி.

கற்பகாம்பாள் கோவிலும், கொடி மரமும் 
அக்காவின் வீட்டில் என்னைக்  கவர்ந்த ஒரு விஷயம், வீட்டை அழகாக பெருக்கி, துடைத்த எலெக்ட்ரானிக் மாப். அமெரிக்காவிலிருந்து மகன் வாங்கி வந்ததாக அக்கா கூறினாள். நீங்களும் பாருங்களேன்.





இந்த மிஷினின் அடி பாகத்தில் துடைப்பதற்கான துணியை இணைக்க வேண்டும். அதன் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு துளையில், தரை துடைக்கும் திரவத்தை ஊற்றி, மூடி இயந்திரத்தை ஆன் செய்யலாம். இதனோடு இனைந்து ஒரு ஜி.பி.எஸ். உபகரணமும் இருக்கிறது. அது முதலில் வீட்டின் அமைப்பை
படித்துக் கொள்ளும். பின்னர் அதற்கேற்றபடி இந்த மாப்பிற்கு கட்டளை இடுகிறது.  அது பீரோவிற்கு அடியில் எல்லாம் சென்று துடைக்கும் அழகு..!!

இன்னுமொரு சிறப்பு, இதை அலெக்ஸ்சாவோடு  இணைத்துக் கொள்ளலாம். அலெக்ஸ்சாவை செல் போன் மூலம் இயக்கும் வசதி இருந்தால், நீங்கள் வெளியில் செல்லும் பொழுது கூட, வெளியிலிருந்தபடியே அலெக்ஸா மூலம் இயக்க முடியும் "அலெக்ஸா, ஆன் தி மாப், அலெக்ஸா ஸ்டாப் தி மாப்" என்று கட்டளையிட்டால் போதும். வேலை நடந்து விடும்.



இது சார்ஜிங் யூனிட். சார்ஜெரை ப்ளக் பாயிண்டில் இணைத்து விட்டு, இதை நிலையாக ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும். மாப் தன் வேலையை முடித்து விட்டு, அழகாக இதில் ஏறி அமர்ந்து சார்ஜ் ஆகி விடும்.

திரும்பி வரும்பொழுது சென்னை.பு.த.டா.எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையத்தில் இரண்டு மூன்று இடங்களில் மாதிரி தேர்தல் பூத்துகள் அமைத்து எப்படி எலெட்ரானிக் மிஷினில் எப்படி வாக்களிப்பது என்று ஒத்திகை அளித்துக் கொண்டிருந்தார்கள்.

பூஜைக்கு போன இடத்தில் பாட்டில்களில் வாங்கப்பட்ட குடிநீரை பானையில் கவிழ்த்து வைத்திருந்தார்கள். ஜில்லென்று டிஸ்டில்லது வாட்டர். நல்ல ஐடியா! நம் வீட்டிலும் பின்பற்றலாம்.





எல்லாவற்றையும் இழந்த பின்னாலும் 
எதிர்காலம் மிச்சமிருக்கிறது என்கிறதோ 
இலைகளை உதிர்த்த இந்த மரம் ?







Thursday, April 11, 2019

என்ன பொருத்தம்!?

என்ன பொருத்தம்!!


சுகுணாவிற்கு கொஞ்சம் படபடப்பாக இருந்தது. இன்று அவள் மகள் காவ்யாவிற்கு பிளேஸ்மென்ட் துவங்குகிறது. நல்ல கம்பெனியில் பிளேஸ் ஆக வேண்டுமே என்று நகவலைபட்டுக் கொண்டே இருந்தாள். 
மாலை வீட்டிற்கு வந்த மகள் பிளேஸ்மென்ட் லெட்டரை நீட்டியவுடன் சந்தோஷமாக இருந்தது. அப்பாடா! நிம்மதி. நல்ல கம்பெனி.  

போஸ்டிங் எங்க? 

இங்கதான்.

அப்பாடா! ரொம்ப நிம்மதி. நான் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன். எங்கேயாவது, பெங்களூர், பூனா என்று போட்டு விடக்கூடாதே? 

"அம்மா, எந்த காலத்துல இருக்க? என்று மகள் கேட்க, கணவர் நமுட்டு சிரிப்போடு ஆமோதிப்பாய் தலையசைத்தார். 

"அப்படி இல்லடி, இதே ஊர்னா கவலை இல்ல,வேற இடம்னா உன்னை தனியா எங்க, எப்படி தங்க வைக்கறதுனு யோசிக்கணும், இல்லனா நல்லதா பி.ஜி பார்க்கணும், இப்போ கவலை இல்ல, வரன் தேட ஆரம்பிச்சுடலாம்."

