கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 13, 2023

மழையும் கொலுவும்:

 மழையும் நானும் கொலுவும்:

பள்ளி நாட்களில் மழை வந்தால் ஜாலியாகத்தான் இருக்கும். மழையில் நனைந்து கொண்டு வீட்டிற்கு வந்தால் அப்பா குமுட்டியில் கணகணவென்று தணலை ரேழியின் கதவிற்கு பின்னால் வைத்திருப்பார். 

தலையை துவட்டிக் கொண்டு, அந்த குமுட்டியில் காய வைத்துக் கொள்வோம். கூடத்தின் ஓட்டின் வழியாக மழை நீர் சொட்டினால், குச்சியால் ஓடுகளை தள்ளி ஒழுகலை நிறுத்துவார். பெரிதாக ஒழுகியதில்லை, ஆனால் கூடத்தின் நடுவில் இருந்த முற்றத்தின் மூலம் சாரல் அடிக்கும். அதில் சாக்கை போட்டுக் கொள்வோம். 

எங்கள் வீட்டில் எப்போதும் நவராத்திரி கொலு பெரிதாக அம்மா வைப்பாள். பதினோரு படி+ பக்கத்தில் ஒரு மேஜையில் ராதா கிருஷ்ணன் ஊஞ்சல்+பார்க்க என்று பிரும்மாண்டமாக இருக்கும்.  

ஒரு வருடம் கூடத்தில் கொலு வைத்து விட்டு, எங்கள் மாமா முற்றத்து சாக்கடையை அடைத்து ஃபவுண்டன் 

அமைத்துக் கொடுத்தார். ஃபவுண்டனுக்கு கீழே பீங்கானில் குழலூதும் கிருஷ்ணன். அதைத்தவிர இன்னும் பல பீங்கான் பொம்மைகளை வைத்திருந்தோம்.மிகவும் அழகாக இருந்த அந்த அமைப்பை பலரும் பாராட்டினார்கள். திருஷ்டி பட்டதை போல ஒரு விஷயம் நடந்தது.

அந்த வருடம் எங்கள் வீட்டிற்கு எதிரில் இருந்த பத்மாமணி தியேட்டரில் 'திருமால்பெருமை' படம் வந்திருக்கிறது. இரவு காட்சிக்கு பெரியவர்கள் சென்றிருக்கிறார்கள். அப்போது நல்ல மழை கொட்டியிருக்கிறது. முற்றத்தின் நீர் செல்லும் வழியை அடைத்து விட்டதால், தண்ணீர் வெளியேற முடியாமல் முற்றம் நிரம்பி கூடத்திற்குள் வந்த மழை நீர் கிட்டத்தட்ட மூன்று படிகள் வரை மூழ்கடித்து விட்டது. 

சினிமா முடிந்து வீடு திரும்பிய பெரியவர்கள் சாக்கடை அடைப்பை நீக்கி தண்ணீரை வெளியேற்றி விட்டார்கள். நவராத்திரி முடிந்ததும் பொம்மைகளை மச்சில் அதற்குரிய மரப்பெட்டியில் வைத்தாகி விட்டது. 

அடுத்த வருடம் நவராத்திரிக்கு பொம்மைகளை எடுக்கலாம் என்று பெட்டியைத் திறந்த நாங்கள் அதிர்ந்து போனோம். முதல் வருடம் ஈரத்தோடு பொம்மைகளை மரப்பெட்டியில் அடுக்கியதால் கரையான் நிறைய பொம்மைகளை தின்றிருந்தது. மேல் படியில் இருந்த பொம்மைகள் தப்பித்திருந்தன. ஆனால் சிலவற்றில் வர்ணம் போகியிருந்தது. எங்கள் வீட்டு பொம்மைகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்து விட்டது. கரையான் தின்ற பொம்மைகளை களைந்த பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பிறகு அப்படிப்பட்ட பிரும்மாண்ட கொலு வைக்கவே இல்லை. 😔

Monday, November 13, 2023

திருமண கலாசார மாற்றங்கள்

 திருமண கலாசார மாற்றங்கள்

சென்னைய்யிலிருந்து கும்பகோணம் செல்ல ரயிலில் ஏறி உட்கார்ந்த நாம், “கும்பகோணம் வந்து விட்டதா? கும்பகோணம் வந்து விட்டதா?” என்று அருகில் இருப்பவரை தொனப்புவோம். கும்பகோணமா வரும்? நாமல்லாவா அங்கு செல்கிறோம். அதைப் போலத்தான், “சென்ற வருடம் தீபாவளிக்கு தைத்த சட்டை டைட்டாகி விட்டது” என்போம், சட்டை தைத்த அதே அளவில்தான் இருக்கும், நாம் வெயிட் போட்டிருப்போம், ஆனால் சொல்வதென்னவோ சட்டை டைட் ஆகி விட்டது என்று.

அதே கதைதான் திருமண மாற்றங்களிலும் நடக்கிறது. சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் மாற்றுவது என்னவோ நாம்தான். ஆனால் ஏதோ ஒரு தேவதையோ, அல்லது சாத்தானோ இந்த மாற்றங்களை கொண்டு வந்தது போல காலம் மாறி விட்டது காலம் மாறி விட்டது என்று புலம்பல்.

கல்யாணங்களில் இதுவரை இல்லாத புது பழக்கங்களை மற்றவர் வீட்டு திருமணங்களில் நடத்தும் பொழுது “இது என்ன புது பழக்கம்? நம் வீட்டில் கிடையாதே?” என்போம். அதே பழக்கத்தை நம் வீட்டுத் திருமணங்களில் கொஞ்சம் பெருமையாகவே நடைமுறை படுத்துவோம். அப்படி வந்ததுதானே நம் திருமணங்களில் கலயாணத்திற்கு முதல் நாள் ரிஷப்ஷனும், மெகந்தியும், சங்கீத்தும்? யாரோ ஒருவர் செய்யப் போக, பியர் பிரஷரில் மற்றவர்களும் தொடர்கிறார்கள்.

பெரியவர்கள் இப்படி சிலவற்றிர்க்கு வளைந்து கொடுக்க, சிறியவர்களின் கேண்டிட் ஃபோட்டோகிராஃபி போன்ற சில ஆசைகளுக்கும் பிடித்திரிக்கிறதோ இல்லையோ கட்டுப்பட வேண்டியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிறிய வயதில் அதிகமாக சம்பாதிக்கும் இளைய தலைமுறைக்கும், ஒரே ஒரு பெண்ணை வைத்திருக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் பணம் ஒரு பொருட்டு அல்ல. அதனால் திருமணங்கள் மிக ஆடம்பரமாக நடத்தப் படுகின்றன.

சமீபத்தில் எனக்கு வாட்ஸாப்பில் ஒரு செய்தி வந்தது. உங்களில் பலருக்கும்கூட வந்திருக்கும். மணப்பெண்ணின் பின்னலில் வைத்துக் கட்டும் ஜடை பாதாம், முந்திரி, வால்நட், கிஸ்மிஸ் போன்ற உலர் பழங்களால் தயாரிக்கப் பட்டிருந்தது. என்னுடைய ஒரு தோழி என்னிடம் ஒரு முறை, “உங்கள் பிராமணத் திருமணங்களில் ரிசப்ஷனில் பனிக்கட்டியால் சிற்பங்களும், வெஜிடபிள் கார்விங் என்று காய்கறி அலங்காரங்களும் செய்வீர்கள், நேஷனல் வேஸ்ட்!” என்றார். இந்த உலர்பழ ஜடையை என்ன சொல்வாரோ?

திருமணங்களில் சமீபத்திய மாற்றம் ஃபியூஷன் திருமணங்கள். கலப்புத் திருமணங்கள் அதிகமாகி விட்டதால் இரண்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடக்கும் இந்த திருமணங்கள் வரவேற்கப்பட வேண்டியவைதான். காலையில் ஹிந்து முறைப்படியும், மாலையில் சர்ச்சிலும் கூட திருமணங்கள் நடக்கின்றன. ஆணவக்கொலை செய்யாமல் ஏற்றுக் கொள்கிறார்களே!

மிக சமீபத்தில் எங்கள் குடும்ப குழுவில் ஒரு திருமண அழைப்பிதழ் பகிரப் பட்டிருந்தது. ஹிந்து முறைப்படி அச்சிடப்பட்டிருந்த அந்த மஞ்சள் நிற பத்திரிகை ஒரு இரு வீட்டார் அழைப்பு. மணமகன் பெயரைக் கொண்டு அவர் ஒரு இஸ்லாமியர் என்பது தெரிந்தது. மணமகள் ஹிந்துப் பெண். யாரும் மதம் மாறாமல் அவரவர் மாதத்திலேயே இருக்க, பெரியவர்களும் அதை அங்கீகரிக்கிறது நல்ல அந்த அழைப்பு என்னைக் கவர்ந்தது.

செம்புலப் பெயனீர் போல அன்புடை நெஞ்சங்கள் கலக்கும் பொழுது வாழ்த்தத்தானே வேண்டும்? 

Wednesday, November 1, 2023

பெற்றால்தான் பிள்ளையா?

 பெற்றால்தான் பிள்ளையா?

