கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, June 20, 2026

சாப்பாட்டு ராமன்

 சாப்பாட்டு ராமன்

புராணங்களில் கிருஷ்ணன்தான் சாப்பாட்டு பிரியனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான். கோகுலத்தில் இருந்த எல்லா வீடுகளிலும் புகுந்து பால்,வெண்ணெய், தயிர் என்று எல்லாவற்றையும் கபளீகரம் செய்தவன் அவன்தான். ராமன் அப்படியெல்லாம் செய்யவில்லை. நாமே கூட கோகுலாஷ்டமிக்குத்தான் சீடை, முறுக்கு, தேங்குழல்,அப்பம்,வடை, பாயசம் தவிர நிறைய பழங்கள் வேறு நைவேத்தியம் செய்கிறோம். இவற்றோடு இனிப்பு வகைகளும் உண்டு. ராமனுக்கோ சிம்பிளாக பானகம்,நீர் மோர்.  ஆனால் ராமனைத்தான் சாப்பாட்டு ராமன் என்கிறோம். இது ஏன் என்று யோசித்தபொழுது ஒன்று தோன்றியது. 



ராமனுடைய வாழ்க்கையில் அவன் சாப்பிட்ட மூன்று சாப்பாடுகள் மிகவும் சிறப்பானவை. முதல் சாப்பாடு கங்கை கரையில் அவனைப் பார்க்க ஓடோடி வந்த குகன் கொண்டு வந்த தேனையும், மீனையும் அன்போடு ஏற்றுக் கொள்கிறான்.  தேன் அவனுடைய பக்தியின் உயர்வையும், மீன் அன்பின் ஆழத்தையும் உணர்த்துகிறது என்பது ஆன்றோர்கள் கருத்து. அந்த எளிய வேடன் அளித்த உணவை அன்போடு ஏற்றுக் கொண்டது ராமனின் எளிமை.



இரண்டாவது வனவாசத்தில் சபரி கொடுத்த கனிகளை உண்டது. சீதையைப் பிரிந்த துக்கத்தில் சரியாக சாப்பிடாத ராமன், சபரி கொடுத்த கனிகளைத்தான் பிரியமாக உண்கிறான். அதைப்பார்த்த தம்பி லட்சுமணனுக்கோ  இத்தனை நாட்களாக சாப்பிடாத தன் அண்ணன் இன்று சாப்பிடுகிறாரே என்பதில் ஆனந்தம். தன் குருவின் வார்த்தையை ஏற்றுக் கொண்டு வருடக் கணக்காக ராமனுக்காக காத்திருந்து சபரி அளித்த கனிகளை உண்டது ராமனுடைய கருணை.

யுத்தம் முடிந்து அயோத்திக்கு திரும்பும் வழியில் பாரத்வாஜரின் ஆஸ்ரமத்தில் அவர்களுக்கு விருந்து உபசாரம். சமைத்த உணவை இலை போட்டு எல்லோருக்கும் பறிமாறியாகிவிட்டது ஆனால் ராமன் உண்ணத் தொடங்கவில்லை, யாருக்கோ காத்திருக்கிறான். 

வனவாசம் தொடங்கி சித்திரகூடத்தில் அவர்களை காண வந்த பரதன், தன்னால் அயோத்தி அரியணையில் அமர முடியாது என்று அண்ணனின் பாதுகைகளை வாங்கிச் சென்று அவற்றை ராமனின் பிரதிநிதியாகக் கருதி அரியணையில் வைத்து  ஆட்சி புரிகிறான். அப்போது பரதன் ராமனிடம், பதினான்கு வருட வனவாசம் முடிந்த உடனேயே ராமன் அயோத்தி திரும்பி விட வேண்டும், அப்படி செய்யாவிட்டால் தான் தீ மூட்டி உயிரை மாய்த்துக் கொண்டு விடுவேன் என்று உறுதி வாங்கிக் கொள்கிறான். 

நந்திகிராமத்தில் ராமனுக்காக நாட்களை எண்ணியபடி காத்திருக்கும் பரதன் ராமன் வருவதற்கு சிறிது தாமதமானால் கூட தன் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவான் என்பதால், தன்னுடைய அங்குலியத்தை ஹனுமனிடம் கொடுத்து, தன்னுடைய வருகையை பரதனுக்கு அறிவித்து, பரதன் நிலையை தன்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும் என்று ஹனுமனுக்கு கட்டளையிட்டு, ஹனுமனின் வருகைக்காக சாப்பிடாமல் காத்திருக்கிறான்.

