இதற்குத்தான் ஆசைபட்டாயா பானு..?
எனக்கு ஏன் இந்த ஆசை வந்தது என்று தெரியவில்லை. சமஸ்க்ருதம் கற்றுக் கொள்ளலாம் என்று தோன்றியதைத்தான் சொல்கிறேன். என் உறவில் ஒரு பெண்மணிக்கு போன் செய்த பொழுது, அவர் சம்ஸ்க்ருத வகுப்பு எடுத்துக் கொண்டிருப்பதாக அவருடைய மருமகள் கூறினார்.
அட! நாம் கூட அவரிடம் சம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளலாமே.. என்று விவரங்கள் கேட்டேன். இப்போதுதான் ஒரு புது பாட்ச் துவங்கியிருக்கிறது, நீங்கள் தாராளமாக சேர்ந்து கொள்ளலாம் என்றார். சம்ஸ்க்ருத பாரதி என்னும் அமைப்பின் மூலாம் கற்றுத் தருகிறார்களாம். புத்தகங்களுக்கும், பரிட்சைக்கு மாத்திரம் பணம் காட்டினாள் போதும் என்றார். சரி என்று சேர்ந்து விட்டேன்.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. ஸ்போக்கன்
ஸான்ஸ்க்ரிட் என்று சின்ன வாக்கியங்கள் சொல்லி கொடுத்தார்கள். அவை எல்லாவற்றையும் தமிழில் அல்லது ஆங்கிலத்தில் எழுதி வைத்துக் கொண்டு படித்த பொழுது எவ்வளவு ஈசியாக இருந்தது! ஆஹா! நமக்கு சமஸ்க்ருதம் வந்து விட்டது, காளிதாசனை கரைத்து குடித்து விட வேண்டியதுதான் பாக்கி. என்று நினைத்துக் கொண்டேன். ட்ரைலரை பார்த்து விட்டு, முழு படமும் இப்படித்தான் இருக்கும் என்று கணிப்பதை போல அறிமுக படலத்தை வைத்து, முழுமையையும் கற்றுக் கொண்டு விடலாம் என்று நினைத்துக் கொண்டு விட்டேன்.
ப்ரிலிமினரி முடிந்து,அதற்கு ஒரு விழாவும் எடுத்ததும் இனிமேல் பரீட்சைக்கான பகுதிகளை துவங்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு, எழுத்துக்களை அறிமுகப் படுத்தினார்கள். இது நாள் வரையில் ஒரு 'க', ஒரு 'த' ஒரு 'ப' ஒரு 'ச' ஒரு 'ட' வை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டி விட்டோம். இங்கே என்னடாவென்றால் ஒவ்வொன்றிலும் நான்கு!
எனக்கு, "ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களை வைத்துக் கொண்டு உலகையே ஆட்சி செய்கிறார்கள்? தமிழுக்கு எதற்கு 247 எழுத்துக்கள்?" என்று கேட்ட பெரியார்தான் நினைவுக்கு வந்தார். என்னடா இது ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோம் போலிருக்கிறதே.. என்று ஒரு பக்கம் தோன்றியது. மறு பக்கம் பரீட்சைக்கு பணம் கட்டியாச்சு, பாதியில் விட்டால் மருமகள் நம்மை பற்றி என்ன நினைத்துக் கொள்வாள்? என்று மானப்பிரச்சனை. கடமையா? பாசமா? என்று ஊசலாடும் அந்தக் கால தமிழ் சினிமா கதாநாயகன் போல் போராட்டம்.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ஒருமை(singular),பன்மை(plural) என்ற இரண்டுதான். இங்கோ ஒருமை(singular), இருமை(dual), பன்மையாம்(plural). அதே போல உயிருள்ளவை உயர்திணை, உயிரற்றவை அஃறிணை என்ற இரண்டோடு நாம் நிறுத்திக் கொள்கிறோம். அவர்களோ நபும்சகலிங்கம் என்று ஒன்றை வேறு கொண்டு வருகிறார்கள். என்ன கொடுமை சரவணா இது.