"உன் மகளிடமிருந்து செய்தி" என்றது வாய்ஸ் மெஸேஜர்.
"என்னவாம்?" என்றாள் தீக்ஷா.
"அம்மா, உன் ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது, நீ பாட்டியாகப் போகிறாய், உடனே எக்ஸைட் ஆகி அழைக்காதே, ஐயாம் பிஸி. ஐ வில் கால் யூ லேட்டர்"என்றது மகள் நீதாவின் குரல்.
தன் கணிணியை மூடிய தீக்ஷாவுக்கு உடனே மகளோடு பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் இப்போது அழைத்தால் பதிலளிக்க மாட்டாள்.
திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகி விட்டது. முப்பது வயதில் திருமணம் செய்து கொண்டவள் ஏதேதோ காரணங்களைச் சொல்லி பிள்ளை பேற்றை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருந்தாள்.
வயதாகி முதல் குழந்தையை பெற்றுக் கொள்வது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதையெல்லாம் நவீன மருத்துவம் பொய்யாக்கி விட்டது.
மாலையில் நீதா வீடியோ காலில் வந்ததும், " டாக்டரை பார்த்தியா? எவ்வளவு நாட்கள் ஆகிறது?" என்றதும் நீதா கொஞ்சம் யோசித்து ஐ திங்க் ஃபைவ்மன்த்ஸ்"என்றாள்.
"திங்கா? என்னடி. ?" என்றதும் கொஞ்சம் யோசித்து, செல்போனில் எதையோ தேடி, ஆ.. ஐஞ்சு மாசங்கள் முடிஞ்சாச்சு.." என்றாள் நீதா.
"மை காட்!" இத்தனை நாள் எங்கிட்ட சொல்லவேயில்லை..?" கொஞ்சம் தள்ளி நில், உன்னை முழுமையாக பார்க்கிறேன்" என்றதும், காமிராவை விட்டு தள்ளி நின்று கையாட்டினாள்.
"என்னடி இது? ஐஞ்சு மாசம் முடிஞ்சாச்சு என்கிறாய், வயிறே தெரியலை..?"
"எனக்கு ஏன் வயிறு தெரியனும்?" என்று நீதா கேட்டதும், தீக்ஷாவுக்கு குழப்பமாகியது.
"நீ கர்பமாக இருப்பதாக சொன்னாயே..?"
நான் எங்கே அப்படி சொன்னேன்? நீ அப்படி புரிந்து கொண்டிருக்கிறாய்"
" நான் பாட்டியாக வேண்டும் என்றால் நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்றுதானே அர்த்தம்?"
தீக்ஷா இப்படி கேட்டதும்,"வெயிட் வெயிட், எங்களுக்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆனால் நான் கர்ப்பமாக இல்லை.. எங்கள் குழந்தையை சுமக்க ஒரு வாடகைத் தாயை புக் பண்ணி விட்டோம்"
"உன் குழந்தையை உன்னால் சுமக்க முடியாதா?"
"கஷ்டம் மா..இப்போது என் கேரியர் ரொம்ப க்ரூஷியல் ஸ்டேஜில் இருக்கு. ஃபர்ஸ்ட் நானே பெத்துக்கலாம்னு தான் நினைச்சேன், ஆனால் என் ஃப்ரண்டு வாமிட்டிங்,நாஸியானு பட்ட கஷ்டத்தை பார்த்ததும் வேண்டாம், சர்ரகஸி இஸ் பெட்டர்னு தோணிடுத்து. ரகு ஆல்ஸோ ஓகே வித் திஸ்."
"வளர்க்கவாவது செய்வியா..?"
"கண்டிப்பா.. பட் இனிஷியலா பார்த்துக்க நானி புக் பண்ணியாச்சு"
யாரோ பெத்து குடுக்க போறா, யாரோ வளர்க்க போறா..நீ என்ன அம்மா..?"
"பட் ஸ்டில் அது எங்களோட குழந்தை. கொஞ்சுவோம், விளையாடுவோம், படிக்க வைப்போம்.."
அம்மா அலுத்துக் கொண்டதற்கு சமாதானமாக பதில் சொன்னாள்.
"இதுக்கு பேசாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே..?"
"அம்மா உனக்கு புரியவில்லையா? தத்து குழந்தை எங்கள் குழந்தை கிடையாது. இது எங்கள் குழந்தைதான், எனக்கு கர்ப்ப கால தொந்தரவுகள் கிடையாது. எவ்வளவு சௌகரியம்!"
"ம் ம், என்னவோ போ.. அந்த வாடகைத் தாய் எப்படிப் பட்டவள்?"
"அதெல்லாம் நல்ல பெண்தான். நல்ல ஏஜென்சி மூலம் தான் ஏற்பாடு செய்திருக்கிறோம்". என்று நீதா சொன்னதும், 2023க்கு முன்பாகவே வாடகைத் தாய் கான்செப்ட் வந்து விட்டாலும், 2053ல் இது மிகவும் பிரபலமாகி விடும் என்று அப்போது தோன்றவேயில்லையே..? என்று தீக்ஷா நினைத்துக் கொண்டாள்.

Tuesday, October 31, 2023

மாற்றம்

'இன்னும் முப்பது வருடங்களுக்குப் பிறகு எப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்?' என்று மத்யமரில் வீக்லி டாபிக் கொடுத்திருந்தார்கள். அதற்கு என் பங்களிப்பு.

மாற்றம் ஒன்றே மாறாதது. உலகம் தோன்றியதிலிருந்தே பலவித மாற்றங்களை சந்தித்து கொண்டுதான் இருக்கிறது. 

வேட்டையாடிக் கொண்டிருந்த மனிதன் விவசாயம் செய்யத் தொடங்கியது முதல் மாற்றம்.  கடலைக் கடந்தது,  அடுத்த பெரிய மாற்றத்திற்கு வித்திட்டது. 

சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதும் தொழில் வளர்ச்சியும், மாற்றமும் ஒரு கங்காரு ஜம்ப் அடித்தது என்றால் கணினியின் வரவால் பூதாகாரமாக வளர்ந்தது. இப்போது ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் எங்கே கொண்டு நிறுத்துமோ..?

நம் நாட்டை பொறுத்தவரை நூறு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் கடந்த முப்பது ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் மிக அதிகம். 1980களில் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவோம் என்று நினைத்திருப்போமா?  சாலையில் இத்தனை வெளிநாட்டு கார்கள் விரையும் என்று கற்பனை செய்தோமா? இன்னும் என்னவெல்லாம் மாற்றங்கள் வரலாம்..?

பணப் பரிமாற்றம் ஏன் அச்சிடப்பட்ட பணம் என்பது இல்லாமல் போகலாம்.

விவசாய நிலங்கள் குறைவதால் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்கள் ஆவார்கள். 

குறைந்த நிலத்தில் நிறைய மகசூல் செய்யும் வழிமுறைகள் கண்டுபிடிக்கப் படும்.

இயற்கை வளங்களான சோலார் எனர்ஜி, விண்ட் எனர்ஜி போன்றவை அதிக பயன்பாட்டிற்கு வரும். அதனால் மேற்கத்திய நாடுகளை விட கிழக்காசிய நாடுகள் தொழில் வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும்.

கடல் நீரை குடி நீராக்கும் முயற்சியை மேற்கொண்டு தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படும்.

பயண நேரங்கள் கணிசமாககுறையும். விமானத்தில் பயணிப்பவர்கள் அதிகமாவார்கள்.

கான்சர் உட்பட பல நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும். அதனால் மக்களின் சராசரி ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். இதனால் பூமி பாரத்தை குறைக்க பூகம்பம், புயல் போன்ற நிறைய இயற்கை உற்பாதங்கள் நிறைய நிகழும்.

கூட்டுக் குடும்பம் சிதைந்தது போல குடும்பம் என்னும் அமைப்பே குறையலாம், சிதையாது.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, விவாகரத்து, மறுமணம் போன்றவை அதிகரிக்கும். 

கல்வி கற்பிப்பது டிஜிட்டல் மயமாகும், ஆகவே எழுத வேண்டிய தேவை இருக்காது எனவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் குறைந்து போவார்கள். அதாவது படிக்கத் தெரிந்தவர்களுக்கு எழுதத் தெரியும் என்று கூற முடியாது.

புத்தகங்கள் இல்லாமல் போகலாம். அதனால் நிறைய மரங்கள் பிழைக்கும்.

அரசு நிறுவனங்கள் தனியார் வசம் செல்லும்.

இப்பொழுது கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். இதனால் ஏற்படும் சங்கடங்களை உணர்ந்து யாராவது ஒருவர் வேலைக்குச் சென்றால் போதும் என்று நினைக்கலாம்.

இப்பொழுது பலர் ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள்கின்றார்கள், ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு மூன்று குழந்தைகளாவது வேண்டும் என்று அரசாங்கமே குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும்.

காவடி எடுப்பது, மொட்டை அடித்துக் கொள்வது போன்ற நம்முடைய மத நம்பிக்கைகள் அப்படியே தொடரும். 

வீட்டு பூஜைகளுக்கு ரோபோ புரோகிதர் வருவார். 

நம் நாட்டை பொறுத்தவரை என்ன மாற்றங்கள் வந்தாலும் சாலையில் எச்சில் துப்புவதும், சிறுநீர் கழிப்பதும் மாறாது.

Thursday, October 26, 2023

நவராத்திரி அலப்பறைகள்

நவராத்திரி அலப்பறைகள்


எங்கள் குடியிருப்பில் நவராத்திரி நவராத்திரி முதல் நாள் ஒரு சிறப்பு பூஜை இருந்தது லலிதா சகஸ்ரநாம சகஸ்ரநாம பாராயணம், பக்தி பாடல்கள் என்று நடந்த பூஜையில் பிரசாத வினியோகமும் இருந்தது. சர்க்கரை பொங்கல், புளியோதரை, கேசரி, தயிர் சாதம் என்று ஐட்டங்கள். "புளியோதரைக்கு தொட்டுக் கொள்ள ஏதாவது இருக்கிறதா"? என்று கேட்டார் ஒருவர். எனக்கு படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.

நங்கநல்லூர் ஆஞ்சனேயர் கோவில் கட்டி முடித்த புதிதில் அதன் நிர்வாகி ஒருவர் மஹாபெரியவரை பார்க்கச் சென்றாராம். சென்றவர் மஹா பெரியவரிடம், "நாங்கள்,கோவிலில் , சாம்பார் சாதம், புளியோதரை, தயிர் சாதம் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று போட்டு, வருகிறவர்களுக்கு தாராளமாக வயிறு ரொம்பும் அளவு வினியோகிக்கிறோம்" என்று பெருமையாக சொல்லிக் கொண்டாராம். அதற்கு பெரியவர், "பிரசாதமெல்லாம் நிறைய கொடுக்க கூடாது, கொஞ்சமாகத்தான் கொடுக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாய் என்றாராம். இவருக்கு கொஞ்சம் ஏமாற்றமாக போய் விட்டதாம். 

கோவிலில் வழக்கம் போல பிரசாத வினியோகம் தொடர்ந்து கொண்டிருந்ததாம். ஒரு நாள் காலையில் சாம்பார் சாதம், தயிர் சாதம் வழங்கியிருக்கிறார்கள். அதை சாப்பிட்ட ஒருவர், இவரிடம் வந்து, " நீங்க என்ன பண்ணுங்க.. சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள ஒரு பொரியலும், தயிர் சாதத்தோடு ஊறுகாயும் போட்டு விடுங்கள், சாப்பிட சௌகரியமாக இருக்கும்" என்றாராம். அப்போதுதான் அவருக்கு பெரியவா சொன்னது புரிந்ததாம். எல்லோருக்கும் புரிய வேண்டும். 