அதைப் போலவே நந்திகிராமத்தில் பதினாங்கு வருடங்கள் கழிந்த பின்னாலும் ராமன் வராததால், தீ மூட்டி, அதில் குதிக்கத் தயாரான பரதனிடம் ராமனின் மோதிரத்தைக் காட்டி, ராமனின் வெற்றியையும், அவன் விபீஷணன், சுக்ரீவன் போன்றவர்களோடு அயோத்திக்கு வந்து கொண்டிருப்பதையும், பரத்வாஜர் அளிக்கும் விருந்தை ஏற்றுக் கொள்ள அங்கு தங்கியதால் அவர்கள் வருகை சற்று தாமதமாவதையும் கூறி பரதனின் உயிரை காப்பாற்றுகிறான் ஹனுமான்.  பிறகு பரதனைப் பற்றிய செய்தியை கூறுவதற்காக பரத்வாஜரின் ஆஸ்ரமத்திற்கு திரும்பி வருகிறான். 

ராமனுக்கும், அவரோடு வந்த வானர சேனைகளுக்கும் விருந்தை தயார் செய்த பரத்வாஜர் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ அத்தனை பேர்களுக்கு மட்டும் தலைக்கு ஒரு இலை என்று கணக்காக இலை போட்டு பறிமாறி இருக்கிறார். இலை போடும் பொழுது ஹனுமன் இல்லாததால் அவருக்கு இலை இல்லாமல் போய் விட, ராமன் தன் இலையை ஹனுமனோடு பகிர்ந்து கொண்டு அவரை, அவருடைய சேவையை கௌரவப்படுத்தினானே அது அவனுடைய பேரன்பு.



மேலும் வனவாசத்தில் முனிவர்கள் கொடுத்த கனிகளையும், கிழங்குகளையும் அன்போடு சாப்பிட்டான்.

இப்படி யார் சாப்பிடக் கொடுத்தார்கள், என்ன கொடுத்தார்கள் என்று பார்க்காமல், எப்படி கொடுத்தார்கள் என்று பார்த்து சாப்பிட்டு அந்த சாப்பாட்டிற்கே கௌரவத்தை சேற்த்ததால்தான் அவன் சாப்பாட்டு ராமனோ?  

 


Monday, June 15, 2026

நிஜ கல்யாணமும் ராதா கல்யாணமும்

நிஜ கல்யாணமும் ராதா கல்யாணமும்

சென்ற வருடம் இங்கு ஒரு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். இந்த வருடம் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு ஃப்யூஷன் வெட்டிங். தமிழ் ஐயர் பையன், ஸ்ரீலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டான். இரண்டு வீட்டு சம்பிரதாயங்களையும் கலந்து நடந்த கல்யாணம். 

Marriage hall

காசியாத்திரைக்கு(கனடாவிலிருந்து காசிக்கு..??!!) கிளம்பிய மணமகனை தடுத்து மணமகளின் அப்பா அழைத்து வர அவன் மாலை மாற்றுவதற்காக காத்திருக்க, மணமகள் கைகளில் விளக்கேந்தி, அதைப்போலவே விளக்கேந்திய உறவுப் பெண்கள் புடை சூழ நடந்து வர, அவளைத் தொடர்ந்து பெண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் சீர் வரிசை தட்டுகளை சுமந்து ஊர்வலம் போல வந்தது பார்க்க மிக அழகாக இருந்தது. 

தமிழ் ஐயர் கல்யாணங்களில் இப்படி மணமகள் பிரவேசிப்பது பழக்கம் இல்லை. ஆனால் இந்த மணமகள் அவர்கள் பழக்கப்படி இப்படித்தான் மணமகளுக்கு பிரத்யேக பிரவேசம் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் இந்த ஏற்பாடு. அதைப் போல ஊஞ்சல் முடிந்து அவர்கள் இருவரும் மணமேடைக்குச் சென்றபொழுது காலடியில் டிரை ஐஸ் கொண்டு புகை வரவழைத்ததில் ஏதோ மேகக்கூட்டத்தில் நடந்து வந்ததைப் போல இருந்தது. அம்மி மிதிப்பதற்காக சிறு க்ரானைட் கல்லை வைத்திருந்தார்கள்.

மணமகள் மடிசார் கட்டிக் கொண்டு வர ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. அந்த இடைப்பட்ட நேரத்தில் மணமக்களுடைய தோழர்கள், தோழிகள் எல்லோரும் சாயி பக்தர்கள், நன்றாக பாடக் கூடியவர்கள், அவர்கள் பாடினார்கள். செவிக்குணவு அற்புதம்! இதற்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக ஒத்திகை நடந்தது. 

