கணம்தோறும் பிறக்கிறேன் 

Friday, November 16, 2018

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும்

வண்டிப் பயணமும், வாழ்க்கைப் பயணமும் 


நூறு புத்தகங்கள் படிப்பதால் பெறும் அறிவை ஒரு பயணம் தந்துவிடும் என்பார்கள். பயணங்கள் மூலம் நான் பெற்ற அறிவை விட, பயணங்களுக்கும்  நம் வாழ்க்கைப் பயணத்திற்கும் உள்ள ஒற்றுமையை அலசுவதே என் நோக்கம். 

என் நாற்பதாவது வயதில்தான் டூ வீலர் ஒட்டக்  கற்றுக் கொண்டேன். என்னைவிட இளையவர்களைவிட நான் சீக்கிரம் கற்றுக் கொள்வதாகவும், தைரியமாக ஓட்டுவதாகவும் எனக்கு பயிற்சி அளித்தவர் சொன்னாலும், எனக்கு அடி மனதில் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். "நமக்குப் பின்னால் ஒரு குடும்பம் இருக்கிறது, நாம் ஏதாவது விபத்தில் சிக்கிக் கொண்டால் மிகவும் கஷ்டம்" என்னும் அச்சம் இருந்ததால் மெதுவாகத்தான் செல்வேன், சாலை விதிகளை மீற மாட்டேன். 



நம் நாட்டில் சாலையில் மாட்டு வண்டி, மீன் பாடி வண்டி, சைக்கிள், ஆட்டோ, சிட்டி பஸ், தண்ணீர் லாரி, நவீன ரக டூ வீலர்கள், பென்ஸ் கார், டாட்டா சுமோ என்று எல்லா வகை வாகனங்களும் அதனதன் வேகத்தில் விரையுமே. இதில் சைக்கிளையோ, மாட்டு வண்டியையோ முந்துவதால் நமக்கு எந்த பெருமையும் கிடையாது. டாட்டா சுமோவோடு போட்டி போடுவது அறிவீனம். நம் சௌகரியத்திற்க்காக நாம்  வண்டியில் செல்கிறோம், நாம் போக வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதுதான் நம் வேலை. 

இதைப் போலத்தான் வாழ்க்கையும். அவரவர்க்கு வாய்த்த இடம் அவன் போட்ட பிச்சை. நம் வாழ்க்கையைத்தான் நாம் வாழ வேண்டுமே தவிர, மற்றவர்களோடு ஓப்பிட்டுக் கொள்ளுதல் சரியில்லை என்னும் மிகச்சிறந்த வாழ்க்கை பாடத்தை புரிந்து கொண்டேன். 

இது ஒரு விதம் என்றால், வெளிநாட்டுப் பயணங்கள் வேறு விதமாக வாழ்க்கை தத்துவத்தை புரிய வைத்தன. 

நம் நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்லும்பொழுது அங்கு தங்குவதற்கு மூன்று மாதமோ, ஆறு மாதமோ, இரண்டு வருடங்களோ தங்கும்படி விசா கிடைக்கும். அத்தனை நாட்கள்தான் அங்கு தங்க முடியும். அதே போல நாமும் இந்த பூமியில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வாழ அனுமதிக்கப் படுகிறோம். விசா முடிந்து விட்டால் தங்க முடியாதது போல நமக்கான காலம் முடிந்து விட்டால் இங்கிருந்து கிளம்ப வேண்டியதுதான். சில சிறப்பு காரணங்களுக்காக விசாவை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது போல, நம்மால் இங்கு ஏதாவது நன்மை விளையும், என்றால் குருவின் அருளோடு ஆயுளை நீட்டித்துக் கொள்ளலாம். 



