திருவெம்பாவை - 13
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு
கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.
பாவை நோன்பு மேற்கொள்ளேம் பெண்களுக்கு அவர்கள் நீராடும் குளத்தின் காட்சி சிவ பெருமானையும், பார்வதி தேவியையும் நினைவு படுத்துகிறது.
அந்தக் குளத்தில் பூத்திருக்கும் கரு நிறம் கொண்ட குவளை மலர்கள் பார்வதி தேவியையும், சிவப்பு நிற தாமரை மலர்கள் சிவபெருமானையும், நீர் அருந்த வந்து வரிசையாக அமர்ந்திருக்கும் வெண்மை நிற குருகுப் பறவைகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் மாலையையும், குளத்தில் அங்கும் இங்கும் ஓடும் நீர்ப் பாம்புகள் சிவ பெருமான் அணிந்திருக்கும் நாகாபரணங்களையும், அந்த குளத்தில் நீராடி தங்கள் உடல் அழுக்குகளை கழுவிக் கொள்கிறவர்கள், சிவ நாமத்தை ஜபித்து தங்கள் ஆன்மாவை தூய்மை படுத்திக் கொள்ளும் அடியார்களையும் ஒத்திருப்பதாக தோன்றுகிறது. அப்படிப்பட்ட பொய்கையில் நம் கைகளில் அணிந்திருக்கும் சங்கு வளையல்கள் ஒலி எழுப்பவும் அதோடு சேர்ந்து பாதச் சலங்கைகள் ஒலிக்கும் வண்ணம் தாமரைகள் பூத்திருக்கும் குளத்தில் பாய்ந்து அதனால் அந்தப் பொய்கை அசைய, நம் கொள்கைகளும் அசைய நீராடுகிறோம்.
நம்மை அந்த குளக்கரைக்கு அழைத்துச் செல்லும் வண்ணம் மிக அழகான வர்ணனை. பொய்கையை பார்க்கும் பொழுது சில பெருமானின் நினைவு வருகிறது என்பது பக்தியின் சிறப்பு. கோபிகைகளுக்கு பார்க்கும் அத்தனை பேரும் கண்ணனாக தெரிந்தார்கள் என்று பாகவதத்தில் படித்திருக்கிறோம். "மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்று சொல்லும், விண்ணைத் தொழுது அவன் மேவும் வைகுண்டம் என்று கை காட்டும்..." என்று ஆழ்வார் பாடவில்லையா? "பார்க்கும் மரங்கள் எல்லாம் நந்தலாலா நின்றன் பச்சை நிறம் தோன்றுதய்யே நந்தலாலா என்பது மஹாகவியின் வாக்கு.