கணம்தோறும் பிறக்கிறேன் 

Thursday, January 6, 2022

படமா? காசா?

 படமா? காசா?

அசோக் நகர் ஆஞ்சநேயர்

ஒவ்வொரு வருடமும் ஹனும ஜெயந்தி அன்று சென்னை அசோக் நகரில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெறும் லட்சார்ச்சனைக்கு கோவிலுக்கு மிக அருகில் வசிக்கும் என் சகோதரி எங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருக்கும் அர்ச்சனை டிக்கெட் வாங்கி அவரவருக்கு தோதான நேரத்திற்கு டோக்கனும் வாங்கி வைத்து விடுவாள். நாங்கள் போய் அர்ச்சனை செய்து விட்டு வருவோம்.  கோவிலில் பிரசாதமாக லட்டு, பூக்கள் தவிர ஒரு ஆஞ்சநேயர் படமும் தருவார்கள். அப்படி என்னிடம் மூன்று படங்கள் சேர்ந்து விட்டன. 

2017 ஆம் வருடம் என்று நினைக்கிறேன். கோவிலுக்கு கிளம்பும் பொழுது, "ஏற்கனவே நம்மிடம் மூன்று படங்கள் இருக்கின்றன, இந்த வருடம் வேறு ஒரு படத்தை கொடுத்தால் என்ன செய்வது? எத்தனை படங்களை வைத்துக் கொள்ள முடியும்?" என்று நினைத்தேன்.

கோவிலில் வழங்கப்பட்ட படங்களில் ஒன்று

அந்த வருடம் எங்கள் சகோதரிகள் எல்லோருக்கும் காலை பத்து மணி ஸ்லாட் டில் புக் பண்ணியிருக்கார் என் அக்கா. அர்ச்சனை முடித்து அவள் வீட்டில் மோர் குழம்பு, பீன்ஸ் பருப்பு உசிலி, சீரக ரசம் என்று சாப்பிட்டு விட்டு கோவிலில் கொடுத்த பையை பிரித்து பார்த்தேன். ஆஞ்சநேயர் படம் இல்லை. 'இந்த வருடம் படத்திற்கு பதிலாக ஆஞ்சநேயர் உருவம் பொறித்த வெள்ளி காசு கொடுத்திருக்கிறார்கள் என்றாள் என் சகோதரி. ஒரு சிறிய ஜிப் லாக் பையில் இருந்த அந்த வெள்ளி காசை "நல்ல வேளை, படம் கொடுக்கவில்லை" என்ற நினைப்போடு மீண்டும் பைக்குகள் வைத்தேன்.

வீட்டிற்கு வந்ததும், ஸ்வாமி அலமாரியில் வைப்பதற்காக பையில் கை விட்டால் வெள்ளி காசு இல்லை. பையை கவிழ்த்து பொறுமையாக ஒவ்வொன்றாக பிரித்துப் பார்த்தேன். ம்ஹும்! என் கைப்பையிலும் தேடினேன். இல்லை. என் சகோதரிக்கு ஃபோன் பண்ணி அவள் வீட்டில் இருக்கிறதா? என்று கேட்டேன். அங்கும் இல்லை என்று கூறி விட்டாள். 

"படமாக வந்தால் என்ன செய்வது என்று யோசித்தாயே..? வெள்ளிக் காசு என்றால் மட்டும் வரவேற்பாயா? உன் வீட்டிற்கு நான் ஏன் வர வேண்டும்?" என்று ஆஞ்சநேயர் அந்தர்த்யானமாகி விட்டாரோ? 

அதற்குப் பிறகு ஊர் மாற்றம், குடும்பத்தில் சில இழப்புகள், கொரோனா போன்ற காரணங்களால் ஹனும ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்த வருடம் கனடா வந்து விட்டேன். பார்க்கலாம் அடுத்த வருடமாவது ஹனும ஜெயந்தி பூஜையில் கலந்து கொள்ள அசோக் நகர் ஆஞ்சநேயர் அருள் வேண்டும். 🙏🙏


Tuesday, January 4, 2022

திருவெம்பாவை - 20

திருவெம்பாவை - 20


போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம்
இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை முடிக்கும் பெண்கள் சிவபெருமானை போற்றி வணங்குவதாக அமைந்திருக்கிறது திருவெம்பாவையின் கடைசி பாடல்.

