கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, February 15, 2025

சென்னை டயரி

சென்னை டயரி

நீ...ண்...ட நாட்களுக்குப் பிறகு மெரீனா பீச் விஜயம். பேத்திக்கு பீச் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

நான் மாலை நேரத்தில் கடற்கரைக்கு செல்வதைவிட, காலை நேரத்தில் செல்லவே விரும்புவேன். மாலை நேரத்தில்  கும்பல், பஜ்ஜி கடைகளின் எண்ணெய் வாசம் இல்லாத கடற்கரையை அப்போதுதான் ரசிக்க முடியும். 

எனக்கு புகைப்படத்திற்கு சிரிக்கவே வராது

நாங்கள் பீச்சுக்கு கிளம்பிய பொழுது காலை 5:45. சூரிய உதயம் பார்க்க முடியுமா? என்று கேட்டதற்கு என் அக்காவின் மாப்பிள்ளை,"போகும் வழியில் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்றார். :))

பீச்சில் ஏகப்பட்ட வண்டிகள், பார்க்கிங் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஏகப்பட்ட காக்கைகள் "பெங்களூரில் புறாக்கள்தான்" என்று நான் சொன்னதும், "சென்னையில் மட்டும் என்னவாம்?" என்றார்கள். 

காக்கை கூட்டத்தை தாண்டியதும், கூட்டமாக சிலர் வட்டமாக அமர்ந்து கொண்டு ஒவ்வொருவரும் தனித் தனியாக ஒவ்வொரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார்கள். புக் க்ளப்பாம். இப்படிப்பட்ட புக் கிளப்புகள் பெங்களூரிலும் உண்டு லால் பாக், கப்பன் பாக்கில் இப்படி படிப்பார்கள் என்றான் என் மகன்.

கடலுக்குச் சென்றோம். சற்று முன்பு உதயமாகியிருந்த சூரியன், பெரிய சைஸ் ஆரஞ்சு பழம் போன்றிருந்தது, அதன் கிரணங்கள் பட்ட நீர் தங்கப் பாளமாய் ஜொலித்தது. 

கடலில் கால் நனைத்த பிறகு மணலில் வீடு கட்டினோம். அக்காவின் பேத்தியும், என் பேத்தியும் குதிரை சவாரி போனார்கள். பிறகு ஹோட்டலுக்கு திரும்பி, இருந்த பசியில் காம்ப்ளி மெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டை ஒரு கட்டு கட்டினோம்.

தை பூசத்திற்கு அடுத்த நாள் மாலை கபாலீஸ்வரர் கோவிலுக்குச் சென்றேன். அன்றைக்குத்தான் அங்கு தெப்பம் என்பது தெரிந்தது. தெப்பம் புறப்பட அதிக நேரம் ஆகும் என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.




காலையில் அக்கா பேரனின் பூணூல், அதே நாள் தோழியின் மகனுக்குத் திருமணம்.  மாலையில் திருமண ரிசப்ஷனுக்குச் சென்றோம். ஆனால் அங்கு நான் ஒரு சமோசா சாப்பிட்டேன்,  என் அக்கா அதுவும் சாப்பிடவில்லை. 


ரிசப்ஷனில் DJ, முதலில் மெலடிகளை  இசைக்க விட்டார்கள். கேட்க சுகமாக இருந்தது. அப்புறம் போட்டார்கள் பாருங்கள் 'டங்கர டங்கர' என்று இரைச்சல் பாடல்கள். காதை பொத்திக் கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்து விட்டோம். இதய நோயாளிகள் யாராவது இருந்திருந்தால் அபாயம்தான்.


நடுவில் ஒரு நாள் பாண்டி பஜார் சென்றேன். அங்கு நாயுடு ஹாலில் தரை தளத்தில் வெயிட்டிங் ஏரியாவில் கேரம் போர்ட், செஸ் போன்றவை வைத்திருக்கிறார்கள். காத்திருக்கும் நேரத்தில் விளையாடலாம் போல. Good idea! கீழே வரைந்திருப்பது ஏரோபிளேன் பாண்டியா? அதற்கு சில்லாங்காய் தருவார்களா?