நேற்று சரஸ்வதி பூஜை, உறவினர் ஒருவர் கிரக பிரவேசம் வைத்திருந்தார். அவர்கள் பூஜை மணி கேட்டதால் கொடுத்தோம். கிரக பிரவேசம் அதிகாலையில் முடிந்து விடும், அதன் பிறகு நம் வீட்டு பூஜைக்கு மணியை கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தோம், ஆனால் எடுத்து வர மறந்து விட்டோம். நைவேத்தியம் செய்யும் பொழுதும், தீபாராதனையின் பொழுதும் மணி அடிக்க வேண்டுமே..? என்ன செய்வது? என்று யோசித்தேன். இருக்கவே இருக்கிறது யூ ட்யூப், அதில் மணியை ஒலிக்கச் செய்து விட்டேன்.. எ..ப்..பூ..டி..?! எங்களுக்குத் தெரிந்த ஒரு தமிழ் பிராமண பையன் வட இந்தியப் பெண்ணை மணந்து கொண்டான். தென்னிந்திய முறைப்படி திருமணம். ஆனால் திருமணத்தில் நாதஸ்வரம் கிடையாது. கெட்டி மேளம் உட்பட D.J. வைத்தே சமாளித்தார்கள். வாழ்க டெக்னாலஜி!

Sunday, October 8, 2023

குஷி(தெலுங்கு)

 குஷி(தெலுங்கு)


எத்தனை நாட்களாயிற்று இப்படி ஒரு காதல் கதையை திரையில் பார்த்து? எங்கே பார்த்தாலும் ரத்தம் தெறிக்கும் வன்முறை, ஆகாயத்தில் பறக்கும் கார்கள், தீப்பிழம்புகள் என்று பார்த்து அலுத்த கண்களுக்கு இதமாக அழகான இடங்கள், அதைவிட கண்களுக்கு குளுமையாக அழகான ஜோடி. அற்புதமான கெமிஸ்ட்ரியோடு(இதற்கு ஒரு தமிழ் வார்த்தையை யாரவது கண்டுபிடியுங்கள்,ப்ளீஸ்)இப்படி ஒரு ஜோடியை திரையில் பார்த்தும்தான் எத்தனையோ நாட்களாகி விட்டது.

கடவுள் நம்பிக்கை இல்லாத விஞ்ஞானியான ஒருவரின் மகனும், புராண பிரவசனங்கள் செய்யும், கடவுள் மற்றும் சடங்குகள் முடலியவற்றில் தீவிர நம்பிக்கை கொண்ட ஒருவரின் மகளும் காதலித்து மணமுடிக்கிறார்கள். சில காலம் வரை அவர்கள் எக்கச்சக்க முத்தங்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். கதாநாயகியின் குழந்தை ஆசை நிறைவேறாத பொழுது தன் தந்தை கூறியபடி ஒரு பரிகார ஹோமம் அதுவும் மகன், தந்தை இருவரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்று ஆராத்யா(ஸமந்தா) வலியுறுத்த, “என் அப்பாவுக்கென்று சொஸைட்டியில் ஒரு மரியாதை இருக்கிறது, அவர் இப்படிப்பட்ட ஹோமங்களை ஒரு நாளும் செய்ய மாட்டார்” என்று விப்லவ்(விஜய் தேவரகொண்டா) மறுத்துவிட, இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு அதிகரித்து பிரிந்து விடுகிறார்கள். கடைசியில் இருவரும் இணைந்தார்களா? விப்லவ் அப்பா ஹோமத்திற்கு ஒப்புக் கொண்டாரா? என்பதுதான் மீதிக் கதை. விப்லவ் மிகவும் இறங்கி வந்து தன் காதலை வெளிப்படுத்திய பிறகும் ஆராத்யா ஏன் அத்தனை பிடிவாதமாக பிரிந்து போகிறாள் என்பது புரியவில்லை.

விஜய் தேவரகொண்டாவின் உயரதிகாரியாக ரோகிணி, அவர் கணவராக ஜெயராம், வி.தே.வின் அம்மாவாக சரண்யா, சமந்தாவின் பாட்டியாக லக்ஷ்மி, என்று நிறைய தெரிந்த முகங்கள். அப்பாக்களாக சச்சின் கேடேகர், முரளி ஷர்மா என்று எல்லோருமே தங்கள் பகுதியை குறைவின்றி செய்திருக்கிறார்கள். சரண்யா அப்பாவி, அம்மா என்னும் டெம்ப்ளேட்டிலிருந்து வெளி வந்தால் நல்லது. கண்ணுக்கினிய லொகேஷன், காதுக்கினிய பாடல்கள், படத்தோடு இணைந்த நகைச்சுவை, விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் நெருக்க்க்கமான காட்சிகள் படம் ஓடாமல் இருக்குமா? ரசிகர்களுக்கு குஷிதான்!

Sunday, September 24, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

 போனேனே ஊர்கோலம் பேத்தியோடு – 4 (அரங்கன் ஆலயம்)

படம் உபயம் கூகுள் 

என் பேத்தியோடு திருச்சி கோவில்களுக்குச் சென்றதை மூன்று பகுதிகளாக எழுதினேன். நிறைவுப் பகுதியானா ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்றதை எழுதுவதற்கு ஏனோ இத்தனை நாட்களாகி விட்டது

ஸ்ரீரங்கத்தில் பல வருடங்கள் இருந்திருந்தாலும் ஒவ்வொரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும்பொழுதும் மனம் விகசிக்கும். எத்தனையெத்தனை மகான்கள் இங்கு வந்து அரங்கனை தொழுதிருக்கிறார்கள்! இங்குதானே ஆண்டாளும், திருப்பாணாழ்வாரும் அரங்கனோடு கலந்தார்கள்! பன்னிரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில் அல்லவா? இங்கிருப்பது சாட்சாத் ராமபிரானின் முன்னோர்கள் வழிபட்ட, அவர்களின் குலதெய்வம் அல்லவா? என்றெல்லாம் நினைவுகள் அலைமோதும். என் பேத்தியோ முதல்முறையாக திருவரங்கம் வருகிறாள்.


இதை எடுத்தது என் பேத்தி 

நாங்கள் முதலில் 21 கோபுரங்களை தரிசித்து, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு, கருடாழ்வாரை தரிசித்தோம். பிரும்மாண்டமான கருடாழ்வாரை பார்த்த அவள், “ஆ..! இவ்ளோ பெரிய கருடனா?” என்று வியந்தாள். “ஆமாம் இங்கு எல்லாமே பெரிசு. பெரிய கோவில், பெரிய பெருமாள், பெரிய திருவடி” என்றேன். அங்கிருந்த கோவில் யானையிடம் ஆசி வாங்க வேண்டும் என்றாள். ஆசி வாங்கிக் கொண்டு, கட்டண சேவைக்காக நுழைவு சீட்டு வாங்க காத்திருந்த நேரத்தில் அவளுக்கு ஸ்ரீரங்கம் கோவில் தல புராணம் சுருக்கமாக சொன்னேன். அப்போது பெருமாளுக்கு தைலக்காப்பு சாற்றியிருந்ததால் முகமண்டலம் மட்டுமே தரிசனம் செய்ய முடிந்தது. சன்னதியை விட்டு வெளியே வந்தவள் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்தாள். என்ன காரணம் என்று கேட்டதற்கு, “ஐ குட் நாட் சீ த ஸ்னேக், தே புஷ்ட் மி” என்றாள். “நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்” என்று கூறி சமாதானம் செய்து விட்டு, தாயார் சன்னதிக்ககுச் சென்றோம்.

தாயார் சன்னதியில் பூ வாங்கிக் கொண்டோம். அங்கிருந்த வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர், இவளிடமிருந்து பூவை வாங்கிக்கொண்டு, “இங்கு மூன்று பேர்கள் இருக்கிறார்கள், ரங்கநாயகி, பூமாதேவி, மஹாலக்ஷ்மி, இந்த மூவரில் யாருக்கு இந்த பூவை சாற்ற வேண்டும்? ஒன்? டூ? திரி?” என்றார். அவள் டூ என்றதும், மத்தியில் இருந்த தாயாருக்கு சாற்றி, எங்களுக்கு பிரசாதம் கொடுத்தார்.

*அங்கிருந்து கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய இடத்திற்கு வந்ததும், கம்பர் ராமாயணத்தை அரங்கேற்றிய பொழுது அவர் ராமாயணத்தில் நரசிம்ம அவதாரத்தை விவரித்திருந்த விதம் சரியில்லை என்று அங்கிருந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் கூறினாலும் மேட்டழகியசிங்கராகிய நரசிம்மர் கர்ஜனை செய்ததால் ஸ்ரீவைஷ்ணவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்” என்று நான் சொன்னதும், “அரங்கேற்றம் என்றால் என்ன?” என்று கேட்டாள். “புக் பப்ளிஷ் பண்ணி, அதை லான்ச் பண்ணுவது” என்றேன். உடனே, எனக்கு அந்த நரசிம்மரை பார்க்கணும்” என்றாள்.

அந்த படிகளில் ஏறிச் சென்றால் அவரை தரிசிக்கலாம். நீ போய் தரிசனம் செய்து விட்டு வா. நேற்று மலைக்கோட்டையில் ஏறியதில் எனக்கு கால் வலிக்கிறது. நான் கீழே நின்றபடியே தரிசித்துக் கொள்கிறேன்” என்று அவளை மேலே அனுப்பினேன். மேட்டழகிய சிங்கரை தரிசித்துவிட்டு வந்தவள், “வென் ஐ ரோட் அ புக் அண்ட் பப்ளிஷ், யூ ஷுட் ஹெல்ப் மீ” என்று அவரிடம் சொல்லிவிட்டு வந்தேன்” என்றவள் தொடர்ந்து, “வில் ஹீ அண்டர்ஸ்டாண்ட் இங்க்லிஷ்? பிகாஸ் ஐ பிரேட் டு ஹிம் இன் இங்கிலிஷ் ஒன்லி” என்றாளே பார்க்கலாம்.