சரி நம் காலம் முடிந்து நாம் கிளம்புகிறோம், நண்பர்கள் வீட்டிலேயே பை சொல்லி விடை கொடுத்து விடுவார்கள். மகனோ, மகளோ ஏர்போர்ட் வரைதான் நம்மோடு வர முடியும். அதன் பிறகு பாவ,புண்ணியம் போல லக்கேஜ், கேபின் பேகேஜ் என்னும் இரண்டு சுமையையும் நாம் மட்டும் தனியாகத்தான் சுமந்து செல்ல வேண்டும். எத்தனைக்கெத்தனை குறைவாக லக்கேஜ் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பயணம் சுகமாக இருக்கும். ஆனால் நாம் எங்கே குறைவாக லக்கேஜ் வைத்துக் கொள்கிறோம்?  செல்லும் இடங்களிலெல்லாம் எதையாவது வாங்கி அதிக சுமையோடுதானே திரும்புகிறோம். அப்போது அதற்கு எக்ஸெல் பேகேஜ் கட்டணம் கட்டித்தான் ஆக வேண்டும். இந்த எக்செஸ் பேகேஜ் கட்டணத்தை நாம் வியாதிக்காக செலவிடும் தொகையோடு ஒப்பிடலாமா?  

லக்கேஜ், அல்லது கேபின் பேகேஜ் குறைவாக இருந்தால், சில சமயம் நாம் எகானமி வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், நம்மை முதல் வகுப்பிற்கு உயர்த்துவார்கள். இதனால் என்ன பயன்? என்று கேட்கலாம். பேகேஜ் அதிகம் எடுத்துச் செல்ல முடியும், விரைவாக வெளியே சென்று விடலாம்.  

நம் நாட்டை அடைந்ததும் இங்கு சுங்க வரி(கஸ்டம்ஸ்) கட்ட வேண்டிய பொருள்களை நாம் வைத்திருந்தால் அதை கட்டாமல் இருக்க முடியாது. அப்படி எதுவும் இல்லை என்றால் க்ரீன் சேனல் வழியே விரைவாக வெளியேறி விடலாம்.  அரசை ஏமாற்றி விலக்கப்பட்ட பொருள்களை கடத்த நினைத்தால் கடுமையான தண்டனை நிச்சயம்.

அதைப்போலவே வரம்பு மீறாமல் வாழும் பொழுது நமது அடுத்த பிறவி நன்றாக அமைந்து விடும். நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக சில பாவங்களை செய்தால், அதற்கான கூலியை கொடுத்தேயாக வேண்டும். பேராசையால் பெரும் குற்றங்களை செய்யம் பொழுது, தண்டனையிலிருந்து தப்ப முடியாது. 

எப்படி பார்த்தாலும் லெஸ் லக்கேஜ், மோர் கம்ஃபார்ட் என்பது வண்டிப் பயணம், வாழ்க்கைப் பயணம் இரண்டுக்குமே நல்லது. என்ன என் கருத்து சரியா? நீங்கள் நினைப்பதை சொல்லுங்கள். 


Tuesday, November 13, 2018

மசாலா சாட்

மசாலா சாட்  

பயணங்களின் பொழுது பாடல்கள் கேட்பதுண்டு. என் மகனோடு பயணிக்கும் பொழுது ஸ்டாண்ட் அப் காமெடி போடச் சொல்லுவான். எனக்கென்னவோ கெட்ட வார்த்தைகள் நிறைந்த அந்த நகைச்சுவை கேட்க பிடிப்பதில்லை. எனவே பாடல்களுக்குப் பிறகு திருச்சி கே. கல்யாணராமனின் உபன்யாசங்களை போட்டேன். நகைச்சுவையாக, ஜனரஞ்சகமாக, புது விஷயங்களையும் சொல்கிறார். அவ்வப்பொழுது தலை காட்டும் சுய பிரதாபத்தை கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி போகும் வழிக்கும் புண்ணியம்!.




பாடல்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத் என்று எல்லோருடைய பாடல்களும் கேட்டோம். இளையராஜாவின் இசையில் வைரமுத்து எழுதிய சில பழைய பாடல்களையும், ஏ.ஆர்.ஆரின் இசையில் அவர் எழுதிய 'மரங்கள் கேட்டேன் வனமே தந்தனை..' பாடலையும் கேட்ட பொழுது, அதை முழுமையாக ரசிக்க முடியாமல் கடலை சாப்பிடும் பொழுது வாயில் அகப்பட்டு சுவையைக் கெடுக்கும் சொத்தைக் கடலையைப் போல 'மீ டூ' விஷயம் செய்தது.  இவ்வளவு நல்ல கவிஞரா இத்தனை சின்னத் தனமாக நடந்து கொண்டிருக்கிறார்? என்று தோன்றியது.