அனைத்திற்கும் மூலமான மலர்ப் பாதங்களை போற்றுகிறோம்.
அனைத்திற்கும் முடிவான செம்மை பொருந்திய தளிர் பாதங்களை போற்றுகிறோம்.
எல்லா உயிர்களின் எதிலிருந்து தோன்றுமோ அந்த பொற் பாதங்களை  போற்றுகிறோம்.
இவ்வுலகில் உள்ள உயிர்களும் அனுபவிக்கும் போகங்களாக விளங்கும் கழலணிந்த மலர் பாதங்களை போற்றுகிறோம். எல்லா உயிர்களின் முடிவாக விளங்கும் பாதங்களை போற்றுகிறோம்.
திருமாலும், நான்முகனான பிரம்மனும் காண முடியாத தாமரைப் பாதங்களை போற்றுகிறோம்.
நாங்கள் உய்யும் பொருட்டு எங்களை ஆட்கொண்டு அருளும் பொற்பாதங்களை வணங்கி மார்கழி நீராடுகிறோம். 

இத்துடன் திருவெம்பாவை முற்றுப்பெறுகிறது. திருச்சிற்றம்பலம்.

Monday, January 3, 2022

திருவெம்பாவை - 19

திருவெம்பாவை - 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்று
அங்கு அப்பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பரல்லாதோர் தோள் சேரற்க
எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கெழிலன் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.

பாவை நோன்பை நிறைவு செய்யும் பெண்கள் சிவ பெருமானிடம் தங்கள் கோரிக்கையை வைக்கிறார்கள். பெண்களுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது, அவள் கையை பிடித்து மாப்பிள்ளையாக வரும் ஆண் மகனிடம், "இனி இந்தப் பெண் உன்னுடைமை" என்று ஒப்படைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கம்.  அதை நினைத்தாலே எங்களுக்கு அச்சமாக இருக்கிறது. எங்கள் பெருமானே உன்னிடம் நாங்கள் ஒன்று சொல்ல விரும்புகிறோம், கேட்பாயாக. நாங்கள் ஒரு சிவ பக்தனுக்கு மனைவியாகி அவனால் தழுவப் படுவதையே விரும்புகிறோம். எங்கள் கரங்கள் சிவத்தொண்டிலேயே ஈடுபட வேண்டும். இரவும், பகலும் எம் கண்கள் உன்னையே தரிசிக்க வேண்டும். இந்த பரிசை மட்டும் எங்களுக்கு நீ தந்து விட்டால் சூரியன் எந்த திசையில் உதித்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. 

பாவை நோன்பு நோர்ப்பது நல்ல மண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காகத்தான். அதற்காக  யாரோ ஒருவனை மணந்து கொள்வதில் இந்த பெண்களுக்கு விருப்பமில்லை என்பதை 'உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் எனும் அங்கு அப்பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்' என்னும் வரிகளும், இறைத்தொண்டு வாய்த்து விட்டால் வேறு எதுவும் பொருட்டில்லை என்பதை இறுதி வரிகளும் தெளிவு படுத்துகின்றன. திருவெம்பாவையின் மகுடமாக விளங்கும் பாடல் இது.


Sunday, January 2, 2022

திருவெம்பாவை - 18

திருவெம்பாவை - 18


அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி
இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

ஒளி வடிவான அண்ணாமலையாரின் பாதத்தில் விழுந்து துதிக்கும் தேவர்களின் கிரீடத்தில் பதிக்கப் பட்டிருக்கும் நவரத்தினங்கள் தங்கள் பிரகாசத்தை இழப்பதை போல, கதிரவன் உதித்து இருளை விரட்டியதால் நட்சத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்து மறைந்து விட்டன. பெண், ஆண், மூன்றாம் பாலினத்தார், ஒளி பொருந்திய விண், மண் மற்றும் பல் வேறு பொருள்களானவரும், நம் கண்ணிற்கு இனிமையானவருமாகிய அண்ணாமலையாரின் பாதகமலங்களை துதிக்க இந்த பூக்கள் பூத்திருக்கும் பொய்கையில் நீராடலாம் பெண்ணே.