கணம்தோறும் பிறக்கிறேன் 

Showing posts with label பிஜு பட்னாயக் விமான நிலையம். Show all posts
Showing posts with label பிஜு பட்னாயக் விமான நிலையம். Show all posts

Monday, April 17, 2023

ஒடிஷா யாத்திரை

ஒடிஷா யாத்திரை

ஸ்மார்ட் வாட்ச்சை காணோம்..:



இந்தியாவிற்குள் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் விரும்பும் சில இடங்களுள் ஓடிசாவில் உள்ள கோனார்க் சன் டெம்பிளும் ஒன்று. என் உறவிலும், நட்பிலும் எல்லோரையும் கேட்டுப் பார்த்தேன், ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சனை. அந்த சமயத்தில்தான் பெங்களூர் மத்யமர் மீட் ஒன்றில் சந்தித்த சரோஜா அருணாசலம் அவர்கள் தான் டூர் ஆபரேட்டர் மூலம் தனியாக சுற்றுலாக்கள் செல்வதாகவும், அவை சிறப்பாக நடத்தப்படும் என்றும், அங்கு வருபவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்றும் கூறியது சற்று தைரியம் தந்தது. அந்த சமயத்தில் முகநூலில் வந்த யாத்ரிகா டூர்(ஆபரேட்டர்கள்) விளம்பரம் என்னைக் கவர அவர்களொடு தொடர்பு கொண்டு ஒடிஷா சுற்றுலாவிர்கு புக் பண்ணிக் கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தில்

நான் அவர்களை தொடர்பு கொண்டபோது ஒரே ஒரு சீட்தான் இருக்கிறது என்றார்கள். 50% டிக்கெட் கட்டணம் கட்டியதுமே டிக்கெட் அனுப்பி விட்டர்கள். ஏப்ரல்7,8.9 ஆகிய மூன்று நாட்கள் பயணம். நான் 6ஆம் தேதி காலையிலேயே கிளம்பி சென்னையை அடைந்தேன். 7ஆம் தேதி காலை 9:25க்கு விமானம். 7.25க்குள் விமான நிலையத்தை அடைந்து விட்டேன். அங்கு சிறு குழுவாக நின்று கொண்டிருந்த சிலரைப் பார்த்தால் ஒடிஷா யாத்ரீகர்களாக இருப்பார்களோ என்று தோன்றியது. விசாரித்ததில் என் யூகம் சரிதான் என்று புரிந்தது. எங்களுக்கான காலை உணவை பாக் பண்ணி கொடுத்து விட்டார்கள். அதைப் பெற்றுக் கொண்டு லக்கேஜை செக் இன் பண்ணி செக்யூரிடி செக் அப்பிற்காக சென்றோம். அங்கே ஸ்மார்ட் வாட்சையும் அவிழ்த்து ஸ்கேன் பண்ண வேண்டிய சாமான்களோடு போட வேண்டும் என்றார்கள். நான் அப்படியே செய்து எக்ஸ்-ரே மிஷினுக்குள் அனுப்பி விட்டு அந்தப் பக்கத்தில் ஸ்கேன் செய்து வந்த டிரேயில் பார்த்தால் என் ஹேண்ட் பேக், செல்ஃஃபோன் இரண்டும் இருந்தன. ஸ்மார்ட் வாட்ச்..? காணோம்… பானு.. பிரச்சனை இல்லாமல் உன்னால் பயணிக்க முடியாதா?

ங்கே போயிருக்கும்? கொஞ்சம் பதட்டமாக இருந்தது. மிக சமீபத்தில் என் மகன் வாங்கித் தந்திருந்த வாட்ச். அங்கிருந்த பணியாளரிடம் தெரிவித்த பொழுது, “நீங்கள் வைத்த டிரேயில்தான் இருக்கும், சரியாக பாருங்கள்” என்றார். அந்த டிரேயைத் தேட முடியவில்லை, ஏனென்றால் அதற்கு மேல் பல டிரேகள் வந்து விட்டன.

கம்ப்யூட்டர் திரையில் ஸ்கேன் செய்யப்படும் பொருள்களை பார்த்துக் கொண்டிருந்தவரிடம் கூரியதும், அவர் செக் செய்து விட்டு, “வாட்ச் உங்கள் கைப்பையில்தான் இருக்கிறது, சரியாகப் பாருங்கள்” என்றார். “ஐயா, இது வேறு கடிகாரம், நான் தேடுவது ஸ்மார்ட் வாட்ச்” என்றதும், என்னை கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொன்னார். பிறகு ஒருவர் என்னை அழைத்து, “மேடம், உங்கள் வாட்ச் அந்த் டிரேயில்தான் இருந்திருக்கிறது, நீங்கள் சரியாக பார்க்கவில்லை, வந்து கொண்டிருக்கிறது” என்று சொல்லி, எக்ஸ்-ரே மிஷினிலிருந்து வெளியே வந்த ஒரு டிரேயில் இருந்த என் ஸ்மார்ட் வாட்சை எடுத்துக் கொடுத்து விட்டு, “சிலர் பதட்டத்தில் லாப் டாப்பைக் கூட விட்டு விட்டு சென்று விடுவார்கள்” என்றார்.

பிஜுபட்னாயக் விமான நிலையத்தில் ஆஞ்சனேயர்(மணல் சிற்பம்)




உள்ளே சென்று அமர்ந்து ட்ரவலர்ஸ் கொடுத்திருந்த இட்லி, ஃப்லாக்ஸ் சீட்ஸ் சத்துரண்டை இவற்றை மட்டும் சாப்பிட்டேன். கம்பு புட்டை விமானத்தில் சாப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் விமானத்தில் தூங்கி விட்டதால் சாப்பிட முடியவில்லை. உணவிற்குப் பிறகு காபி சாப்பிடலாம் என்று தோன்றியது. அங்கிருந்த காஃபிடேயில் ஒரு காபி 280 ரூபாய் என்றாள் அங்கிருந்த பெண். சீ! சீ! இந்தக் காபி கசக்கும் என்று திரும்பி விட்டோம். விமானத்தில் பேப்பர் படித்து, ஒரு குட்டித் தூக்கம் போட்டேன். குறித்த நேரத்திற்கு சற்று முன்பாகவே பிஜுபட்னாயக் விமான நிலயத்தை அடைந்தது எங்கள் விமானம். பெட்டி வருவதற்குள் அங்கு மணலில் அமைக்கப்பட்டிருந்த ஆஞ்சநேயர் முன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். வெளியே எங்களை வரவேற்ற அந்த ஊர் கைட் எங்கள் குழுவில் இருந்த அனைவருக்கும் ஒரு அழகான முத்துமாலை கொடுத்து, அடையாளத்திற்காக அதை வெளியே செல்லும் பொழுது அணிந்து கொள்ள வேண்டும் என்றார். நான் மட்டுமே அதை கடை பிடித்தேன். மற்றவர்கள் ஒரு நாள் மட்டுமே அணிந்து கொண்டார்கள்.

ட்ராவலர்ஸ் கொடுத்த முத்து மாலை

- தொடரும்