எனக்கு சிரிப்பு வந்தது. “தமிழ் கடவுள், சமஸ்கிருத கடவுள், என்றெல்லாம் நாம் பிரித்து பேசும் பொழுது கடவுளுக்கும் இப்படித்தான் சிரிப்பு வருமோ?  

*கம்பர் ராமாயணத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ததற்கு முன் அவருக்கு ஏற்பட்ட தடைகள் பற்றியெல்லாம் நான் கூறவில்லை.






 "

Wednesday, August 23, 2023

தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்

முன்குறிப்பு: இது கோவில் பற்றிய பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவு செய்து நகர்ந்து விடவும். நன்றி.


தாயுமானவராகிய ஜவந்தீஸ்வரர் தரிசனம்


காலையில் முத்தரசநல்லூர் குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று விட்டு, மாலையில் மலைகோட்டை சென்று தாயுமானவரையும், உச்சிப்பிளையாரையும் தரிசிக்கலாம் என்று பேத்தியை அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். தாயுமானவர் சன்னதியில் வாழைத்தார் கட்ட வேண்டிய பிரார்த்தனை இருந்தது.


முதலில் மலையேற வேண்டும் என்றதும், அந்த பாறையில் ஏற வேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ, வருவதற்கு கொஞ்சம் முரண்டு பிடித்தாள். “அங்கு படிகள் இருக்கும், உன்னால் முடிந்தால் ஏறு, இல்லாவிட்டால் போக வேண்டாம்” என்று என் மன்னி, அவளை கன்வின்ஸ் செய்தார். ஆட்டோகாரர், நேராக தாயுமானவர் சன்னிதிக்கு செல்ல படிகள் துவங்கும் இடத்திலேயே நிறுத்தினார். இருந்தாலும், மாணிக்க விநாயகரை தரிசிக்காமல் செல்ல மனம் வரவில்லை. கீழே சென்று மாணிக்க விநாயகரை தரிசித்து விட்டு, மலையேறத் துவங்கினோம். கிடுகிடுவென்று படிகளில் ஏறியவள், “பாட்டி யூ ஆர் ஸ்லோ” என்றுஅலுத்துக் கொள்வாள். “நாங்களும் இப்படி வேகமாக ஏறியிருக்கிறோம், இப்போது வயதாகி விட்டது” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். உள்ளுக்குள் இன்னொரு முறை தாயுமானவரை தரிசிக்க முடியுமா? என்று ஏக்கமும் வந்தது.


தாயுமானவர் சன்னிதியில் அபிஷேக நேரம். அதற்குள் அம்பாள் சுகந்த கூந்தலாம்பாளை தரிசித்து விட்டு வந்தோம். தாயுமானவரை தரிசிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழும். ரத்னாவதிக்கு பிரசவம் பாரப்பதற்காக தாயாக வந்தவர் அல்லவா? என் மகளின் இரண்டாவது பிரசவம் கொரோனா காலத்தில் நிகழ்ந்ததால், என்னால் உதவிக்கு போக முடியவில்லை. அவளிடம், “தாயுமானவரை நினைத்துக்கொள்”என்றுதான் சொல்லிக் கொண்டே இருந்தேன். பேத்திக்கும் அந்த கதையைக் கூறினேன். தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தாரை வைத்து,அர்ச்சனை செய்து, வழிபட்டுவிட்டு, உச்சி பிளையாரை தரிசிக்கச் சென்றோம். வழியில் குளிர் பானங்கள், சிப்ஸ் போன்றவை விற்கும் சிறிய கடை வைத்திருப்பவர் ஐநூறு ரூபாய்க்கு சில்லறை இருக்கிறது என்று கூறி ஆச்சரியமூட்டினார். பே.டி.எம். வைத்திருந்தாலும், “சில்லறை இல்லை என்று கூறினால், வியாபாரம் பண்ண முடியாது, தினசரி இரவு பெட்ரோல் பங்கில் சில்லறை மாற்றிக் கொண்டுவிடுவேன்” என்றார். உச்சிப் பிள்ளையாரை வணங்கி, கீழே இறங்கினோம்.

ஊர்த்துவ தாண்டவ சிற்பம்

இந்த சங்கிலி இரும்பினால் ஆன தில்லை, கருங்கல் சங்கிலி!


கீழே இறங்கும் பொழுது, என் பள்ளி பருவத்தில் தோழிகளொடு பெட் வைத்து கீழே இறங்கியபொழுது கால் தடுக்கி விழுந்து, சுளுக்கிக் கொண்டு, கால் புசுபுவென்று வீங்கிக் கொண்டு, பள்ளிக்கு ஒரு வாரம் லீவு போட நேர்ந்ததை சொன்னதைக் கேட்டு, பயந்து விட்டாள். “யூ ஆர் டெல்லிங் ஸ்கேரி ஸ்டோரி” என்று மெதுவாக இறங்கினாள். சாரதாஸில் கொஞ்சம் பர்சேஸ் செய்து கொண்டு(திருச்சிக்கு போய் விட்டு சாரதாஸ் போகாமல் வர முடியுமா?), அவளுக்கு ஒரு பட்டர் ஸ்காட்ச் ஐஸ் க்ரீமும், நான் ஜிகிர் தண்டாவும் சாப்பிட்டு விட்டு வந்தோம். ஜிகிர் தண்டா சென்னையில் ஒரு மாதிரியாகவும் திருச்சியில் வேறு மாதிரியாகவும் இருக்கிறது. மதுரையில் எப்படி இருக்கிறது என்று சுவைத்து பார்க்க வேண்டும்.

தல புராணம்:

இப்போது தாயுமானவர் என்று அறியப்பட்டாலும், ஆதி காலத்தில் இவருக்கு ஜவந்தி நாதர், அல்லது ஜவந்தீஸ்வரர் என்றுதான் திருநாமம். ஜவந்தி பூக்கள் நிறைந்த காடாக இருந்ததால் அந்தப் பெயர். அம்பாள் மட்டுவார் குழலம்மை அல்லது, சுகந்தி கூந்தலாம்பாள். இந்த ஜவந்தீஸ்வரரிடம் பக்தி பூண்ட ரத்னாவதி என்னும் செட்டிப் பெண் தினசரி அவரை வந்து தரிசனம் செய்வாள். அவள் கருவுற்றபொழுது அவளுடைய தாயார் பிரசவ நேரத்தில் உதவி செய்வதற்காக புறப்பட்டு வருகிறாள். ஆனால், அந்த சமயம் கொள்ளிடத்தில் வெள்ளம் வந்துவிட, அவளால் வர முடியவில்லை. ரத்னாவதிக்கு பிரசவ வலி எடுத்து விடுகிறது. அவள் தினசரி சென்று வணங்கிய ஜவந்தீஸ்வரர் தானே ரத்னாவதியின் தாயாரைப் போல வந்து, பிரசவம் பார்த்து, அதற்குப் பிறகு அவளுக்கு பத்தியம் வடித்து போடுவது, குழந்தையை குளிப்பாட்டுவது போன்றவைகளை செய்கிறார்.

வெள்ளம் வடிந்த பிறகு, மகள் வீட்டிற்கு வருகிறாள் தாய். தூளியில் குழந்தை தூங்கிக் கொண்டிருக்கிறது. ஏதோ வேலையாக இருந்த மகள் வீட்டிர்க்குள் நுழையும் அம்மாவிற்கு முகமன் கூறி வரவேற்கவில்லை. தன்னை மகள் வரவேற்காததை விட, மகளின் வடிந்த வயிரும், தூளியில் தூங்கும் குழந்தையும் அதிர்ச்சி அளிக்கின்றது. “ என்னடி இது? குழந்தை பிறந்து விட்டதா? என்ன குழந்தை? எப்போது பிறந்தது?” என்று தாயார் கேட்டது மகளுக்கு ஆச்ச்ரயமாக இருந்தது. “ என்னம்மா? நீதானே பிரசவம் பார்த்தாய்? இப்போது புதுசா, எதுவும் தெரியாத மாதிரி கேட்கிறாய்?” “நான் வந்தேனா? ஆற்றில் வெள்ளம் வந்ததால், என்னால் வர முடியவில்லை, வெள்ளம் வடிந்த பிறகு இப்போதுதான் வருகிறேன்” என்று அம்மா சொன்னதும் அதிர்ச்சியடைந்த ரத்னாவதிக்கு தனக்கு தாயாக வந்து உதவியது அந்த ஜவந்தீஸ்வரர்தான் என்பது புரிய, “எனக்காக இறங்கி வந்தீர்களா?” என்று புளகாங்கிதம் அடைந்து கேட்கிறாள். சிவ பெருமானோ,  நீ தினசரி என்னைப் பார்க்க மேலே ஏறி வந்தாயே? அதனால்தான் நான் உனக்காக இறங்கி வந்தேன்” என்றாராம். அது முதற்கொண்டே பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக நேர்ந்து கொண்டு தாயுமானவர் சன்னிதியில் வாழைத்தார் சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.  



திருச்சி மலைக்கோட்டை இமயமலையை விட மூத்தது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து..’என்பார்களே அப்படி உலகில் முதலில் தோன்றிய கல் மலை இது. இதன் மேலிருக்கும் கோவில் மகேந்திரவர்மன் காலத்து குடைவரை கோவில். இங்கிருக்கும் லிங்கத் திருமேனி திருவுடைமருதூர் மஹாலிங்கத்திற்கு இணையாக பெரிதானது. பின்னாளில்தான் இவைகளை விட பெரிய தஞ்சை பெருவுடையார் கோவில் கட்டப்பட்டது. மூன்று முழமும் ஒரு சுத்து,முப்பது முழமும் ஒரு சுத்து என்னும் சொலவடைக்கு காரணமான கோவில்கள் இவை. அதாவது இறைவனுக்கு சாற்றும் ஆடை மூன்று முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும், முப்பது முழமாக இருந்தாலும் ஒரு சுற்றுதான் வரும் என்பது பொருள்.

தாயுமானவர் மீது அதீத பக்தி பூண்டவர் ஸ்ரீதர ஐயாவாள் அவர்கள். தாயுமானவரை தரிசிக்கும் பலர் தங்கள் தாயை நினைவு கூர்ந்து கண் பனிப்பதுண்டு.


நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே

றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச்

சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே

Wednesday, August 16, 2023

குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி

முன் குறிப்பு: இது ஆலயம் சம்பந்தப்பட்ட பதிவு. இதில் ஈடுபாடு இல்லாதவர்கள் தயவுசெய்து நகர்ந்து சென்று விடுங்கள் 


குருவாயூர் கோவில் - முத்தரசநல்லூர், திருச்சி

 


சமீபத்தில் வாட்சாப், ஃபேஸ்புக், எல்லாவற்றிலும் திருச்சிக்கு அருகில் கரூர் மார்க்கத்தில் இருக்கும் முத்தரசனல்லூர் என்னும் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் குருவாயூரப்பன் கோவிலைப் பற்றி செய்திகள் வந்தது. அவைகளை படித்ததிலிருந்து அடுத்த முறை திருச்சிக்கு செல்லும் பொழுது அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். என் மன்னிக்கும் அந்த விருப்பம் இருந்ததால், நாங்கள் இருவரும் என் பேத்தியோடு அண்ணா வீட்டிற்கு தெரிந்த ஆட்டோவில் கிளம்பினோம். கரூர் டர்னிங்கில் வலதுபுறம் திரும்பி கரூர் சாலையில் பயணித்தால், முதலில் வருவது கம்பரசம்பேட்டை. அதைக் கடந்ததுமே ஆங்காங்கே குருவாயூரப்பன் கோவில் 3கி.மீ., 2.கி.மீ என்ற அறிவிப்பு பலகைகள் நாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்ற தைரியம் தருகின்றது.


முத்தரசநல்லூர் ஊருக்குள் நுழைந்ததுமே குருவாயூரப்பன் கோவில் வந்து விடுகிறது. கேரள பாணியில் கட்டப்பட்ட விஸ்தாரமானகோவில். உள்ளே நுழைந்ததும் கொடி மரத்தின் கீழே வேண்டிக்கொண்டு காணிக்கையாக செலுத்தப்பட வேண்டிய பொருள்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அதைத்தாண்டி உள்ளே சென்றால் குழந்தை கண்ணனை தரிசிக்கலாம். உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகு! தரிசித்துக் கொண்டு வெளியே வந்தால் வெளிச்சுற்றில் ஐயப்பன், வேட்டைகொருமகன் சன்னதிகளும், துலாபாரம் பிரார்த்தனை செலுத்துவதற்காக பெரிய தராசும் இருக்கின்றன. உள் சுற்று சுவர்களில் குருவாயூர் கோவிலில் இருப்பது போலவே மியூரல் ஓவியங்கள் வரைந்து கொண்டிருக்கிறார்கள். மாலையில் விளக்கேற்றுவதற்காக வெளிப்பிரகார சுவற்றை ஒட்டி பித்தளை சட்டங்களில் விளக்குகள். அங்கு போலவே இங்கும் ஆண்கள் மேல் சட்டை அணிந்து கொள்ள அனுமதி இல்லை.  





குளத்தின் முகப்பு 

கோவிலுக்கு எதிரே அழகான பெரிய குளம். நிறைய மின்சார விளக்கு அலங்காரங்கள் இருந்தன. பக்கத்தில் நாராயணீய மண்டபம் என்று பெரிய ஹால். விசேஷ நாட்களில் நாராயணீய பாராயணம், பஜனை போன்றவைகள் நடத்தவும், பூணூல், ஆயுஷ ஹோoமம் போன்ற விசேஷங்களுக்கு வாடகைக்கும் விடப்படும் என்ற அறிவிப்பை காண முடிகிறது.



 


நாராயணீய ஹாலின் மேடையில் இருக்கும் சிற்பம்

குளத்தைச் சுற்றி மஹாபெரியவருக்கும், ஷிர்டி சாய்பாபாவுக்கும் சன்னிதிகள் வரப்போகின்றன. மஹா பெரியவரின் அனுக்ரஹத்தால்தான் இந்தக் கோவில் கட்டப்பட்டதாம். நாங்கள் பார்க்கவில்லை. அன்று கோவிலில் இரண்டு குழந்தைகளுக்கு அன்னப்பிராஸனம் நடந்தது. ‘குருவாயூருக்கு வாருங்கள், ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள். ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன் உட்கார்ந்திருப்பதை பாருங்கள்’ என்னும் கண்ணதாசன் பாடல் நினைவுக்கு வந்தது. இனி அதற்கு குருவாயூருக்கு போக வேண்டாம், திருச்சியிலேயே பார்க்க முடியும். பார்த்து அனுபவியுங்கள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!


Sunday, August 13, 2023

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…

 

போனேனே ஊர்கோலம் பேத்தியோடு…


வெளிநாட்டில் வசிக்கும் என் மகள் வயிற்று பேத்திக்கு ஜூலையில் கோடை விடுமுறை தொடங்கியது. நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்தியாவிற்கு வந்திருக்கும் பேத்தியை திருச்சிக்கு அழைத்துச் சென்று கோவில்களை காண்பிக்க நினைத்தேன். ஏன் திருச்சி என்கிறீர்களா? திருச்சிதானே எங்கள் ஊர், எங்கள் ஊர் பெருமையை பேத்திக்கு சொல்ல வேண்டாமா?

23.7.23 அன்று தேஜசில் திருச்சிக்கு புறப்பட்டோம். எங்கள் இருவருக்கும் அடுத்தடுத்த சீட் அமையாமல், முன்னும், பின்னுமாக அமைந்தது. ஆனாலும், நான் தனியாக உட்கார மாட்டேன் என்றெல்லாம் படுத்தாமல், தனியாக அமர்ந்து கொண்டாள். ஸ்ரீரங்கத்தில் என் சகோதரர் வீட்டிற்குச் சென்று, உணவருந்தி, ஒரு குட்டித் தூக்கம் போட்டு விட்டு, மாலை அவளை திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவளுக்கு அந்தக் கோவிலின் *தல புராணத்தை சொன்னேன்.

கதையை கேட்டு விட்டு, “ஐ ஸ்டில் டோண்ட் அண்டெர்ஸ்டான்ட் வொய் டிட் த ஸ்பைடர் கில் த எலிஃபெண்ட்?” என்று கொக்கி போட்டாள்.

“நம்ப, சாமி மேல வெயில் படக்கூடாதுனு வெப் கட்டினா, அதை அந்த எலிஃபெண்ட் கலைத்து விடுகிறதேனு யானை மேல ஸ்பைடருக்கு கோபம், அதான்”

“வொய் இட் டுக் ரீ பர்த் ஆஸ் எ கிங்க்?”

“நாம சாமிக்கு கொஞ்சமா ஏதாவது கொடுத்தால் கூட, அவர் அதை நமக்கு மல்டிபில்ஸா திருப்பி கொடுப்பார். ஸ்பைடரா இருந்தப்போ சாமி மேல வெயில் படக்கூடாதுனு அது வெப் கட்டித்து இல்லையா? தனக்கு நிழல் கொடுத்த அந்த சிலந்தியை அடுத்த ஜென்மத்தில் ராஜாவா பொறக்க வெச்சார். அதுவும் அந்த ஜென்மாந்திர ஞாபகத்தாலா ராஜாவா பொறந்ததும் நிறைய கோவில்களை கட்டினார்”.

என்னுடைய இந்த பதில் அவளுக்கு எவ்வளவு தூரம் புரிந்தது என்று தெரியவில்லை. அதற்குப் பிறகு கேள்வி எதுவும் வரவில்லை. அது மாலை நேரம் என்றதால் அகிலாண்டேஸ்வரி வெள்ளை ஆடை உடுத்தி சரஸ்வதி ரூபத்தில் காட்சி. பேத்தியிடம்,”பார் இப்பொழுது அம்பாள் சரஸ்வதி ரூபத்தில் இருக்கிறாள், நன்றாக படிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்” என்றதும், “மொத்தம் எத்தனை ரூபம்?” என்றாள்.

“மூன்று, காலையில் துர்கா, மதியம்(உச்சி காலத்தில்) லட்சுமி, மாலையில் சரஸ்வதி” என்றேன். தீபாராதனை காட்டும் வரை நிற்க அனுமதித்தார்கள். தரிசித்துக் கொண்டு, பிரகாரத்தை வாம் வரும் பொழுது அங்கிருக்கும் சுப்பிரமணியரின் போர்க்கோல சிற்பத்தின் அழகை அவளுக்கு இந்த வயதில் ரசிக்கத் தெரியாமல் போகலாம், இருந்தாலும் காட்டினேன்.

ஸ்வாமி சன்னதிக்குச் செல்லும்பொழுது அந்தக் கோவில் பஞ்சபூத தலங்களில் தண்ணீருக்கானது என்றதும், “அதனால்தான் என்ட்ரென்சில் தண்ணீராக இருந்ததா?” என்றாள். பிரதான நுழைவு வாயிலுக்கு அருகில் தரையோடு பதிக்கப்பட்டிருந்த குழாயிலிருந்து தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. அதைத்தான் குறிப்பிட்டாள். பிறகு, “ஃபயருக்கான டெம்பிள் எது?” என்று கேட்டாள். திருவண்ணாமலை என்றதும், “வென் ஆர் யூ கோயிங் டு டேக் மீ தேர்?” என்றாள். “பார்க்கலாம்” என்றேன். ஜம்புகேஸ்வரரை வணங்கி, பிரகாரத்தை வலம் வந்து, நவகிரகங்களை வணங்கி, அழகான கால பைரவரை வணங்கி, தட்சிணாமூர்த்தியை வணங்கி, வெளியில் கொடிமரத்திற்கு அருகில் இருக்கும் வெகு அழகான சோமாஸ்கந்தர், சிவன் பார்வதி சிற்பங்களுக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பினோம்.



