கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 18, 2022

மனம் கவர்ந்த மாண்ட்ரியால்


மனம் கவர்ந்த மாண்ட்ரியால்



ஆட்டவாவிலிருந்து மாண்ட்ரியால் செல்வதற்கு இரண்டு வழிகளை கூகுளார் பரிந்துரைத்தார். ஒன்று ஹைவே, மற்றது சீனிக் பியூட்டி பாதை. நாங்கள் இரண்டாவதை தேர்ந்தெடுத்தோம். வழி முழுவதும் காடு, ஆறு என்று இயற்கையை ரசித்தபடி பயணித்தோம். முதல் நாள் சூறைக்காற்று சேர்ந்த மழையால் ஆங்காங்கு முறிந்து கிடக்கும் மரங்களையும் பார்க்க முடிந்தது. அகண்டு, விரிந்து ஓடும் செயின்ட் லாரன்ஸ் நதி எங்கள் திருச்சியின் அகண்ட காவேரியை நினைவூட்டியது. 

க்யூபெக் எல்லையைத் தொட்டவுடனேயே ஃபிரஞ்சு ஆதிக்கம். தெருப் பெயர்கள், சிக்னல்களில் இருந்த பெயர்ப் பலகைகள் எல்லாவற்றிலும் ஃபிரெஞ்சு, ஆங்கிலம் இரண்டு மொழிகளும் காணப்பட்டன. 






மாண்ட்ரியால் அழகும், கம்பீரமும் சேர்ந்த நகரம்.  அதுவும் ஓல்ட் மாண்ட்ரியாலில் Notredame பெசலிகா அமைந்திருக்கும் டவுன்டவுனில் எல்லா வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் இருக்கின்றன. எல்லாமே ஃபிரெஞ்சு கட்டிடக்கலையில் அமைந்து நம்மை நிமிர்ந்து பார்க்கத் தூண்டி சொல்லிழக்க வைக்கின்றன. 










நாற்றிடேம் (Notredame) பெசலிகா சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக இருக்கிறது. இதன் விதானங்களின் வேலைப்பாடுகள் கலை நயத்தோடு இருக்கின்றன. இங்கு வண்ண வண்ணமாக ஏற்றி வைக்கப் பட்டிருக்கும் மெழுகு வர்த்திகள் இங்கே பிரார்த்தனை செய்யவும் வருகிறார்கள் என்று எண்ண வைத்தாலும், பெரும்பாலும் இதை ஒரு சுற்றுலா தலமாக கருதி புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்துக் கொள்பவர்கள் தான் அதிகம். 

அங்கிருந்து மதிய உணவு சாப்பிட இந்திய உணவகத்தை  நடந்து, நடந்து தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு விட்டு, ஒரு ஐஸ் கிரீமையும் விழுங்கி விட்டு ஓல்ட் போர்ட் சென்றோம்.



செயின்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓல்ட் போர்ட்டில் இந்த வசந்தம் மற்றும் கோடை காலத்தில் வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக எக்கச்சக்க பொழுது போக்கு அம்சங்கள். ஜிப் லைன் போன்ற அட்வென்சர் விளையாட்டுகள், பெடல் போட்ஸ், சைக்கிள் இவைகளை எடுத்து ஓட்டலாம். ஒரு இடத்தில் டில்லியில் இருக்கும் சைக்கிள் ரிக் ஷாக்கள் போல வரிசையாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.  டிக்கெட் வாங்கி கொண்டு ஏறி அதில் அந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தேன். அதை க்வாட்ரா சைக்கிள் (qradra cycle) என்கிறார்கள். அதில் ஏறி சுற்றி வரலாம், ஆனால் நாம்தான் ஓட்ட வேண்டும். நோ ரிக் ஷாகாரர். 





நிறைய உணவு விடுதிகள், அழகு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், டாட்டூ போட்டு விடுபவர்கள் என்று அந்த இடம் நம் ஊரின் பொருட்காட்சி நடைபெறும் இடம் மாதிரி இருக்கிறது. இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றோம்.

மறுநாள் தாவரவியல் பூங்காவிற் குச் சென்றோம். முதலில் எனக்கு பெரிதாக எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. "என்ன பெரிய பொட்டானிக்கல் கார்டன்?லால்பாகை விடவா? என்று நினைத்தேன். 

ஆனால் மிகப்பெரிய, ஏறத்தாழ 22,000க்கும் மேற்பட்ட செடி வகைகள். மூலிகைச் செடிகள், நீர்த்தாவரங்கள் என்று விதம் விதமான தாவரங்கள் வளரும் மிகப் பெரிய பூங்கா. இதை சுற்றி வருவதற்கு இரண்டு மணி நேரங்கள் பிடிக்கிறது. 



