கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label Kadhalum Kadandhu pogum. Show all posts
Showing posts with label Kadhalum Kadandhu pogum. Show all posts

Friday, March 25, 2016

காதலும் கடந்து போகும் (விமர்சனம்)

காதலும் கடந்து போகும் (விமர்சனம்)




படித்த,நாகரீகமான ஒரு பெண் படிக்காத ஒரு பேட்டை ரௌடியை காதலிக்கும் வழக்கமான கதைதான்!

விழுப்புரத்திலிருந்து ஐ.டி கம்பெனியில் வேலை கிடைத்து சென்னைக்கு வந்து  தோழிகளோடு தனி வீட்டில் தங்கி முழுமையான ஐ.டி. பெண்ணாக வாழ்க்கையை அனுபவிக்கும் யாழினி (மடோனா செபாஸ்டியன்) பணி செய்யும் அலுவலகம் ஒரு மோசமான நாளில் மூடப்படுகிறது. சென்னையிலேயே தங்கி வேறு வேலை தேடிக் கொள்ள நினைக்கும் அவர் எளிய மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு குடி வந்து, செய்யாத ஒரு கொலைக்காக சிறைக்குச் சென்று விட்டு பார் ஓனராக ஆகும் ஆசையில் இருக்கும் அடியாள் விஜய் சேதுபதியின் எதிர் வீட்டு பெண்ணாகிறார். இந்த இருவருக்கும் இடையே மலரும் காதல்தான் படமாக விரிகிறது.

படத்தின் முன் பாதி பெரிதாக சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதும் இல்லாமல்,அடியாளாக உதார் காட்டி கிளம்பும் கதிர் (விஜய் சேதுபதி) பரிதாபமாக அடி வாங்கி திரும்பும் நகைச் சுவையிலும், வேலை தேடி அவமானப் படும் யாழினியின் சோகத்திலும் சுற்றிச் சுற்றி வருகிறது. இரெண்டாம் பாதி காதல் வயப் படும் கதா நாயகிக்காக படிக்காத கதா நாயகன் அவளுடைய மேலதிகாரியாக நடிப்பது, அவளுக்காக நேர்காணல் அறையில் கதா நாயகன் புகுந்து கோக்குமாக்காக நடந்து கொள்வது என்று ஒரே சினிமாத்தனம், அந்த க்ளைமாக்ஸ் உள்பட..!

விஜய் சேதுபதி திறமையான நடிகர்தான், இந்த படத்திலும் சிறப்பாகத்தான் நடித்திருக்கிறார், என்றாலும் இன்னும் எத்தனை படங்களில் மெட்ராஸ் பாஷை பேசிக்கொண்டு ஒரே மாதிரி நடிக்கப் போகிறார்?   விழுப்புரம் பெண் என்று கூறப்படும் கதா நாயகி மடோனா செபாச்டியென் வியென்னாவிலிருந்து வந்து இறங்கியது போல இருக்கிறார். ஆனால் நடிப்பு கச்சிதம்! சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை அமர்க்களம்! பாடல்கள் ஏற்கனவே கேட்டது போலவே இருக்கின்றன. 

பழைய கள்ளை, நளன் குமாரசாமியின் ட்ரீட்மென்ட்  என்னும் புதிய மொந்தையில் ஊற்றி தந்திருக்கிறார்கள்.