                                                                         


அதே நேரத்தில் கண்ணதாசனின் நினைவும் வந்தது. அவருக்கு மது மட்டுமல்ல போதை மருந்து பழக்கமும் இருந்தது என்பதை அவரே சொல்லியிருக்கிறார். பெண்கள் விஷயத்திலும் பலவீனமானவர் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அவர்மீது யாருக்கும் வெறுப்பு வந்ததில்லை. 

'போடா போ, காமுகனும் மாண்டான், 
கடவுள் நெறி பேசும் மாமுனியும் மாண்டான்
நம்மை நாம் பாப்போம்  நமதுடலை 
பெண் பார்ப்பாள்..'

'பட்ட கடன் தீர்ப்பதற்கு 
கட்டிக்கொண்ட பெண்களுக்கு 
கொட்டித் தந்த இன்பம் ஒரு கோடி, அதில் 
ஒட்டி வந்த ஞானம் ஒரு பாதி ..'

'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு 
ஒரு கோல மயில் என் துணையிருப்பு..'

என்றெல்லாம் வெட்ட வெளிச்சமாக, திறந்த புத்தகமாக அவர் வாழ்ந்தது ஒரு காரணமோ?

தீபாவளிக்கு இனிப்புகள் செய்வதும், புத்தாடை அணிந்து கொள்வதும், பட்டாஸு வெடிப்பதும் மட்டுமா சம்பிரதாயம்? வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர்களை சினிமாவுக்கு அழைத்துச் செல்வதும் சம்பிரதாயம்தான். அந்த வகையில் 'பதாயி ஹோ' படம் பார்க்கச் சென்றோம். என்னைத் தவிர எல்லோருக்கும் ஹிந்தி புரியும் என்பதாலும், நகைச்சுவை படம் என்பதாலும் இதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஹிந்தி படங்களில் கதை என்ன என்று புரிந்து விடும். வசனங்களும் ஓரளவு புரிந்து விடும். நகைச்சுவை காட்சிகளின் பொழுதுதான் என் நிலைமை பரிதாபமாகி விடும். 'த்ரீ இடியட்ஸ்' படத்தில் அரங்கமே அதிர்ந்த ஒரு நகைச்சுவை காட்சியில் நான் மட்டும் கலந்து கொள்ள முடியாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தேன்.



திருமண வயதில் ஒரு மகனையும், பிளஸ் டூ படிக்கும் இன்னொரு மகனையும் வைத்துக் கொண்டு மீண்டும் கர்ப்பமாகும் ஒரு மிடில் கிளாஸ் தாய். முதலில் அதை ஏற்றுக்கொள்ள 
முடியாமல் அவமானத்தில் மறுகும் அந்தக் குடும்பத்தினர் பின்னர் மனம் மாறுவதுதான் திரைப்படம். நீனா குப்தா(தாய்), சுரேகா சிக்ரி(மாமியார்) போன்ற தெரிந்த முகங்கள் இருக்கின்றன.  நீனா குப்தாவின் கணவராக வருபவர் நன்றாகவே நடித்திருக்கிறார். முதல் பாதியில் நகைச்சுவை அதிகம் போலிருக்கிறது. எல்லோரும் அதிகம் சிரித்தார்கள். நான் இதை தமிழில் எடுத்தால்(நிச்சயம் எடுத்து விடுவார்கள் என்றுதான் தோன்றுகிறது) யார் யாரை போடலாம் என்று ஆலோசித்துக் கொண்டிருந்தேன். 

என் மகள் இது 'ஃபாதர் ஆஃப் த பிரைட் பார்ட் டூ' வை உல்ட்டா செய்திருக்கும்   படம் என்றாள். நான் FOB part one பார்த்திருக்கிறேன். பார்ட் டூ பார்க்க வேண்டும்.  

