கணம்தோறும் பிறக்கிறேன் 

Saturday, August 8, 2020

உனக்கும் எனக்கும்

 உனக்கும் எனக்கும் 


*இந்த படத்திற்கு  பொருத்தமான கதை எழுதும்படி மத்யமரில் கேட்டிருந்தார்கள். அதற்கு நான் எழுதிய கதை கீழே:


திவாகர் அன்று அலுவலகத்திலிருந்து வரும் பொழுது  கையில்  சுருட்டி எடுத்து வந்த ஒரு சுருளை   ஹாலில்   இருந்த  டீபாயில்  போட்டான். 
"என்னது?" ஜனனி கேட்டதற்கு ,"பிரிச்சு பாரேன்.." என்று அவன் சொன்னதும் பிரித்தாள். ஒரு வால் போஸ்டர். அதில் ஒரு இளம் ஆணும், பெண்ணும்  உரக்க சண்டை போட்டு கத்துவது போன்ற  படம். 

"எதுக்கு இது"

"நல்ல கேள்வி. வால் போஸ்டர் எதுக்கு வாங்குவாங்க? வீட்டில் மாட்டதான்" 

"ஏன் இப்படி ஒரு படம்?"

"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்? நல்லா இல்லையா?"

"அப்படி சொல்ல முடியாது,பட்... "  என்று தயக்கத்தோடு ஆரம்பித்தவள் சண்டை போட்ற படத்தை ஏன் வீட்டில் மாட்டனும்?"

"சம்திங் டிஃபரெண்ட் .. நான் தான்  உன்னோடு   சண்டை  போடுவதில்லை, நீ என்ன சொன்னாலும் அதுக்கு சரினு  சொல்லிடறேன். படத்திலாவது ஒருத்தன் தைரியமா மனைவியை  எதிர்த்து சண்டை போடறானே.." குறும்பாக சிரித்துக்  கொண்டே  அவன் கூற, 

"எப்படி? எப்படி? ரிபீட்.." என்று இடுப்பில் கை வைத்துக் கொண்டு பொய் கோபத்தோடு ஜனனி கேட்டதும் ,  சிரித்துக் கொண்டே  அவளை தன்னருகே இழுக்க, அவனிடமிருந்து விலகி காபி கலக்க உள்ளே சென்றாள்.  

"காஃபியை உரிஞ்சிக்கொண்டே இதை எங்கே மாட்டலாம்? சொல்லேன்.."

"ஹாலில் நன்றாக இருக்காது, டைனிங்  ரூம்..?"

"நோ ".. 

"யெஸ், பெட் ரூம்தான் ரைட் பிளேஸ்.." என்று முடிவு செய்து அதை அவர்கள் கட்டிலுக்கு எதிரே, இரண்டு பக்கங்களிலும் ஒட்டக்கூடிய செல்லோ டேப் கொண்டு ஒட்டி விட்டு, ஹௌ இஸ் இட்?" என்றான். 

ஜனனிக்கு இப்படி ஒரு படத்தை தங்கள் படுக்கை அறையில்  அதுவும் கண்களில் படும்படி மாட்டுவதில் விருப்பமில்லை. இருந்தாலும் அதைச்  சொல்லி அவனை வருத்தப் படுத்த அவள் விரும்பவில்லை. அதுதான் அவள் சுபாவம். யாரோடும்  விவாதங்களில் இறங்க மாட்டாள். தனக்கு ஒரு கருத்தில்  உடன்பாடு இல்லையென்றால் மௌனமாகி விடுவாள். சமயம் பார்த்துதான் சொல்வாள். திவாகருக்கு இதில் மிகவும் சந்தோஷம். அவ்வப்பொழுது அவளை சீண்டுவான், அவளும் பதில் கொடுப்பாள், இப்படி விளையாட்டு சண்டை, சின்ன  சின்ன  வாக்குவாதங்கள் வந்திருக்கிறதே ஒழிய பெரிய சண்டை  அவர்களுக்குள் வந்ததில்லை. 

