கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, August 2, 2019

கோலாப்பூர் உலா

கோலாப்பூர் உலா

New Palace @ Kolhapur
சதாராவிலிருந்து வந்ததும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டு, மாலை கடை வீதிக்குச் சென்றோம். கோலாப்பூர் சென்று விட்டு கோலாப்பூரி செப்பல் வாங்காமல் வர முடியுமா? ஒரு வீதி முழுவதும். செருப்பு கடைகளே இருந்தன. எனக்கு மட்டும் ஒரு ஜோடி வாங்கி கொண்டு அந்த கடைக்காரரிடம், "புடவைக்கடைகள் எங்கே இருக்கின்றன? என்று கேட்டதற்கு அவர் என்ன சார் நீங்கள் தமிழ் நாட்டிலிருந்து வருகிறீர்கள், காஞ்சீபுரத்திலிருந்து இங்கு புடவைகள் வருகின்றன, நீங்கள் இங்கே போய் புடவைகள் வாங்க விரும்புகின் றீர்கள்?, இந்த ஊரில் செருப்பு, மற்றும் வெல்லம்தான் ஃபேமஸ்" என்றார் நாங்கள் மீண்டும் கேட்டதும், எதிர்த்தாற்போல் இருக்கிறது இன்று கை காட்டினார்.  அங்கு ஒரு கடையில் இரண்டு புடவைகள் வாங்கினேன்.

கோலாப்பூர் கார்ப்பரேஷன் கட்டிடத்தின் முன்புற, பக்கவாட்டுத் தோற்றம்  


அடுத்த நாள் கோலாப்பூரை சுற்றிப் பார்த்துவிட்டு, மும்பை செல்ல இரவு 8:30 மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரெஸ்ஸில் டிக்கெட் புக் பண்ணியிருந்தோம். அன்று காலை முதல் ஆடி வெள்ளி என்பது என் நினைவில் இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் அன்னை மஹாலக்ஷ்மியை தரிசித்து விட விரும்பினேன். என் கணவர் வரவில்லையென்று கூறிவிட்டதால், நான் மட்டும் தனியாக கோவிலுக்குச் சென்றேன். காலை நேரத்திலேயே நல்ல கும்பல். ஆனால் வரிசை நகர்ந்து கொண்டே இருந்ததால் சுலபமாக தரிசிக்க முடிந்தது.  அம்மனுக்கு அருகில்தன கொஞ்சம் தேக்கம். சிறப்பு பூஜைக்காக பணம் கட்டியவர்களை பின் பக்கம் சென்று அமரச் சொன்னார்கள் போலிருக்கிறது. அதில் இருந்த ஆண்களும் பெண்கள் வரிசையை பிளந்து கொண்டு செல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் தள்ளுமுள்ளு, அதனால் சலசலப்பு. பெண்கள் ஏன் இத்தனை கூச்சல் போடுகிறார்கள் என்று தோன்றியது. இருந்தாலும் தாயாரை நிதானமாக நன்றாக தரிசனம் செய்ய முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சி!.

அன்று காலை பூ போன்ற இட்டிலியும், நன்றாக வெந்து ஆனாலும் உதிர் உதிராக, சுவையாக இருந்த போகாவும் காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்பாஸ்டில் இருந்தன. தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி, சாம்பார் என்ற பெயரில் அடர்ந்த சிவப்பில் ஒரு திரவம். அதை தவிர்த்து விட்டு, சட்னி எடுத்துக் கொண்டேன். ப்ரெட் டோஸ்டும் இருந்தது. அவர்களுக்கு காபி மட்டும் போடத் தெரியவில்லை. அதனால் டீ.

அந்த ஹோட்டல்காரர்களே டூரிஸ்ட் வண்டி ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.  முதலில் நியூ பேலஸ் எனப்படும். ஷாஹு மஹாராஜின் இருப்பிடமான அரண்மனையே தற்சமயம் மியூசியமாக மாற்றப்பட்டிருக்கிறது. உள்ளே செல்லும் பொழுது செல்போனை ஆஃப் செய்து விடுங்கள் என்கிறார்கள். ஷாஹு மஹராஜ் என்றதும் மிகவும் கம்பீரமாக இருப்போரோ என்று எதிர்பார்த்தால், நம்மூர் மயில்சாமிக்கு ராஜா வேஷம் போட்டது போல், கண்களில் கொஞ்சம் பயத்தோடு இருக்கிறார்.