கோவில் வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த பிச்சைக்காரர்களின் யாசகத்தை நான் கண்டு கொள்ளாமல் வந்ததும், “பாட்டி, வொய் யூ ஆர் நாட் மைண்டிங் த பெக்கர்ஸ்?” என்று கேட்டாள். “ஒருவருக்கு கொடுத்தால், நிறைய பேர்கள் வருவார்கள்” என்றேன். “பட் தே ஆர் புவர் பெக்கர்ஸ்” என்றாள். குழந்தைகளோடு கோவிலுக்கு வரும்பொழுது சில்லறையாக மாற்றிக் கொண்டுவர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

மறுநாள் முத்தரசநல்லூர் குருவாயூர் கோவிலுக்கும், மலைக்கோட்டைக்கும் சென்ற அனுபவங்களை பார்க்கலாம்

*ஜம்புகேஸ்வரர்(ஆகிலாண்டேஸ்வரி) கோவிலின் தல புராணம் சுருக்கமாக:

இந்த இடம் வெண்நாவல் மரங்கள் நிறைந்த காடாக இருந்த பொழுது, சிவலிங்கம் ஒன்று நாவல் மரத்தினடியில் இருந்தது. சிலந்தி ஒன்று அந்த சிவலிங்கத்தின் மேல் வெய்யில் படாமல் வலை கட்டும். அதே சிவலிங்கத்திற்கு தன் தும்பிக்கையில் நீர் நிரப்பிக் கொண்டு வந்து, அதனால் அபிஷேகம் செய்து, பூவை சாற்றி வழிபடும். அந்த யானை சிலந்தி வலையை அசிங்கம் என்று கருதி கலைத்து விடும். மறு நாள் சிலந்தி மீண்டும் வலை பின்னும், யானை கலைக்கும். இது தொடர்ந்தது. தான் பின்னிய வலையை யார் அழிக்கிறார்கள்? என்று கவனித்த சிலந்தி, அந்த வேலையை செய்வது ஒரு யானை என்பதை தெரிந்து, ஒரு நாள் அதன் தும்பிக்கைக்குள் நுழைந்து கடித்து விடுகிறது. அந்த போராட்டத்தில் இரண்டுமே இறந்து விடுகின்றன. அந்த சிலந்திதான் கோசெங்கட்ச்சோழனாக மறு பிறவி எடுத்து, சிவபெருமானுக்கு 100 கற்றளிகளை எடுப்பித்தார். யானை முனிவராக பிறந்தது.

Sunday, August 6, 2023

விதியின் கைகள்

 விதியின் கைகள்

“என்னங்க, இந்த வருஷம் லீவுக்கு பெங்களூர் போலாமா? சங்கர் கூப்பிட்டுக்கிட்டே இருக்கான்|” சந்திரா, கணேஷிடம் கேட்டாள்.

சோபாவில் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருந்த கணேஷ், தன் மடியில் தலை வைத்து உறங்கிய மகனை தூக்கி கட்டிலில் கிடத்தி, குழந்தைக்கு போர்வையை போர்த்தி, மின் விசிரியை நிதானமாக சுழலவிட்டு, மின்சார கொசு விரட்டியை ஆன் செய்து விட்டு மீண்டும் வந்து சோஃபாவில் அமர்ந்து,

“லீவு எப்போ தொடங்குது?” என்றதும் சந்திராவை முந்திக் கொண்டு மகள், “அடுத்த வாரம்பா” என்றாள்.

மகளின் ஆர்வத்தை ரசித்த கணேஷ், சிரித்துக் கொண்டே, “மொதல்ல உங்க மாமா அந்த சமயத்தில் பெங்களூரில் இருக்கணுமே.? அவங்க எங்கேயாவது போகாம இருக்கணும்” என்றதும், சந்திரா, “ அவங்க எங்கேயும் போகல, எனக்குத் தெரியும்” என்றாள்.

“எதுக்கும் நீ அவங்ககிட்ட கேட்டுட்டு சொல்லு, டிக்கெட் பாக்கறேன்” என்றதும், ஆர்வக் கோளாறில் உடனே செல்ஃபோனைக் கையில் எடுத்தாள்.

“என்ன அவசரம்? கார்த்தால கேளேன்” என்றான். ஆனால் அவள் உடனே தம்பியை அழைத்து, அவர்களின் வசதியைக் கேட்டு, “அவங்க அங்கதான் இருக்காங்க, நீங்க டிக்கெட் பாருங்க” என்றாள்.

“பாக்கறேன், ஆனா, என்னால பத்து நாள் இருக்க முடியாது. ஒரு மூணு நாள் இருந்துட்டு வந்துடுவேன். நீ குழந்தைகளை அழைச்சுகிட்டு ஜாக்கிரதையா வந்துடுவதானே?”

“என்னங்க இப்படி சொல்றீங்க? நீங்க இல்லாம நாங்க எப்படி ஊர் சுத்திப் பாக்கறது?

“நம்ப ஊர் போனதும் மைசூர், சாமுண்டி ஹில் எல்லாம் பார்த்துடலாம். லோக்கலா பாக்க வேண்டிய இடங்களுக்கு உன் தம்பி கூட்டிக்கிட்டு போக மாட்டானா?”

சந்திரா பதில் சொல்லாமல் மௌனமாக இருக்க, அதை சம்மதமாகக் கொண்டு கணேஷ் பெங்களூருக்கு ரயிலில் டிக்கெட் புக் பண்ணினான். தம்பி மனைவிக்கும், குழந்தைக்கும் உடைகள் வாங்கிக் கொண்டார்கள். அங்கு குளிருமோ என்று குழந்தைகளுக்கு ஸ்வெட்டெர் வாங்கினார்கள். இப்படி ஊருக்குச் செல்ல வேண்டிய ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தன.

அவர்கள் இருந்தது கம்பெனி குடியிருப்பு. வாசலில் ஒரு செக்யூரிடி உண்டே தவிர, இப்போது போல செக்யூரிடி காமிராக்கள் எல்லாம் வராத காலம். ஏன் ஆண்ட்ராய்டு ஃபோன்கள், ஓலா, ஊபர் போன்றவை வரவில்லை. அவர்கள் குடியிருப்பில் இரண்டு திருட்டுகள் நடந்தது, இரண்டுமே பட்ட பகலில், வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, கதவை லாகவமாக திறந்து, வீட்டிர்க்குள் வைத்திருந்த நகைகளையும், பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவங்கள் கணேஷ், சந்திரா இருவரையுமே பயப்படுத்தியது.

எதற்கு வம்பு என்று தங்களிடமிருந்த பத்து பவுன் நகைகளை வீட்டில் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அவைகளை தனியாக ஒரு குட்டி பையில் போட்டு, தங்கள் பெட்டியில் துணிகளுக்கு நடுவில் வைத்து விட்டார்கள். அவர்கள் பெங்களூரை அடைந்து, ஒரு ஆட்டோ பிடித்து, சந்திராவின் தம்பியின் வீட்டை அடைந்த பொழுது, இரவாகி விட்டது.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் குழந்தைகளும், சந்திராவும் முதலில் இறங்கி விட்டார்கள். சந்திராவின் தம்பியின் வீட்டு வாசலில் இருந்த மரம் தெரு விளக்கின் வெளிச்சத்தை குறைத்தது. பர்சிலிருந்து பணத்தை எடுப்பதற்காக வெளிச்சம் தேடி சற்று நகர்ந்த கணேஷ் ஆட்டோவிலிருந்து பெட்டியை இறக்காதது கவனப் பிசகா? அல்லது அதீத நம்பிக்கையா? அந்த ஆட்டோ டிரைவர் தன்னுடைய கூலியை எதிர்பார்க்காமல் சட்டென்று யூ ட்ர்ன் எடுத்து இவர்கள் சுதாரிப்பதற்க்குள் பறந்து விட்டான். பெட்டிக்குள் வைத்திருந்த பத்து பவுன் நகை மட்டுமல்லாமல், மாற்றுடை கூட இல்லாமல் அத்தனையையும் கண நேரத்தில் தவற விட்டார்கள். போலீஸ் கம்ப்ளெய்ண்ட் கொடுத்தாலும், ஆட்டோவின் ரிஜிஷ்ட்ரேஷன் எண், ஆட்டோ டிரைவரின் பெயர், போன்ற தகவல்கள் இல்லாததால் பிடிப்பது கஷ்டம். என்றார்களாம். அந்த திருடன் அகப்படவேயில்லை. வீட்டில் வைத்தால் திருட்டுப் போய் விடுமோ என்று பயந்து, கையோடு கொண்டு சென்ற பொருள், வெளியூரில் திருட்டுப் போக வேண்டும் என்பது விதி போலிருக்கிறது.  

இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.  

Friday, July 21, 2023

மாவீரன் (சினிமா விமர்சனம்)

 மாவீரன் (சினிமா விமர்சனம்)


சிவகார்த்திகேயனின் பரம ரசிகையான என் பேத்தியின் ஆசையை நிறைவேற்ற அவளை மாவீரன் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். 

தினத்தீ என்னும் செய்தி தாளில் அறுபது வருடங்களாக வந்து கொண்டிருக்கும் மாவீரன் என்னும் தொடருக்கு படம் வரையும் சத்யா (SK) என்னும், யார் வம்புக்கும் போக விரும்பாத இளைஞன் எப்படி நிஜமாகவே மாவீரனாக மாறுகிறான் என்பதுதான் கதை.

சேரியில் வசிக்கும் பல குடும்பங்களை அடுக்கு மாடி குடியிருப்பில் குடியேற்றுவதாக கூறி ஆளும் கட்சியின் அடியாட்கள் வெளியேற்றுகிறார்கள். புது வீடு பார்க்க நன்றாக இருந்தாலும் குடியேறிய சில நாட்களிலேயே பாத்ரூம் தாழ்ப்பாள் கையோடு வருகிறது. சமைக்கும் பொழுது சாம்பாரில் மேல் சுவற்றிலிருந்து பூச்சு விழுகிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வீறு கொண்டு எழும் தாயை அடக்குகிறான். தங்கை குளிக்கும் பொழுது பாத்ரூமில் எட்டிப்பார்ப்பவனை கண்டிக்கும் தாய் தாக்கப்படும் போது அம்மாவின் இழிவான பேச்சால் மனம் நொந்து தற்கொலைக்கு முயல்கிறான். அப்போது காதில் அடிபட, அவனுக்கு ஒரு அமானுஷ்ய குரல் கேட்கத் துவங்குகிறது என்னும் ஃபேண்டஸி கதைதான். அதை ரசிக்கும்படி செய்திருக்கும் சுவாரஸ்யமான திரைக்கதை படத்தின் பலம்.

