கணம்தோறும் பிறக்கிறேன் 

Wednesday, December 19, 2018

சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்


சொமாட்டோ ஊழியர் உணர்த்தும் உளவியல் உண்மைகள்

மதுரையில் சொமாட்டோ ஊழியர் வாடிக்கையாளர்களுக்கு எடுத்துச் சென்ற உணவை  சாப்பிட்ட வீடியோ, வைரலாகி, அதைப்  பற்றி நெட்டிசன்கள் பேசி தீர்த்து விட்டார்கள்.  இது தவறு  என்று பலரும், அந்த ஊழியர் பசியோடு இருந்ததால்தான் இப்படி செய்திருக்கிறார், அதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சிலரும் எழுதியிருக்கிறார்கள். 

நான் மஸ்கட்டில் இருந்தபொழுது ஒரு வீட்டில் நான்கு வருடங்கள் வேலையாளாக இருந்த ஒருவன் தன் எஜமானன், மற்றும் எஜமானி அம்மாவை கொலை செய்து விட்டான். இத்தனைக்கும் அவர்கள் ஒரு வேலைக்காரனை போல் அவனை நடத்தமாட்டார்களாம்.   நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்த பொழுது  இதைப்பற்றி பேச்சு வந்தது. நான்," இதற்கு காரணம், வறுமைதான்" என்றதும், அந்த நண்பர், " தப்பாக யோசிக்கிறீர்களே?" என்றார். நான் புரியாமல் விழிக்க,அவர் விளக்கினார்."வறுமைதான் காரணம் என்றால் அவன் அவர்கள் வீட்டிற்குள் வந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். அவன் வறுமையில் இருக்கும்பொழுது அவனுடைய பசியை போக்கிக்கொள்ள அவனுக்கு ஒரு பிடிப்பு தேவை. அது கிடைத்து, அங்கேயே தங்க ஆரம்பித்த பிறகு, ஒப்பிடத் தொடங்குகிறான். அதில்தான் பிரச்சனை தொடங்குகிறது. நம்மை விட இவர்கள் எந்த விதத்தில் ஒசத்தி? ஏன் அவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் நமக்கு கிடைப்பதில்லைஎன்று எண்ணத் தொடங்குகிறான். அப்போது சின்னச்சின்ன கோபங்கள், அலட்சியங்கள் கூட  அவனை எரிச்சலடைய வைக்கிறது. அதன் விளைவுதான் இதைப்போன்ற நடவடிக்கைகள்" என்றார்.

என்னுடைய பட்டப்படிப்பில் ஆங்கிலத்தில் ஒரு பாடம். லிஃப்ட் ஆபரேட்டராக இருக்கும் ஒருவன் லிஃப்டில் ஏறிய ஒரு ஆசாமி, அவனிடம்,"லிஃப்ட் ப்ளீஸ்" என்பதற்கு பதிலாக, "லிஃப்ட்" என்று கூறியதற்காக அவனை அரைந்து விட்டான் என்னும் செய்தியை செய்திதாளில் படித்த ஒருவர் எழுதிய கட்டுரை எனக்கு எனக்கு பாடமாக வந்திருந்தது. அந்த கட்டுரையாசிரியர்  பெயர் மறந்து விட்டது, ஆனால் விஷயம் மறக்கவில்லை.

அதில் அவர்,"ஒரு லிஃப்ட் ஆபரேட்டர் என்பவன் வாழ்க்கையில் கடை நிலையில் இருப்பவன். ஒரு வேளை அன்று அவன் மனைவியோடு சண்டை போட்டுவிட்டு வந்திருக்கலாம், தெருவில் சென்று கொண்டிருந்த நாய் ஒன்றை ஒரு சிறுவன் கல்லால் அடித்து விட, அது அவன் மனைவியை கடித்திருக்கலாம்,அவள் அந்த கோபத்தை இவன் மீது காட்டியிருக்கலாம், அந்த எரிச்சலில் அவன் தன்னை மரியாதை குறைவாக பேசிய பயனாளியை அறைந்திருக்கலாம். எப்படி ஒரு நல்ல வார்த்தையோ, செயலோ ஒரு தொடர் நல்ல வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்குமோ அதே போல ஒரு மோசமான வார்த்தையோ, செயலோ தொடர் மோசமான வார்த்தைகளையோ, செயல்களையோ உருவாக்கும் என்று முடித்திருப்பார்.