அவர் உபயோகித்த பொருள்கள், அமர்ந்த ஆசனம், ஆடை, போன்றவை காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. தர்பார் மண்டபம் என்னை மிகவும் கவர்ந்தது. எந்தனை உயரமான, வேலைப்பாடோடு கூடிய விதானம்! அதைப்  போல அந்தக் கால ஆயுதங்கள், விதம் விதமான கத்திகள், ஈட்டிகள், சிறிய கைத்துப்பாக்கி முதல், பீரங்கி வரை.. கருத்தை கவருகின்றன. இரும்பாலான தலைக்கவசம் அழகாக இருக்கிறது. இந்த அருங்காட்சியகத்தை தற்போது ஷாஹூஜி மஹாராஜின் வாரிசுகள் நிர்வகிக்கின்றனராம்.

அங்கிருந்து ஓவியங்களில் ஒரு ஓவியம் என்னைக் கவர்ந்தது. கைக்குழந்தையோடு தனியே செல்லும் ஒரு பெண்ணை, கவர்ந்து செல்லும் ஒருவன், அவன் கீழே தள்ளி விட்ட குழந்தையை அணைத்து பாதுகாக்கும் ஒரு சிங்கம். அந்த மனிதனின் கண்களில் தெரிந்த வெறி, பெண்ணின் பயம், சிங்கத்திடம் காணப்பட்ட அமைதி. இதில் யார் மனிதன்? யார் மிருகம்?

அங்கிருந்த ஆவணங்களில் இங்கிலாந்தின் அரசர் ஜார்ஜ், ஷாஹூஜியை, கோலாப்பூரின் அரசராக நியமித்து, மகாராஜா என்று அழைக்கப்பட  உரிமை வழங்குவதாகவும் எழுதப்பட்ட கடிதத்தை பார்த்ததும் கொஞ்சம் கோபம் கூட வந்தது. யாருடைய மண்ணிற்கு ராஜாவை யார் நியமிப்பது? இது கூட உரைக்காமல் நம் நாட்டு அரசர்கள் இருந்ததால்தான் அன்னியர்க்கு அடிமை ஆனோம்.

அங்கிருந்து, கோட்டை ஒன்றை பார்க்கச் சென்றோம். நிறைய கொண்டை  ஊசி வளைவுகளோடு இருக்கும் மலைப்பாங்கான சாலையில் பயணித்தால்
சத்ரபதி சிவாஜி அமைத்த பகல்காட் கோட்டை, தானியங்கள் சேமிப்பதற்காக பன்ஹாலா என்னும் இடத்தில் கட்டப்பட்ட இடம் போன்றவற்றை பார்த்தோம்.

காட்டுராணி கோட்டையிலே கதவுகள் இல்லை 
பகல்காட் கோட்டை பிக்கினிக் ஸ்பாட்டாக விளங்குகிறது. இந்த கோட்டை மூன்று அடுக்குகளை கொண்டது, கீழ் அடுக்கு விருந்தினர் தங்குவதற்கும், மத்தியில் ஆயுதங்களை சேமிக்கவும், மேல் அடுக்கு தண்ணீரை சேமிக்கவும் பயன்பட்டதாம். அங்கு வந்திருந்த ஒருவர் கூறினார்.

பகல்காட் கோட்டையிலிருந்து கீழே தெரியும் காட்சி 
அங்கிருக்கும் சாலையோர உணவு விடுதிகள் ஒன்றில் சாய் குடித்தோம். தந்தூரி சாய் என்றார் கடை வைத்திருந்த பெண்மணி. ஒரு மண் குவளையை அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்துகிறார். பின்னர் அதில் கலக்கப்பட்ட தேநீரை ஊற்றித் தருகிறார். புகை வாசனையோடு இருக்கும் அதுதான் தந்தூரி சாய்!

பனாலா என்னும் இடத்தில் தன்னுடைய படையில் இருந்த வீரர்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் தானியங்களை சேமித்து வைக்க சத்திரபதி சிவாஜி  கட்டப்பட்ட கோட்டையில் அவரும் அவ்வப்பொழுது வந்து தங்குவாராம். மிக அழகாக இருக்கிறது. இதுவும் தொல்பொருள் இலாகாவின் பாதுகாப்பின் கீழ் வருகிறது.




