கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, July 10, 2020

You are cordialy invited....

You are cordialy invited....



திருமணத்தில் ஒரு முக்கியமான அம்சம் அழைப்பிதழ்கள். லக்கின பத்திரிகை எழுதுவது என்பது ஒரு முக்கியமான சடங்கு. குடும்பத்தில் இருக்கும் பெரியவர் அழைப்பதாகத்தான் பத்திரிகைகள் அச்சிடப்படும். 

கல்யாண பத்திரிகைகள் மஞ்சள் மற்றும் பிங்க் நிறத்தில்தான் இருந்தன. பத்திரிகையின் முதல் பக்கத்தில் ஆங்கிலத்திலும், உள்ளே தமிழிலும் அச்சிடப்பட்ட அந்த அழைப்பிதழ்களில் வாக்கியங்களும் ஒரே மாதிரிதான் இருக்கும். இப்போதோ பத்திரிகைகள் மட்டுமல்ல அதில் இடம் பெறும் வாசகங்களும் பலவிதம். மணமக்கள் தாங்களே அழைப்பது போன்றவை, மணமக்களின் சகோதரன் அல்லது சகோதரன் தங்களின் நண்பர்களுக்காக தனியாக பத்திரிகைகள் அடிக்கின்றனர். 


என் பெற்றோர்கள் திருமணம் நடந்த காலம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த சமயம் என்பதால் கெஸ்ட் கண்ட்ரோல் இருந்ததாம். அதனால்(இந்த கோவிட் காலத்தில் 20 பேர்களுக்குத்தான் அனுமதி என்பது போல) அதனால் எங்கள் பெற்றோரின் திருமண அழைப்பிதழில் பத்திரிகையில் கீழே 'தாங்கள் வரும்பொழுது தங்கள் ரேஷனை கொண்டு வரவும்' என்று அச்சிடபட்டிருந்தது.  அதாவது ஊரிலிருந்து வந்தவர்கள் தங்களுடைய ரேஷனை கொண்டு வந்து அதைத்தான் சமைத்து சாப்பிட்டார்கள் என்று காட்டுவதற்காக இந்த ஏற்பாடு. 

கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முந்தைய பத்திரிகை கிடைத்தால் பாருங்கள் அதில் 'நான்கு நாட்கள் முன்னதாகவே வந்திருந்து' என்று போட்டிருப்பார்கள். அது கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து, முகூர்த்தத்திற்கு மட்டும் அழைக்கும் ஒரு பத்திரிகை, ரிசப்ஷனுக்கு மட்டும் அழைக்கும் பத்திரிகை என்று நம்முடைய விருந்தோம்பல் தேய்ந்து விட்டது.  


இப்போதைய கொரோனா காலத்தில் இருபது பேர்களைத்தான் திருமணத்திற்கு அழைக்க முடியும், மற்றவர்கள் ஆன் லைனில் பார்க்கும் வண்ணம் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு ஏற்பாடு செய்து விடுகிறார்கள்.இப்போது பத்திரிகைகளில் லைவ் ஸ்ட்ரீமிங்க்கான கோடை அச்சிட்டு வருகின்றன. அதை ஸ்கேன் பண்ணினால் லைவ் ஸ்ட்ரீமிங் பார்க்க முடியும். 



பட்டணத்தில் பூதம் படத்தில் செய்தித் தாளிலேயே 'நான் ஆணையிட்டால்,அது நடந்து விட்டால்..' பாடலையும், 'பாட்டும் நானே, பாவமும் நானே ..' பாடலையும் ஜீ பூம் பா ஓட்டுவார். அது போல எதிர்காலத்தில் திருமண அழைப்பிதழிலேயே திருமணத்தை ரசிக்கும் பாக்கியம் கிடைக்கலாம்.