கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label அசோக் நகர். Show all posts
Showing posts with label அசோக் நகர். Show all posts

Thursday, January 6, 2022

படமா? காசா?

 படமா? காசா?

அசோக் நகர் ஆஞ்சநேயர்

ஒவ்வொரு வருடமும் ஹனும ஜெயந்தி அன்று சென்னை அசோக் நகரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் லட்சார்ச்சனைக்கு கோவிலுக்கு மிக அருகில் வசிக்கும் என் சகோதரி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அர்ச்சனை டிக்கெட் வாங்கி அவரவருக்கு தோதான நேரத்திற்கு டோக்கனும் வாங்கி வைத்து விடுவாள். நாங்கள் போய் அர்ச்சனை செய்து விட்டு வருவோம்.  கோவிலில் பிரசாதமாக லட்டு, பூக்கள் தவிர ஒரு ஆஞ்சநேயர் படமும் தருவார்கள். அப்படி என்னிடம் மூன்று படங்கள் சேர்ந்து விட்டன. 

2017 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு கிளம்பும் பொழுது, "ஏற்கனவே நம்மிடம் மூன்று படங்கள் இருக்கின்றன, இந்த வருடம் வேறு ஒரு படத்தை கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை படங்களை வைத்துக் கொள்ள முடியும்?" என்று நினைத்தேன்.

கோவிலில் வழங்கப்பட்ட படங்களில் ஒன்று

அந்த வருடம் எங்கள் சகோதரிகள் எல்லோருக்கும் காலை பத்து மணி ஸ்லாட் டில் புக் பண்ணியிருக்கார் என் அக்கா. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு கோவிலில் கொடுத்த பையை பிரித்து பார்த்தேன். ஆஞ்சநேயர் படம் இல்லை. 'இந்த வருடம் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி காசு கொடுத்திருக்கிறார்கள் என்றாள் என் சகோதரி. ஒரு சிறிய ஜிப் லாக் பையில் இருந்த அந்த வெள்ளி காசை "நல்ல வேளை, படம் கொடுக்கவில்லை" என்ற நினைப்போடு மீண்டும் பைக்குகள் வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும், ஸ்வாமி அலமாரியில் வைப்பதற்காக பையில் கை விட்டால் வெள்ளி காசு இல்லை. பையை கவிழ்த்து பொறுமையாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தேன். ம்ஹும்! என் கைப்பையிலும் தேடினேன். இல்லை. என் சகோதரிக்கு ஃபோன் பண்ணி அவள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டேன். அங்கும் இல்லை என்று கூறி விட்டாள். 

"படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? 

அதற்குப் பிறகு ஊர் மாற்றம், குடும்பத்தில் சில இழப்புகள், கொரோனா போன்ற காரணங்களால் ஹனும ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த வருடம் கனடா வந்து விட்டேன். பார்க்கலாம் அடுத்த வருடமாவது ஹனும ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்ள அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள் வேண்டும். 🙏🙏