வசதிகள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் இங்கெல்லாம் பயணிப்பது சுலபமாக இருக்கிறது. மலைப்பாங்காகவும், அடர்ந்த வனமாகவும் இருக்கும் இங்கெல்லாம் கோட்டைகள் கட்டுவது என்பது நினைக்கும் பொழுதே பிரமிப்பாக இருக்கிறது.  சிவாஜியின் கொரில்லா தாக்குதல்களுக்கு அதுதான் மிகவும் வசதியாக இருந்திருக்கிறது போலும்.

அங்கிருந்து கீழிறங்கும் வழியில் ஒரு சிவன் கோவிலுக்குச் சென்றோம். லிங்கமாகவும் இல்லாமல், ஆவுடையார் மீது, சிவபெருமானின் திருமுகம் என்றும் இல்லாமல், அமர்ந்த திருக்கோலத்தில் கருப்பு நிறத்தில், முண்டாசு அணிந்து கொண்டு வித்தியாசமான ரூபம். பிரகாரத்தில் ஒரு பெரிய காமதேனு பிம்பம்.

கோவில் வளாகம் முழுவதும் கத்தரிப்பூ நிற குங்குமம் சிதறிக் கிடக்கிறது. கோவிலுக்குள் நுழையும் பொழுது, நம்மிடம் இருக்கும் தேங்காயை வாங்கிக்கொண்டு, தக்ஷனை போடுங்கள் என்று தட்டை நீட்டி, நம் நெற்றியில் கத்தரிப்பூ நிற குங்குமத்தை இட்டு விடுகிறார்கள்.

கோலாப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களில் மற்றொன்று ரங்காலா ஏரி. நல்ல சுத்தமான  நீர் நிரம்பி இருக்கும் நீர் நிலை. அதுவும் சமீபத்திய மழையினாலோ என்னவோ நீர் அலையடிக்க ததும்பிக் கொண்டிருந்தது. மாலை நேரங்களை கழிக்க உள்ளூர் வாசிகளுக்கு ஒரு இடம். குழந்தைகளுக்கு விளையாடுமிடங்கள், சாட் ஐட்டங்கள், ஐஸ் க்ரீம்கள் என்று எல்லாம் இருக்கின்றன. ஏரியின் ஒரு புறத்தில் போட்டிங் போக வசதி இருக்கிறது. ஆனால் நாங்கள் சென்றது அதன் எதிர் புறம், அதனால் ஐஸ் க்ரீம் மட்டும் சாப்பிட்டு விட்டு வந்து விட்டோம்.
நடுவில் தெரியும் கட்டிடம் நீராழி மண்டபமாக இருக்கலாம்
அதிக பட்ச நீரால் பெரும்பான்மை மஇருக்கிறது 

மொத்தத்தில் கோலாப்பூர் பயணம் நன்றாக இருந்தது, கடைசியில்தான் எதிர்பாராத சில விஷயங்களால் வெகு சீக்கிரம் ரயில் நிலையத்திற்கு சென்று விட்டாலும் எங்களால் திட்டமிட்டபடி மஹாலக்ஷ்மி எக்ஸ்பிரஸ்ஸில் பயணிக்க முடியவில்லை, அதை தவர விட்டோம்.







Wednesday, July 31, 2019

சிதம்பரத்தில் ஒரு மதுரை

சிதம்பரத்தில் ஒரு மதுரை





கோலாப்பூரிலிருந்து சதாராவிற்கு ஒரு கார் அமர்த்திக்கொண்டு சென்றோம். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே காம்ப்ளிமென்ட்ரி ப்ரேக்ஃபாஸ்ட் இருந்தது. உப்புமா, ப்ரெட் டோஸ்ட், கார்ன் ஃபிளேக்ஸ் இருந்தன. நான் ப்ரெட் டோஸ்டும், கார்ன் பிளேக்ஸ்சும் எடுத்துக் கொண்டேன்.  காலை 9:30க்கு கோலாப் பூரிலிருந்து கிளம்பிய நாங்கள் 11:30க்கு சதாராவை அடைந்தோம். சுகமான, சௌகரியமான சாலைப் பயணம். மலை, வயல், ஓடை என்று கண்ணையும், கருத்தையும் கவரும் காட்சிகள்

சதாராவில் ரத்ன சபாபதிக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. அபிஷேகம் முடிந்து தீபாராதனையில் ஆடலரசனை தரிசித்தோம். சிதம்பர ரகசியத்தை தரிசிக்க முடியுமா? என்று கேட்டதும், தலைக்கு 50 ரூபாய் டிக்கெட் வாங்க வேண்டும் என்றார்கள். புனாவிலிருந்து வந்திருந்த மற்றொரு குடும்பத்தினர்களுக்கு இப்படி ஒரு விஷயம் இருப்பதே தெரியாதாம், "உங்களால் நாங்களும் பார்த்தோம்" என்றார்கள். 

