கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, June 21, 2019

இலை அடை

இலை அடை 

தேவையான பொருள்கள்:

பச்சை அரிசி   -  1 1/2 ஆழாக்கு 
தேங்காய் துருவல் - மீடியம் சைஸ் தேங்காய் ஒன்றை 
                                       துருவியது 
வெல்லம்     -  தேங்காய் துருவல் அளவு 
ஏலக்காய் பொடி - சிறிதளவு 
நெய்                     - 1 டேபிள் ஸ்பூன் 
வாழை இலைகள்(must)

செய்முறை:

இதில் இரண்டு ப்ரிபரேஷன்கள் இருக்கின்றன. ஒன்று பேஸ் மாவு, இரண்டாவது பூரணம். பேஸ் மாவிற்கு அரிசியை ஊற வைத்து அரைக்க வேண்டும். எனவே பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரங்கள் ஊற வையுங்கள். அது ஊறிக் கொண்டிருக்கும் நேரத்தில் தேங்காய் பூரணத்தை ரெடி பண்ணி விடலாம்.





தேங்காய் பூரணம் இரண்டு விதமாக செய்யலாம். சிலர் வெல்லத்தில் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து,வெல்லம் கரைந்த பின் பின்னர் அதில் தேங்காயை சேர்த்து பூரணமாக கிளறுவார்கள். சிலர் தேங்காய், வெல்லம் இரண்டையும்  ஒன்றாக போட்டு கிளறி விடுவார்கள். நான் இரண்டாவது முறையை பின்பற்றுகிறவள்.  பூரணம் ரெடியானதும் அதில் ஒரு ஸ்பூன் நெய், கொஞ்சம் ஏலப்பொடி சேர்த்து கிளறி ஆற விடவும்.



அரிசி நன்றாக ஊறியதும், அதை மிக்சியில் போட்டு, தண்ணீர் விடாமல் கெட்டியாகவும்,நைஸாகவும் அரைத்துக் கொள்ளவும். இப்போது இங்கிரிடையேன்ட்ஸ் தயார். இலை அடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.






வாழை இலையை தண்ணீர் விட்டு துடைத்து, பின் அதில் அரைத்த அரிசி மாவை ஒரு சிறிய கரண்டி அல்லது பெரிய ஸ்பூனால் ஊற்றி, தோசை வார்ப்பது போல *வட்டமாக தேய்த்து, அதில் ஒரு ஓரத்தில் பூரணத்தை வைத்து, மறு பக்க இலையோடு சேர்த்து மடித்து மூடவும், மூடிய பக்கம் கீழே இருக்கும் வண்ணம் இட்லி தட்டில் வைத்து வேக வைக்க வேண்டும். ஒரு தட்டில் மூன்று அல்லது நான்கு இலை அடைகள் வைக்கலாம். நன்றாக வேக 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஆகும். சற்று சூடு ஆறியதும் இலையை உரித்தால், அழகான, சுவையான இலை அடைகள் தயார்.









* மாவை தேய்ப்பதில் கவனம் தேவை, மிகவும் மெலிதாகவும் இருக்கக்கூடாது, மிகவும் தடிமனாகவும் இருக்கக்கூடாது. நிதானமாக இருக்க வேண்டும். 

பின் குறிப்பு: இதில் தேங்காய் பூரணம்தான் வைக்க வேண்டும் என்பதில்லை. சக்கை விழுது என்னும் பலாப்பழ விழுதோடு தேங்காய் சேர்த்து அதையும் பூரணமாக வைத்து மூடலாம். ஊற வைத்த அவல், தேங்காய், வெல்லம், இவற்றோடு பொடியாக நறுக்கிய வாழைப்பழம் சேர்த்து  பூரணமாக செய்து, வைத்து மூடலாம். 

Monday, June 17, 2019

ஹியர் இஸ் கிரேசி(மோகன்)

ஹியர் இஸ் கிரேசி(மோகன்)

பிரபலமான மனிதர்கள் சிலரை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவோம். ஆனால் அவர்களை நேரில் சந்தித்தால் மிகவும் ஏமாற்றமாக இருக்கும். ஏனென்றால் தன் எழுந்தாலும், பேச்சாலும் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் இமேஜுக்கும் நேரில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திற்கும் சம்பந்தமே இருக்காது. க்ரேஸி மோகனோ தன் நாடகங்களில் எப்படி எளிமையாக, நகைச்சுவை உணர்ச்சி மிக்கவராக வந்தாரோ அதே எளிமையோடும், நகைச்சுவை உணர்ச்சியோடும் நிஜத்திலும் இருந்தார்.

நான் மஸ்கட்டில் இருந்த பொழுது மஸ்கட் தமிழ்ச்சங்கம் நடத்தி வந்த சங்க நாதம் என்னும் கையெழுத்து பத்திரிகையின் எடிட்டோரியல் போர்டில் இருந்தேன். அதற்காக  மகளிர் மட்டும் படப்பிடிப்பில் இருந்த கிரேஸி மோகன் அவர்களை சந்தமாமா பில்டிங்கில் சந்தித்து பேட்டி கண்டேன். சகஜமாக உரையாடினார். அந்த பேட்டியின் காபி தற்சமயம் என்னிடம் இல்லை. நினைவில் இருப்பதை பகிர்ந்து கொள்கிறேன்.


கிரேசி மோகன், சீனு மோகன் மற்றும் அவர் உதவியாளர்
நான்: ஏன் உங்களின் எல்லா நாடக பாத்திரங்களுக்கும் மாது, சீனு, மைதிலி, ஜானகி என்றே பெயர் கொடுக்கிறீர்கள்? 