"அம்மா ப்ளீஸ், உடனே ஆரம்பிச்சுடாதே, என்னை கொஞ்சம் ஃப்ரியா விடு"

"அதுதானே, இப்போதான் படிச்சு முடிச்சிருக்கா, அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்? கொஞ்சம் விடேன்" அப்பாவும் துணைக்கு வந்து விட, சுகுணா வாயை மூடிக்கொண்டாள் . 

மகள் வேலையில் சேர்ந்து ஆறு மாதங்கள் ஓடியதும் மீண்டும் திருமண பேச்சை எடுத்தாள். 

"ரிஜிஸ்டர் பண்ணியவுடனே வரன் அமைந்துவிடுமா? இப்போதிலிருந்து பார்த்தால்தான் சரியாக இருக்கும்" என்று சுகுணாவின் வாதத்தை ஒப்புக்கொள்ள, மேட்ரிமோனியல் சைட் ஒன்றில் ரிஜிஸ்டர் செய்தார்கள்.

காவ்யாவின் ஃப்ரொபைல் வெளியான அடுத்த நிமிடத்திலிருந்து டெலிபோன் அழைப்புகள் வரத்தொடங்கின.  இதைத்தவிர இவர்களுக்கு பிடித்த ப்ரொபைல்கள். சுகுணா எல்லாவற்றையும்  ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொண்டாள். 

அவளுக்கும், அவள் கணவருக்கும் பிடித்த பையன்களின் ஜாதகத்தை தெரிந்த ஜோசியரிடம் காண்பித்து, தன் மகள் ஜாதகத்துடன் பொருந்தும் வரங்களை தேர்வு செய்து, மகளிடம் காண்பித்தால், ஏதோ ஒரு காரணம் சொல்லி தட்டி கழித்தாள். 
"அம்மா, வயதை பார்த்தியா? என்னைவிட ஆறு வயது பெரியவன்..."

"அதனால என்னடி?"    

"என்னடியா?, ஜெனெரேஷனே மாறி விடும். மூன்று வயதிற்கு மேல் போகக்கூடாது."

"என்னமா இவன் தலையில் முடியே இல்லை."

"என்னைவிட ஒரு இஞ்சுதான் கூட, குறைந்தது 5'11ஆவது இருக்க வேண்டும்."

"சம்பளம் போதாது", "சரியான பழமா இருக்கான்", "மாமா மாதிரி இருக்கான்" ... இப்படி என்னென்னவோ காரணங்கள் சொல்லி, தட்டி கழித்தாள். 

பொறுக்க  முடியாமல் சுகுணா மகளிடம்," நீ யாரையாவது லவ் பண்றயா? சொல்லித் தொலை" என்க, 

"என்ன சின்ன காஞ்சீபுரம், ரொம்ப முன்னேறிட்டாயா?" என்றாள் அம்மாவை சீண்ட அம்மாவின் சொந்த ஊரை சொல்லி அழைப்பது மகளின் பழக்கம். 

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடி விட்டது. மகளுக்கு திருமணம் தகையாத வருத்தத்தில் சுகுணாவிற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தது. கோவில், ஜோசியர் என்று  அலைந்தாள். 

காவ்யா மேலே படிக்க வேண்டும் என்று அமெரிக்கா சென்று விட்டாள். உடனே சுகுணா பார்க்கும் வரன்களில்  அமெரிக்காவில் இருக்கும் வரன்களுக்கு முன்னுரிமை அளித்தாள். 

அதிலும் எதற்கும் மசியாத மகள் ஒரு நாள் தான் ஒருவனை விரும்புவதாகவும், அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சொன்னாள். 

அந்த ஆதித்தியாவிற்கு தற்சமயம் வேலை இல்லை. படித்துக்கொண்டிருக்கிறான்(அதுதான் நான் சம்பாதிக்கிறேனே, படித்து முடித்ததும் அவனுக்கு நல்ல வேலை கிடைத்து விடும்.)
காவ்யாவைவிட ஏழு வயது மூத்தவன்(அதனால என்னம்மா? அவன் என்னை நன்னா புரிஞ்சுக்கறான். ரொம்ப பொறுமையா எல்லாத்தையும் புரிய வைப்பான்.). தலையில் ஒரு முடி கூட கிடையாது.(திஸ் இஸ் நாட் எ பிக் டீல். இப்போ பாதிப்பேர் பால்டுதான்).

சுகுணாவிற்கு சில கேள்விகள் மனதில் உதித்தன. ஆனால் என்ன கேட்டு என்ன? எல்லவற்றிற்கும் பதிலாக ஒரு மூன்றெழுத்து வார்த்தை இருக்கிறதே.