அதைப்போல வாழ்வின் கடை நிலையில் இருக்கும் சொமாட்டோ டெலிவரி ஆளின் எந்த பிரச்சனை அவரை இப்படி நடந்து கொள்ள வைத்ததோ? என்று தோன்றுகிறது.லட்சக்கணக்கில் லாபம் பார்க்கும் இத்தகைய நிறுவனங்கள் இப்படிப்பட்ட டெலிவரி ஆட்களுக்கு ஒரு சாப்பாடு கொடுப்பதில் குறைந்து போய் விடுமா? இலவசமாக கொடுக்காவிட்டாலும் சலுகை விலையில் தரலாமே. டெலிவரிக்கு செல்லும் ஆட்கள் பட்டினியாக கிடக்கக் கூடாது என்பதை கடைபிடித்திருக்கலாம்.  அல்லது அவருடைய மேலதிகாரி அவரிடம் கருணையில்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். "எங்கிட்டயா மோதற? வெக்கறேன் பாரு ஆப்பு.." அவர் வேண்டுமென்றே தான் சாப்பிடுவதை யாரையாவது விட்டு வீடியோ எடுக்க சொல்லியிருக்கலாம். திருட்டு வீடியோ போல இல்லாமல் தெளிவான படப்பிடிப்பு.

எங்கள் மாமா அவருடைய தாத்தாவைப்பற்றி(அதாவது என் கொள்ளு தாத்தா) அடிக்கடி ஒரு விஷயம் சொல்லுவார்.

எங்கள் வீட்டு வைக்கோல் போரில் பக்கத்து வீட்டு மாடு மேய்ந்தால், அதை நயமாக உரியவரிடம் சொல்ல வேண்டுமே தவிர, அந்த மாட்டை அடித்து விரட்டக்கூடாது என்பாராம். ஒரு மாடு ஒரு கையளவு வைக்கோலை சாப்பிடுமா?  அதற்காக அந்த மாட்டை அடிப்பது, அல்லது உரியவர்களோடு சண்டை போடுவது  போன்ற செயல்களில் ஈடுபட்டால் அந்த கோபத்தில் அவர் ஒரு நெருப்பு குச்சியை கிழித்து வைக்கோல் போர் அடியில் வைத்து விட்டால் முடிந்தது கதை. அவனுக்கு செலவு ஒரு நெருப்பு குச்சிதான், நமக்கு ஒரு வைக்கோல் போர் காலியாகி விடும்" என்பாராம்.

அதேபோல வீட்டில் விசேஷ சமயங்களில் சமைப்பதற்கு அழைத்திருக்கும் பரிசாகரை பல பேர் முன்னிலையில் அவமானப் படுத்தக்கூடாது என்பாராம். " ஐநூறு பேர்களை சாப்பிடக்கூப்பிட்டு, அண்டா நிறைய பால் பாயசம் செய்ய சொல்லியிருப்போம், சமையல்காரனை திட்டி, அவன் கோபத்தில் கொஞ்சம் உப்பை எடுத்து பால் பாயசத்தில் போட்டு விட்டால், அண்டா பாயசமும் வீணாகிவிடாதா?" என்பாராம்.

பள்ளிப்படிப்பை தாண்டாத அவருடைய உளவியல் அறிவு என்னை வியக்க வைக்கும்.

அடிமட்டத்தில் இருக்கும் மக்களை வேலை வாங்க அதிகாரம் மட்டும் போதாது, உளவியல் ஞானமும், கருணையும் கூட வேண்டும்.