மோகன்: அது எனக்கு சௌகரியமாக இருக்கிறது. மாது இப்படித்தான், சீனு இப்படித்தான் என்று தெரிந்து விடுவதால் கேரக்டரைசேஷனுக்காக மெனக்கெட வேண்டாம். கணேஷ், வசந்த், அப்புசாமி, சீதா பாட்டியெல்லாம் இல்லையா?

நான்: நாடகம் போடுவதற்கு உங்களுக்கு யார் முன்னோடி?

மோகன்: மௌலிதான். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது அவர் கல்லூரியில் நாடக போட்டிக்காக போட்ட ட்ராமா வை பார்த்து விட்டுதான் எனக்கும் ட்ராமா எழுத வேண்டும் என்று ஆசை வந்தது. ஹி இஸ் எ க்ரேட் ரைட்டர்.

நான்: உங்கள் நாடகங்களில் பிராமண பாஷைதானே பேசுகிறார்கள்?

மோகன்: அது ஆரம்பத்தில்.  நான் ஒரு பிராமினாக இருப்பதால் அந்த பாஷையில் எழுதுவது எனக்கு சுலபமாக இருந்தது. இப்போது குறைத்து விட்டோம்.

நான்: நகைச்சுவை நாடகங்களில் நடிப்பவர்களுக்கு நகைச்சவை உணர்வு இருக்க வேண்டியது அவசியமா?

மோகன்: இருந்தால் நன்றாக இருக்கும். நடிக்க நடிக்க அது வந்து விடும்.

நான்: உங்கள் செலிபிரிட்டி ஸ்டேட்டஸ் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கிறதா?

மோகன்: நிச்சயமாக இல்லை. வீட்டில் இருக்கும் பொழுது என் பையன்களை ஸ்கூலில் கொண்டு விடுவது, அழைத்துக் கொண்டு வருவது போன்றவற்றை செய்வேன். குடும்பத்தோடு நேரம் செலவழிப்பேன்.

நான்: மக்கள் சோகத்தை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு  நகைச்சுவையை நினைவில் வைத்துக் கொள்வதில்லை என்று ஒரு பெண் எழுத்தாளர் கூறியிருக்கிறாரே?

மோகன்: அது அவரது தனிப்பட்ட கருத்து. நாம் இன்று வரை காதலிக்க நேரமில்லையை ஞாபகம் வைத்துக்கொண்டு தானே இருக்கிறோம்?

உண்மைதானே, கிரேஸி மோகனின் ஹியூமர் மறக்கக்கூடியதா என்ன? பல திரைப்படங்களில் அவருடைய நகைச்சுவை வசனங்களை ரசித்திருந்தாலும் நான் மிகவும் ரசித்தது தொலைகாட்சியில் ஒளிபரப்பான 'ஹியர் இஸ் கிரேஸி' என்னும் சீரியலைத்தான்.

அதில் இரண்டு மாது இரண்டு சீனு வருவார்கள். ஒரு சீனு மொட்டைத் தலையோடு இருப்பார். ஒரு காட்சியில் மாதுவிற்கும், மொட்டை சீனுவிற்கும் கிரேஸி மோகன் தியரி ஆஃப் ப்ராபபிலிடி பாடம் நடத்துவார்.

கிரேசி மோகன்: ப்ராபபிலிட்டி என்பதற்கு தமிழில் சான்ஸ், ஐயையோ, சந்தர்ப்பம். உதாரணமா, என்கிட்ட இருக்கும் இந்த எட்டணாவை சுண்டி விட்டால், பூவும் விழும், தலையும் விழும், சோ ப்ராபபிலிட்டி ரெண்டு

மொட்டை சீனு:  சார் ஒரு சந்தேகம்,

கிரேசி: சந்தேகமா, அடடா! அதுக்குள்ளயா? என்ன? கேளு

மொட்டை சீனு: இந்த ப்ராபபிலிட்டி உங்களோட அந்த எட்டணாவில்  மட்டும்தானா? எல்லா எட்டணா, நாலணா, பத்து பைசா, அஞ்சு பைசாவுக்கும் உண்டா?

கிரேசி: டேய் மொட்ட, உனக்கு போய் சந்தர்ப்பத்தை பற்றி பாடம் நடத்த வந்தேனே, என்னோட அசந்தர்ப்பம்டா.

இதைப்போன்ற வார்த்தை விளையாட்டு அவருக்கு கை வந்த கலை. பஞ்ச தந்திரத்தில் வரும் முன்னாடி பின்னாடி காமெடியை மறக்க முடியுமா?

அவர் நாடக எழுத்தாளர், நடிகர் மட்டுமல்ல. ஓவியம், வெண்பா எழுதுவதிலும் வல்லவராக இருந்திருக்கிறார். பாண்டிச்சேரி அன்னையிடமும் , சாய்பாபாவிடமும், பெருமாளிடமும் பக்தி பூண்டவர்.

ஹியர் இஸ் கிரேசி நாடகத்தில் இரண்டு மாது, இரண்டு சீனு என்று இரண்டிரண்டு கதா பாத்திரங்கள் வருவார்கள். அதை எழுதிக் கொண்டே போனவர் கடைசியில் அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் குழம்பி விட்டாராம். எப்படி முடிப்பது என்று தெரியாமல் சுந்தரம் பஜனுக்கு சென்று விட்டு எழுத உட்கார்ந்தாராம். அந்த முடிவை நான் எழுதவே இல்லை, சாய் பாபாதான் எழுதினார் என்று அவர் கூறியதாக அவருடைய நண்பர் சீனு மோகன் கூறினார்.

திறமை வாய்ந்த ஒரு நல்ல மனிதரை இழந்து விட்டோம்.




















    .