அவர்கள் கண்ணே பட்டு விட்டதோ  என்னும்படி  கொஞ்ச  நாட்களாக அவர்களுக்குள் அடிக்கடி மோதல்கள் வர ஆரம்பித்தன. திவாகர் சிடுசிடுப்பதும், சாதாரணமாக பொறுமையாக இருக்கும்  ஜனனி பதிலுக்கு பதில் சொல்லி சண்டையை வளர்ப்பதும் அதிகமாயிற்று. .

அன்று காலை டிஃபன் சாப்பிட திவாகர் உட்கார்ந்தான். ரவை உப்புமாவை கொண்டு ஜனனி வைத்ததும், "ஓ! மை காட்! இன்னிக்கும் உப்புமாவா?"

"என்ன இன்னிக்கும்? இந்த மாசத்தில் இது செகண்ட் டைம்தான், தவிர உப்புமாவுக்கு என்ன குறைச்சல்?" 

"தொட்டுக்க ஒன்னும் இல்லாததுதான் குறைச்சல்."  

"எலுமிச்சங்காய் ஊறுகாய் இருக்கு, சர்க்கரை இருக்கு.." 

"சர்க்கரை தொட்டுக்கொண்டு சாப்பிட நான் ஒண்ணும்  சின்ன  குழந்தை  இல்ல, நீயே சாப்பிட்டுக் கொள் உன் உப்புமாவை"  விருட்டென்று திவாகர் எழுந்து செல்ல, ஜனனிக்கு அழுகை வந்தது. இதற்கு முன் சில சமயங்களில் வெறும் ஊறுகாயோடு  உப்புமாவை சாப்பிட்டிருக்கிறான். இன்று என்ன வந்தது? இப்போதெல்லாம் அவனுக்கு அதிகம் கோபம் வருகிறது. என் மேலும் தப்பு. அன்னிக்கு இப்படித்தான், தோய்த்த  துணிகள்  சோஃபாவில் குப்பலாக இருப்பதைப் பார்த்து, துணியை மடித்து வைக்கவில்லையா? என்று சாதாரணமாகத்தான் கேட்டான், ஆனால் அவளுக்கு சுர்ரென்று கோபம் வந்தது, "தெரியறது தானே? நீ மடிச்சு வெச்சா என்ன?"  என்று அவள் பதிலுக்கு கேட்க, அவன் ஏதோ சொல்ல, வாய்ச்சண்டை வலுத்தது. ஏன் இப்படி ஆனது? என்று யோசித்தவள் கண்களில் பட்டது அந்த ஆணும் பெண்ணும்  சண்டை போடும் படம். இதைப் பார்த்து பார்த்து அதன் பாதிப்பில்  நமக்குள்ளும் சண்டை வருகிறதோ? ஜனனி அந்தப் படத்தை  ஜாக்கிரதையாக பிய்த்து எடுத்தாள். அந்த இடத்தில் காதல்  புறாக்கள் படம் ஒன்றை ஒட்டினாள். இனி அவர்களுக்குகள் பிணக்குகள் வராது .


Thursday, August 6, 2020

கடலைக் கடந்து - 5

கடலைக் கடந்து - 5 

நான் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஓமானில் அரசு அலுவலகங்கள் காலை 7:30 க்கு தொடங்கி மதியம் 2:30க்கு முடிவடையும். இடையில் உணவு இடைவேளையெல்லாம்  கிடையாது.  ஓமானியர்கள், எகிப்தியர்கள் எல்லாம் லெபனீஸ் ரொட்டியில் சீஸ், காய்கறி துருவல், அல்லது சிக்கன் போன்றவை சேர்த்து சுருட்டிய கபூஸ் எனப்படும் ஒரு உணவை பட்டர் பேப்பரில் சுற்றி கடித்துக் கொண்டே வேலை செய்வார்கள். நம்மைப் போன்ற இட்லி, உப்புமா ஆசாமிகளுக்கு கொஞ்சம் கஷ்டம்தான். அவர்கள் மேஜையில் எப்போதும் இருக்கும் லைட் பிரவுன் திரவம் பிளாக் டீ என்று தெரியாமல் நான் கொஞ்சம் மிரண்டு போனது உண்மை. 