1980ஆம் வருடம் சாதுர்மாஸ்ய விரதத்தின் பொழுது சதாராவில் தங்கிய மஹா பெரியவராகிய காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி ஸ்வாமிகள், சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் கோவிலைப்போல போல ஒரு கோவிலை சதாராவில் நிர்மாணிக்க விரும்பினார். சாமண்ணா என்னும் பெரியவாளின் பக்தர் நிலம் கொடுக்க, தமிழ் நாடு, கர்நாடகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநில அரசுகள் ஒவ்வொரு கோபுர கட்டுமான செலவை ஏற்றுக்கொள்ள, கோவிலின் பிரதான மண்டபத்தை கட்ட தேவையான தேக்கு மரங்களை கேரள அரசு வழங்க, நல்ல மனம் கொண்ட பக்தர்களின் நன்கொடையால் இந்தக் கோவில் கட்டி முடிக்கப்பட்டு 1984 வருடம் பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.



பூர்வ சிதம்பரத்தோடு ஒப்பிடுகையில் மிகச்சிறியது. தெற்குப் பார்த்த நடராஜர். இந்த பிரதான கோபுரத்தைத்தான் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த காலத்தில் தமிழக அரசு கட்டிக் கொடுத்தது.

விநாயகி போல தோற்றமளிக்கும் விநாயகர்

உள்ளே நுழைந்ததும் இடது புறம் கிழக்குப் பார்த்த விநாயகர் சந்நிதி. பிரும்மாண்டமான விநாயகர். அதற்கு அடுத்து நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களோடு இருக்கும் பெரிய ஆஞ்சனேயருக்கு ஒரு சந்நிதி. மேற்கு கோபுரத்தை அடுத்து ராதா கிருஷ்ணர் சன்னிதி. அதை அடுத்து ஆதி மூலநாதர் சந்நிதி. அங்கு தரிசித்து விட்டு, வலம்  வரும்பொழுது நவக்கிரக சன்னிதி. இங்கெல்லாம் வணங்கி விட்டு கிழக்கு வாசல் வழியே வெளியே சென்றால் ஐயப்பனுக்கு ஒரு சிறிய கோவில்.

கோவில் பிரகாரத்திலேயே குளம்
முழுவதும் தேக்கு மரத்தால் கூரை அமைக்கப்பட்ட பிரதான மண்டபத்தில் மஹா பெரியவரின் படம் ஒரு சிறிய பீடத்தில் வைக்கப்பட்டுள்ளது. பிரதான மண்டப சுவர்களில் பரத நாட்டிய கரணங்களை சிற்பங்களாக வடித்திருக்கிறார்கள். பழைய கோவிலின் சிற்பங்களின் அழகு, துல்லியம், உயிர்ப்பு இவைகளோடு ஒப்பிடுகையில்...ஹும்! தென்னிந்திய பாணியில் ஒரு கோவில் என்ற வகையில் செல்லலாம். செல்லாவிட்டாலும் பெரிதாக எதையும் தவற விட்டவர்களாக மாட்டோம். ஒரிஜனல் கோவிலில் கிடைக்கும் இறையனுபவத்தையெல்லாம் எதிர்பார்க்காதீர்கள்.



இந்த கோவிலில் செய்யப்படும் பூஜைகள், அதற்கான கட்டணங்கள் இவைகள் அலுவலகம் போன்ற ஒன்றின் போர்டில் 
குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  அங்கேயே உருத்திராட்சம், ஸ்படிக மாலை, ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைபொருள்களும், ஸ்வாமிக்கும் அம்மனுக்கும் சாற்றுவதற்கு வேஷ்டி மற்றும் புடவை போன்றவைகளும் கிடைக்கின்றன. செப்டம்பரில் விமானங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலைகளை துவங்க உள்ளார்களாம்.   





நாங்கள் கோவிலுக்குள் நுழைந்த பொழுது, அங்கு வேலை செய்யும் ஒருவர், "வாங்கம்மா, ஊரிலிருந்து வரீங்களா? நான் மதுரை.." என்று வரவேற்றார். சிதம்பரமும், மதுரையும் பிரிக்க முடியாதவைதான்  போலிருக்கிறது.