Sunday, November 11, 2018

துரு துரு, திரு திரு

துரு துரு, திரு திரு 

"காலணிகள் வாங்கும் பொழுது அளவெடுத்துதானே வாங்குவோம், பிறகு எப்படி சிண்ட்ரெல்லாவின் ஒரு கால் ஷூ மட்டும் நழுவி விழும்?" என்று ஒரு வாண்டு கேட்டதாக ஏஞ்சல் கேட்டிருந்தார். இதைப் போல பல துரு துரு வாண்டுகள் நம்மிடம் கேள்வி கேட்டு நம்மை திரு திருவென்று முழிக்க வைக்கும். அப்படிப்பட்ட சில துரு துரு, திரு திரு விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் பெரிய அக்காவின் பெண் சிறு குழந்தையாக இருந்த பொழுது அவளுக்கு ராமாயணம் கதை சொல்ல ஆரம்பித்தேன். அதில் ராம ஜனன கட்டம். தசரத மகாராஜா புத்திர காமேஷ்டி யாகம் செய்த ஹோம குண்டத்திலிருந்து ஒரு யக்ஷன் கொண்டு வந்த பாயசத்தை தசரதனின் மூன்று மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுத்த பிறகு மிச்சமிருந்த பாயசத்தை சுமித்திராவிற்கு இரண்டாவது தடவை கொடுத்து விட, கௌசல்யாவிற்கும், கைகேயிக்கும்  ராமனும், பரதனும் பிறந்தார்கள். சுமித்ரா மட்டும் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு லக்ஷ்மணன், சத்ருஹனன் என இரண்டு குழந்தைகள் பிறந்தன என்று நான் கூறியதும், என் அக்கா பெண், "மறுபடியும் சொல்லுங்கோ" என்றாள். நான் மறுபடியும் கூற, ஏன் அவர்கள் இரண்டு பேருக்கும் ஒரு ஒரு குழந்தை, இவளுக்கு மட்டும் இரண்டு குழந்தைகள்?" என்று கேட்டாள். நான்," அதுதான் சொன்னேனே, பாயசம் கொஞ்சம் மிச்சம் இருந்தது, அதை சுமித்ராவிற்கு கொடுத்தார்கள், அவள் இரண்டு முறை பாயசம் சாப்பிட்டதால் அவளுக்கு இரட்டை குழந்தைகள்." என்றேன். உடனே என் அக்கா மகள்," ஏன் மிச்சமிருந்த பாயசத்தை ஒருத்திக்கு மட்டும் கொடுத்தார்கள்? மூன்று பேருக்கும் ஆளுக்கு கொஞ்சம் கொடுத்திருந்தால் மூன்று பேருக்குமே இரட்டை குழந்தைகள் பிறந்திருக்குமே? என்றாள் நான் என்ன பதில் சொல்ல முடியும்?  திரு திருதான். அப்புறம் மூன்று பேருக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாத அளவிற்கு குறைச்சலாக இருந்திருக்கும் என்று சமாளித்தேன்.