இதில் சைனீஸ் தோட்டம் கணிசமான இடத்தை ஆக்கிரமிக்கிறது. அங்கு போன்சாய் மரங்களுக்கு தனி இடம். எனக்கு போன்சாயை ரசிக்க முடியாது. உயர்ந்து, பரந்து வளரக்கூடிய மரங்களை குட்டையாக வளர்ப்பது அவைகளுக்கு செய்யும் துரோகம் என்று தோன்றும்.‌ 

இந்த தாவரவியல் பூங்காவிற்கு எதிரே மாண்ட்ரியால் டவரும், ஒலிம்பிக் ஸ்டேடியமும் இருக்கின்றன. அவை பராமரிப்பு வேலைகளுக்காக மூடப்பட்டிருந்ததால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. மாண்ட்ரியால் டவரின் சிறப்பு அது 45 டிகிரி சாய்வாக கட்டப்பட்டிருப்பதுதான். 

மாண்ட்ரியால் டவர்

பூங்கா முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு ஊருக்கு கிளம்பினோம். ஒரு இந்திய உணவகத்தில் மதிய உணவை கையில் வாங்கிக் கொண்டோம். வழியில் தென்னிந்திய பாணியில் கோபுரம், பளபளக்கும்  விமானத்தோடு, ஒரு கோவில் தென்பட்டது. எந்த கோவில் என்று தெரியவில்லை. அடுத்த முறை வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டோம். ஆனால் ஆட்டவாவிற்கு தனியாக இரண்டு நாட்கள், மாண்ட்ரியாலுக்கு இரண்டு நாட்கள் பிளான் பண்ண வேண்டும் என்று தோன்றியது. 

திரும்பும் வழியெங்கும் ஒரு பக்கம் நதி, இன்னொரு பக்கம் வயல்கள். அவற்றில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள், சில இடங்களில் குதிரைகள். நான் என் மகளிடம்," என் சின்ன வயதில் நான் வசித்த திருச்சி இப்படித்தான் நகரத்திற்கு நடுவிலேயே வயல்களோடு இருக்கும்" என்று கூறி பெருமூச்சு விட்டேன். வேறு என்ன செய்ய முடியும்?

பல தடங்கல்களோடு தொடங்கினாலும், இனிமையாக முடிந்த பயணம். 

Sunday, June 12, 2022

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

முதல் படத்தில் தெரிவது மியூசியம்

மதிய உணவை சாப்பிட்டு விட்டு அலெக்ஸாண்ட்ரா பாலத்தில் நடந்து விட்டு, ரைட்யூ நதியில் படகு சவாரிக்கு வர வேண்டும் என்ற திட்டத்தின் படி மதிய உணவிற்குப் பின் அலெக்ஸாண்ட்ரா பாலத்தை நோக்கி வண்டியை செலுத்தினார் மருமகன். 

நேஷனல் வார் மெமோரியல் அருகே வந்த பொழுது தூறல் தொடங்கியது. ஆலங்கட்டி மழை போல பெரிய பெரிய மழைத்துளிகள் பெருத்த ஓசையோடு கார் மீது விழுந்தன. அன்றைய வானிலை அறிக்கையில் மூன்று மணிக்கு மழை என்று இருந்ததால் நாங்கள் குடைகள் எடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று பெய்த மழைக்கு இந்த குடைகள் உதவியிருக்காது. அப்படி ஒரு பேய் மழை. கார் ஓட்டுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. எதிரே சாலை தெரியவேயில்லை. பக்கவாட்டில் மரங்களின் ஆட்டம் பயமுறுத்தியது. எப்படியோ மாப்பிள்ளை சமாளித்து ஓட்டினார். ஜி.பி.எஸ் வேலை செய்யாததால் வழி காட்ட யாருமில்லை. ஒரே இடத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தோம். இந்த மழையில் போட்டிங் இருந்தால் கூட போக வேண்டாம் என்று தோன்றியது.
 
 



ஒரு வழியாக மழை விட்டது. நாங்கள் ரைட்யூ கேனால் வந்து சேர்ந்தோம். க்ரூஸ் கிளம்பும் இடத்திற்கு வந்து சேர்ந்த பொழுது ஒரு க்ரூஸ் கிளம்பிச் சென்றதை பார்த்தோம். என் மகள் அதன் ஆர்கனைசர்களை தொடர்பு கொண்ட பொழுது நாங்கள் புக் பண்ணியிருந்த 4:30 மணி க்ரூஸ் கேன்சலாகி விட்டதாகவும் 5:30 மணி க்ரூஸில் இடம் இருந்தால் எங்களை ஏற்றுக் கொள்வதாகவும், இல்லாவிட்டால் பணம் திருப்பித் தரப்படும் என்றும் கூறினர். 

அலெக்ஸாண்ட்ரா பாலத்தை கையில் அடக்குவதை போல என் மகள் எடுத்த படம்

அந்த க்ரூஸ் பயணம் ஒன்றரை மணிநேரம். நாங்கள் அவசரத்தில் குழந்தைக்கு உணவு எதுவும் கையில் எடுத்துக் கொள்ளவில்லை. டயபர் வேறு மாற்ற வேண்டும். அதுவும் கையில் இல்லை. எனவே மிகவும் எதிர்பார்ப்போடு இருந்த க்ரூஸ் பயணத்தை ரத்து செய்து, சில புகைப்படங்கள் மட்டும் எடுத்துக் ஹோட்டலுக்குச் சென்றோம். 