திருமண சடங்குகளை கவனித்த இலங்கைப் பெண்மணி ஒருவர் என்னிடம்,"என்ன இவ்வளவு நேரம் எடுக்கிறது? நிறைய சடங்குகள், டயர்டாகிவிட மாட்டார்களா?" என்று கேட்டார். 



 

பெண் வீட்டார் ஸ்ரீலங்காவை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் சாப்பாட்டில் பூண்டு,வெங்காயம் இல்லாமல் இருக்காதாம். பிள்ளை வீட்டார் அது ஆகாது என்று சொல்லி விட்டதால் பூண்டு,வெங்காயம் சேர்த்த உணவு  தனியாகவும், அவை இல்லாத உணவு தனியாகவும் இருந்தன. நமக்கு கல்யாண சாப்பாடு என்றால், அதுவும் முகூர்த்தம் முடிந்த பிறகு இலையில் பரிமாறி சாப்பிட்டுதானே பழக்கம், இங்கு பஃபே..! வித்தியாசமாக இருந்தது. நம் ஊர் சாப்பாட்டில் இருக்கும், பருப்பு உசிலி, அவியல், லட்டு அல்லது ஜாங்கிரி போன்ற இனிப்பு, பச்சடி போன்றவை மிஸ்சிங். டெசர்டாக வழங்கப்பட்ட ஃப்ரூட் சால்ட், ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம், கஸ்டர்ட் வித் ஜெல்லி எல்லாம் மிகவும் நன்றாக இருந்தன. 




காலை ப்ரேக்ஃபாஸ்டில் கூட கிச்சடி, இட்லி, வடை, பைனாப்பிள் கேசரி தவிர குழிப்பணியாரம் ஆப்பம், சம்பல், சொதி போன்ற ஸ்ரீலங்கா ஐட்டம்களும் இருந்தன. 

பிளாக் டீ. பிளாக் காபி, மில்க் டீ, மில்க் காபி என்று தனித்தனியாக இருந்தன. அதைத் தவிர சிறிய பிளாஸ்டிக் குப்பைகளில் கொழுப்பு அதிகமுள்ள பால், கொழுப்பு குறைவான பால், வெள்ளை சர்க்கரை, ப்ரவுன் சர்க்கரை என்று தனித்தனியாக இருந்தன. 

நான் முதலில் மில்க் காபியை எடுத்துக் கொண்டேன். அதில் பால்தான் இருந்தது. எனவே அப்படியே வைத்து விட்டு தனியாக டிகாஷனை எடுத்துக் கொண்டு பால், சர்க்கரையை சேர்த்துக் கொண்டேன்.

முதல் வாரம் இந்த கல்யாணம், அடுத்த வாரம் ராதா கல்யாணம். 1976 ஆம் ஆண்டு ஹரிதாஸ்கிரி சுவாமிகள் கனடா வந்தபொழுது தொடங்கி வைத்த ஞானானந்தா பஜன் மண்டலியினர் 18 வருதங்களாக ராதா கல்யாண மஹோத்ஸவத்தை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் ஞானானந்தா பஜன் மண்டலி தொடங்கி 50வது வருடம் என்பதால் இன்னும் சிறப்பாக சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, அஷ்ட வடுக்கள்(பூனூல் போடப்பட்ட சிறுவர்கள்) பூஜை, நவ கன்யா பூஜை போன்ற பூஜைகளும் செய்யப்பட்டன. சுவாசினிகளுக்கு ஒரே டிசைனில், வேறு வேறு நிறத்தில் வழங்கப்பட்ட புடவைகள் மிகவும் அழகாக இருந்தன.  எல்லோருக்கும் மாட்சிங்காக பிளவுஸ் அமைந்ததில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

ராதா கல்யாணத்தை நடத்தி வைக்க கலிஃபோர்னியாவிலிருந்தும், பஃபெல்லோவிலிருந்தும் பாகவதர்கள் வந்திருந்தனர். அவர்களோடு கனடாவிலிருக்கும் பாகவதர்களும் சேர்ந்து கொள்ள சிறப்பாக நடந்தது.


ராதா கல்யாணத்தில் வைக்கப்பட்ட
சீர் வரிசை







மணமக்களுக்கு பரிசளிக்க என் மகள் செய்த லிப்பன் ஆர்ட் வால் ஹாங்கர்.