இதோடு நின்றதா? நமக்கு இருக்கும் அதே ஐ,ஆல், கு, இன்,அது, கண் என்னும் வேற்றுமை உறுபுகள்தான் ஆனால்(பெரிய ஆனால்) வார்த்தைகளை அஹ என்று முடியும் வார்த்தைகள், ஆ என்று முடியும் வார்த்தைகள், இ என்று முடியும் வார்த்தைகள், அம் என்று முடியும் வார்த்தைகள் என்று நான்காக பிரித்து இந்த வேற்றுமை உருபுகள் ஒவ்வொன்றுக்கும் ஓவ்வொரு விதமாக வரும் என்னும் பொழுது... ஹா ஹா.. நாக்கு தள்ளி விடுகிறது.
ராம, ராமஹ, ராமாய என்று படிக்கும் பொழுது மனதின் ஒரு ஓரம், " இதற்குப் பதில் ராமா, ராமா என்று சொன்னால் போகிற வழிக்கு புண்ணியம் கிடைக்கும்..நஹி நஹி ரக்ஷதி டுக்ருன்கரனே.. என்று ஆதி சங்கரர் சொல்லியிருக்கிறார் தெரியாதா? " என்று கேட்க, "இப்போ நீ வாயை மூடிக்கொண்டு போகப்போகிறாயா? இல்லையா?" என்று அதட்டினாலும், "ஆமாம், சம்ஸ்க்ருதம் படிக்காமலேயே இதெல்லாம் தெரிகிறதே?" என்று மனசின் மறு ஓரம் நினைக்க,, யாரோ "கிக் கிக் கிக்" என்று சிரிப்பது போல இருந்தது வேறு யார்? எல்லாம் இந்த மனக்குரங்கு செய்யும் வேலைதான்!
எழுத்தில் இந்த கஷ்டம் என்றால், எண்களில் வேறு கஷ்டம். ஒன்று என்பதை இரண்டு போல் எழுத வேண்டும், இரண்டையும் இரண்டு போல்தான் மேலே சுழிக்காமல் எழுத வேண்டும். ஐந்தை நாலு போல் எழுத வேண்டுமாம், ஏழாம் எண்ணை கிட்டத்தட்ட ஆறு போல போட வேண்டும். அவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது to learn,first we should unlearn என்பது புரியாதது என் பிரச்சனையா?
சம்ஸ்க்ருதம் படிக்க நேரம் ஒதுக்கினால், மத்யமர், பிளாக் இவைகளுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. அங்கே போய் விட்டால், இங்கே அடி வாங்குகிறது. எதையுமே முழுமையாக செய்யாதது போல் ஒரு உணர்வு. அப்போது பார்த்து, மத்யமரில் போஸ்ட் ஆஃப் த வீக் வேறு கொடுத்து விட்டார்கள். உடனே, "இந்த வயதில் உனக்கு என்ன வருமோ,எதை செய்தால் சந்தோஷமோ, அதை செய்ய வேண்டும். இங்கே என்ன சொல்றது?" என்று வி.டீ.வி.கணேஷ் மாதிரி மனதின் ஒரு ஓரம் கேட்டது. "நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" என்று அதை அதட்ட வேண்டியதாகி விட்டது.
சம்ஸ்க்ருதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து எனக்கும் எனக்கும் சண்டை அதிகமாகி விட்டது. எங்கேயாவது வாய் விட்டு பேசிக்கொள்ள ஆரம்பித்து விடப் போகிறேன் என்று பயமாக இருக்கிறது.
எங்கள் வகுப்பில் இருக்கும் அருணா குமார் என்பவரிடம், மேலே தொடர வேண்டுமா? என்று சந்தேகமாக இருக்கிறது என்றதும், அவர், 'பயிற்சி செய்தால் வந்து விடும், ஒண்ணும் கஷ்டமில்லை என்றதோடு, சந்தேகங்களை தெளிவும் படுத்தினார். அதனால் வகுப்பில் அனுப்பிய டெஸ்ட் பேப்பர்களில் முப்பதுக்கு இருபத்திநாலு வாங்க முடிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. "சரி ஒரு கை பார்த்து விடலாம், நேர மேலாண்மை தெரிந்தால் எல்லாவற்றையும் மேனேஜ் பண்ண முடியும்" என்ற நம்பிக்கை வந்தது. சித்திரமும் கை பழக்கம், செந்தமிழ் மட்டுமல்ல ஸம்ஸ்க்ருதமும் நா பழக்கம்தானே?" பார்த்து விடலாம்! என்ன நான் சொல்வது சரிதானே?