Sunday, December 16, 2018

Sridhara Aiyawal Thiruvisanallur - Part 1

திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் - கங்கோதாரண உற்சவம் 


கும்பகோணத்திற்கு அருகில் இருக்கும் திருவிசநல்லூரில் 6.12.2018 அன்று அதாவது கார்த்திகை மாதத்து அமாவாசை அன்று கங்கோதாரண உற்சவம் நடைபெற்றது. அன்று திருவிசநல்லூரில் இருக்கும் ஸ்ரீதர ஐயாவாளின் மடத்தில் உள்ள கிணற்றில் கங்கை பொங்கி வருவதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான மக்கள் அன்று அங்கு சென்று அந்த கிணற்று நீரில் நீராடுவார்கள். 

ஏறக்குறைய அறநூறு ஆண்டுகளுக்கு முன் மைசூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் வெங்கடேச தீக்ஷதர் என்பவர். அவருடைய மகனான ஸ்ரீதரன் சிறு வயதிலிருந்தே தெய்வ வழிபாட்டிலும், ஆன்மீக சிந்தனையிலும் அதிக ஈடுபாடு உடையவராக இருந்தார். அதனாலோ என்னவோ தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு தனக்களிக்கப்பட்ட திவான் பதவியை ஏற்றுக்கொள்ளாமல் திருச்சிராப்பள்ளிக்கு(திருச்சி) புலம் பெயர்ந்தார். 

திருச்சிராப்பள்ளியில் இருக்கும் தாயுமானவர் மீது அதிக பக்தி கொண்டு தினசரி தாயுமானவரை தரிசிப்பதை வழக்கமாக  கொண்டிருந்தார். ஒரு முறை அங்கு பாம்பு கடித்து இறந்த ஒரு சிறுவனை இவர் மீண்டும் உயிர்ப்பிக்க, அந்த ஊர் மக்கள் இவரை தெய்வத்திற்கு நிகராக வணங்க ஆரம்பித்தனர். 

அதை விரும்பாத இவர் அங்கிருந்து, திருவிடைமருதூர், கோவிந்தபுரம் இவைகளுக்கு அருகில் உள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் குடியேறினார். திருவிடைமருதூரில் உள்ள ஸ்ரீமஹாலிங்கேஸ்வரர் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தார். தினசரி திருவிடைமருதூருக்குச் சென்று மஹாலிங்கேஸ்வரரை தரிசிப்பாராம். 

கனத்த மழை பெய்த ஒரு நாளில் இவரால் திருவிடைமருதூர் செல்ல முடியவில்லை. அதனால் மிகவும் மனது வருத்தப்பட்டுக்  கொண்டிருந்தாராம். அன்று இரவு திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகர் இவர் வீட்டிற்கு வந்து, "இன்று மழையாக இருப்பதால் உங்களால் கோவிலுக்கு வர முடியாது என்பதால் நானே பிரசாதம் தந்து விட்டு போகலாம் என்று வந்தேன்" என்று கூறி, பிரசாதம் கொடுத்தாராம். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், "இந்த மழையில் நீங்கள் செல்ல வேண்டாம், இரவு எங்கள் வீட்டிலேயே தங்கி விட்டு, காலையில் செல்லுங்கள் என்று அவரை திண்ணையில் உறங்க ஒரு பாயும், குளிராக இருந்ததால் பொருத்திக்கொள்ள ஒரு கம்பளி சால்வையின் தந்திருக்கிறார். காலையில் எழுந்திருந்து பார்த்தால், திண்ணையில் படுத்துத்துக் கொண்டிருந்த அர்ச்சகரை காணவில்லை. தன்னிடம் விடை  கொள்ளாமலேய சென்று விட்டாரே என்று நினைத்துக் கொண்ட ஐயாவாள், மறுநாள் திருவிடைமருதூர் கோவிலுக்குச்சென்ற பொழுது அங்கிருந்த அர்ச்சகரிடம், என்ன நேற்று எனக்கு பிரசாதம் தருவதற்காக எங்கள் வீட்டுக்கு வந்த நீங்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலேயே வந்து விட்டீர்களே?" என்று கேட்டதும், அந்த அர்ச்சகர், "நானா? உங்கள் வீட்டுக்கா? நான் வரவேயில்லையே?" 
என்றதும்தான் ஸ்ரீதர ஐயாவாளுக்கு சாஷாத் பரமசிவனே தனக்காக, தங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார் என்று புரிந்து நெகிழ்ந்து போனாராம். 