1991க்குப் பிறகுதான் வாரத்தில் ஐந்து நாட்கள் என்பது நடைமுறைக்கு வந்தது. அதற்கு முன்பு வரை   சனி முதல் வியாழன் வரை அலுவலகம் உண்டு. வியாழனன்று ஒரு மணி நேரம் முன்பாக அலுவலகம் முடிந்து விடும். ஆனால் இதை என் கணவர் என்னிடம் சொல்லவே இல்லை. வேலைக்கு சேர்ந்த முதல் வார வியாழனன்று வேலை விஷயமாக மற்றொரு அலுவலகத்திற்கு சென்ற என் கணவர்  அலுவலகம் திரும்பி வரவில்லை.  இரண்டு மணிக்கு, ஒருவர் வந்து, "கீப் எவ்ரிதிங் ஆஸ் தே ஆர் அண்ட் கம் வித் மீ" என்றதும் எனக்கு எதுவும் புரியவில்லை. "மூர்த்தி டிண்ட் கம் எட் .." என்றதும், "நோ, நோ, ஹி வில் நாட் கம், யூ கம் வித் மீ " என்றதும் நான் ரொம்பவே பயந்து போனேன். நல்ல வேளையாக என் கணவர் அப்பொழுது போன் பண்ணி, நேரத்தைப் பற்றி சொல்லி  தான் நேராக வந்து விடுவதாகவும் என்னை அந்த நண்பரோடு செல்லும்படியும் கூறினார். 

அப்பொழுது எங்களுக்கு வீடு அலாட் ஆகவில்லை. விடுமுறையில் இந்தியா சென்றிருந்த ரமணன் என்னும் ஒரு நண்பரின் வீட்டில் தங்கிக் கொண்டிருந்தோம். மதியம் ஸ்ரீதர் வேறொரு நண்பரின் வீட்டில் மதிய உணவருந்துவோம். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது, என் கணவர் என்னிடம், "வீட்டு சாவியை என் அலுவலக மேஜை டிராயரில் வைத்திருந்தேனே, எடுத்துக் கொண்டு வந்தாயா?" என்று கேட்டார்? அவர், வீட்டு சாவியை தன் மேஜை டிராயரில் வைத்திருக்கும் விஷயமும் எனக்குத் தெரியாது. நான் "இல்லையே.." என்க, நண்பரின் மனைவி, ''நீங்கள் சாவியை அங்கு வைத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியுமா? என்று எனக்கு சப்போர்டுக்கு வந்தார். உணவு அருந்திய பிறகு என் கணவரும், அந்த நண்பரும் எங்கள் அலுவலகம் சென்று சாவியை எடுத்துக் கொண்டு வந்தனர். 

அந்த நண்பர்தான் எங்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போதோ மஸ்கட் சிவன் கோவில் ஒன்றுதான் இருந்தது. கிருஷ்ணர் கோவில் கட்டப்படவில்லை. சிவன் கோவிலில் கீழே விநாயகர், சிவன், ஹனுமான் சன்னதிகள் இருக்கும். மாடியில் அம்மன் சன்னதி. பக்கத்தில் ஒரு சிறிய கடையில் எண்ணெய், பால், ஊதுபத்தி, தேங்காய் போன்ற பூஜை சாமான்கள் விற்பார்கள்.  ஆரம்ப நாட்களில் அங்கு அத்தனை கும்பல் இருக்காது. பின்னாளில் இரண்டு கோவில்களிலுமே வியாழன்,வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம் போன்ற நாட்களிலும் பார்க்கிங் கிடைக்கவே கிடைக்காது.  அதுவும் வியாழக் கிழமைகளிலும், சனிக்கிழமைகளிலும் சிவன் கோவிலுக்குச் சென்றால் இரவு உணவை அங்கேயே முடித்துக் கொண்டு வந்து விடலாம். ஏனென்றால் ஆஞ்சநேயருக்கு அத்தனை பேர்கள் வடை மாலை சாற்றுவார்கள். 
வடை, கேசரி, தயிர்சாதம், சுண்டல் என்று நிறைய பிரசாதங்கள் கிடைக்கும். 