செல்லும் வழியில் சாலையில் சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை. என்ன காரணம் என்பது ஹாலிடே இன் சென்ற பிறகுதான் தெரிந்தது. சற்று முன் மழை பெய்த பொழுது ஒரு பெரிய இடி இடித்தது, அதில் ஆட்டவா முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டதாம். "சிஸ்டம் வேலை செய்யாததால் இப்போது செக் இன் செய்வது கடினம்". என்றார்கள். 

ஹோட்டலிலிருந்து வியூ 

என்ன செய்யலாம் என்று ஆலோசித்தோம். மறுநாள் செல்வதாக இருந்த மாண்ட்ரியாலுக்கு இன்றே சென்று விடலாமா? என்று தோன்றியது. அங்கு ஏதாவது ஹோட்டலில் இடம் கிடைக்குமா என்று தேடினால் எல்லா விடுதிகளுமே ஓவர் புக்ட்! சரி வெளியே சென்று சாப்பிட்டு விட்டு வரலாம். வழியில் ஏதாவது கடையில் குழந்தைகளுக்கு டெட்ராபேக்கில் பால் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கிரகம் விடவில்லை. மின்சாரம் இல்லாததால் எல்லா கடைகளும், மூடப்பட்டு விட்டன. 

திறந்திருந்த ஒரு இந்திய உணவு விடுதியில்,  "ஏ.சி. போட முடியாததால் உள்ளே சூடாக இருக்கும், மெனு கார்டில் இருக்கும் எல்லா ஐட்டம்களும் கிடைக்காது" என்றார்கள். அதனால் என்ன? சாப்பிட ஏதாவது கிடைக்கிறதே என்று அங்கேயே இரவு உணவை
முடித்துக் கொண்டோம். அங்கிருந்த பெண்மணி, "நாளைக் காலை பத்து மணிக்குத்தான் மின்சாரம் வரும்" என்று குண்டைப் போட்டார். கால் நீட்டி படுக்க இடம் கிடைத்தால் போதும் என்று ஹாலிடே இன்னுக்கே திரும்பினோம். 

"உங்கள் அறை ஐந்தாவது மாடியில் இருக்கிறது. அங்கிருக்கும் செக்யூரிட்டி உங்களுக்கு அறையைத் திறந்து விடுவார். பவர் இல்லாததால் லிஃப்ட் இல்லை, நீங்கள் படியேறித்தான் செல்ல வேண்டும். சாரி ஃபார் த இன்கன்வீனியன்ஸ்" என்றார்கள். அந்த அசௌகரியத்திற்காக பில் தொகையில் இருந்து டாலர் கழித்துக் கொண்டார்கள்.

செல்ஃபோனில் இருக்கும் டார்ச்சின் உதவியோடு எங்கள் உடைமைகளையும் தூக்கிக் கொண்டு படியேறினோம். கனடா போனாலும் கரெண்ட் கட் விடவில்லை!

அறை வசதியாக இருந்தது. காஃபி மேக்கர், மைக்ரோ வேவ் அவன், அயர்ன் பாக்ஸ் என்று அத்தனையும் இருந்து என்ன பயன்? அவற்றை இயக்க மின்சாரம் இல்லையே!!

கனடா என்பதால் புழுக்கம் இல்லை. அதனால் நன்றாக தூங்கினோம். மறுநாள் காலை எழுந்து பல் துலக்கி விட்டு குளிக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்த பொழுது கரெண்ட் வந்து விட்டது. 

அப்பாடா! வாட் எ ரிலீஃப்! முதலில் காபி குடித்தோம். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக் ஃபாஸ்ட் என்றார்கள். என்ன பிரமாதம்? இட்லி, வடை, பொங்கல், பூரியா கிடைக்கப் போகிறது? ப்ரெட், பட்டர்,ஜாம், கார்ன் ஃப்ளேக்ஸ், பான் கேக்(Pan cake), கப் கேக் இவைதானே? சாப்பிட்டு விட்டு பக்கத்தில் இருக்கும் அருவியை பார்த்து விட்டு அந்த காட்டிற்குள் கொஞ்சம் நடந்து விட்டு வரலாம் என்று சென்றோம். 

இதுதான் அருவியாம் 

வாட்டர் ஃபாலஸ், வாட்டர் ஃபால்ஸ் என்று என் மகள் கொடுத்த பில்ட் அப்பில் நான் குற்றாலம், பாபநாசம் ரேஞ்சுக்கு கற்பனை செய்து கொண்டேன். ஒரு சின்ன ஓடை, ஒரு பாறையிலிருந்து விழுகிறது,
அது வாட்டர் ஃபால்ஸாம்.. தோடா!


ஆனால் அந்த ட்ரேயில் (trail) மிக அழகு! எனக்கு அஹோபிலம்தான் நினைவுக்கு வந்தது. 

- இன்னும் வரும்