ஒரு கார்த்திகை மாத அமாவாசையன்று, அவருடைய தகப்பனாரின் ஸ்ரார்த்தம் அதாவது தகப்பனாருக்கு திதி கொடுக்க வேண்டிய நாள், வீட்டில் சமையல் செய்து கொண்டிருக்கிறார்கள். 
சமையல் வாசனையை மோப்பம் பிடித்த அவர் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி அவள் கணவனிடம்,"அப்பா, நல்ல வாசனை! இந்த மனமே இவ்வளவு நல்லா இருக்கே? சமையல் எவ்வளவு ருசியா இருக்கும்? நமக்கு கிடைக்குமா?" என்கிறாள். உடனே அவள் கணவன்,"சீ சீ! என்ன புள்ள பேசற?  இன்னிக்கு அவங்க வீட்டில் திதி, நாம அதை சாப்பிடக்கூடாது." என்று அதட்டுகிறான். எதற்காகவோ கொல்லைப்புறம் சென்ற அவரின் காதில் இந்த உரையாடல் விழுகிறது.   

இந்த சாப்பாட்டை சாப்பிட வேண்டும் என்று ஒருவர் ஆசைப்பட்டு விட்டார். ஆகவே அவருக்கு தராமல் இருக்கக்கூடாது என்று திவசத்திற்காக சமைத்த உணவை எடுத்து அந்த குடியானவ தம்பதியினருக்கு வழங்கி விடுகிறார்.

இதைப்பார்த்த சனாதிகர்களான மற்ற பிராமணர்கள், "பிதுர்களுக்காக சமைக்கப்பட்ட உணவை நீங்கள் குடியானவர்களுக்கு வழங்கி விட்டீர்கள். இதனால் திவசம் செய்யம் யோக்கியதையை இழந்து விட்டீர்கள். காசியில் சென்று கங்கையில் நீராடி வந்தால்தான் இந்த தோஷத்திலிருந்து நீங்கள் விடுபட முடியும். அதை செய்து விட்டு வாருங்கள், நாங்கள் உங்களுக்கு திவசம் செய்து வைக்கிறோம்" என்று கூறி விட்டு சென்றுவிட, மனம் வருந்திய ஸ்ரீதர ஐயாவாள், கங்கா தேவி மேல் கங்காஷ்டகம் என்னும் ஸ்லோகத்தை இயற்றுகிறார். உடனே அவர் வீட்டு கிணற்றில் கங்கை பொங்கி பெருகி, அக்கிரஹாரத்தில் பிரவாகமாக ஓடினாளாம். இதைக் கண்ணுற்ற மற்ற பிராமணர்கள் தங்கள் தவறை உணர்ந்து, ஐயாவாள் வீட்டில் திதியை முறையாக செய்து வைத்தார்களாம். 

அதிலிருந்து ஒவ்வொரு கார்த்திகை மாத அமாவாசை அன்றும் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டில் உள்ள கிணற்றில் கங்கை ஆவிர்பவிப்பதாக ஐதீகம். ஆயிரக்கணக்கான பேர்கள் அன்று அந்த கிணற்று நீரில் நீராடுகிறார்கள். இதை கங்கோத்தாரண உற்சவம் என்கிறார்கள்.