ஆரம்பத்தில் அந்த ஊரில் கடை வீதிகளுக்கும், மற்ற இடங்களுக்கும் சென்ற பொழுது ஒரு விஷயம் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அங்கு சுவரொட்டிகளையோ, விளம்பர பலகைகளையோ பார்க்க முடியவில்லை. 
"இங்கு என்ன இப்படி சுவரெல்லாம் காலியாக இருக்கிறது?" என்று ஆச்சர்யமாக கேட்டேன். "இங்கு அதற்கெல்லாம் தடை. போஸ்டேரெல்லாம் ஒட்டக்கூடாது" என்றார்கள். "அப்படியென்றால் வியாபாரிகள் தங்கள் பொருள்களை எப்படி விளம்பரம் செய்வார்கள்?" என்றேன். "அதற்குத்தான் ஹௌஸ் வைவ்ஸ் இருக்கிறார்களே?" என்றார் நண்பர். 

2005க்குப் பிறகு பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. அதைப்போலவே வெய்யில் கொளுத்தும் அந்த ஊரில் கார்களில் கூலிங் பேப்பர் ஒட்டுவதற்கும் அனுமதி கிடையாது. கோடையில் வெளியில் காரை நிறுத்தி விட்டால், அதை எடுக்கும் பொழுது ஸ்டியரிங்கை தொட முடியாமல் கொதிக்கும். அதனால் பெரும்பாலானோர் ஸ்டியரிங் மீது ஒரு டர்கி டவலை போட்டு வைப்பார்கள். கேசட்டை மறந்து போய் காரிலேயே வைத்து விட்டால் உருகி விடும்.   




 



 

Monday, August 3, 2020

ஆடியில் ஆவணி அவிட்டமா?

ஆடியில் ஆவணி அவிட்டமா?


நாளை ஆவணி அவிட்டம்.  இன்னும் ஆவணி மாதமே பிறக்கவில்லை அதற்குள் ஆவணி அவிட்டம் எப்படி வரும்? இது என் மகள் என்னிடம் கேட்ட கேள்வி.  சிலர் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருப்பார்களாக இருக்கும்.

பெரும்பாலானோர் ஆவணி அவிட்டம் என்றால் பிராமணர்கள் பூணூலை மாற்றிக் கொள்ளும் நாள் என்று நினைக்கிறார்கள். உண்மையில் ஆவணி அவிட்டம் என்று ஒன்று கிடையவே கிடையாது. இந்த நாளை உபாகர்மா என்பார்கள். உபாகர்மா என்பதை உபா+கர்மா என்று பிரிக்க வேண்டும். உபா என்றால் முன்னால் என்றும், கர்மா என்பதற்கு செயல் என்றும் பொருள். அதாவது ஒரு செயலை தொடங்கும் முன் செய்ய வேண்டியது என்று பொருள். எந்த செயல் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் என்று அடுத்த கேள்வி வருகிறதல்லவா? செயல் என்பது இங்கே வைதீக கர்மங்களை(குறிக்கும்).  எந்த வைதீக செயலையும் பூணூல் அணிந்து கொள்ளாமல் செய்யக் கூடாது என்பது விதி. ஹிந்து தர்மத்தின்படி நான்கு வர்ணத்தினருமே பூணூல் அணிந்து கொள்ள வேண்டும். இதில்  பிராமணர்களும், க்ஷத்ரியர்களும் எப்பொழுதும் பூணூலை அணிந்து கொண்டிருக்க வேண்டும், மற்றவர்கள் வைதீக கர்மங்களை செய்யும் பொழுது மட்டும் அணிந்து கொண்டால் போதுமானது.  அதைப் போலவே எல்லோருமே வேதம் படித்திருக்கிறார்கள்.  