சிவகார்த்திகேயன் கச்சிதம். அவருடைய ஜோடியாக வரும், இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அசப்பில் சுப்ரமணியபுரம் ஹீரோயின் ஸ்வாதியை நினைவூட்டுகிறார். நிறைவான நடிப்பு. எஸ்.கே.யின் தங்கையாக வரும் பெண், பாத்திரத்தோடு கச்சிதமாக பொருந்தி, சிறப்பாக நடித்திருக்கிறார். அம்மாவாக சரிதா. எத்தனை நாட்களாயிற்று இவரைத் திரையில் பார்த்து? சரிதாவிடமிருந்து நடிப்பு பிரவாகமாக பொங்கி வரும், அதை கண்ட்ரோல் செய்ய இயக்குனருக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த இயக்குனருக்குத் தெரிந்திருக்கிறது.‌ 

நடிக்க வந்திருக்கும் மற்றொரு இயக்குனர் மிஷ்கின்! இத்தனை நாட்களாக ஸ்டைலிஷாக நாம் பார்த்திருந்த மிஷ்கின் கதர் வேஷ்டி, சட்டை, காட்சியோடு அரசியல்வாதி வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

பாடல்கள் பெரிதாக கவரவில்லை. முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் குறைகிறது. காதில் பூ தான், வாசமும் இருக்கிறது.

 





Tuesday, July 4, 2023

பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்

 பதிலாகும் பதிவு! பிருந்தாவனமும் அதிஷ்டானமும்


நேற்று(ஞாயிறன்று) எ.பி.யில், "ஸ்ரீரெங்கத்தில் ராமானுஜரின் உடல் பதப்படுத்தபட்டு வைக்கப்பட்டிருப்பதால் அந்த சன்னதிக்குச் சென்றால் குளித்து விட்டுதான் கோவிலுக்குச் செல்ல வேண்டுமா? என்று ஜெயகுமார் சார் கேட்டிருந்தார்.

ஜெயகுமார் சாரின் கேள்விக்கு பதில்: ஆம்! ஸ்ரீரெங்கம் கோவிலுக்குள் தசாவதார சன்னிதிக்குள்தான் ராமானுஜரின் திருமேனி இருக்கிறது. ஆனால் அதை தரிசிப்பது அத்தனை சுலபம் இல்லை. என்னதான் மகானாக இருந்தாலும், ஜீவனைப் பிரிந்த உடல் இருக்கும் இடம் என்பதால் அங்கு சென்று விட்டு கோவிலுக்குள் செல்லக் கூடாது என்றுதான் சொல்வார்கள். பெருமாளை ஏளப் பண்ணும் பொழுது(ஊற்சவர் திருவீதி வலம் வருவதை வைணவர்கள் ஏளப் பண்ணுவது என்பார்கள்) அந்த வழியாக வர மாட்டார். தவிர்க்க முடியாமல் அந்த சன்னதியை கடக்க நேர்ந்தால் வாத்தியங்கள் இசைக்கப்படாது. பெருமாள் உள்ளே சென்றதும் தீர்த்தவாரி நடக்கும். தீர்த்தவாரி என்பது அபிஷேகம். அதாவது பெருமாளே குளிப்பதாக ஐதீகம். இவையெல்லாம் கோவில் ரகசியங்களாக இருந்தவை.

அந்த ராமானுஜரின் திருமேனிக்கு வருடத்தில் ஒரு நாளோ, அல்லது சில குறிப்பிட்ட நாட்களோ குங்குமபூவால் அபிஷேகம் நடக்கும். சிலர் குங்குமப்பூவால் உடலை ஒத்தி எடுப்பார்கள் என்றும் கூறுகிறார்கள். அந்த அபிஷேகத்திற்கு குங்குமப்பூ வாங்கித் தந்து, பிரசாதமாக அந்த குங்குமப்பூவை பெற்று, நரம்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் சாப்பிட, வியாதி குணமாகும் என்பது நம்பிக்கை.  

ராகவேந்திர ஸ்வாமிகள் பிருந்தாவனம்

மஹாபெரியவா அதிஷ்டானம்

ராமானுஜரின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருப்பதால்தான் அங்கு சென்று விட்டு பெருமாளை தரிசனம் செய்ய செல்லக் கூடாது என்பார்கள். மற்றபடி மகான்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடங்கள் பூஜிக்கத்தகுந்தவை. உதாரணமாக ராகவேந்திர ஸ்வாமிகளின் பிருந்தாவனம், கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானம். நெரூர் சதாசிவ பிரும்மேந்திராள் அதிஷ்டானம் இவற்றைக் கூறலாம். ரமண மகரிஷி, சேஷத்திரி ஸ்வாமிகள், ஞானானந்தா, யோகி ராம்சூரத்குமார், அரவிந்தர், அன்னை, ஷிர்டி மற்றும் புட்டபர்த்தி சாயிபாபா போன்ற பல மகான்களின் சமாதிகள் வணங்கப்படுபவை. சமீபத்தில் நம்மிடையே வாழ்ந்து மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானதிற்கு ஒவ்வொரு மாதமும் அனுஷ நட்சத்திரதன்று வருகை சென்று வழிபடுவதை சிலர் வழக்கமாக வைத்துக் கொண்டுள்ளனர். 

மகான்களின் சமாதி மேல் துளசி செடி வைக்கப்பட்டால் அது பிருந்தாவனம் என்றும், சாளகிராமம் வைக்கப்பட்டால் அதிஷ்டானம் என்றும் அழைக்கப்படும்.

சன்னியாசிகள் மறைந்து, அடக்கம் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பாம். எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு ஒரு முறை கிடைத்தது. ஸ்ரீரங்கதில் இருந்த அஹோபிலம் மடத்து ஜீயர், மறைந்து ஒரு வாரத்திற்குள் அந்த இடத்தை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டியது. ஸ்ரீரெங்கதில் கொள்ளிடக்கரைக்கு அருகில் ஒரு தசாவதார சன்னிதி உண்டு. அங்குதான் ஜீயரின் திருமேனி அடக்கம் செய்யப்பட்டிருந்தது. என் அப்பா அப்போது அங்குதான் இருந்தார். அவரைப்பார்க்கச் சென்றிருந்த என்னை, அப்பாவின் நண்பர் அழைத்துச் சென்று, ஜீயரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்தை சேவிக்க வைத்தார். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அன்று அங்கு வருகை தரவிருந்தார். அவருக்காக, மரத்தில் சரிவு பாதை அமைத்து, அதன் மீது கம்பளம் விரிக்கும் வேலை ஜரூராக நடை பெற்றுக் கொண்டிருந்தது. பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது, ஏகப்பட்ட கெடுபிடி.. இருந்தாலும் அப்பாவின் நண்பருக்கு அங்கு பல பேரை தெரிந்திருந்ததால் என்னை சுலபமாக அழைத்துச் சென்றார். எல்லாம் குருவருள்!. குரு பூர்ணிமாவாகிய இன்று இந்த கட்டுரையை எழுத நேர்ந்ததும் ஒரு இனிய கோயின்சிடென்ஸ்!

Friday, June 23, 2023

குழந்தை சொன்ன பொய்...

 குழந்தை சொன்ன பொய்...


சனிக்கிழமையன்று(17.6.23) தினசரியில் படித்த ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சியளித்தது. பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில் எட்டு வயது பெண் குழந்தை ஒன்றை வீட்டில் தனியாக விட்டு விட்டு, வீட்டை விட்டு எங்கும் வெளியே செல்லக்கூடாது, ஆன் லைனில் படிப்பைத் தொடர வேண்டும் என்று எச்சரித்து விட்டு அந்த்க் குழந்தையின் தாய் பள்ளியிலிருந்து மகனை அழைத்து வர சென்றிருக்கிறார்.

அம்மா அந்தப் பக்கம் சென்றதும், குழந்தை இந்தப் பக்கம் விளையாடுவதற்காக வெளியே ஓடி விட்டது. அம்மா, திரும்பி வந்த பொழுது வெளியே நின்று கொண்டிருந்த மகளிடம், “ஏன் வெளியே நிற்கிறாய்?” என்று கேட்ட அம்மாவிடம் உண்மையைச் சொன்னால் என்ன நடக்குமோ என்று பயந்த அந்தக் குழந்தை, அங்கு ஒரு வீட்டிற்கு டெலிவரி கொடுக்க வந்த பையனை சுட்டிக் காட்டி, “இந்த ஆள் என்னை கடத்திப் போக முயற்சி செய்தான். அவனிடமிருந்து தப்பித்து இங்கே நின்று கொண்டிருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறது, உடனே அந்தக் குழந்தையின் தாய், மற்றும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த டெலிவரிபாயை அடித்திருக்கிறார்கள். ஆனால் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா ஃபுட்டேஜை பார்த்ததில் அப்படியோரு சம்பவம் நடக்கவில்லை, என்று தெரிந்திருக்கிறது. பிறகு அந்த்ப் பையனிடம் மன்னிப்பு கேட்டார்களாம்.

சாதரணமாக குழந்தைகள் பொய் சொல்லாது என்பார்கள். இந்தக் குழந்தை பொய் சொன்னது மட்டுமல்லாமல், தான் செய்த தவறை மறைக்க ஒரு பாவமும் அறியாத வெறொருவர் மீது பழி சுமத்தியிருக்கிறது. இதற்கு காரணம், அந்தக் குழந்தையை அதன் பெற்றோர்கள் விளையாடவே அனுமதிக்க மாட்டார்களாம். அதனால் பெற்றோர்கள் வீட்டில் இல்லாத பொழுது குழந்தை விளையாடுவதற்காக வெளியே ஓடுவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அன்று அம்மாவைப் பார்த்ததும் பயத்தில் அந்த டெலிவரி பாய் மீது அபாண்டமாக பழி சுமத்தி விட்டது. இதில் அந்த்க் குழந்தையை விட, அந்த தாயின் மீதுதான் அதிகம் தவறு இருப்பதாத தோன்றுகிறது. குழந்தை பருவத்தில் விளையாட்டு என்பது மிகவும் முக்கியம். அதற்கு அனுமதிக்காமல் இருப்பது சரி இல்லை. சாப்பாடு, தூக்கம், படிப்பு, இதர ஆக்டிவிடீஸ் எவ்வளவு அவசியமோ அவ்வளவு விளையாட்டும் அவசியம். விளையாட அனுமதிக்காததே இந்தக் குழந்தையின் தவறுக்கு காரணம். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க அனுமதிக்க வேண்டும். திரும்ப கிடைக்காத அந்த அழகான பருவத்தை பெற்றோர்கள் பறித்துவிடக் கூடாது.