இன்னொரு முறை, என் அக்காக்களின் குழந்தைகள் மற்றும் அவர்களின் தோழர்களுக்கு  தெனாலி ராமன் கதை சொல்லிக் கொண்டிருந்தேன். தெனாலி ராமனுக்கு முன் பிரசன்னமான காளி தன் இரு கைகளில் ஒன்றில் ஒரு கிண்ணத்தில் பால் சாதமும், இன்னொன்றில் தயிர் சாதமும் வைத்துக் கொண்டு அவனிடம், " இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத்தான் நீ தேர்ந்தெடுக்க வேண்டும். பால் சாதத்தை சாப்பிட்டால் நீ சிறந்த அறிவாளியாக விளங்குவாய், தயிர் சாதத்தை சாப்பிட்டால் பெரிய செல்வந்தனாக விளங்குவாய், இந்த இரண்டில் எது உன் விருப்பம்?" என்று கேட்கிறாள்,என்று கூறி இந்த இடத்தில் கதையை கொஞ்சம் நிறுத்தி விட்டு, "உங்களுக்கு எதிரில் சாமி வந்து இப்படி கேட்டால், நீங்கள் எதை தேர்ந்தெடுப்பீர்கள்?" என்று கேட்டதும்,  சிலர் தயிர் சாதம் என்றும், சிலர் பால் சாதம் என்றும் கூறினர்.  என் பெரிய அக்காவின் மகன் மட்டும் எதுவும் சொல்லாமல் பேசாமல் இருந்தான். அவனிடம், "என்னடா, நீ எதுவும் கேட்க மாட்டாயா?" என்றதும் அவன், "நான் சாமிட்ட கொழம்பு சாதம்" கேட்பேன் என்றான். அவன் தயிர், மோர் வகையறாக்களை தொட மாட்டான். பால் சாதமும் பிடிக்காது. காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவான், அதனால்தான் இப்படி ஒரு பதில். எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. அதோடு அவன் சாதுர்யத்தையும் பாராட்டினேன்.

முன்பெல்லாம்அதாவது எழுபதுகளின் இறுதி வரை ஸ்ரீரெங்கத்தில் ஸ்ரீஜெயந்தியின் பொழுது சிறுவர்கள் சப்பரம் செய்து அதில் கிருஷ்ணன் படத்தை வைத்து ஊர்வலமாக எடுத்து வருவார்கள். அதற்கு எல்லா வீடுகளிலும் வந்து "ஸ்ரீஜெயந்திக்கு காசு" என்று கேட்பார்கள். எல்லோரும் அதிகபட்சமாக நாலணா கொடுப்பார்கள். அதைப்போன்ற ஒரு ஸ்ரீஜெயந்தியில் குரூப் குரூப்பாக சிறுவர்கள் வந்து காசு வாங்கி சென்றனர். சிறுமிகள் மட்டும் ஒரு க்ரூப்பாக வந்து ஸ்ரீஜெயந்திக்கு காசு என்று கேட்டபொழுது, நான் சற்று கேலியாக, " இது எந்த கிருஷ்ணருக்கு?" என்றதும் அதிலிருந்த ஒரு பொடிப் பெண், வெடுக்கென்று " எத்தனை கிருஷ்ணர் இருக்கார்? ஒரு கிருஷ்ணர்தானே உண்டு?" என்றதும் நான் விக்கித்துப் போனேன். ஒரு சிறு குழந்தை எத்தனை பெரிய விஷயத்தை அனாயாசமாக  சொல்லி விட்டது!  

என் அண்ணா கூறிய சம்பவம் இது, அவர் ஒரு பள்ளியில் மோட்டிவேஷனல் வகுப்பு எடுக்க சென்ற பொழுது, தன் உரையை முடித்து விட்டு, "உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம் என்றதும்,ஒரு பெண் குழந்தை,"அங்கிள் வொய் தி பம்ப்கின்ஸ் ஆர் ஸோ பிக்?" என்று கேட்டதாம். 


வெளிநாட்டில் வசிக்கும் என் அக்காவின் பேத்தி சமீபத்தில் விடுமுறைக்காக சென்னை வந்திருந்த பொழுது, தொலை காட்சியில் திருவிளையாடல் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதில் பார்வதியாக நடித்த சாவித்திரியின் உடல்முழுவதும் பச்சை வர்ணம் பூசப்பட்டிருந்ததை பார்த்து, " ஏன் இவள் பாடி க்ரீன் கலராக இருக்கிறது?" என்று கேட்டாள்? அவள் பர்வத ராஜாவின் மகள், அதாவது மலை மகள். ஒரு மலையை தூரத்தில் இருந்து பார்க்கும் பொழுது மலை எப்படி தெரியும்? மரங்கள் அடர்ந்து பசுமையாகத்தானே? அதனால்தான் பார்வதியை பச்சை நிறமாக காண்பித்திருக்கிறார்கள்" என்றேன். சரிதானே?

படங்கள் நன்றி கூகுள்.