குயின் (வெப் சீரிஸ்) சீசன் 1
குயின் (Queen) வெப் சீரீஸ் சீசன் 1 பார்த்து முடித்து விட்டேன். உலகின் கண்களில் அரசியாக கருதப்பட்ட ஒரு பெண், அந்த இடத்தை அடைய அவள் கொடுத்த விலை, பட்ட துயரங்கள் இவற்றை மிகவும் நியாயமாகவும் துயரம் தோய்ந்த அழகோடும் படமாக்கியிருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். இவருடைய சமீபத்திய படங்களை பார்த்த பொழுது மனதிற்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. வியாபார நிர்பந்தம், ஹீரோக்களின் அடாவடி இவைகளால் இவர் கொஞ்சம் சமரசம் செய்து கொள்ள வேண்டியிருந்தது போலிருக்கிறது. ஆனால் வெப் சீரீஸில் இந்த பிரச்சனைகள் இல்லாததால் அவர் விருப்பப்படி எடுக்க முடிந்திருக்கிறது.
சின்ன சின்ன ரோல்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையின் மகள். கான்வென்டில் படிக்கும் பள்ளியின் சிறந்த மாணவியான அந்த பெண்ணிற்கு நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசை. பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலாவது மாணவியாக வரும் அவளை பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்டாக தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த விருதை வாங்க முடியாமல் அவளை திரைப்படத்தில் நடிக்க அழைத்துச் சென்று விடுகிறாள் அவளுடைய தாயார். அங்கு துவங்குகிறது அவளுடைய சிதையும் கனவுகள். அதன் பிறகு தமிழ் திரையுலகின் முடி சூடா மன்னனான ஜி.எம்.ஆர். அவளை தன்னோடு நடிக்க வைக்க, அவள் விரும்பாத துறையில் அவள் உச்சத்தை தொடுகிறாள். ஜி.எம்.ஆரின் ஆளுமை அவளை பொது வாழ்வில் எப்படி உயர்த்துகிறது, தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படி வீழ்த்துகிறது என்பதை நறுக்கென்று விவரித்திருக்கிறார் கௌதம். அவரே இயக்குனர் ஸ்ரீதராகவும் நடித்திருக்கிறார்.
நடிகர்கள் தேர்வு சிறப்பு. சிறுவயது சக்தியாக வரும் அங்கிதாவாகட்டும், இளம் வயது நடிகையாக வரும் அஞ்சனாவாகட்டும், அரசியல்வாதியாக வரும் ரம்யா கிருஷ்ணனாகட்டும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும், ஒளிப்பதிவும் துல்லியம். அரசியல் தலைவி சக்தி தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்கும் பொழுது வசனங்கள் இன்னும் கொஞ்சம் எளிமையாக இருந்திருக்கலாம். மற்றபடி பல இடங்களில் வெகு ஷார்ப். ஜி.எம்.ஆர். மறைந்த பிறகு ஜி.எம்.ஆர் மனைவி ஜனனி தேவியும், சக்தியும் பேசிக்கொள்வது, ஜி.எம்.ஆரும் சக்தியும் உரையாடும் சில இடங்கள். "என்னை சுற்றி இருப்பவர்களிடம் என் புத்திசாலித்தனத்தை நிருபித்துக் கொண்டே இருக்கணும், ஆனால் மக்களுக்கு நான் புத்திசாலி என்று தெரியக்கூடாது". என்று டி. வி. தொகுப்பாளினியிடம் சொல்வது போன்றவை உதாரணங்கள்.
ஜி.எம்.ஆருக்கும் சக்திக்கும் நிலவிய உறவு எப்படிப்பட்டது என்பதை சக்தியின் தாய்,"ஏன் கல்யாணம் கல்யாணம்னு அலையற? அதுதான் கல்யாணம் ஆகாமலே எல்லா கண்ராவியும் கிடைக்கிறதே? கழுத்தில் கால் பவுன் தங்கம் இல்லை.." என்று வெகு சுலபமாக சொல்லி விடுகிறாள். இதை திரைப்படமாக எடுத்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. எதையும் மறைக்கவில்லை, எதையும் போட்டு உடைக்கவுமில்லை. சொல்ல வேண்டியதை நாசூக்காக சொல்லி இருக்கிறார். படிப்பதை தவிர வேறு எதுவும் தெரியாத, வெளி உலகம் புரியாத, அப்பாவி பெண், ஆணவமும், பிடிவாதமும் கொண்டவளாக எப்படி, ஏன் மாறினாள்? என்பதை பார்க்கும் பொழுது நெஞ்சம் கனக்கிறது. பாராட்டப்படவேண்டிய நல்ல முயற்சி! ஒரு அசந்தர்பமான சூழலில் மக்கள் தலைவியாக உருவெடுக்கும் அவள், இது ஆரம்பம்தான் என்று கூறுவதோடு சீசன் 1 முடிகிறது. அடுத்த சீசனுக்கு காத்திருக்கிறோம்.