Wednesday, June 14, 2023

அருகி வரும் பழக்கங்கள்

 அருகி வரும் பழக்கங்கள்

 

சென்ற திங்களன்று நெருங்கிய உறவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எனக்கு ஒரு பேரதிர்ச்சி! டிரஸ்ட் மீ அங்கு ஒரு பெண் தாவணி அணிந்து கொண்டு வந்திருந்தாள். “பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?..” என்று ஒரு பழைய பாட்டு உண்டு. இப்போது அதை, “பாவாடை தாவணியில் பார்க்க முடியுமா?..” என்றுதான் பாட வேண்டும். தாவணி என்பது வழக்கொழிந்து போய் விட்டது. கிராமங்களில் கூட இளம் பெண்கள் தாவணி அணிவதில்லை. சூடிதார்தான்”. என்றேன்.

 

அந்தப் பெண்ணின் தாய், “ஆமாம், கடைகளில் தாவணி கிடைப்பதில்லை. ஒன்று மிகவும் ட்ரான்ஸ்பரெண்டாக இருக்கும் அல்லது ஜகஜகவென்று இருக்கும். நான் புடவை வாங்கி, அதை தாவணியாக கிழித்துத் தருகிறேன். உங்களுக்கு ஏதாவது தாவணி கிடைக்கும் கடை தெரிந்தால் சொல்லுங்கள்” என்றார். யாரவது தெரிந்தால் சொல்லுங்கள்.

 

அப்படி வழக்கொழிந்துகொண்டே வரும் ஒரு நல்ல பழக்கம் பெரியவர்களை வணங்குவது. என் அம்மாவுக்கு பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டுமே ஒரே ஊர். தெற்குத் தெருவில் பிறந்த வீடு, வடக்குத் தெருவில் புகுந்த வீடு. ஆனாலும், புகுந்த வீட்டிலிருந்து பிறந்த வீட்டிற்குச் செல்லும் போதெல்லாம் இங்கிருக்கும் பெரியவர்கள் எல்லோரையும் நமஸ்கரித்து விட்டுதான் செல்வார். அம்மா நமஸ்காரம் பண்ணும் பொழுது, கூடவே நாங்களும் நமஸ்காரம் செய்வோம்.

 

தீபாவளி அன்று, எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு, புத்தாடை அணிந்து கொண்டதும், ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்து விட்டு, வீட்டு பெரியவர்களை வணங்கிய பிறகுதான் பட்டாசு வெடிக்கச் செல்வோம். கார்த்திகை அன்று விளக்கேற்றியதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம். காரடையான் நோன்பு அன்றும் நோன்பு சரடு கட்டிக் கொண்டதும் பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்வதுண்டு. கனுப்பொங்கல் அன்று மஞ்சள் கீறிக் கொண்டதும், மஞ்சள் கீறி விடுபவர்களுக்கு நமஸ்காரம் செய்வோம். பிறந்த நாள், திருமண நாட்களில் நிச்சயம் நமஸ்காரம் செய்வோம். வெளியூர்களுக்குச் செல்லும்பொழுது ஸ்வாமிக்கும், வீட்டுப் பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்து விட்டுதான் கிளம்புவோம். என் அக்காவின் ஸ்நேகிதியின் வீட்டில் தினமுமே அம்மாவிடம் தலை பின்னிக் கொண்டதும் நமஸ்கரித்து விட்டுதான் எழுந்திருப்பார்கள்.

 

நம் வீட்டுக்கு வரும் பெரியவர்களுக்கும், நாம் செல்லும் வீடுகளில் உள்ள பெரியவர்களுக்கும் நமஸ்காரம் செய்வதுண்டு. எங்கள் அத்தைப்பெண் வேடிக்கையாக, “ யாரோ கல்யாணத்தில் என் அப்பா, தூரத்து சொந்தக் காரரை அறிமுகப்படுத்தி, அவருக்கு நமஸ்காரம் பண்ணச் சொல்றார், அது சரியா தாலி கட்டும் நேரம், எல்லோரும் தூவும் அட்சதையெல்லாம் என் தலையில் விழுகிறது” என்பாள்.


இப்போது நமஸ்காரம் செய்யும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. இதற்கு காரணம் நாம்தானோ? நாம் நடுத்தர வயதில் இருக்கும்பொழுது யாராவது நமஸ்கரிக்க வந்தால், “சீ சீ! நமஸ்காரமெல்லாம் வேண்டாம்” என்று மறுத்து, அந்த நல்ல பழக்கத்தை வேரறுத்து விட்டு, எல்லோரும் ஹை, ஹை என்று மாடு மேய்க்கிறோம் வட இந்தியயர்களிடம் பெரியவர்களை வணங்கும் பழக்கம் இன்னும் இருக்கிறது. 

Tuesday, May 30, 2023

Mrs Chatterjee vs Norway(திரை விமர்சனம்)

 Mrs Chatterjee vs Norway

(திரை விமர்சனம்)


ராணி முகர்ஜி முக்கிய ரோலில் நடித்து, ஆஷிமா சிப்பெர் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம். உண்மை சம்பவங்களை அடிபடையாகக் கொண்ட கதை.

நார்வேயில் வசிக்கும் இந்திய இளம் தம்பதியினர் அனிருத்தோவும், தீபிகாவும். அவர்களுக்கு சுபா என்னும் மகனும், சுசி என்னும் ஐந்து மாத பெண் குழந்தையும் இருக்கின்றன. அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி விஜயம் செய்யும் நார்வீஜிய குழந்தைகள் நல அமைப்பின் உறுப்பினர்கள் திடீரென்று ஒரு நாள் தீபிகா,அனிருத்தாவின் வீட்டில் குழந்தைகள் வளருவதற்கான சரியான சூழல் இல்லை கூறி குழந்தைகளை தூக்கிச் சென்று விடுகின்றனர். அதற்கு காரணமாக அவர்கள் “தீபிகா குழந்தைகளுக்கு கையால் உணவூட்டுகிறாள் அது ஆரோக்கியமான பழக்கம் கிடையாது, அனிருத்தா வீட்டு வேலைகளில் எந்த உதவியும் செய்வது கிடையாது, சுபாவுக்கு ஆடிஸம் பாதிப்பு இருப்பது போலத் தோன்றுகிறது ஆனால் அதை குணப்படுத்த எந்த நடவடிக்கையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை” என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள். அவர்களுக்காக வாதாடிய இந்திய வக்கீல், முதலில் ஜெயித்தாலும், அவர் இந்தியராக இருப்பதால் இந்த கேஸை உணர்வு பூர்வமாக அணுகுகிறார் என்று ஸ்டே ஆர்டர் வாங்குகிறது குழந்தைகள் நல வாரியம். அதற்குப் பிறகு அந்த நாட்டைச் சேர்ந்த ஒரு வக்கீலை அரசாங்கமே நியமிக்கிறது. அந்த சமயத்தில் குழந்தைகள் நல வாரியம் என்ற போர்வையில் இப்படி அப்பாவி தம்பதியரிடமிருந்து குழந்தைகளை பறித்து, குழந்தை இல்லாதவர்களுக்கு விற்று விடுகிறார்கள், அரசாங்கம் நியமிக்கும் வக்கீலும் அதன் கையாள் என்ற விவரங்கள் அவளுக்குத் தெரிய வருகின்றன. ஒரு கட்டத்தில் அவள் கணவனே அவளுக்கு எதிராக திரும்பி விடுகிறான். தீபிகா குழந்தையை மீட்டெடுக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அவளுக்கு வெற்றியை தந்ததா? என்பதே திரைப்படம்.  

தீபிகாவாக ராணி முகர்ஜி. அவரது பூனைக் கண்ணும், கரகர குரலும் எனக்குப் பிடிக்கும். கொஞ்சம் பூசினார்போல் ஆகி விட்டார், அதனால் என்ன? மத்தியத்தர குடும்பத் தலைவி பாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்துகிறது  அந்த தோற்றம். நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நீதிபதியிடம் வார்த்தைக்கு ஒரு சார் போட்டு பேசும் இடத்தில் மனதை உருக்குகிறார். அவரது கனவராக அனிர்பன் பட்டாசார்யா, வெளியுறவுத் துறை அமைச்சராக நீனா குப்தா.

கதாநாயகன் பாத்திரம் சற்று வீக்காக இருக்கிறது. கதையில் நந்தினி என்றொரு பாத்திரம், அவள்தான் தீபிகாவிடம் குழந்தை நல வாரியம் என்ற பெயரில் நடக்கும் மோசடியை தெரியப்படுத்துகிறாள், ஆனால் அவள் பெயரைச் சொன்னாலே அநிருத்தோவுக்கு எல்லையில்லா கோபம் வருகிறது. தன் மனைவி அவளோடு பேசக்கூடாது என்று தீவிரமாக தடுக்கிறான். யார் இந்த நந்தினி? அவள் மீது அநிருத்தோவுக்கு ஏன் இத்தனை வன்மம்? என்பதெல்லாம் சரிவர தெளிவு படுத்தப்படவில்லை.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஏதோ புண்ணியம் செய்தவர்கள் என்று ஒரு எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு, வெளிநாட்டு வாழ்க்கையின் கடினமான இன்னொரு பக்கத்தை காட்டியிருக்கும் படம். இப்படி ஒரு கதையை எடுத்துக்கொண்டதோடு அதை சண்டை, நகைச்சுவை போன்ற இடைச்செருகல்கள் இல்லாமல், பெரும்பாலும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருந்தாலும் ஃப்ளாஷ் பேக்கில் கூட ஒரு டூயட்டை சேர்க்காமல் கதையில் மட்டும் கவனம் செலுத்தியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.

இந்த ஒரு கேஸ் படமாகி விட்டது. இதைப்போல இன்னும் 150 வழக்குக\ள் நிலுவையில் இருக்கிறதாம். கேட்கவே சங்கடமாக இருக்கிறது.