பிருமச்சாரியாக வேதம் கற்றுக் கொண்டவர்கள்  திருமணம் செய்து கொண்டு வேறு தொழில்களில் ஈடுபட்டாலும் தாங்கள் கற்றதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக *ஆவணி மாதம் பௌர்ணமி முதல் தாங்கள் படித்ததை தினம் ஓதி நினைவுப் படுத்திக்க கொண்டு, மார்கழி மாதம் போகி அன்று நிறைவு செய்வார்கள்.  ஆவணி மாத பௌர்ணமி பெரும்பாலும் அவிட்ட நட்சத்திரத்தன்று வருவதால்  உபாகர்மா ஆவணி அவிட்டம் என்று வழங்கப் படலாயிற்று.  

எல்லாம் சரி, அது ஆவணி மாதத்தில்தான் வர வேண்டும் ஏன் ஆடியிலேயே வருகிறது ? என்று கேட்கிறீர்களா? இது பஞ்சாங்க குழப்பம். இந்தியாவில் தமிழ் நாட்டிலும், கேரளாவிலும் மட்டுமே சூரியனை அடிப்படியாக கொண்ட சோலார் காலண்டரை பின்பற்றுகிறோம். மற்ற மாநிலங்களில் சந்திரனை அடிப்படியாக கொண்ட லூனார் கேலண்டர்தான். இதை விவரித்து சொன்னால் நம்மை பொறுத்தவரை மேஷம் முதல் மீனம் வரையில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் சூரியன் பிரவேசிப்பதை வைத்துதான் மாதப்பிறப்பை கணக்கிடுவோம். உதாரணமாக மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாள்தான் சித்திரை மாதப் பிறப்பு. அவர் அங்கிருந்து நகர்ந்து ரிஷபத்திற்குள் செல்லும் பொழுது வைகாசி மாதம் பிறக்கும். ஆனால் மற்ற மாநிலத்தவர்களுக்கு அமாவாசை முடிந்தவுடன்அடுத்தமாதம் பிறந்து விடும். அதன்படி நமக்கு இப்போது நடப்பது கர்கடக மாதம் அதாவது ஆடி மாதம்.  இதர மாநிலத்தவர்களுக்கோ ஆடி அமாவாசை முடிந்தவுடனேயே ஆவணி பிறந்து விடும். அதன் படி அவர்களுக்கு இது ஆவணி மாதம்தான். ஆவணி மாத பௌர்ணமியில் உபாகர்மா. இந்த வருடம் நமக்கு இன்னும் ஆடி மாதம் முடியாததால் நாம் ஆடியில் ஆவணி அவிட்டமா? என்று கேட்கிறோம். 

பண்டிகைகள் எல்லாம் சாந்திரமாசத்தை அடிப்படையாக கொண்டுதான் கொண்டாடப்படும்.  அதனால்தான் நமக்கு ராம நவமி சில சமயம் பங்குனியிலும், சில சமயம் சித்திரையிலும் வரும். விநாயக சதுர்த்தி நமக்கு  ஆவணியிலும் வரும், புரட்டாசியிலும் வரும்.  மற்ற மாநிலக்காரர்களுக்கு ராம நவமி என்றால் அது சித்திரையில்தான், விநாயக சதுர்த்தி புரட்டாசியில்தான். உபாகர்மா என்றால் ஆவணியில்தான்.

*சாம வேதக்காரர்கள் ஆவணி பௌர்ணமியில் உபாகர்மாவை தொடங்காமல் புரட்டாசி சதுர்தியில் தொடங்கி, தைப்பூசத்தன்று நிறைவு செய்வார்கள். புரட்டாசி சதுர்த்தி என்பது விநாயக சதுர்த்தி நாள் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோமே.  எனவே போளி வடையோடு ஆவணி அவிட்டத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.